Saturday 18 July 2020

குறி அறுத்தேன் #திருநங்கை_கல்கி

குறி அறுத்தேன் -திருநங்கை கல்கி
----------------------------------------------------
தாமரைக்குளம் எனது ஊர். பத்தாண்டுகளுக்கு முன்பு இருக்கும். வ.உ.சிதம்பரனார் சிலை அருகிருக்கும் பகுதியில் பலமுறை அந்த திருநங்கையைப் பார்த்திருக்கிறேன். நல்ல ஒப்பனையுடன் வேலைக்குச் செல்லும் அலுவலக பெண் போல பல காலைகளில். அவளும் மனுசிதான் என்பதைத் தாண்டி அவள்மேல் விழும் சக மனிதர்களின் கிண்டலையும் கேட்டுத்தான் வளர்ந்தேன். நாட்களின் திசைகளில் பயணித்த வாழ்வில் ஓர் காலை தினசரி நாளிதழில் படித்து அறிகிறேன். பல வருடங்களாக அந்த திருநங்கையுடன் பழகிய ஒருவன், விரைவில்,அவனுக்கு திருமணம் நடக்கப்போவதாகவும் அதனால் அத்திருநங்கையுடன் தனக்கு இதுவரையிலும் உள்ள உறவை இனி தொடரப்போவதில்லை எனவும் அவன் முடிவெடுக்கிறான். அத்திருநங்கை அவனிடம் கெஞ்சுகிறாள், தன்னால் இயன்றவரை அவனோடு வாழத் துடிப்பதையும் அந்த்த துடிப்பு இறப்பு வரையும் தொடரும் என்று உத்திரவாதமும் தருகிறாள். ஆனால் திருநங்கையுடன் வாழ்ந்தால் சமூகம் தன்னைக் கேவலமாக நினைக்கும் , வீட்டில் திருமணத்திற்கு கட்டாயப்படுத்துகிறார்கள், "ஒரு பெண்ணோடு" தனக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்கள் பெற்றோர் என்று கூறி மறுதலிக்கிறான் அவளை..திருநங்கையாக மாறியவர்களுக்கும் கற்பு இருக்கும் என்பதை அறியாத அவனின் வார்த்தைகள் ரணமாகக் குத்துகிறது அவளை. வாழ்ந்த வாழ்வின் அம்மணப் பக்கங்கள் அத்திருநங்கையை உடல் கூசச் செய்கிறது. ஆத்திரம் மேலேற அத்திருநங்கை அவனின் ஆண்மைத் திமிரினை திருகிப்போடுகிறாள் கொலையென. அதுவும் அத்திருநங்கையும் அவனும் தனித்திருந்த ஒரு விடுதியில் நிகழ்கிறது.

மேற்சொன்ன நிகழ்வின் உக்கிரம் வழியாகவே "குறி அறுத்தேன்"நூலினைப் பார்த்தேன். படித்தேன்.

பெண் என்பவள்
இதுவே இதுதான்
என்றால்
பெண்ணில்லை நான்.
ஏதோ ஒன்று
-அந்த ஏதோ ஒன்றிற்குள் என்னன்னென்னவெல்லாம் இருக்கின்றன... அது அதீத அன்பாக காமமாக சீறும் காளியாக... சுயம் குறித்த ஒற்றை அழகான அபார அபாயச் சொல் ஏதோ ஒன்று.

முத்தம் என்றொரு
புதுக்கவிதையை
என் இதழ்களில் எழுதவும்
கவ்விய இதழ்களில்
கலந்துவிட்ட மூச்சோடு
காவியம் பாடவும்
கவிதைக்காதலன்
வேண்டும் எனக்கு...
-மானுடம் நோக்கி கல்கியால் வரையப்பட்டுள்ள காதல் மடல்தான் இது. இது தனித்தலைய பணிக்கப்பட்டுள்ள திருநங்கைச் சமூகத்தின் ஒருமித்த அன்பு குறித்த எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம்....

அது எப்படி
சாதி வெறிக்கு
காமம் மட்டும்
விதிவிலக்காகிறது...
-என்ற வரிகள் இயலாமையில் பூக்கும்
வார்த்தையாக தோன்றும் அதே கணம்...

மதம் துறந்து
சாதி துறந்து
மறுக்கப்பட்டவர்கள்
ஒன்றுகூடி
வாழும் வாழ்க்கையை
வாழ முடியுமா உங்களால்...?
-எனும்போது மனிதத்தை நிமிரச் செய்யாமல்
சாதி என்னும் "ஆண்மையை தொங்கவிட்டுத் திரியும்" கூட்டத்தின்மேல் துப்பிய தீக்கனலாக மாறி நிற்கின்றன
கல்கியின் வரிகள்...

சமூகத்தால் இன்றுவரை புறக்கணிக்கப்பட்டவர்களாக
வாழும் திருநங்கைகளின் வாழ்வு, காதல், காமம் அவர்களுள் ஓடும் சமூகம் என எளிமையான மொழியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு வலுவான பதிவாக இக்கவிதைகள்... 

தொடரட்டும் கல்கியின் களப்பணி
கலைப்பணி...

அன்பு மற்றும் தோழமையுடன்...

-யாழ் தண்விகா.

No comments:

Post a Comment