Wednesday 3 June 2020

தேர் சுமக்கும் நிலம் #யாழ் தண்விகா

❣️
1
உன்னைப் பார்த்து விட்டுத்
திரும்பும் போதெல்லாம்
கவிதைகளால்
நிரம்பி இருப்பேன்

❣️
2
சில இரவுகள்
சில பகல்கள்
இந்த ஆயுளுக்கும் போதும்
என்பதாகிவிட்ட வாழ்வு
காதலால் அமைந்ததும் சுகமே...

❣️
3
பனிக்காலை
கொன்றைப் பூக்களின் நிறத்தில்
உன் முகத்து மஞ்சள்

❣️
4
அறைக்குள் இருந்து
வெளியில் வருவாய்

கருவறைக்குள் இருந்து
கடவுள் வருவது போலிருக்கும்

❣️
5
பயணத்தில்
வியர்வை ஒட்டிக் கிடக்கும்
நம் ஸ்பரிசத்தில்
மிதந்தது காதலா காமமா

❣️
6
உன்னை கண்ட தினத்தில்
நீ சூடி இருந்த
புடவையின் வண்ணத்தில்
எப்போதும் என் கனவுகள்

❣️
7
பிரிவின்போதான
இரவில் ஒலிக்கும்
பல்லிச் சத்தம்
உன் முத்தத்தை
நினைவுபடுத்தும்

கூடுதலின் போதான
உன் முத்தச் சத்தம்
கடல் அலையை
நினைவு படுத்தும்

❣️
8
மனசு தடுமாறும்
வரியை நீ பாடும் பொழுது
கொடியிலே மல்லிகைப்பூ
வைத்தகண் மாறாது
பார்க்கும்

❣️
9
தேர் சுமக்கும்
நிலமாகிப் போகிறேன்
உன்னைச் சுமக்கும் போது

❣️
10
முதன் முதலில்
நான் வாங்கித் தந்து
நீ சூடிய மலர் மல்லிகை

உன்னால் நான்
சூடிக்கொண்ட மலர்
நீ

❣️
11
உன் காதல் தான்
எப்போதும்
நான் வாழ...

❣️
12
என்னால்
சிரிக்கிறாய்
சிரித்தாய்
சிரிப்பாய்
பூ என்பதன்
குணம் அது தானே...

❣️
13
கனவு போலான
வாழ்க்கை
வாழ்ந்ததும்
வாழப் போவதும்

❣️
14
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
பாடலை இப்போதும் நாம்
பாடிக் கொண்டிருக்கிறோம்
முடியாத அந்தக் காலம் தொட்டு

❣️
15
பேரன்பின்
பெருநிலம்
நீ

❣️
16
உன் முத்தச் சுவையின் போது
நீயாக என்னை
எழுப்பினால் தான் உண்டு...

❣️
17
உன்னை நீயே
செதுக்கி வைத்திருக்கிறாய்
அழகளவுகளில்...

❣️
18
உன் மௌனத்திலும்
அழகு தானியங்கள்
சிதறிக்கிடக்கும்

❣️
19
உன் கோபத்தின் போது
உன்னைப் பார்த்துச் சிரிப்பது
உனக்குக்கோபம் வரவில்லை என்பதை உணர்த்துவதற்காக மட்டுமே...

❣️
20
என்னை அழ வைத்திருக்கிறாய்
உன்னால் அழாமல்
உனக்காக அழாமல்
யாருக்காக அழப் போகிறேன்

❣️
21
நெடிய பயணம் உன்னோடு வாய்த்திருக்கிறது
இந்த வாழ்வில்
அதுபோன்ற பயணம்
கைகாட்டி மரங்களாக நின்று
இன்று பூத்தூவுகிறது

❣️
22
குட்டச்சி
குண்டாத்தி என்பதெல்லாம்
என்னைவிடக்
குட்டையாக இருக்கிறாய்
குண்டாக இருக்கிறாய்
என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காக மட்டுமல்ல
அதுதான் உனக்கு அழகு
என்பதை உணர்த்துவதற்காகவும் தான்

❣️
23
எழுதத் தெரிகிறது என்பது மகிழ்ச்சிகரமானதாக
மாறக் காரணம்
உன்னை எழுதுவதால்...

❣️
24
ஒரு குழந்தையாக
என்னைத் தாங்கிக் கொள்
உன் குரலை தாலாட்டாகக் கேட்டு உறங்கவேண்டும்

❣️
25
உன் பாதங்களில்
முத்தமிட்டுருக்கிறேன்
உன் பாதங்களால்
ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்
முன்னது தவம்
பின்னது வரம்

❣️
26
உன் கைச் சமையலில்
காதல் வாசனை

❣️
27
நீ உணவு ஊட்டுகிறாயா
உன்னை ஊட்டுகிறாயா
என்ற குழப்பம்
எப்போதும் உண்டு

❣️
28
காமத்தின் போதான ஒன்றை
நினைவு படுத்திய ஒரு தருணம்
நீங்க ரொம்ப மோசம் என்றாய் நீயா-நானா என்றேன்
உன் புன்னகையில்
அப்படி ஒரு வெட்கம்

❣️
29
பரதேசி என்று ஒருமுறை
திட்டிருக்கிறாய்
இப்போதுவரை அந்தப் பட்டமும் மிகப்பிடித்தம் எனக்கு

❣️
30
அழகை உச்சமாகும் வேலையை
உன் காலணியும் தான் செய்கிறது
ஹீல்ஸ் வாயிலாக...

❣️
31
உன் மடியில் தலைசாய்த்து இருக்கிறேன்
தோள் தட்டிக் கொடுப்பாய்
உறக்கம் வராது
அது
உயிரினைத் தட்டிக்கொடுக்கும்
சுகந்தம்

❣️
32
எந்த ஒரு பதட்டமும் இன்றி
நம் கூடல் அரங்கேறிய பொழுது
அறியும்
நமக்குள் பாய்ந்திருக்கும்
காதலின் வல்லமை
எவ்வளவு ஆதுரமானது என்று...

❣️
33
பேசப்பேச கேட்டுக்கொண்டிருப்பேன்
இத மட்டும் கேளுங்க என்று சொல்லிவிட்டு
நீயே, கேட்டுத்தான் ஆகணும்
என்றும் சொல்வாய்
அதையும் கேட்டுக் கொண்டுதான் இருப்பேன்

❣️
34
பெரும் ஆசை எல்லாம்
ஒன்றே ஒன்றுதான்
அது நீ மட்டும் தான்

❣️
35
பார்க்காத நேரம் எல்லாம் பார்த்து
பார்க்கும் நேரம் இன்னமும் பார்த்து
எனக்குள் நீ ஊடுருவினாயா
என்னை உனக்குள் ஊடுருவச் செய்தாயா

❣️
36
என் ஆடையை நீ உடுத்தி என்னைப்போல் பேசிக் காட்டுவாய் அவ்வளவு அசலாக இருக்கும்
ஆனால் உண்மையில் அப்போது
உன் வெட்கம்
எனக்கு வரவே இல்லை

❣️
37
நான் தூங்க போறேன்

நீ தூங்கு போ

இல்ல போகல

ஏன்

உங்க கண்ணு என்னை கேக்குது

ம் எங்க கேட்குது

ஆமா கேட்குது எனக்குத் தெரியும்
நாம தூங்காம இரவைத் தூங்க வைக்கலாம் சரியா

என்ற கண் மொழி பயின்றவள் நீ...

❣️
38
கைகள் கோர்த்து
காலாற பேசிக்கொண்டே
பகலில் நாம் நடக்கும் வாய்ப்பு இருப்பின்
அது இரவாக மாறி விட்டால் நன்றாக இருக்கும்

நீ இரவில்தான் அப்படி நடந்து போக விருப்பப்பட்டாய்...

❣️
39
கட்டிப் பிடித்துக் கொள்வாய்
விட்டு விலகிக் கொல்வாய்

❣️
40
என் நிலத்தில்
துளிர்க்கும்
பூ
நீ

❣️
41
எந்த உடையும் உனக்கு பொருத்தமாயிருக்கும்
இல்லை இல்லை
எந்த உடைக்கும்
உன்னோடு
பொருத்தம் இருக்கும்

❣️
42
முத்தம் கொடுக்கத் தெரியாது சொல்லிக்கொடுங்க
என்பாய்
தொலைவில் இருக்கும் போது

அருகில் வரும்போது
நீ முத்தம் கேட்க
நான் புள்ளி வைப்பேன்
நீ தொடர்ந்து கொண்டே இருப்பாய்

வேடிக்கை பார்ப்பேன் நான்
வெட்கப்பட்டுச் சிரிக்கும் காதல்...

❣️
43
இதழ் வரி எல்லாம் கவிதைதான்
உன் எச்சில் தடவியோ
என் எச்சில் தடவியோ
வாசிக்கும்போது
காமக் கவிதையாகி விடுகின்றன
அவை

❣️
44
தலை திரும்பும் திசையெல்லாம்
திரும்பும் கரகக் கிளி போல
நீ வாசம் செய்யும் திசையெல்லாம்
திரும்பிப் பார்க்கிறேன் நான்...

❣️
45
எறும்பு ஊறக் கல்லும் தேயும்
நான் ஊற நீ மின்னுகிறாய்

❣️
46
நீயும் நானும் மட்டுமான
உலகமாகிவிடுகிறது
உன்னோடு நானிருப்பது...

❣️
47
நிலவின் துணைக்கோள்
ஆகிவிடுவேன் நான்
உன்னுடனான பயணத்தில்

❣️
48
நீ அணிந்த பொழுதுதான்
எவ்வளவு ஆரவாரச் சத்தம்
இந்தக் கண்ணாடி வளையலுக்கு...

❣️
49
எப்போதும் உன்னோடு வாழவேண்டும்
என்பதற்கு
உன்னோடு நான்
வாழ்ந்த வாழ்க்கை
வாழும் வாழ்க்கை
வாழ வேண்டிய வாழ்க்கை
எல்லாமும் தான் காரணம்...

❣️
50
என் மேல் அடித்துக்கொள்ளும்
வாசனைத் திரவியத்தில்
உன் வாசம்

❣️
51
அவரவர் வேலைகளில் மூழ்கியிருப்போம்
எப்போதாவது நீ என்னைப் பார்க்கத் திரும்புவாய்
நான் உன்னைப் பார்ப்பேன்

நான் உன்னைப் பார்க்கத் திரும்புவேன்
நீ என்னைப் பார்ப்பாய்

அதுவும் நமது வேலைதான்

❣️
52
அளவுக்கதிகமான கோபம்
நீ கொண்ட நாளில்தான்
முதல் முத்தம்
நமக்குள் வாய்த்தது

❣️
53
அனைத்து உறவும்
எனக்கு நீதான்
என்பாய்

அத்தனை உறவின் அன்பும்
எனக்கு நீதான்...

❣️
54
பேசித் தீராத
காதல் நமது

❣️
55
இப்போதுவரை
ஒரு சேய்போல
காதலைக் காத்துவருகிறேன்
தாயின் நிலையில் நின்று...
போதுமா குழந்தையே...

❣️
56
பிரியும் போதெல்லாம்
கண்ணீர் விடுவாய்
பிரிந்து வந்தபின்
எனது முறை

❣️
57
பால்யத்தில் உன்னுடன் இல்லை
என்பதை ஈடுகட்டவே
இரவெல்லாம் உன் நினைவுகளோடு
உறவாடுகிறேன்

❣️
58
உன் நெற்றியில்
முத்தமிட்டுத் திரும்பிய நாளில்
பூமி பார்த்துச் சிரித்தது
எனதிதழில்
குங்குமமும் மஞ்சளும்...

❣️
59
உனக்காக நான் எழுதிய கவிதைகள்
நீ வாசித்தபின் மின்னுகிறது
நட்சத்திரங்களாக...

❣️
60
உயரப் பறக்கும் பட்டம் நாம்
இதயம் பிடித்திருக்கும் நூல் காதல்...

❣️
61
கரை வந்தவுடன் காணாமல் போகும்
அலையாகத் தான்
உன்னைக் காணும் போது
நான் காணாமல் ஆவதும்...

❣️
62
உன் மடி மீது துயில்தல் போல
உயிர் மடிதல்
சவுந்தர்ய வாழ்வின் கடைசி வரம்
இப்படி அமைந்தால் எப்படி இருக்கும்...

❣️
63
நெருங்கி நீ வரவர
உயிரினிடைத்தூரம் இல்லாமல் போகும்
மாயம் போக்கும்
நம்மில்

❣️
64
என் வீட்டு ஜன்னலின்
பார்வைக்கு எட்டும் தூரத்தில்
உன் வீடு
யார் சொன்னது தொலைவு என்று
தொலைவு என்பது தொலைவு அல்ல

❣️
65
ஓ...
அடடா...
ப்பா...
அதிகம் உன்னால் உச்சரிக்கப்பட்ட
குட்டிச் சொற்கவிதைகள்
இவை...

❣️
66
கண்ணாடிமுன் நின்று கொண்டிருக்கும் பொழுது

என்ன செய்கிறாய்
என்றேன்

கலைந்து இருக்கும் அழகைச்
சரி செய்கிறேன்
என்றாய்

கலைந்து இருப்பதும் அழகு
என்றேன்

ஆளும் பிள்ளையும் என்று சொல்லிக்கொண்டே என் கண்களை மூடுகிறாய் கைகளால்...

❣️
67
எதை எதையோ பேசிக் கொண்டிருப்போம்
ஐ லவ் யூ எனும் வார்த்தையைச்
சட்டென இருவரும் ஒரே சமயத்தில் உதிர்த்துக் கொள்வோம்
ஹே ஜாலி ஜாலி எனக் காதல்
கை தட்டிக் கொள்ளும்

❣️
68
நட்சத்திரப் பொருத்தம்
நாம் பார்த்துக் கொண்டதில்லை
மச்சப்பொருத்தம்
பார்த்திருக்கிறோம்

❣️
69
உதிரும் இலை
காற்றில் தவழும் அழகு
காண்கிறேன்
உன் ஸ்பரிசம் தொடும் பொழுது
நீ
கண் மூடும் அழகில்

❣️
70
காதல் பாடலைப் பாடும் பொழுதும்
ஒரு குழந்தையின் குரலில் தான் இருக்கிறது
உன் அன்பு...

❣️
71
எப்படியும் பேசி விடுவோம்
ஒவ்வொரு நாளும்
உயிராலோ
நினைவாலோ

❣️
72
காட்டன் புடவைகளை
விரும்பிக் கட்டுவாய்
கொடுத்து வைத்த வியர்வை

❣️
73
தேவதை
வெள்ளை உடையில் மட்டும் வருவாள்
என்ற கட்டமைப்பை
உடைத்தவள் நீ

❣️
74
நமக்குள் ஒளிந்திருக்கும் வாழ்வு
வாழ்வில் ஒளிந்திருக்கும் நாம்
ஆனால் எல்லாம் உண்மை

❣️
75
மூன்று நாள் வலி என்பாய்
முத்தங்கள் அளிப்பேன்
தென்றலாய் நாட்கள் கடந்த சுகம் சொல்வாய்
முத்தங்கள் பிறவிப் பயன் அடையும் இப்படியும்

❣️
76
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு விதமாக
என்னைப் பிறப்பிக்கிறாய்

❣️
77
உன்னோடு பழகும்
அதிகாலைத் தேநீருக்கு
நீ சோம்பல் உதிர்க்கும் அழகு...

❣️
78
காதுகளின் ஓரமாக
கழுத்தின் மேல் புறத்திலிருந்து கீழ்ப்புறமாக
மூச்சுக்காற்று பரவப்பரவ
கண்கள் மூடி
சுவாசம் நிறுத்தி
இதழ் சுளித்து
கழுத்து சிலிர்த்து நின்றவள்
டக்கெனத் திரும்பி
முத்தமிட்டாய்
எல்லாம் நானும் செய்தேன்
கண்கள் மூடி
சுவாசம் நிறுத்தி
இதழ் சுளித்து
கழுத்து சிலிர்த்து...

❣️
79
ஜன்னலோர இருக்கையை
நீயே வைத்துக்கொள்
உன்னைத் தழுவி வரும் காற்றின் சுவாசத்தால் இன்னும் கொஞ்சநாள் ஆயுள் கூடும் எனக்கு

அப்போ நான்...

முத்தத்தின் போது பகிர்வோம்
ஆயுள்
உனக்கும் எனக்கும் சமம் என சுவாசத்தின் மூலமாக

❣️
80
தோள் சாயும் போதும்
மடி சாயும் போதும்
உறங்கிவிட வேண்டும்
அதற்கான திளைத்த காதலின் பின்னான வாழ்வு
எப்போது வரும் நமக்கு

❣️
81
என் கவிதைகள்
உன்னில் நான் பறித்தவையா
என்னில் நீ உதிர்த்தவையா...

❣️
82
ஒரு தனிமைக் கூடலுக்கான நாளில் எனக்காகச் சமைத்து
நெடுநேரம் கழித்து
தாமதமாக வந்தாய்

லூசா நீ
கடையில கூட வாங்கி சாப்பிட்டு இருக்கலாம் இல்ல
இன்னும் எவ்ளோ நேரம் என்னோடு இருப்ப
என்றேன்

இன்னொரு நாளில் நாம் சந்திக்கவே மாட்டோமா என்ன
வாங்க சாப்பிடுங்க
என்றபடியே
பரிமாறத் தொடங்கிய
காதல்காரி நீ

❣️
83
வாழ
வாழ
வாழ
காதலிக்கிறேன்
காதலித்தேன்
காதலிப்பேன்

❣️
84
பெரும் போதை நீ
எப்போதும் மயக்கம் உன்னால்...

❣️
85
எல்லாக் கண்களும் ஒரு திசையை நோக்க
காதலர்களின் கண்கள்
காதல் நோக்கும்
பேரன்பு வாய்த்தல் வரம்

❣️
86
பசியைச் சந்திக்கும்
சவால் போலானது
உன்னைப் பார்க்காது
நீளும் நாட்கள்...

❣️
87
நட்சத்திரப் பெருங்கூட்டத்தினிடை நிலவு
இளஞ் செம்பருத்தி நிறத்தில் இருந்தது
நம் முதல்நாள் சந்திப்பு குறித்து இப்படித்தான் சொல்ல முடியும்

❣️
88
உன்னை நினைத்திருக்கிறேன் என்பதுதான்
முக்காலத்திற்கும்

❣️
89
யார் நதி
யார் கரை
மையமாக நின்று
பேசிக் கொண்டிருக்கிறது
காதல்

❣️
90
என் உலர்ந்த கனவுகளின் மேல் பனியாய் உதிர்ந்தாய்
சிலிர்த்துதித்தேன்
உனக்கே உனக்காக...

❣️
91
தாயின்
கதகதப்பான சிறகுகளுள் நிற்கும்
சிறு குஞ்சுகள் போல
என் கரங்களுள் நீ நின்றாய்
உனக்கான காதலாக நான் எப்படி இருக்கவேண்டும்
என அப்போது உணர்ந்தேன்

❣️
92
ஒரு தேநீர் அருந்தலாமா என
நான் உன்னைக் கேட்க நினைக்கும் நேரம்
நீ என்னைக் கேட்பாய்
அதே கேள்வியை
இது போதாதா
நாம் காதலுக்கு விசுவாசமானவர்கள் என்று உணர்த்த

❣️
93
மலைகள்
கடல்கள்
நாடுகள்
கடந்து நிகழும் சந்திப்பு
நாடுகள்
கடல்கள்
மலைகள்
கடந்து படிப்படியாக நிகழும் பிரிவு

❣️
94
எப்போது வாழ்வோம்
எப்போது சாவோம்
என்ற கேள்விகளின் ஊடே தான்
காதல் வாழ்கிறது
மகிழ்ந்தபடி

❣️
95
சட்டென அறுந்து போகும்
நரம்பிசைக் கருவியின் இழையாய் வெறுமையின் உச்சத்தில்
தனித்தலையும் என் நாட்களின்
ஒரு துளிக் கண்ணீர்
உன் பிரிவால் நான் படும்
துயர் சொல்லும்

❣️
96
உனக்கான நானாக என்னை மாற்ற
ஏதேதோ மாயம் செய்கிறாய்
செய்துகொள்
பிடித்திருக்கும் இவ்வாழ்வு
நீ தந்தது

❣️
97
என் காயங்களின் போது
மீண்டெழும் உன் நினைவில் இருந்து முத்தங்கள் எடுத்துப் பூசிக் கொள்வேன்
எல்லாம் சுபம்...

❣️
98
என் உயிரின் ஈரத்தில்
எப்போதும்
உன் காதல் படகு
மிதக்கும்...

❣️
99
இப்படியே இந்தப் பிரிவிருள் தொடர்ந்தாலும்
உன் நினைவு வெளிச்சமாகக் கொண்டு செல்லும்
சாகும் கடைசி துளியிலும்
உனது எதிரில் என்னை...

❣️
100
நீ அளிக்கும் மரணமும்
எனக்கான காதல் பரிசு தான்...

யாழ் தண்விகா