Sunday 22 October 2023

மகள் - கவிதைத் தொகுப்பு - கவிஞர் கபிலன்

 


#நூல்_விமர்சனம்


மகள்

கபிலன்

கவிதைகள்

தூரிகை வெளியீடு

பக்கங்கள் : 128

விலை : 150


தந்தை மகளுக்கெழுதிய இரங்கற்பா


இருபது வயதுகளில் மகளைப் பறிகொடுக்கும் ஒரு மனிதனால் எழுப்பப்படும் பேரோலம் எப்படிப்பட்டதாக இருக்கும்? அதைச் சொல்ல வாய்த்த மனிதன் இங்கு கவிஞனாகவும் இருப்பது பேரவலம். தொகுப்பில் ஆரம்பத்திலேயே கவிஞர் கபிலன் எழுதிய உரையே கண்ணீரை உகுக்க பாதை தந்துவிடுகிறது. ஒரு பக்கம் தூரிகையின் ஒளிப்படங்களும் மறுபுறம் கவிஞரின் எழுத்துகளும் போட்டி போட்டு துயரைத் தருகிறது. தூரிகை” கவிஞர் தன் மகளுக்குச் சூட்டிய ஓவியப் பெயர். கதறுகிறார் எல்லாப் பக்கங்களிலும். சொல்ல முடிந்த வரிகள் இவ்வளவுதான். சொல்லாத வலி எவ்வளவோ...? 

“இமைகளைத்

துண்டித்துக்கொண்டு 

போவதற்கா

தூரிகை என்று

பெயர் வைத்தேன்...?”

கனக்கிறது மனம்.

பகுத்தறிவுக் கொள்கைகளைப் பேசி, பகுத்தறிவு மேடைகளில் ஏறி அதனை ஒரு பிரச்சாரமாக வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தன்னுடைய வரிகளில் பயன்படுத்திவரும் கவிஞர், மகளுக்கான வரிகளிலும் அதனைப் பதியமிட்டுள்ளார். அன்பு கொள்ளும் மனிதர்களும், உதவும் மனிதர்களும் கடவுள் நிலையை மனித மனங்களில் உண்டுபண்ணுதல் இயற்கை. இங்கு மகள் கடவுளாகிறாள். மகளின் இழப்பால் அன்பைத் தொலைத்தவராகி விடுகிறார். அன்பை இழந்தவராகிவிடுகிறார். வாழ்வின் வெறுமையை அபத்தத்தை தன்னோடு பொருத்திக் கொள்பவராகிறார்.

“பகுத்தறிவாளன்

ஒரு கடவுளைப் 

புதைத்துவிட்டான்”


இயல்பாக குடும்பத்தில் எல்லோரோடும் பேசுபவள், குடும்பத்தில் ஒருத்தி, வளரும் தலைமுறை, இன்றைய காலகட்ட நவீனத்துவம் அனைத்தையும் தன்னோடு பிணைத்துக்கொண்டும் இயங்கிக்கொண்டும் வருபவள், முக்கியமாக தற்கொலை குறித்த எண்ணத்தை மாற்றி ஊடகவெளியில் கருத்திட்டவள் திடீரென தனது அறையில் பிணமாகத் தொங்குகிறாள் என்பதை எப்படி ஏற்கமுடியும்? அந்த அறையை அவளின் அறையாக எப்படிச் சொல்வது? அவளின் வார்த்தைகளே இங்கு மீண்டும்... இப்படி எழுதியவள்தான் இறந்துபோனாள் என்றால் எந்தத் தகப்பன் தாங்குவான்... அவளின் அறிவாண்மையை கவிஞர் குறிப்பிட்டுள்ளமையை ஒப்பிட்டுப் பார்க்கிறேன்... 

“குடும்பத்தோடு

தூங்கியவள்

தனியாக

இரவு முழுக்க

பிணவறையில்”

தற்கொலைக்கு எதிராகப் பதிவிட்டவள் தற்கொலை செய்துகொள்ளும் காரணத்தை என்னவென்று சொல்வது?


பிறக்கும்போது மருத்துவமனையில் குழந்தையை வாங்கும் கைகள், அவளின் பிணவுடலை வாங்க கையெழுத்திட முனையும் கைகள்... உயிர் கதற ஒரு தகப்பனுக்கு இப்படியொரு சாபத்தைத் தந்துசென்றிருக்க வேண்டாம் தான். “எவ்வளவோ நேரங்களில் உனக்காக நான் அவளுடைய அப்பா என்று சொல்லி கையெழுத்திட்டிருக்கிறேன். இப்பொழுது முதன்முதலாக அவளின் உயிரற்ற உடலைப் பெற தகப்பன் என்ற முறையில் கையெழுத்திடுகிறேன்” என்பதைச் சொல்லும்போது கண்முன் காணும் காட்சியில் பொங்கிப் பெருகும் கண்ணீர்...

“கொரியர் இளைஞனிடம்

உனக்காக

கையொப்பமிட்டிருக்கிறேன்

கடைசியில்

உன்னையே

கையொப்பமிட்டுதான்

வாங்கினேன்”


ஒரு வகையில் சொல்வதானால் தொகுப்பின் நினைவுகள் அனைத்தும் தகப்பனின் ஒப்பாரி தான். அவர் மட்டும் கண்ணீர் வடிக்கவில்லை. குழந்தைகளைப் பெற்ற எல்லோருக்குமான வலி இவைகள். அன்பின் இழப்பை உணரத் தலைப்பட்ட மனிதர்களுக்கான வலி. எனக்கென்ன என்பதுபோல, அது உனதுயிர் என்பதுபோல, உன்மீது அன்பு செலுத்தும் எல்லோரையும் போல நினைத்து என்னையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் சென்றுவிட்டாய். எல்லோரும்போல் எல்லாம் மறந்து திரிய அவர்களா நான், நான் உன் தகப்பன், தோழன், எல்லாவற்றிற்கும் மேல்... என்பதை எப்படி வார்த்தைகளாக மாற்ற முடியும்...

"எல்லா 

தூக்க மாத்திரைகளையும்

நீயே

போட்டுக்கொண்டால்

நான் எப்படி

உறங்குவது?"

என் அன்பைத் துயரத்தில் தள்ளிவிட்டு நீ மட்டும் உறங்குகிறாயே... என் அன்பான உன்னைத் தொலைத்து நான் எப்படி வாழ்வேன்...? எனக்கும் கொடு / கொடுத்திருக்க வேண்டாமா அந்தத் தூக்க மாத்திரைகளை? எனத் தகப்பன் தவிப்பது சாதாரணமா என்ன? உயிர் போகும் ரணம்.


இல்லாமல் போனாய் என்று சொல்ல என்னால் இயலாது. ஆனாலும் அருகாமை என்றொன்று உள்ளதல்லவா? ஒரு பெண்ணைத் தத்தெடுக்க வேண்டும். உன்னைப்போல் அவளைப் பார்த்துக்கொள்ள வேண்டும். உனக்கான அன்பு முழுமையையும் அவளிடம் கைமாற்ற வேண்டும். யாரிடம் அளிப்பது? யார் அந்த அளப்பரிய அன்பிற்குப் பொருத்தம்? யார் தாங்கிக்கொள்ளும் தன்மையவள்? என்று யோசிக்கும்போது யாரைத் தத்தெடுப்பது? என்ற கேள்வி முன் நிற்கிறது. கவியீர மனதின் பார்வை இப்படி எழுத வைக்கிறது... 

"எல்லாப்

பெண் குழந்தையிலும்

உன் முகம்

யாரைத்

தத்தெடுப்பது"


வாழும்போதே சாகும் சாபத்தை அளித்துவிட்டுச் சென்ற மகளுக்கு கேட்கும் திறனிருந்தால் இந்த எளிய சொற்களின் வலி புரியும்.

"செத்துப் பிழைக்க

நான் ஒன்றும் 

ஏசு அல்ல"


இழப்பின் கண்ணீருக்குப் பொருள் சொல்ல அவசியமில்லை. எல்லாம் வாழ்ந்த வாழ்க்கை. எல்லாம் வாழ நினைத்த வாழ்க்கை. இரண்டின் சாரெடுத்து மகளாக நம் கைகளில் தந்திருக்கிறார் கவிஞர். மருத்துவ ஆய்வு முடித்து கைகளில் அளிக்கப்படும் மகளின் உடலைப் பெறும் மனநிலையில் /நூலை வாசித்து முடிக்கும்போது/ கைகளில் உள்ள இந்நூல் இருப்பதாக உயிருணர்கிறது.   

“அவளை 

மின்தகனத்திற்கு அனுப்பவில்லை

ஒரு 

பட்டாம்பூச்சி

தீக்குளிப்பதை

கவிஞனால்

தாங்கமுடியாது”


பூப்போல பார்த்து வளர்த்த குழந்தையை சிறு எறும்பு தீண்டினாலும் பெற்றமனம் பதறிவிடும்.

காயங்கள் ஆறினாலும் தழும்புகள் நிலைத்திடுவதுபோல சில இழப்புகள் எவ்வளவு கண்ணீரைச் சிந்தினாலும் மாறாது. அது நிலைத்திருக்கும். காரணம் ஒன்றே ஒன்றுதான். எல்லா அன்பையும் கொட்டித் தீர்க்க ஓர் உறவு வாய்த்திருக்கும். அவ்வுயிரின் பிரிவு / இழப்பு தாங்கவியலாத் துயர் தரும். 

“கண்ணீரின் வெளிச்சம் 

வீடு முழுக்க

நிரம்பியிருக்க

இருந்தாலும் இருக்கிறது

இருட்டு”


மீண்டு வாருங்கள் தோழர்.

யாழ் தண்விகா



Monday 2 October 2023

சரக்கொன்றை நிழற்சாலை


 சரக்கொன்றை நிழற்சாலை

ஹைக்கூ கவிதைத் தொகுப்பு

ஷாஜிலா பர்வீன் யாகூப்

Mohamad Sarjila Yakoop 

படைப்பு பதிப்பகம்

விலை ரூ: 100க்

பக்கங்கள் : 112


ஹைக்கூ ஒளியில் வாழ்வின் நிழல்...


மூன்று வரிகளில் எடுத்துக்கொண்ட கருவை கவிதையாக்கும் வித்தகம் ஹைக்கூ... மிஷ்கின் மொழிபெயர்த்த ஹைக்கூ ஒன்று. "நத்தை போன

பாதையில்

வெயிலடித்தது".

மிக இயல்பாக வாசித்துக் கடக்கும் ஒரு கவிதை. ஆனால் உள்ளே பொதிந்திருக்கும் வரலாற்றைத் தோண்டிப் பார்க்க மெனக்கெட வைக்கும் சூட்சுமம் கவிதையில் இருக்கிறது. அவ்வாறு வாசிக்க வைப்பதுதான் ஹைக்கூவின் சாமர்த்தியம் மற்றும் சாகசம். தோழர் ஷர்ஜிலா அவர்களின் ஹைக்கூக்கள் பல அவ்வாறான தேடலை உண்டுபண்ணும் கவிதைகள். வாசிக்க வாசிக்க இயற்கையின் உள்ளார்ந்த அதிசயங்களில் நம்மை மூழ்கடிக்கிறார் தோழர்.


இயற்கையை அழித்தல் என்பது வெறும் அழித்தல் என்பதோடு முடிந்து விடுகிறதா... அது சூழலை அழித்தல், உயிர்களை அழித்தல், உயிர்களுக்கிடையேயான சங்கிலியை உடைத்தல். அதனை மனிதனுக்குக் கடத்தும் வரிகள் இவை.

தன்கூட்டைப் பின்தொடரும் பறவை

ஜேசிபியில் செல்கிறது

வேருடன் மரம்.

ஏனோ நம் குழந்தையை யாரோ பறித்துப் போக நாம் பின்னால் ஓடுவது போலான வலி.


இயற்கைப் பேரழிவுகள் பெரும்பாலானவை மனிதன் தனக்குத்தானே உண்டாக்கிக் கொண்டவையோ என்றெண்ணும் வண்ணம் அவ்வப்போது வெள்ளம், புயல் உள்ளிட்ட பாதிப்புகளைக் காணும்போது ஏற்படும். சென்னையில் முழுதும் நிடம்பியபின் நள்ளிரவில் திறக்கப்பட்ட நீர்த்தேக்கம் உண்டாக்கிய பாதிப்புகள் சொல்லி மாளாது. அலையாத்திக்காடுகளை கடற்கரை ஓரங்களில் அமைக்காததால் ஊருக்குள் சுனாமி பாய்ந்து கொத்துக்கொத்தாக கடலுக்குள் இழுத்துச் சென்ற உயிர்கள் பல லட்சங்கள். இது போன்ற சம்பவங்கள் நடந்து முடிந்தபின் காணும் காட்சிகள் போர் முடிவுற்றபிறகு காணும் ஓலங்கள் போலவிருக்கும். அது போன்ற ஒரு காட்சி.

வெள்ளம் வடிந்த வீதி

வீட்டுக் கூரையின் மேல்

தரைதட்டி நிற்கும் படகு.


இனி எப்போது பெங்குவின்களைப் பார்த்தாலும் இக்கவிதையே கண்முன் விரியும். ஆச்சர்யப்பட வைத்த ஒப்பீடு.

கருப்பு மேலங்கி

கழட்டாத வழக்கறிஞர்களா

கடற்கரை பெங்குவின்கள்...!


பால்யங்களைக் கண்முன் நிறுத்தும் பல ஹைக்கூக்கள் தொகுப்பெங்கும். அதற்குள் நம்மைப் புகுத்தி விளையாட வைத்த ஒரு ஹைக்கூ...

மணல்வீடு கட்டும் அண்ணனுக்கு

காத்திருக்கும்

பாப்பாவின் சிரட்டைமண் இட்டிலி... 

சிறுவயது அன்பின் நேர்த்தி எவ்வளவு சுவாரஸ்யமானது... அருமை.


குழந்தைகள் பள்ளிக்குச் சென்றபின் வீடு அனுபவிக்கும் கொடுமை என்பது பேரவலம் தான். அப்படி வீடு என்ன கொடுமை அனுபவித்து விடப் போகிறது... தோழர் சொல்கிறார்.

பள்ளி சென்ற குழந்தைகள்

தனித்துக் கேட்கும்

நகரும் கடிகார முட்கள்.

வீடு யாருக்கு? கடிகார ஒலிகள் யாருக்கு? என்ற கேள்விகள் உதிக்கும் அதே நேரத்தில் பள்ளியிலிருந்து குழந்தைகள் திரும்பும் நேரத்தைக் கணக்கிட்டு காத்திருக்கிறதோ கடிகாரம் என ஆறுதல் கொள்கிறது மனம்.


நத்தையாகிறேன்

நிழலெல்லாம் பூக்களுடன்

சரக்கொன்றை நிழற்சாலை...

பூ வீதி எதுவென்றாலும் அது உண்டாக்கும் சலனம் மனித மனத்தை ஒரு பாடுபடுத்த் வேண்டும். உதிர்ந்த பூ என்று அவ்வளவு வேகமாக மிதித்து விடுகிறதா நமது காலடிகள்? அவற்றை மிதிப்பதால் என்ன பாதகம் இந்த மண்ணுக்கு நேர்ந்துவிடப் போகிறது... ஆயினும் நாம் யோசிப்பதால் தான் மனிதம் ஒவ்வொரு உயிருக்குள்ளும் தன் வேர்களை ஆழப் பாய்ச்சுகிறது. அதுவே இந்த பூமி இன்னும் வாழ காரணமாக இருக்கிறது. உதிர்ந்துகிடக்கும் சரக்கொன்றைப் பூக்கள்... கடக்க நத்தையாகும் மனிதம்... நிழலெல்லாம் பூக்கள்... நத்தை சுரக்கும் திரவம்... இதுபோன்ற காரணிகளுக்குள் ஒளிந்து கிடக்கும் ஏதோவொன்று உண்டாக்கும் கிளர்ச்சி கவிதையின் சிறப்பை மிளிரச் செய்கிறது. 


பதிப்பாளர் Mohamed Ali Jinna தோழரின் பதிப்புரை, Surulipatti Si Vaji அண்ணன் அவர்களின் அணிந்துரை, இந்து தமிழ் திசை மு.முருகேஷ் தோழரின் தொகுப்பு குறித்த ஹைக்கூப் பார்வை ஆரணி இரா. தயாளன் தோழர் கூறும் தறி வீட்டுப் பூனைகள், ஷர்ஜிலா தோழரின் என்னுரை இவையே ஒரு ஹைக்கூ வகுப்பைப் பார்த்த பெரும் திருப்தி அளிக்கிறது.


நிறைய கவிதைகள். நிறைவான பார்வை. 


வாசிப்போம், ஹைக்கூ மிளிர.


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️

Thursday 21 September 2023

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து - ஏர் மகாராசன்


மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து

கட்டுரை நூல்

மகாராசன்

ஆதி பதிப்பகம்

விலை: ரூ 90

பக்கங்கள் : 72


எங்கே செல்கிறார்கள் மாணவர்கள்...? என்ன செய்யப் போகிறோம் நாம்?


இரண்டு முக்கியச் செய்திகள் என்று கூறுவதை விட இரண்டு அதிர்ச்சிச் செய்திகள் என்று கூறிவிடலாம் இரு கட்டுரைகளை. கல்வித்துறை, மாணவர்கள், சமூகம் மற்றும் ஆசிரியர்களிடையே மலிந்து கிடக்கும் பிற்போக்குத்தனங்களையும், அச்சீர்கேடுகளைக் களைவதற்கான ஆரோக்கியமான வழிமுறைகளையும் கூறும் கட்டுரைகள் இவை. இரண்டும் கல்வித்துறையோடு நேரடித் தொடர்பு உடையவை என்ற வகையில் கல்வி கற்ற அனைவரும் அல்லது சமூகம் உருப்பட நினைக்கும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய விழிப்புணர்வுப் புத்தகம். 


முதல் கட்டுரை 2022 – 23 ஆம் கல்வியாண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வில் 50,000க்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. அது எதனால் என்பது குறித்துப் பேசுகிறது. முதல் பத்தியிலேயே இத்தகவல் சமூகம் முழுமைக்குமான பேசுபொருளாக இருந்தது என்றிருக்கிறது. ஆம். இருந்தது. கடந்தகாலத்தில் நடந்த ஒன்று, அதிலிருந்து பாடம் கற்று அனைத்து மாணவர்களையும் தேர்வெழுத வைக்க என்னென்ன திட்டங்கள் கல்வித்துறையில் உருவாக்கப்படவேண்டும் என்பது குறித்து அலசுகிறது. மெல்லக் கற்போர், சராசரியாகக் கற்போர், மீத்திறன் வாய்ந்த கற்போர் இவர்கள் அனைவருக்குமான பாடத்திட்டமாக இருக்கவேண்டிய கல்வி, மீத்திறன் பெற்றவர்களுக்கான பாடத்திட்டமாகவே இருக்கிறது. அதையும் முழுமையாக சொல்லிவிட முடியவில்லை. மீத்திறன் பெற்றவர்களே பாடத்திட்டத்தைப் பார்த்து மலைக்குமாறு இருக்கிறது. அப்படியானால் சராசரியாகக் கற்போர் நிலையைப் பற்றிச் சொல்லவேண்டாம். தொடர்ந்து மூன்று வருட பொதுத் தேர்வு முறை. 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு மட்டும் உள்ள பொதுத் தேர்வு முறையால் என்ன சிக்கல் நிகழ்ந்தது எனத் தெரியவில்லை. மாணவர்களை அடிமாட்டுத்தனமாக, பாடம் தவிர்த்த செயல்பாடுகள் எதுவுமற்ற இயந்திரத் தன்மையுடன் வார்த்து இக்கல்விமுறை எதைச் சாதிக்கப் போகிறது என்று பார்த்தால் மெல்லக் கற்கும் மாணவர்கள் இத்துயரிலிருந்து தப்பித்து ஓட நினைக்கிறார்கள். அதுதான் இடைநிற்றல், விலகல், தேர்வு எழுதாமை போன்றனவற்றிற்குக் காரணமாக அமைகிறது. இதனைக் களைய மேற்கண்ட மூன்று பிரிவினருக்கான பாடத்திட்டத்தை உருவாக்கவேண்டியதன் அவசியத்தைப் பற்றியும், ஆசிரியர்களிடம் கல்வித்துறையில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் குறித்துப் பேசி தீர்வுகாண மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் பேசுகிறது முதல் கட்டுரை. 


இரண்டாம் கட்டுரை, சமீபத்தில் நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலைப் பற்றியும், பகுத்தறிவு வாய்ந்த மனித சமூகம் செல்லும் இழிபாதை எப்படி படிப்படியாக பரிமாணம் பெற்று இன்று வன்முறையின் உச்சத்தில் நிற்கிறது என்பதையும், அதற்குக் காரணமாகத் திகழும் கூறுகள் எவையெவை என்பது பற்றியும், அதனை மாற்றியமைக்கும் வழிமுறைகளையும் முன்வைக்கிறது. மிகுந்த அச்சத்தையும் பதட்டத்தையும் தோற்றுவிக்கும் களங்களாக அரசுப் பள்ளிகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் மாறி வருகின்றன என்பது கண்கூடான உண்மை. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள் மத்தியில் இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்கள் நடந்து வந்திருந்தாலும் அவை பல்வேறு சமூகக் காரணிகளால் திசை திருப்பப்பட்டுவிட்டன என்கிறார் கட்டுரையாளர். அதே சமயம் நாங்குநேரியில் நடந்த கொலைவெறிச் சம்பவம் சமூகத்தால் பேசப்பட்டபோதும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் முன்னரே, நாங்குநேரி சம்பவத்தின் இரத்தம் காயும் முன்னரே குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதும் சமூகத்தின் முன்னால் தான் என்பது வருத்தம்தரும் ஒன்றாகவே பார்க்க நேரிடுகிறது. 


சின்னத்துரை மற்றும் சந்திராசெல்வி இருவரும் பள்ளி மாணவர்கள். தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள். தாக்கியவர்களும் மாணவர்கள். தாக்கியவர்கள் அனைவரும் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தத்து. இது வெறுமனே திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு நிகழ்ந்த ஒன்றல்ல. சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் பல காலங்களாக ஊறிக் கிடந்த சாதியானது, சமூகங்களால் பல்வேறு விழாக்கள் மூலமாக வெளிப்படையாகவே இன்று தனது முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. இளைஞர்கள், பெரியவர்கள் அரசியல் கட்சிகளில் இருப்பதைவிட சாதிச் சங்கங்களில்தான் திரண்டிருக்கிறார்களோ என்கிற அளவுக்கு சாதியக் கூட்டங்கள் நிரம்பி வழிகின்றது. இவற்றிற்கு பள்ளி மாணவர்கள், குழந்தைகள் என்ற கணக்கெல்லாம் கிடையாது. அனைவரும் பங்கேற்கிறார்கள். இதனை அவ்வவரின் குடும்பத்தினரே சாதிப் பெருமிதமாக நினைக்கிறார்கள். இதனை பல்வேறு தரவுகளின்மூலமாக கட்டுரையாளர் கூறும்பொழுது சாதியானது சமூகத்தில் உண்டாக்கும் தாக்கம், இனி உண்டாக்கப்போகும் தாக்கம் எப்படி இருக்குமோ என்ற பதட்டத்தை உருவாக்குகிறது. சாதி மற்றும் மதத்தால் உண்டாகும் வன்முறைகள் தாழ்த்தப்பட்ட மற்றும் உயர்த்தப்பட்ட சாதிகள் என இருபுறம் வாயிலாகவும் நடைபெறுகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மாணவர்களிடம் இன்று பரவலாகி வரும் அடாவடித் தாட்டியங்கள், வன்முறைத் தாக்குதல்கள், பாலியல் வன்முறைச் சீண்டல்கள் என நீளும் பட்டியலை கட்டுரையாளர் கூறுகிறார். இவை ஆங்காங்கே நாம் கண்ட, கேட்ட பட்டியலின் தொகுப்புதானே ஒழிய மிகையல்ல. இவற்றை மாற்ற சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம். கல்வித்துறை, தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை அறம் சார் வகுப்புகளை நடத்தவேண்டியதன் அவசியத்தை உணரவேண்டும். ஆசிரியர்களிடம் உள்ள சாதிய மனப்பான்மை மாற வேண்டும். இட ஒதுக்கீட்டைக் கூட தவறாகப் புரிந்துகொண்டிருக்கக்கூடிய ஆசிரியர்களால் அம்பேத்கரைப் பற்றி எப்படி உயர்வாகப் பேசிவிடமுடியும் என தனது ஆதங்கங்களையும் கட்டுரையாளர் கூறியுள்ளார். இன்னும் பல தகவல்கள். வெறும் தரவாக மட்டுமல்லாமல் தவறான பாதையில் செல்லும் இந்தச் சமூகத்தின், மாணவர்களின், ஆசிரியர்களின், கல்வித்துறையின் குறுக்கு வெட்டுச் சித்திரத்தை கண்முன் நிறுத்துகிறது. சமூக உதிரிகளாக மாணவர்கள் மாறுவதற்கு முன்பாக நாம் செய்யவேண்டிய பணிகள் நிறைய உண்டு. அவற்றை அறிந்து களைய சமூக அக்கறையுள்ள ஒவ்வொரு மனிதரும், கல்வித்துறை தொடர்புடைய ஊழியர்கள் அனைவரும் வாசிக்கவேண்டிய நூல் இது. வாசியுங்கள். சமூகத்தின் மீது விழும் நல்ல வெளிச்சத்திற்கு திறப்பாக இந்த நூல் அமையும் என்பதில் மாற்றமில்லை.


வாழ்த்துகள் தோழர் ஏர் மகாராசன் 


யாழ் தண்விகா

Wednesday 6 September 2023

ரவிக்கைச் சுகந்தம் - ஜான் சுந்தர்


ரவிக்கைச் சுகந்தம்

ஜான் சுந்தர்

கவிதைத் தொகுப்பு

காலச்சுவடு பதிப்பகம்

விலை ரூ 90


பாரதியைக் கொண்டாட வேண்டும் என்றால் பல அபத்தங்களை நாம் சகித்தே ஆகவேண்டும். பாரதியின் வரிகளில் தோய்ந்துபோய்க் கிடக்கும் மனம் அவரின் வாழ்வோடு அந்த வரிகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் ஏனிந்த முரண் என்று கேள்வி கேட்கவே செய்யும். குடிப்பது கூழ் கொப்பளிப்பது பன்னீர் என்ற சொலவடை உண்டு. தனக்கே வாழ, உண்ண திராணியில்லாதபோது கூட காக்கை குருவி எங்கள் சாதி என்று கூற கவிதைத் திராணி வேண்டும் தான். ஆனால் அது வாழ்விற்கான கதவுகளைத் திறந்து வைத்ததா என்றால் அவர் காலத்தில் இல்லை என்றே சொல்லலாம். இறப்பதற்கு முன்னர் கூட எட்டையபுர அரசரிடம் எட்டப்பனின் வரலாறை எழுதித் தருகிறேன் என்று இறைஞ்சி நின்ற வரலாறு பாரதிக்கு உண்டு. என்ன தான் இரக்கம் காட்டினாலும் விலங்குகளிடம் எச்சரிக்கை உணர்வோடுதான் இருக்கவேண்டும். அந்தக் கவனம் இல்லாததால் யானையிடம் தோற்றது கவி வாழ்வு. தொகுப்பில் ஒரு கவிதை சாதாபாரதியின் சகி. வாசிக்க வாசிக்க பாரதியின்மேல் உண்டான கோபம் சொல்லிலடங்காது. வாசிப்போருக்கும் அந்தக் கோபம் உண்டானால் நாம் செல்லம்மாவின் வலியை உணர்ந்த மனிதராக இருக்கிறோம் எனப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

@

சிலிண்டர்க்காரனுக்குக் கொடுக்க

உரூவா இல்லாமல்

செல்லம்மா அல்லாடிக்கொண்டிருக்க 

புலவர் பெருஞ்சபையில்

அயலகத் திரைப்படங்கள் குறித்த

விவாதத்திலிருந்தான் சாதாபாரதி.

@

அவள் மளிகைக் கடையிலிருந்து

அழைத்தபோது மாலிலும்

ரேஷன் புழுக்கத்தில் நெளிந்தபோது

ஏசி பாரிலுமிருந்து

பண்டிதருடன் சொற்சமரஞ் செய்துவந்தான்


.... இப்படியாக நீளும் கவிதைகள் எட்டாம் கவிதையில் உயிரை அரற்றிவிடுகிறது. 

@

வால்விட்ட தலைப்பாகையினை

அவன் சூடிப் பார்த்த முகூர்த்தத்தில்

கூறைப்புடவையினைக் கீறி

தூமைத் துணியாக்கிக் கொண்டாள் சகி.


கவிஞனாக இருப்பவன் குடும்பத்தில் எப்படி இருந்திருக்க வேண்டும், குடும்பத்தை எப்படிப் பார்த்திருக்கவேண்டும் என்பதை அவனின் செயல்கள் வாயிலாகவே கவிதையாக வடித்து அவனுக்குப் பாடம் எடுத்திருக்கிறது என்று இக்கவிதை வரிகளை வாசிக்கும்போது உணர முடிந்தது. 


அரண்மனைக் கிளி என்ற திரைப்படத்தில் புத்திமதி சொல்லயிலே தட்டிச்சென்ற பாவியடி, விட்டுவிட்டுப் போனபின்னே வேகுது என் ஆவியடி... என்ற வரிகளை ராஜாவின் குரலில் கேட்கும்போது உண்டாகும் தாயின் மீதான மதிப்பும் கரிசனையும் நேரம் கடக்கக் கடக்க மாறிவிடுகிறது. அதனை கவிதையாக்கி வைத்திருக்கிறார் ஜான் சுந்தர் தோழர்.

@

சைக்கிள் காணாமல் போனபின்

கவனமாய் பூட்டுகிறேன்.

அம்மா படத்துக்கு

பூ வைப்பதும் அப்படித்தான்...


அருமை தோழர்.


ஊரே ஞாயிறைக் கொண்டாடும் பணியை செவ்வனே செய்கிறது. பக்கத்து வீட்டில் கோழிக்கறி. இன்னொரு பக்கம் ஆடு. இவற்றிற்கு வாய்ப்பில்லாத எளியவன் என்ன செய்வான்...

@

எனது கிழமையின் எளிய உடலில்

மீனை வரைய ஆயத்தமானபோது

மாதக் கடைசி என்றதென் சட்டைப்பை


ஐம்பது ரூபாய்த்தாளுக்குள்

அரைக்கிலோ மீன்களையாகிலும்

வரைந்துவிட முடியாதா...


வீட்டுக்குப் போனதும் மனைவியிடம்

பழைய ஹார்லிக்ஸ் பாட்டிலொன்றை

கழுவித்தரக் கேட்டேன்.

வாழும்நாள் வரையில்

என் வீட்டின் அலங்காரமாயிருக்குமிந்த ஜோடி மீன்கள்...


வருத்தங்களையும், இயலாமையையும் தூக்கி எறிந்து அங்கே மகிழ்வை உட்காரவைக்கும்வழியாய் இந்தக் கவிதை எனக்குள் ஊடுருவியது. இது போல இன்னும் பல கவிதைகள். வாய்ப்பு உள்ளோர் வாசியுங்கள். ரவிக்கைச் சுகந்தம் உணருங்கள். 


வாழ்த்துகள் தோழர் John Sundar.


யாழ் தண்விகா



Sunday 13 August 2023

படைப்பு குழுமம் - கவிச்சுடர் - யாழ் தண்விகா

 


படைப்பு-Padaippu 


இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை கவிஞர் யாழ் தண்விகா அவர்கள் பெருகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.     


 


கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக கவிதை உலகில் இயங்கி வரும் கவிஞர், தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர். பெரியகுளம் ஒன்றியம், பொம்மிநாயக்கன்பட்டி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். 


 


அழகியலே (2009)


 சாம்பல் எரிகிறது (2016)


 மௌனமாகக் கடக்கும் மேகம் (2019)


 மழை முத்தம் (2021)


 ப்பா… ப்பா... ப்பா… (2021)


 நான் உன்னைக் காதலிக்கிறேன் (2021)


ஆகிய ஆறு கவிதைத் தொகுப்புகள் இதுவரை அவரது படைப்புகளாக வெளிவந்துள்ளன.


 


அவர் தம் பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வியோடு, ஒயிலாட்டம், சாட்டைக் குச்சி ஆட்டம், பறை உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகள் கற்றுத் தருவதையும்  பெரும் விருப்பமாக செய்து வருகிறார்.  கவிஞர் ஒரு   நாடகக் கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது,  இவரது கவிதைகள்  வெகுஜன இதழ்களிலும், சிற்றிதழ்களிலும், படைப்பு குழுமம் போன்ற மின்னிதழ்களிலும் தொடர்ந்து வெளிவந்திருக்கின்றன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தேனி  மாவட்டப் பொருளாளராக, பெரியகுளம் கிளையின் தலைவராகவும் பொறுப்பில் உள்ளார்.


 


கவிஞரின் கவிதை பயணம் குறித்து அவரே குறிப்பிட கவனிப்போம் :


 “கவிதை என்பது ஓர் ஊற்று. அதன் இயல்பில் அதன் போக்கு அமையவேண்டும். நீரற்ற ஊற்றின்மேல் பாவிக்கிடக்கும் சிறு மணற் துகள்களும் கவிதைகளே. மெனக்கெடுத்து எழுதுவது என்பதை விட கண நேரத்தில் பூக்கும் உணர்ச்சிதான் ஆழமான வலியைச் சொல்லும் கவிதையாக இருக்கும் மற்றவை ஜிகினாத்தனம் மிக்கவை. மேலும் மேதாவித்தனம் மிகுந்த வரிகள் கொண்டாடப்படலாம். புரட்சிக்கான வரிகள் எளிமையானதாகவே இருக்கும். நான் எளிமையான சொற்களில் என்னுடைய கவிதைகளைப் படைக்கவே விரும்புகிறேன்.


 எழுத்து எனக்கான வடிகால். மகிழ்வோ துயரோ அதன் தோளில் நான் சாய்ந்து கொள்கிறேன்,  தாய் மடியில் கண்ணயரும் குழந்தையைப் போல. அதனை நீங்கள் வாசிக்கும்போது உண்டாகும் உணர்வில் என் எழுத்தின் இடம் முடிவாகும்”.


 


எழுத்தாளர் அசோகமித்திரன் நினைவு படைப்பாளர் விருது (2017)


க.சீ.சிவக்குமார் நினைவு சிறுகதைக்கான விருது (2018)


படைப்புக் குழுமம் மாதாந்திர சிறந்த படைப்பாளிக்கான விருது (2019)


திண்ணை மனித வள மேம்பாட்டு அறக்கட்டளை வழங்கிய அந்தோணிராஜ் ஆசிரியர் நினைவு வளரும் படைப்பாளர் கலை இலக்கிய விருது (2022) உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ள கவிஞர்  தனது முக்கிய இலக்காக கருதுவது ; குழந்தைகள் இலக்கியம் படைத்தலை ஊக்குவித்து குழந்தைகள் சார்ந்த கூட்டங்கள் ஒருங்கிணைத்தலுக்கான தளம் அமைக்க வேண்டும் என்பதாகும்.


 


இனி கவிஞரின் சில கவிதைகள் காண்போம்.


 


 ஒரு கவிஞன் எப்போது பிறக்கிறான். எப்போது இறக்கிறான் என்பது அவன் கவிதைகளைக் கொண்டுதான்  வாய்க்கிறது.  சில கவிதைகளின் முதல் வரியிலேயே இறந்து விடும் கவிஞர்களும்  உண்டு.  ஆனாலும்  முதல் வரியில்  பிறப்பெடுத்து ஆற்றொழுக்காக வளரும் கவிஞன் ; அந்தக் கவிதையின் கடைசி வரியில் மரணிப்பதுதான் அந்த கவிதைக்கு அவன் செய்யும் நியாயம் ஆகும். அப்போதுதான் கவிதை தானாக வாழத் தொடங்கும். இதோ அந்த கவிதை….


 


ஆயுள் எனப்படுவது...


 


அதை இப்போது கவிதையில்லை


என நான் நினைக்கலாம்.


எழுதிய நான் கவிஞனில்லை என


கவிதை நினைக்கலாம்.


எழுதப்படும்போது


அது எனக்குள்ளும்


நான் அதற்குள்ளும்


மூழ்கிக் கிடந்தோம்.


அது கவிதையாக இருந்தது.


நான் கவிஞனாக இருந்தேன்.


கவிதைக்கும் எனக்குமிடையில்


பெரு மயக்கம் பூத்திருந்தது.


அன்றைய நினைப்பிற்கும்


இன்றைய நினைப்பிற்கும்


இடைப்பட்ட காலம் தான்


கவிதை வாழ்ந்த காலம்.


கவிஞன் வாழ்ந்த காலம்.


 


மூச்சை நிறுத்திப் போனபின்பு;  முகவுரை எழுதினால் என்ன? தெளிவுரை எழுதினால் என்ன? முடிவுரை முக்கியம் வகிக்கும்.  வயோதிகம் எல்லோருடைய வாசலையும் ஒரு நாள் தட்டத்தான் செய்யும்.  தாய் தந்தையரை அநாதை விடுதிகளில் சேர்க்கும் மகனுக்கும் கூட கருணை ஒரு துளி இருந்திருக்கும்.  கூடவே அவர்களை  வைத்துக் கொண்டு அவர்களை கவனிக்காமல் இருப்பவர்கள் இம்மையின் பாவிகள். எனக்கு கருணை இருக்கிறது மனைவிக்காக கவனிக்கவில்லை என்கிறவன் கொடுங்கோலன்…


 


மழை வழி


மலை வலி...


 


எப்போதோ மாரியம்மன் கோவிலுக்குத்


தீச்சட்டி எடுக்க வாங்கிய


மஞ்சள் நிற வாயில் சேலை தான்


கடந்த சில மாதங்களாக


காளிக்கிழவிக்கு


 


நடை தளர்ந்து


விழும் இடங்களிலிருந்து


யாரோ ஒரு சிலரால்


வீட்டின் தாழ்வாரத்திற்குள்


அவ்வப்போது கிடத்தப்படுவாள்


 


அங்கங்கள் தெரிய


உடலொட்டிக் கிடக்கும் அச்சேலையில்


பாதி சாக்கடையிலும் பாதி பாதையிலுமாக


நீண்ட நேரம் கிடக்க


ஜன்னி வந்து செத்துப்போனாள்


 


எதுக்கு மழைகாலத்தில் செத்துத் தொலைஞ்சா


கெழட்டு முண்ட என்னும்


பொண்டாட்டியின் முன்னால்


கைகட்டி நின்றிருந்தான்


கிழவி மகன்.


 


பெருங்குரலெடுத்து


அழுதுகொண்டிருக்கிறது மழை


நெடுநேரமாக.


 


இரவுகளின்  குணாதிசயங்கள் என்பது மனிதர்களின் மனவோட்டங்களைப் பொருத்தே அமைகிறது… வசதி வாய்ப்புள்ள ஒருவனை  அவனுக்கென்ன என நாம் வியக்க… அவன் தன் மறைமுக வறுமையால் தூக்கத்தை கழுவிவிட்டு கல்லறைகள் பற்றிய குறிப்புகளைப் படித்துக் கொண்டிருக்கலாம். இவன் பசித்தவன் என முத்திரையிடப்பட்ட ஒருவன் தன் பாதாள மனசுக்கு தாலாட்டுப் பாடி உறங்க வைத்துக் கொண்டும் இருக்கலாம்…


இந்த கவிதை என்ன  சொல்கிறது என கவனிப்போம்…


 


இரவென்பது எப்போதும் பயம்


ஆந்தைகள் வவ்வால் பறக்கும்


கரப்பான்கள் ஓடும்


மேகங்களின் பயணம் காணாமலிருப்போம்


பூனை இரை தேடும்


நாய்கள் குரைக்கும்


சூரியன் தெரியாது


எல்லோரும் நல்லவர்களாக உறங்குவார்கள்


பறவைகள் சிறகொடுக்கும்


நீர்நிலைகளின் அலை


அமைதியாகும்


கூடு விட்டுக் கூடு பாய்தல்


அரங்கேறும் அல்லது அரங்கேற்றப்படும்


மின்மினிப் பூச்சிகளுக்கு என


இருட்டு தேவைப்படும்


யாருக்காகத் துடிக்கிறோம் என்றே தெரியாமல் இதயம் துடிக்கும்


நாமே ஒரு பேயாக எழுந்து நடப்போம்


அதிகாலை நெருங்க நெருங்க உறக்கம்


நெட்டித் தள்ளும்


காணுமிடம் யாவும் இருளாயிருக்கும்


வானத்திற்கும் மேலுள்ள பெருஞ்சூரிய வெளிச்சம் நட்சத்திர ஓட்டைகள் வழியே தெரியும்


துரோகிகளைக் கணக்கெடுக்கலாம்


அணக்கமில்லாமல் காற்று ஊரை மயக்கலாம்


கவிதை எழுதித் தொலைக்கலாம்...


உயிரை கனவு வருடும் அரற்றும்


பசித்தாலும் அரை உறக்கத்துடன் உறங்கவும் செய்யலாம்


யாரும் அறியாமல் கண்ணீர் சிந்தலாம்


தன்னைத்தானே அழித்துக்கொள்ளத் துணிந்திடலாம்


எல்லாவற்றிற்கும் மேலாக


இறந்தாலும்


யாருக்கும் தெரியாமல் போய்விடலாம்...


 


சருகாக வாழ்தல் கேவலமா? ஒரு காலத்தில் பச்சையம் பூசி தளிராக துளிர்விட்டபோது பச்சையிலைகள் தொட்டுத்தடவ காற்றுத்  தாலாட்டும். இலையாய் கிளைத்த போதும் ஆயிரம் கதைகள் அம் மரத்தோடும் வேரோடும் பேசிய மிளிர்வுகள். சருகாகும் போது மரம் கை விட்டதென கருதினாலும் பற்றும் ஆற்றல் பரவசம் இல்லாமல் போனதும் கூட காரணமாகும். சருகாக  விழுந்தால்தான் என்ன மரத்திற்கு உரமாகலாம்தானே….


 


சருகாக உதிர்தலில்


வீழ்ந்தே கிடத்தலில்


காற்றினசைவிற்கேற்ப அசைதலில்


ஒருபோதும் வருத்தமில்லை எனக்கு


நீங்கள்தான் எனக்கு சருகு என்று


பெயரிட்டுள்ளீர்கள்


வாழ்வைக் கிளைதனில்


ஒட்டிக்கொண்டு வாழ்ந்த இலை தான் நான்


இப்போது கிளையைப் பற்றுதலை


தவற விடவில்லை


கிளையோடு  வாழ்ந்த வாழ்வை


போதும் என்றிருக்கவில்லை


கிளை என்னைத் தவற விட்டுவிட்டது


கிளை பற்றியிருக்க எனக்கு வலிமையில்லை


வாழ்வின் எல்லையில் நின்று


வாழ்ந்துகொண்டிருப்பதாகவே


இப்போதும் நினைத்துக்கொண்டிருக்கிறேன்


கிளையின் ஞாபகம் ஏற்படுத்திய தழும்போடு...


 இனி கவிஞரின் மற்ற கவிதைகள்:


 


பூனைக்_கடவுள்


 


பிடிபடினும் நழுவி ஓடும் லாவகத்துடன் உள்நுழைந்த பூனையின் கூர் கண்கள் சிவப்பு நிற பல்பின் வெளிச்சத்தை பதட்டமாக்கிச் சுழற்றியடிக்கும் மின்விசிறியைச் சற்றும் சலனமின்றிக் கடக்கிறது


 


கருப்பு நதிக்குள் தடம் பதிக்கும் பூனையின் பாதங்களும் நாசித் துளையும் காமத்தின் பின்தொடரும் ரசனைக்குரிய முத்த சுகந்தம்


 


எங்கோ குரைக்கும் நாயின் சத்தத்தில் முன் வந்து நிற்கும் பதப்பற்கள்


பூனைக்கு ஒரு அச்சத்தையும் ஏற்படுத்தாதிருக்கிறது


 


மின்கம்பத்தின் ஆந்தைக் குரலும்


இரவுப் பூச்சிகளின் சலசலப்பும்


இருள் சுவாசிக்கும் தாலாட்டொலி


 


ஏகாந்த நிலையில் கிடக்கும் உடல்களின் விட்டேத்தித்தனம் குறித்த புரிதலற்ற பூனை சுவாரஸ்யமற்ற தேடலை முடித்துக் கிளம்ப தெரு விளக்குகள் ஆங்காங்கே அப்படியே நின்று பார்க்கின்றன


 


வெயிலேறத் தொடங்கிய பொழுதில் கடும் அலறலுடன் வீட்டினுள்ளிலிருந்து எடுத்துவரப்பட்ட உடல்களுடன் மொய்த்து விழுகின்றன எத்தனையோ பசிக்கதைகள்


 


இத்தனையையும் தூரத்துச் சந்து முனையில் நின்று பார்க்கும் பூனைக்கு இன்று இரவும் பசிக்கும்


@@@


 


மழை என்பதை வேறெப்படியும் சொல்லத் தேவையில்லை


அது பொழிகிறது


மண் மரம் வீடு உயிர்கள் இத்யாதிகள்


எல்லாம் விதிவிலக்கல்ல


யாரை எப்படி நனைக்கிறது


யார் எப்படி நனைகிறார்கள்


என்பதில்தான் இருக்கிறது எல்லாம்.


மழையை மறைத்தபடி


தார்ச்சாலையில் வரைந்திருந்த ஆஞ்சநேயர் ஓவியத்தின் மேல் படுத்திருந்தவன்


சஞ்சீவி மலையை விட எடையுடையவனா என்ன?


ஆஞ்சநேயருக்கு மழையின் நிறமும்


வரைந்தவனுக்கு பாலையின் நிறமும் வாய்த்துவிட்டது.


பெய்யெனப் பெய்யும் மழை


எல்லோருக்கும் ஒன்றல்ல.


 


@@@


நிலா இல்லாத


வானத்து நட்சத்திரங்களைக்


கையிலெடுத்து வந்துவிட்டேன்.


நிலா வரும் முன்னர்


வானத்தில் எறிந்துவிட்டு


வந்துவிடவேண்டும் என்ற


எச்சரிக்கை உணர்வோடுதான்


அவற்றை உருட்டி விளையாடிக் கொண்டிருந்தேன்.


மெல்ல முனைகள் மழுங்கத் தொடங்கிய


நட்சத்திரங்கள் வால்  நட்சத்திரங்களாகி


மறையத் தொடங்கிய நேரத்தில்தான்


கூண்டுக் கிளிகளின் கண்களிலிருந்து


மெல்ல மறையத் தொடங்கிய வனம்


நினைவைச் சுடத் தொடங்கியது.


 


@@@


பேரன்பின் நிலத்திலிருந்து


பச்சையம் துளிர்க்கிறது


நிறைய மலர்கள்


நிறைய கனிகள்


நிறைய வாசனை


எல்லாம் நிறைய நிறைய.


வேரின் தூரத்திற்கு நீண்ட


மேல்நோக்கிய மரம்.


சொல்லாமல் அடித்த காற்றொன்றில்


அடியோடு சாய்கிறது.


இப்போதும் மரத்திலிருக்கும் மலர்கள்


வாசனை பூக்கின்றன.


கனிகளின் சுவை


அதீதமாக இருக்கின்றன.


அதே காற்றிற்கு மரம் அனுப்புகிற


நீராவி முத்தத்திற்கு


பதில் முத்தம் வருகிறது.


மனிதன் தான் கோடாரியோடு வருகிறான்.


 


@@@@


 


❣️


ஒரு வீடு ஒரு தொழில் ஒரு கிழவன்


 


சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதான தோரணை


வாயில் எப்போதும் சிகரெட் புகைந்துகொண்டிருக்கும்


இரவு பகல்


மழை வெயில் பனி


எல்லாக் காலமும் வேலைக் காலம்


நோகாமல் நொங்கு தின்பது போலில்லை


நுட்பம் தெரிந்திருக்க வேண்டும்


முக்கியமாக வீட்டார் ஒத்துக்கொள்ளவேண்டும்


சொந்த வீட்டை ஒதுக்கித் தள்ளுங்கள்


பக்கத்துவீட்டுக்காரன் ஒத்துக்கொள்ளவேண்டும்


பகையாளியாக என்றும் மாறிவிடக்கூடாது


இதயத்திற்கு தான் பிணமில்லை என்றுணர்த்த


மெயின் வீதிக்குச் செல்லாமல்


கொஞ்சநேர நடை வீடுகளுக்கு இடையேயே நடப்பார்


முட்டுச் சந்தின் பக்கத்திலேயே வீடு


போலீஸ் அது இது என்றால் தப்பித்து ஓடவேண்டும்


பெரும்பாலும் அதற்கு வாய்ப்பு வந்ததே இல்லை


ஒருநாளும் சத்தம் அதிகம் வந்ததேயில்லை அவ்வீட்டில்


கஸ்டமர்கள் கேட்கும் சரக்கு இருக்கும்


இல்லையென்றாலும் வேறொன்றை வாங்கிக்கொள்ளும்


கஸ்டமர்கள் வரம்தானே.


போதை தான் அங்கு கதாநாயகன்.


எதிலிருந்து வந்தால் என்ன?


எப்படிச் சரக்கு வருகிறது என்பது


தெரியவே தெரியாது


தீர்வது பற்றிச் சொல்லிவிடலாம்


பெரும்பாலும் நாற்பது கடந்தவர்கள்தான்


ரெகுலர் கஸ்டமர்கள்


அதிலும் பலர் நடந்தும் சைக்கிளிலும் வருவார்கள்


சரக்கை வாங்கி இடுப்பில் சொருகிக் கொள்வார்கள்


கிளம்பி விடுவார்கள்


விற்பவரின் சொந்தமென யாரையும் வீட்டிற்குள் பார்த்ததில்லை


எம்ஜியார் பாடல்கள் மிகப்பிடித்தம் விற்பவருக்கு.


சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே...


ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை...


அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்... போன்ற பாடல்கள்


சுற்று வீட்டின் காதுகளை அடைக்குமாறு மாலை ஏழு மணிக்கு மேல் ஒலிக்கத் தொடங்கும்.


விக்கிறது சாராயம். இதுல தத்துவப் பாட்டு வேற


என்ற முணுமுணுப்பு எழுந்து அடங்கும்.


ஆனாலும் நேரடியாக யாரும் கேட்டு சண்டை பிடிப்பதில்லை.


அதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை.


விடிந்தும் திறக்காத கதவைத் தட்டி


எட்டிப்பார்த்த முதல் குடிகாரன்தான்


கிழவன் இறந்துகிடந்ததை முதலில் பார்த்தவன்.


பக்கத்து வீட்டுக்காரர்களைக் கூப்பிட்டும்


யாரும் வீட்டிற்குள் வரவில்லை


குடிகாரன்தான் கிழவன் பக்கத்தில் சென்று


மேலும் கீழுமாக ஏறி இறங்கிக் கிடந்த கிழவனின்


கைலியைச் சரி செய்தான்


பாயில் நேராகப் படுக்க வைத்தான்


தலையணையைத் தலைக்கு அண்டக் கொடுத்தான்


கிழவன் எப்போதும் சரக்கெடுத்துத் தரும் இடத்தில்


தனக்கான சரக்கை முதன்முதலாக


அவனே எடுத்துக்கொண்டான்


கிழவனின் தலைமாட்டில் சரக்குக்கான பணத்தை


எண்ணி வைத்தான்


காலைத் தொட்டுக் கும்பிட்டுக்கொண்டான்


வீட்டின் வெளியில் வேடிக்கை பார்ப்பவர்களிடம்


ஏழு மணிக்கெல்லாம் சரக்கு அடிக்கலைன்னா


எனக்கு உடம்பெல்லாம் நடுக்கம் கொடுத்திடும்


செத்துடலாம்போல இருக்கும்


போனவுடனே வந்துடுறேன்


ஏதும் உதவின்னா பண்ணுறேன் என்று சொல்லிக்கொண்டே சென்றுகொண்டிருந்தான்


கிழவனின் ரெகுலர் கஸ்டமர்


எவனோ ஒருவனிடமிருந்து ரோஜாப்பூ மாலையொன்று


பாடையில் போகும்போது


நிச்சயமாகக் கிழவனின் கழுத்தில் கிடக்குமென்று


நம்பிக்கை பிறந்துவிட்டது இப்போது.


யாருக்கு?


கிழவனுக்கு.


எப்படி இறந்தவனுக்கு நம்பிக்கை பிறக்கும்?


இறந்தவனுக்கு உள்ளே போய்ப் பார். தெரியும்…


 


@@@@


விடைபெறலின் போதான மது


 


உடல் என்பது உடல் மட்டுமாக


உயிர் மட்டுமாக


இரண்டும் இணைந்த நிலையில்


என ஒவ்வொரு நிலையில்


இருக்கிறது


 


ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியில்


சயனித்துக் கொள்ள


ஒவ்வொருவருக்கும் குடும்பம் ஒவ்வொருவருக்கும் ஆசை ஒவ்வொருவருக்கும் வடிகால் ஒவ்வொருவருக்கும் சுகானுபவம் ஒவ்வொருவருக்கும் பகலும் இருளும்


 


எல்லோருக்கும்


எல்லா இரவிலும் இல்லை என்றாலும்


அவ்வப்போதான இரவு யாரேனும் ஓரிணைக்குத் துணையாக


காமம் அத்தியாவசியமாக


இரவை ஒரு பொருட்டாக மதிக்காமல் அரங்கேறிக் கொண்டுதானிருந்தது


 


மாவட்டம் விட்டு மாவட்டம் தாண்டி


கொத்தடிமைகளாக கரும்பு வெட்ட வரும் கூட்டம்


தலைவனும் தலைவியுமாய்


அண்ணனும் தங்கையுமாய்


அக்காவும் தம்பியுமாக


தம்பியும் அண்ணனுமாய்


தகப்பனும் மகளுமாக மகனுமாக


தாயும் மகனுமாக அல்லது மகளுமாக


அல்லது தனித்து வறுமைக்கு வாழ்க்கைப்பட்டு


இப்போது செய்யும் வேலைக்கென முன்கூட்டியே பணம் பெற்று வீட்டில் கொடுத்துவிட்டு தூரத்து ஊரில்


வேலை செய்யும் இவ்விடத்தில்


கூட்டம் மட்டுமே சொந்தம்


கூட்டம் மட்டுமே வாழ்க்கை


என்று வாழும் நாட்கள்


 


எல்லோருக்கும் சமைக்க ஒருத்தி


அவளுக்கும் வயிறுருக்கிறது


அவளுக்கும் பணத்தின் அவசியத் தேவை இருக்கும்


என்றெண்ணிய சிலரால் கழிவிரக்கத்துடன் அழைத்து வரப்பட்டவள்


தவழ்ந்து நடக்க மட்டுமே இயலும் உடல்


கொழுத்த உடம்பும் உப்பிய மார்புகளும் இரவின் காமத்தை வேடிக்கை பார்க்கவும்


ஆக்கிக் கொட்டவும் பல நேரங்களில்


வம்படியாகத் தூங்கவும் மட்டுமே கிடந்தது.


 


மதியத்துக்கும் சேர்த்து உணவை


வறுமைக் கூட்டம் எப்பொழுதும் எடுத்துச் சென்றுவிடும்


 


மெல்ல மெல்லப் பேச்சுக் கொடுத்து


உள்ளூரான் பேசுகிறான் அன்பொழுக தவழ்பளிடம்


வெறியேறும் காதலுமல்ல காமமுமல்ல


சதா கனவும் பேச்சும் சிரிப்பும் அவளிடம் தொற்றத் தொற்ற


வேடிக்கை பார்த்த கண்களில் படரும் ஏக்கத்தில் வட்ட வட்டமாகப் பரவுகிறது உள்ளூரான் முகம்


 


ஒப்பந்த காலம் முடிந்தவுடன் கூட்டம் லாரியில் பாத்திரம் துணி மணியுடன் குடும்பம் பார்க்கச் செல்லும் புலம் பெயர் தொழிலாளியின் ஆசையோடு மொதுமொதுவென்று ஏறுகிறது


 


சகோதரன் ஒருவனின் உதவியோடு லாரியில் ஏற்றப்பட்ட தவழ்பவள் நின்று பார்க்கிறாள் சுற்றெங்கும் உள்ளூரானை


 


ஊரோடு சேர்ந்து நின்று பார்க்கும் உள்ளூரான் கண்களிலும் அவளின் கண்களிலும் வழியும் மது


இடையிடையே ஒரு நான்கு நாட்கள் கும்பலிலிருந்து தனித்துப் புணர்ந்து கிடந்த பக்கத்துச்சந்தின் வாசத்தோடு ஒத்திருந்தது.


 


உடல் என்பது உடல் மட்டுமாக இருப்பதுவும் சரியென்று பட்டது போல


இருவரின் கையசைப்பு


கண்களில் நடந்தது


லாரி மறைகின்றவரை...


 


@@@


என் வானம் முழுதும்


உன் நட்சத்திரங்கள்


 


இறை நீ


இரை நான்


 


உன் அசைவுகள்


நினைவை அசைக்கிறது


 


பேரன்பான முத்தத்தில்


காம கிளிட்டர்ஸ்


 


நீ புல்லாங்குழல்


நான் துளைகள்


காற்றே காதல்


 


பிரிவின் நிறைவான முத்தத்தில்


கடலின் உப்பனைத்தும்


துளிக் கண்ணீரில்


 


மின்னிக்கொண்டிருக்கும்


உன்னில் எல்லாம்


 


பூ கட்டுவாய் பூப்போல


பறவைகள் கொஞ்சுவாய் பறந்தபடி


குழந்தையாவாய் குழந்தைகளோடு


காதலிக்கும்போது


எதற்காக காதலியாகிறாய்


நானாக மாறாமல்


 


உணவுண்ணும் நேரம்


எனக்கு உன் கை


உனக்கு என் கை


தாய் போலாகி ஊட்டிவிடும்


 


பிரிந்து சென்ற பின்னும்


கட்டிக் கிடக்கும் காமத்திற்கும்


காதல் என்றே பெயர்


 


@@@@


மழைக்கு_ஒதுங்கிய_வானம்...


 


குரூரமாகப் பதுங்கியொதுங்கிய அவ்வானத்தின்


அகாலத்தில் மிதந்துகொண்டிருந்த பிம்பங்கள்


மழையின் வன்புணர்வில் சிக்கி


மண்ணிலிருந்து தூர்த்தெறியப்பட்டவை.


 


பனிக்குடம் உடைத்த ஏரியிலிருந்து


பிரசவிக்கின்றன ஓயாத கொலைச் சொற்கள்


 


கண்ணெதிரே நிர்மூலமாகும் வாழ்வை


முலை பிய்த்தெறியும் கண்ணகியென


வெஞ்சினத்துடன் வெறுத்தொதுக்க


எத்தனிக்கவிடாது குதூகலிக்கிறது


மௌனமாகச் சிரித்துதிரும் மழைக்கூர்மை...


 


செம்புலப்பெயல் நீரின் நிச்சலனத்தில்


மரணித்த இறைச்சியின் ருசி...


 


ஆதி வானின் மண்ணின் நிர்வாணத்தில்


லிங்கங்களும் யோனிகளும்


கடலுப்பு தின்னப்பணித்த அம்மழையிரவில்


மண்ணாண்டவர்களின் அந்தரங்க மயிர் நீண்டுகொண்டிருத்தபோது


பிண உதடுகளின் ஸ்டிக்கருக்குள்


ஊறிக்கொண்டிருந்தன ஈக்கூட்டங்கள்...


 


@@@


இரவை மேயும் நாய்...


 


தெருவின் நீள அகலம்


ஓடினால் நடந்தால்


எத்தனை அடியென்பதை


அந்த நாய் அறியும்


 


இரவில் பெய்யும் மழை


இரவில் பொழியும் பனி


இரவில் பேசும் வெக்கை


யாவற்றையும் ரசித்தும் வெறுத்தும்


வெறுமையுடன் பார்க்கும்


அதன் உலகமே தனி.


 


தூரத்தில் எங்கோ தெரியும் ஒளியையும்


இரு விளக்காக கண்களில்


மிளிரச் செய்யும் வல்லமை...


 


யாரின் வாரிசு அது


வாங்கியவனுக்குத் தெரியாதிருக்கலாம்


எந்த ஊரிலிருந்து


தனித்து விடப்பட்டது


நாயும் தெரியாதிருக்கலாம்


 


நடந்தும் அல்லது வாகனத்தில் செல்பவரை


தெருவில் நுழைந்த அல்லது வீடு கடக்கும் நாயை


எதன் பொருட்டு குரைத்திருக்கும்


 


குரைக்கவேண்டிய தருணமொன்றில்


முறைப்பை மட்டுமே காண்பித்திருக்கும்


 


சிரிப்பை மகிழ்வை உரைப்பதற்கான சொல்லற்று


இயல்பாகயிருந்திருப்பதாக


தோற்றமளித்திருக்கலாம்


 


சாவை உரைக்க


சாகப்போவதை உரைக்க


குரைப்பை ஊளையிடுவதாக


மாற்றியிருக்கலாம்


 


பலநாள் விரட்டியபின் உண்டு களித்த எலியைப் பற்றி


எசமானனுக்குச் சொல்லாதிருந்திருக்கலாம்


 


இரவைப் பேசவிடாது


கடந்த பொழுதுகளின் உறக்கத்தில் வந்த


கனவொன்றின் சொர்க்கம்


நாய்க்கு எந்த தேசத்திலிருக்கும்...


 


வாலாட்டிச் சுற்றிச்சுற்றி வரினும்


உறவென நினைக்குமுயிர் பிரிந்தகணமே


அநாதையாகத் திரிபவனின் முகச்சாயல்


எப்படி எங்கிருந்து கிடைத்திருக்கும்...


 


தென்னை மரத்தின் மூட்டிலோ


சாக்கில் கட்டி ஏதோ ஓர் பாழுங்கிணற்றிலோ


மனுசனைவிட்டு அந்நியப்பட்ட


ஏதோ ஓர் புதரிலோ


வெறிபிடித்ததென்று கல்லெறிந்தோ


சாலையில் ஏதோ ஒரு வாகனத்தாலோ


எப்படியோ சாகப்போகும் அந்நாய்க்கு


எனது பெயரையும் வைத்துக்கொள்ளுங்கள்


 


எனக்கும் இரவின்மேல்


சந்தேகம் அதிகம்.


 


@@@@


 தீர்ப்பின் கரங்களை எப்போதும்


பத்திரப்படுத்தியே வைத்துள்ளேன்


கன்னிமை போக்கும் வித்தை


இங்கெல்லோருக்கும் அத்துப்படி


பிரேதப்பரிசோதனையால்


அச்சப்படாத உடல் உன்னை எப்போதும் கடந்தே செல்கிறது


தப்பியோடும் தியானம்


அமைதியாய் இருப்பதாகப்


பறைசாற்றுகிறது


சாத்தான்கள் யாரென


கழுகுகள் ஒப்பித்துவிட


சமயம் வாய்க்கவில்லை


விலக்கப்பட்ட நாட்களில் பூச்சொரியும்


காமத்தின் வேகம் முகத்தில் அறைகின்றன


கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்க


உறங்காமலிருக்கவேண்டும்


நான் உறங்குகிறேன்.


காலங்களின் கைகள்


இழுத்துக்கொண்டு செல்கிறது...


இங்கொன்றும் அங்கொன்றுமாக


விரவிக்கிடக்கும் நினைவுகள்


பால்யத்தை மீட்டெடுக்கின்றன


எந்த தரிசனத்திலும் நிலைத்திருக்கும் ஆகிருதி


உன்னால் நிராகரிக்கப்பட்ட ஒவ்வொரு கவிதையிலும்


மீதமிருக்கின்றன.


வாசித்துப்பார்...


 


@@@


உயிர்போன தகவலை


ஊரெங்கும் பிரகடனம் செய்ய தயாராகிவிட்டார்கள்


அலகில் கவ்வி வரும் உணவினை


கொண்டுவந்து சேர்ப்பிக்கும் தருணம் அந்த விபத்து நேர்ந்திருக்கிறது


அவ்விடம் வரும்போது எனக்கு பறப்பதற்கு இறக்கைகள் கொடு என்று யாரிடமும் கடவுள் உட்பட


யாசிக்கக்கூட அவகாசம் இல்லை


விபத்தின் துளி நொடி கூட அவன் விருப்பப்படி இல்லை


யார் தவறு என்று சொல்ல


சாலையோர நடுகல்லாய்


சாலையோரத்தில் மிரண்டோடும்


நாய் போல


சற்று முந்தைய நேரத்தில்


தார்ச்சாலையை நனைத்துவிட்டுப்போன மழையென


கடந்துபோன வாகனமென


எதுவுமாக மாற வாய்ப்பற்று


அமைதி பூத்துக்கிடக்கிறது சவத்தில்...


யார் பாவத்தையோ வெளித்தள்ளிக்கொண்டிருக்கிறது


உடல் இரத்தம் இரத்தமாக...


எவ்வித சலனமற்றுக் கிடக்கும் சட்டைப்பையில் கிடந்த வீட்டின் முகவரியுடன் பேசினார்கள்


இறப்பினருகில் நிற்கும் மனிதர்கள்..


தன் உறவு இல்லையெனத் தெரிந்தவுடன் கடந்துசெல்லும்


பாதசாரிகள் தூரத்து உறவுக்காரன்போல வலிகளை


விடுத்துச் செல்கிறான்...


இந்தக்குரல் கேட்காது


இந்தக் கண்கள் விழிக்காது


இந்த உடல் துடிக்காது


இந்த உயிர் எழாது


இந்த வாழ்வு முடிந்துவிட்டது


இதைச் சொல்வதற்கு


அகால மரணம் என்பது தேவையாயிருக்கிறது


இறந்த நேரத்தைக் குறித்து


நினைவுபடுத்திக்கொண்டிருக்கும் நபர்களுக்கு


எதிர்கால தன் மரண நாள் குறித்துக்கொள்ள


ஒருபோதும் விருப்பமில்லை


அது எங்கே எப்போது எப்படியென்பது தெரியவில்லையென்பதும்


காரணமாகயிருக்கலாம்


எப்படியோ இருக்கட்டும்...


இறந்தவனின் எதிர்கால கனவுகளை


யாரிடம் கொண்டு சேர்க்கும்


அவன்மேல் மோதிய வாகனம்...


 


@@@@


 சில விதிகளின் பொருள் பிடிபடவேயில்லை


மரணத்தோடு பேசுவதுபோல அத்தனை கடினமாயிருக்கிறது


வெற்றிடம் தேடியோடும்


கால்களின் தடங்கள் யாவிலும்


வாழ்ந்த காலங்களின் எச்சங்கள்.


குறுகிப் பின் நிமிரும்


பறவையின் கழுத்தென


மரணத்துள் புதைதலும்


வாழ்தலுக்கு எழுதலும் தன்னிச்சையாய்.


வாழ்தல் என்பதன் பிரமிப்பு


உண்டாக்கும் சமிக்ஞைகள்


பருவமழை போல் பொழிகிறது.


பாலை என்பதற்கான உணர்வற்று


கானல் நனைக்கிறது உயிரை...


யாரும் கண்டுகொள்ளாத அதிகாரம் ஒன்றின் துணையோடு


வந்துவிழும் காலங்களின் ஆலிங்கனத்தில்


நிறைவேறாக் காதலொன்றின் சாயல்.


அமானுஷ்யத் திகைப்பொன்றில்


வெளிப்பட்ட ரத்தத் தெறிப்புகள்


முகமெங்கும்.


கடைசி இரவோ


விடியும் பகலோ


விடுவிடுப்பின் கணம்


ரசித்துக் கடக்கிறேன்...


வெளியெங்கும் சிதறிக்கிடக்கிறது


வலியோடு போராடும்


உயிரின் எல்லைகள்.


என் இறத்தல் குறிப்புகளின்


மீதோடிக்கொண்டிருக்கின்றன


அதிகாலைக்கு முன்னதான


தீவிரத் தூக்கப்பொழுதாய்


வாழ்வு தள்ளிவிட்ட அந்தி.


என்னை எதிர்பார்த்துக்


கடற்கரையொன்றின்


அலைகள் பார்த்து


வீடு திரும்பும் அகால இரவொன்றில்


உன் முன்னால்


மரணமெனக் கிடப்பேன்


பதட்டமின்றிச் சுகித்துவிடு


நான் சக்கையாகவே


போக விரும்புகிறேன்...


@@@


அஞ்சலி ஊர்வலம்


 


ஊழிக்காற்றின் பேரிரைச்சல்


மௌனம் படிந்த கூகையொன்றின்


குரூரத்திற்கொவ்வாத ஜந்தொன்று


சாலையிலூர்கிறது


விருட்டென்று தரைநோக்கிப் பறந்த


கூகையை முந்திய வாகனத்தின் சக்கரங்கள்


சாலைக்குப் படையலிடுகிறது ஜந்தினை...


தார் பூசியிருக்கும்


குருதியின் வாசத்திலிருந்தெழுந்து


கிளையமரும் கூகைக்குத் தெரிந்திருக்கலாம்


அவ்வாசம் பிரசவித்த குட்டிகளின்


அஞ்சலியூர்வலப் பிரவாகம்


இனிதான் தொடங்குமென்று...


 


@@@


உன்னைப்பிடிக்கும்


என்பது வரை மட்டும்தான்


இந்த வாழ்வு


 


உன் முத்தத்தால்


நான் மீண்டும்


பிறக்கிறேன்


மலர்கிறேன்


படர்கிறேன்


 


அதென்னமோ தெரியவில்லை


உன் மச்சங்களுக்கு மட்டும்


மின்மினிகளின் பிரகாசம்!


 


உன் பின்னங்கழுத்தின் கீழ்


படர்ந்து கிடந்த முடிகளை


அள்ளிக் கொண்டை போட்டுக்கொண்டாய்


ஆங்காரத்தில் முதுகு சிவந்தது...


 


நமக்கிடையே


அதிகம் சண்டைகள் தொடங்கக் கூடிய


சமயங்கள்


சொல்லாமல் சொல்லும்


நாம் கூடி நாளாகிவிட்டது


என்பதை...


 


ஒரு முத்தம் கொடு


திருப்பித் தந்து விடுகிறேன்


அல்லது


ஒரு முத்தம் தருகிறேன்


நீ திருப்பித் தரவேண்டாம்


இரண்டில் எதுவாகிலும் ஒன்றிற்குச்


சம்மதம் சொல்...


 


என் வியர்வையில் படரும்


உன் முத்தங்களுக்கு


சிக்கிமுக்கிக்கல்லின் குணம்...


 


உன் ஸ்பரிசம் தீண்டிய பின்


என்னில் தீண்டிய பகுதிகளை


எல்லாம் பார்க்கிறேன்


வண்ணத்துப்பூச்சியின் நிறங்கள் அப்படியப்படியே...


 


என் முன் நடந்து வரும் பொழுதும்


என்னை கடந்து செல்லும் பொழுதும்


நீ எதுவுமே செய்ய மாட்டாய்


என்றாலும்


எல்லாம் செய்யும் உன் அழகு...


 


உனக்கு என்னைப் பிடிக்கும் என்றாலும் பிடிக்கவில்லை என்றாலும்


என்னிடம் ஒரே பதில் தான்


நான் உன்னை காதலிக்கிறேன்...


 


@@@@


சுயம் என்று எதுவுமில்லை


பயணத்தில் அதைச் சொல்லி


என்ன செய்துவிட முடியும்


 


பாலுக்கழும் குழந்தைக்கு மார்பில்


வெம்மை ஏறாத பால் அளித்துவிடுமா


 


ஊர் நோக்கிச் செல்லும்போது


வேடிக்கை பார்க்கும் உயிர்களிடத்தில்


நீயும் என் தோழனே


சொல்லிவிட முடிகிறதா


 


இரக்கம் பூத்து


குழந்தைகளிடம் நீட்டும் உணவுப் பொட்டலத்தை


வேண்டாம் என் பசி எனது என்று


வியாக்கியானம் பேசச் சொல்லுமா


 


வக்கற்றுப் பிழைக்கப்போனவிடத்தில்


தற்போதைக்கு ஊர் சென்று பிழைக்கப் பாருங்கள் என்றவனிடத்தில்


புரட்சி வசனம் பேசத் தூண்டுமா


 


ஒரே நாடு ஒரே மக்கள்


என்ற கோசத்தைச் சொல்லி


மூளையை மழுங்கடிக்கச் செய்த கூட்டத்திடம்


நாங்கள்


நீங்கள் சொன்ன


ஒரே மக்கள் என்பதற்குள்


அடங்குபவர்கள்


என்று எதிர்த்து நிற்க வைக்குமா


 


நவீனத்தின் கூடுகளை முடக்கி


சாலைகளை வெறித்துப் பார்த்துக் கொள்வதில்


புளகாங்கிதம் அடைய வைத்துவிடுமா


 


எதற்காக இந்த நடை


யாரால் இந்த நடை


ஊர் போய் சேருமா


இந்த நடை


என்பதற்கான முழு பதிலையும்


கேட்டறிந்து விடுமா


 


துரத்திவிட்ட ஊருக்கே


மீள பயணம் செய்வதற்கு


தாகத்திற்கும் நீரற்று


திணிக்கப்பட்ட யாத்திரைக்கு


பிஞ்சுகளையும்


முதியவர்களையும்


கர்ப்பிணிகளையும்


இழுத்துச் செல்வதற்கு


நியாயம் சேர்த்து விடுமா


 


எப்போதும் போல்


குரலற்றுத் திரிபவனை


நிர்மூலமாக்கி


அவன் மேல் கிருமி நாசினி அடித்து


அவனுக்குச் சுயம் என்ற


ஒன்றில்லை


என்பதை நிர்வாணப்படுத்தி அறிவிக்கும் அரசிற்கு


அவன் ஒரு பூணூல் அணியாதவன்


என்பது மட்டும் போதும்.


நீள் தூரம் உயிர் சுமந்து வந்தவனின் பாதங்கள்


மண்ணுக்குச் சொல்லிக்கொள்ளும்


பிழைத்தவிடத்தில்


அடுத்துச் செல்லும்


வாய்ப்பிருந்தால்


அங்கேயே மரணம் ஒன்று விளையட்டும் என்று...


 


@@@


சாகாமல் சாகிறவன்


 


இந்த வெளியை அவ்வளவு அமைதியாய் இதற்கு முன் கண்டதில்லை


திடீர் புயல் வெள்ளம் விபத்து


எங்காவது நிகழ்ந்திருக்குமா எனத் தேடிச்  சலித்து விட்டேன்


எல்லோருடனும் மயானம் தொடர்ந்தபடி இருக்கிறது


மிக கவனமாகப் பேசுகிறோம்


தொலைவில் நின்று கொள்கிறோம்


கைகளுக்குள் விரல்கள் தானாகவே ஒளிந்து கொள்கிறது


ஒரு தேநீர் சாப்பிடலாமா என்பதற்குக்கூட இப்போது சாப்பிடுவதில்லை என்று மறுத்து விடுகிறோம்


மறக்காமல் எலுமிச்சை சுக்கு மஞ்சள் சீரகம் கபசுரக் குடிநீர் சானிடைசர் வாங்கிப் பயன்படுத்துகிறோம்


எதிர்வீட்டில் கொரோனோ என்றால் பின்பக்கச் சுவரில் பாதை அமைக்கிறோம்


மயானத்தைக் காப்பதுபோல்


நிலவின் கிரணங்கள்


உயிரிகளின் சலனத்தைத் தட்டியெழுப்ப சூரியன் தவறுவதில்லை


மாலை நேரங்களில் பெரும்பாலும் மழை


இல்லையென்றால் மேகமூட்டம்


20 லட்சம் கோடிச் சத்தம் மனிதர்கள் கடந்து கடலில் கலந்து விட்டது


வள்ளுவர் பட்டை அடித்துக் கொண்டார்


பெரியார் காவி பூசிக் கொண்டார்


அம்பேத்கர் பிராமணர் ஆகிவிடுவார்


கந்தசஷ்டி கவசத்தின் பொருள் உணரச் செய்த கருப்பர் கூட்டம் பாராட்டுதலுக்குரியது என்பதை பொதுவெளியில் பகிரக்கூடாது


சூடான ரத்தம் என்பதை சாந்தப்படுத்த ஊரடங்கு என்ற யோகா போதுமானதாகிறது


அவரவர் பணி அவரவர் சம்பளம் அவரவர் வீடு


கொஞ்சம் கொஞ்சமாகப் பசி


தன்னை மறந்து மீண்டும் சிரிப்பதெல்லாம் நடக்கிறது


தொலைதூரத்திலிருந்து ஊர் செல்வோருக்கு ஏதோ ஒரு சாலையோரக் குழியின் கருணை இல்லாமலா போகும்


ரயிலின் பாதையில் உறங்குபவனுக்குத் தண்டவாளம் அதிர்வு சத்தம் கேட்காத வண்ணம் காதுகளில் சப்பாத்தி திணித்துக் கிடக்கிறார்கள்


யானை அன்னாசியில் வெடி வைத்துக் கொல்லப்பட்டது


சாத்தான்குளம் காவல் நிலையத்தில்


அடித்துக் கொன்று போடப்பட்ட நிகழ்வுகள் கொரோனோ காலப் புது அதிர்வுகள் என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கவேண்டும்


பழைய திரைப்பட லாரிகளைப் போல ஆம்புலன்சுக்கு படபடப்பைக் கூட்டும் வேலையை அரசு செய்துவிட்டது


பைகளில் உடைகளை எடுத்துக் கிளம்புபவரும் வீட்டில் மீதம் இருப்போரும் கண்ணீர் வடிக்கின்றனர் அரசர் தானும் ஊர் அடங்கியிருப்பதை மீசை தாடி வளர்ப்பதில் வெளித்தோன்றி அறிவிக்கிறார்


பெரிய பெரிய பணக்காரர்களின் மரணம் அதிர்ச்சியளிப்பதாக மாறிவிடுகிறது


ஆழக் குழி தோண்டி


இறந்தவனைப் புதைத்துவிட்டுத் திரும்புகிறோம்


உலகெங்கிற்கும் பொதுவாக பாதிக்கப்பட்டோர் குணமடைந்தோர் சிகிச்சையில் உள்ளோர் பட்டியல் வெளியிடப்படுகிறது


கொரோனோ மனித வாழ்வையே மாற்றி அமைத்து விட்டதாக பிரபலங்கள் பேட்டி அளிக்கிறார்கள்


ஆனாலும் மேலெழுந்து பார்த்து விடாதவாறு தடுப்புகளுக்குப் பின்னால் நிறுத்தப்படுகின்றனர் ஒடுக்கப்பட்டவர்கள்


வன்புணர்வுகளுக்குத் தலித் பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பதை கண்டும் காணாமல் இருங்கள் கொஞ்சமும் அஜாக்கிரதையாக இருந்துவிடாதீர்கள்


உங்களுக்கும் கொரோனோ வந்துவிடும் என்பதில் மட்டும் எச்சரிக்கை தேவை.


பேரன்பும் மகிழ்வும்

Mohamed Ali Jinna தோழர்

படைப்பு குழுமம் 


❣️

Saturday 8 July 2023

உன்னைப்போல் மூவர்


 #குட்டிக்கதை


உன்னைப்போல் மூவர்

-------------------------------------------


"வாங்க தோழர். எப்படியிருக்கீங்க?" என்றார் ஓவியர் சேகர் சிரித்தபடியே.


"நலம் தோழர், நீங்க எப்படியிருக்கீங்க?" என பதிலுக்குக் கேட்டார் பாண்டியன்.


"நல்லாருக்கேன் தோழர். உங்க கவிதையெல்லாம் வாசிக்கிறேன் தோழர். மனசக் கிளறி விடுது ஒவ்வொன்னும். எழுதுங்க தோழர் இன்னும் நெறய" என்றார் ஓவியர் சேகர்.


"கவிதை ஊற்றெடுக்கும் நேரம்தான் ஆச்சர்யம். தோணும்போது எழுதிட்டு அடுத்த வேலையைப் பார்க்க கிளம்பிடுவேன். அவ்ளோதான் தோழர். அதுக்குள்ளயே கிடந்தா பொழப்ப பாக்க முடியாமப் போயிரும். காதலுக்கு எதிரா பேசுறதா அர்த்தம் பண்ணிக்காதீங்க தோழர். காதல் போல மனுசனுக்கு நல்ல மருந்தில்லை தோழர்" என்று சொன்னார் பாண்டியன். அதில் காதலுக்கு ஆதரவும் இருந்தது. கவிதை குறித்த பெருமிதமும் இருந்தது.


"அப்படியெல்லாம் நினைக்கமாட்டேன் தோழர். மாமன்னன் படம் குறித்து பதிவு போட்டிருந்தீங்க. பாத்தேன். நான்தான் படத்துக்கு போக முடியல. மகங்கிட்ட சொன்னாலும் தேவையில்லாத வேலையப் பாக்காதீங்கப்பா என்கிறான். கூட்டிட்டு போக மாட்டீங்குறான்" என்று அங்கலாய்த்தார் சேகர். "ஏன் தோழர், பக்கம்தானே தியேட்டர். ஒரு எட்டு போயிட்டு வரவேண்டியது தான. படம் இப்போ வரை ஹவுஸ் புல்லாத்தான் ஓடிட்டு இருக்கு. பார்க்கலாம் தோழர். நல்லாத்தான் இருக்கு. இதுபோன்ற படங்களின் வரவு ஒரே நாளில் இந்த சமூகத்தை மாத்திடாதுன்னாலும் ஆதரிப்பது நமது கடமை தோழர்" என்று பாண்டியன் விரிவாகவே பேசினார்.


"அதெல்லாம் பரியேறும் பெருமாள் படத்தோட முடிஞ்சிடுச்சு தோழர். அந்தப் படம் பாக்குறப்ப என்ன நடந்தது தெரியுமா தோழர்?" என்றபடியே பாண்டியனைப் பார்த்தார் சேகர். தனக்குத் தெரியாது என்பதை இருபுறமும் தலையாட்டி பாண்டியன் சொன்னார். பார்வைப் பிரச்சனைக்காக போட்டிருந்த கண்ணாடியின் வழியாகத்தெரிந்த சேகரின் கண்கள் புதுமழைக்கு வேகவேகமாக கண்மாய் வழியாக வந்து நிறையும் தண்ணீர் போல நிரம்பத் தொடங்கியது. எதுவும் புரியாது திகைத்தபடி அக்கண்களைப் பார்த்தபடி இருந்தார் பாண்டியன். "அந்தப் படம் பார்க்கும்போதுதான் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தது தோழர். என் பக்கத்தில் உக்காந்திருந்த என் மகன் தான் என்னப்பா பண்ணுதுன்னு கேட்டான். என்னன்னு தெரியல. திடீர்னு வேர்க்குதுடா என்றேன். வாங்கப்பா போவோம்னு சொல்லி ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனான். இப்பவும் மறக்க முடியல. படத்தையும் என் வாழ்க்கையையும். அந்தப் படம் என்னோட வாழ்க்கை தோழர்" என்று சொல்லி அவர் நிறுத்தியபோது பெருமழை நனைத்து முடிந்த நிலத்தின் அமைதி சேகரிடம் இருந்தது.


"என்ன தோழர் சொல்றீங்க? லவ் பண்ணுனீங்களா? தோழரும் நீங்களும் வேற வேற சமூகமா? எதனால பிரச்சனை?" என அடுத்தடுத்த கேள்வியைக் கேட்டார் பாண்டியன். "என்மேல படத்துல வாறது போல ஒண்ணுக்கு இருக்கல. மற்றபடி எல்லாம் எனக்கு நடந்தது. படம் பார்க்கும்போதே என்னால் என்னை கட்டுப்படுத்த முடியல. நானும் அவளும் சமூகப் பார்வைப்படி வேற வேற சாதி. பரிச்சை சமயம். அவள் தன் வீட்டுல போய் சேகர் நல்லவன். அவன் திறமையானவன். நல்லா படிப்பான் என்றெல்லாம் சொல்லியிருக்கிறாள். வீடே அவ பேச்சை உத்துக் கவனிச்சு இது நல்லதுக்கில்லயேன்னு நெனச்சுக்கிட்டு  நாலே நாளில் நிச்சயதார்த்தம். அவளின் மாமா பையன் கூட. அடுத்த ஒரு வாரத்தில் அவளுக்குத் திருமணம். எப்படி இருக்கும்? எல்லாம் டக்குடக்குன்னு முடிவாகுது. இடைல என் வீட்டுக்கு வந்து கல்யாணத்துக்கு வந்திடச் சொல்லி பத்திரிக்கை கொடுத்தாங்க அவங்க வீட்டு ஆட்கள். என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கவே முடியல. அவ கைய இப்படி நான் தொட்டதுகூடக் கிடையாது தோழர்" என்றபடி பாண்டியாவின் கையில் தன்னுடைய விரலால் வைத்துக் காட்டுகிறார் சேகர்.


"கல்யாணத்துக்கு முன்னால அவ வீட்டுக்கு நான் போனேன். அங்கு அவங்க வீட்டாளுங்க எல்லாருமே இருந்தாங்க. பார்வையே மிரட்டுறதுபோல பார்த்தாங்க. நான் எதுக்குப் பயக்கணும்? பயக்காம சொன்னேன். கல்யாணத்துக்கு என்னால வர முடியாது. நான் ஒரு கவிதையை எழுதி, படமும் வரைந்து வாழ்த்து மடலாக ரெடிபண்ணி கொண்டுட்டுப் போனத அவங்ககிட்ட கொடுத்தேன். வாழ்த்து மடலே அவங்களுக்கு இன்னும் பயத்தைக் கொடுத்துருக்கும் போல. எந்தப் பேச்சும் இல்லை. அவ அம்மா தான் தம்பிக்கு டீ போடும்மா என்று அவ தங்கச்சிகிட்ட சொன்னாங்க. கல்யாண வேலையை நல்லபடியாப் பாருங்க. நான் வாரேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். கல்யாணம் நடக்குற அன்னிக்கு நான் கல்லாத்துப்பக்கம் போய் ஓடுற தண்ணீரை வேடிக்கை பார்த்துட்டே உக்காந்துட்டு சாயங்காலம் வீடுவந்து சேந்தேன். என் கண்ணீரெல்லாம் ஆறாப் போச்சு. மனசுதான் ஆறாம இன்னமும் அப்படியே கெடக்குது" என்ற சேகரின் சொற்களில் இன்னும் வலி தீரவில்லை என்று தெளிவாகத் தெரிந்தது. ஒற்றைப் பெருமூச்சில் காதல் நினைவுகள் மேலெழும்பி அடங்கிவிடுமா என்ன?


"விடுங்க தோழர். அதையே நெனச்சு மனச வருத்திக்காதீங்க. இப்போ அவங்க நல்லாருக்காங்கல்ல?" என்றார் பாண்டியன். "நல்லாருக்கா. 3 குழந்தைக. அவ வீட்டுக்காரர் உடம்புக்கு முடியாம தவறிட்டார். இப்போதான் போன் வந்திருச்சுல்ல. அப்பப்போ பேசுவா. எங்கெங்கோ தேடி அலைய வாய்ப்பில்லாமப் போக நான் எங்கயும் போகல. பிறந்தப்ப முதலா, அவள லவ் பண்ணுண காலம். இப்புடி எல்லாம் இதே இடம். இதே வீடு. வயசுதான் கூடிட்டே போகுது. வேற வித்தியாசம் இல்ல. அவ மேல வச்சுருக்க அன்பு முதற்கொண்டு. ஒரு சமயம் அவமேல அவ வீட்டுக்காரன் சந்தேகப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டப்பக் கூட நான்தான் பணம் கொடுத்து அனுப்பிவச்சேன். இதுக்குக்கூட அவ அண்ணைங்க சத்தம் போட்டாய்ங்க. ஆனா அவ அம்மா தான் அந்தத் தம்பி நல்லதுதான் பண்ணிருக்கு. நீங்க உங்க வேலையப் பாருங்கடான்னு சத்தம் போட்டாங்க. நல்லாருக்கா. ஒன்னும் பிரச்சனை இல்ல" என்றபோது சேகரிடம் பாண்டியன் ஒரு கேள்வி கேட்டார், ஏன் தோழர் அவங்ககூட சேர்ந்து வாழ கொடுத்து வைக்கலன்னு என்னைக்காவது வருத்தப்பட்டிருக்கீங்களா?...


கொஞ்சம் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்து

"சேச்சே... அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. ரொம்ப காலத்துக்கு அப்புறம் என் போன்  நம்பரை எப்படியோ வாங்கி என்கிட்ட பேசத் தொடங்கிய புதிதில் தான் அவ வீட்டுக்காரர் இறந்த தகவலைச் சொன்னா. அவ்வளவு வேதனை உண்டாச்சு. என் வருத்தம் அவளைப் பாதிக்கும்னு தெரியும். வருத்தமும் வேதனையும் எனக்கு இருந்ததை அவளும் தெரிஞ்சுதான் வச்சிருந்தா. பேச்சை மாத்த அவளும் எதையாவது கேட்பாள். நானும் சொல்லுவேன். அப்படி ஒருநாள் அவ பேசும்போது பிள்ளைங்க என்ன பண்றாங்கன்னு கேட்கவேயில்ல என்றாள். கேட்டுருக்கணும். கேட்கல. உன் வாழ்க்கைய இந்த நிலைல இருக்குறப்ப என்ன கேட்க? எதுவும் தோணல.  ம்ம்ம்... என்ன பண்றாங்க என்றேன். மூத்தவ பாடகி. அடுத்தவன் டான்சர். மூன்றாவது ஆள் ஓவியர் என்றாள். இப்போ இந்தக் கண்ணில் நீர் கோர்க்குது பாருங்க. அப்பவும் இப்படித்தான். கண்ணீர் கோர்த்தது. ஒரு நிமிஷம் பேசவே இல்லை. ஹலோ, என்ன பதிலைக் காணோம் என்றவள் உன்னைப்போலவே வளர்த்திருக்கேனா என்றாள். அவளுக்குக் கேட்காத மாதிரி போனை முகத்துக்கு நேராக வைத்து கண்மணி... எப்பவும் ஐ லவ் யூ என்று சொன்னேன். அடுத்து போனில் என்னை அப்படியெல்லாம் வளர்த்ததே நீதான் என்று அவளிடம் நான் சொன்னதில் பொய் எதுவும் இல்லை. அவ்வளவும் உண்மை. என்னைக் கண்டுபிடித்து என்னிடம் ஒப்படைத்துப் போனவள் அவ. ரெண்டு தெரு கடந்து தான் அவ அம்மா வீடு. எப்ப வந்தாலும் என்னைப் பாக்காமப் போகமாட்டா. மதுரைல இருக்கா. வாழ்க்கை என்பதில்தான் எத்தனை சுவாரஸ்யம். இல்லையா தோழர்...! என்று தன்னை ஆசுவாசப்படுத்தும் வார்த்தையில் சிரித்தது அவரின் காதல் நினைவுகள் மட்டுமல்ல. நிறைவேறாமல்போன காதலும் தான்.


யாழ் தண்விகா 


///நேற்று மாலை தோழர் ஒருவரிடம் உரையாடியபோது அறிந்தவை கதையாக...///


Sunday 18 June 2023

இருட்டு எனக்குப் பிடிக்கும் - ரமேஷ் வைத்யா


இருட்டு எனக்குப் பிடிக்கும்


சிறார் நாவல்


ரமேஷ் வைத்யா


நீலவால்குருவி வெளியீடு


அருகே அமர்ந்து தோளில் கைபோட்டு பேசும் ஒரு மனிதன் போல மேடைப் பேச்சே இருக்கும் தோழர் ரமேஷ் வைத்யாவிற்கு. தேனியில் Visagan Theni தோழர் நடத்திய பல மேடை நிகழ்வுகளில் அவரின் பேச்சினைக் கேட்டிருக்கிறேன். உலக தகவல்களை, கவிதைகளை, சினிமாவை அவர் கையாளும் லாவகம் அவ்வளவு அழகாக இருக்கும். எதையும் ஏனோ தானோவென்று அணுகாமல் உயிர்ப்புத் தன்மையுடன் பேசும் வல்லவன். அவர் எழுதி நான் வாசிக்கும் முதல் நூல் இது.


தினமலர் பட்டம் இணைப்பில் வெளிவந்த தொடர் நூலாகி இருக்கிறது. கதை என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது நம் வாழ்க்கையை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் அறிவுக் கருவி என்கிற புரிதலோடு எழுதிய கதை என்கிறார் தோழர். ஊர் சுற்றல் என்றாலே குழந்தைகளுக்குக் குதூகலம் பிறந்துவிடும். அப்படி ஊர் சுற்ற மேகமலைக்குக் கிளம்பும் சுட்டீஸ் கண்ணன், ரவி, ராகினி, குமார், ஷீலு, ஜோ, மற்றும் வாகன ஓட்டுநர். சென்று நன்றாகச் சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பும் மாலை நேரத்தில் மழை பொழியத் தொடங்குகிறது. ஜோ ஒரு பக்கம் சென்று விடுகிறான். மற்ற அனைவரும் காரில் ஏறுகின்றனர். கார் வேகமாகச் செல்கிறது. திடீரென மரம் குறுக்கே விழுந்து கிடக்கும் மரம் கண்டு வாகனத்தை நிறுத்துகிறார் ஓட்டுநர். பின்னால் பாறைகளும் மண்ணும் சரிந்து பின்னால் போகவும் வழியற்ற சூழல். அப்போதுதான் ஷீலுவும் வாகனத்தில் இல்லாததைப் பார்க்கின்றனர். இரவு நேரம். ஜோ, ஷீலு என்ன ஆனார்கள்? வாகனத்தில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்? இதுதான் நாவலின் சாராம்சம். 


காடு பற்றி தோழர் நாவலில் ஓரிடத்தில் சொல்கிறார், எவ்வளவுதான் சொன்னாலும் காட்டின் அழகு வார்த்தையில் வராது. நேரில் பார்க்கையில் காட்டின் அழகில் வார்த்தை வராது. எவ்வளவு அருமையான வரிகள்...! நாவலில் காடு, கரடி, பறவைகள், மேகங்கள், மலைகள், குரங்குகள், வனவாசி, வன அலுவலர்கள் எல்லாம். 


இக்காலக் குழந்தைகளின் பொழுதுபோக்கு என்பது தொலைக்காட்கி, அலைபேசி என்று முடிந்து விடுகிறது. ஆனால் அவர்கள் அறியவேண்டிய அனைத்தும் அதிலேயே இருப்பதாகக் கருதினால் அவர்களின் வாழ்வு ஒரு கருவியின் வாழ்வாகவே அமைந்துவிடும். அதை மாற்ற கதை முயல்கிறது. காட்டின் தேவை பற்றி சொல்லாமல் சொல்கிறது. மலைவளம் பற்றிக் கூறுகிறது. அங்குள்ள சூழல் பற்றிச் சொல்கிறது. காட்டில் தனியாக வரும் யானையின் குணம் பற்றி அறிய வைக்கிறது. வன மக்களின் குணாதிசியம் கூறுகிறது. விலங்குகளின் உதவும் குணம், விலங்குகளின் குழந்தைப்பாசம், ஆபத்தான நேரத்தில் வன அலுவர்களை தொடர்பு கொள்ளவேண்டிய அவசியம் பற்றிச் சொல்கிறது. எல்லாம் குழந்தைகளின் மொழியில், குழந்தைகள் உணரும் வகையில். 


என்னுரையில் வைத்யா தோழர் கேட்டுக்கொண்டதைப்போல, “படித்துவிட்டு, படிக்கச் செய்துவிட்டு, இது உங்கள் குழந்தைகளுக்கு எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருந்தது என்று தெரியப்படுத்தினால் மகிழ்வேன்” நானும் இதை என் குழந்தைகளுக்கும் (வீட்டில்/பள்ளி திறந்த பின் பள்ளியில்)  கொடுத்து வாசிக்க வைத்து அவர்கள் அனுபவம் கேட்கவேண்டும். காரணம் காடு. அதை அழித்து வருகிறது மனித சமூகம். காட்டைப் பேணுவதை குழந்தைகளில் இருந்து தொடங்கவேண்டும். அதற்கு இந்த நாவல் தொடக்கமாக இருக்கவேண்டும். இருக்கும். 


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா

 

Sunday 29 January 2023

சீமையில் இல்லாத புத்தகம் #தேனி சுந்தர்


 










சீமையில் இல்லாத புத்தகம்

தேனி சுந்தர்

பாரதி புத்தகாலயம்

112 பக்கங்கள்

100 ரூபாய்


குழந்தைமையில் தூளி கட்டிக்கொண்ட உலகம்


தோழர் Visagan Theni  தன்னுடைய முகநூலில் பகிர்ந்திருந்த ஒரு கவிதையைப் பார்த்தேன், சீமையில் இல்லாத புத்தகம் என்ற புத்தகத்திற்கு வாசிப்பனுபவம் தயார் செய்ய எத்தனிக்கும்போது. மகேஷ் சிபி எழுதிய அக்கவிதை பின்வருமாறு.

“மின்கம்பியில் வரிசையாய் குருவிகள்

கவிதை வேண்டுமென்பவர்கள்

ஒருமுறை கை தட்டுங்கள்”.

 எவ்வளவு எவ்வளவு கற்பனைகளை, கதவுகளை, காட்சியை மனதிற்குள் கொண்டுவந்தது தெரியுமா இவ்வரிகள். இதே காலகட்டத்தில்தான் மதுரையைச் சேர்ந்த பெற்றோர் இருவர், தன்னுடைய 4 வயது குழந்தையைப் பள்ளியில் சேர்த்துவிட்டு அவனைக் கண்டித்து வளர்க்க, படிக்க வைக்க  4 அடி பிரம்புக் கம்பு ஒன்றைப் பள்ளி ஆசிரியரிடம் கொடுத்து அதனைப் புகைப்படமாக எடுத்து ஊடகங்களில் பகிர்ந்து வருவதும். இருவர் அன்பில் ஒருவராக வாழ்தல் வாழ்க்கை. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்றெல்லாம் அன்பை மையப்படுத்தி வாழ்ந்த வாழ்வைச் சுக்குநூறாக்கும் விதமாக 4 வயது மகனும் 4 அடி பிரம்புக் கம்பும் என்ற வார்த்தைகள் என்னுடைய மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. இங்கே சைக்கோத்தனத்தில் ஒருமித்த கருத்துடன் குழந்தையை அடிக்க பிரம்புக்கம்பு என்ற ஆயுதம். எப்படி அந்தக் குழந்தை வீட்டில் வசிக்கப்போகிறதோ என்ற அச்சம் தான் மீண்டும் மீண்டும் மேலெழுகிறது. இப்போதெல்லாம் அடியாத பிள்ளை படியாது, ஆடுற மாட்ட ஆடித்தான் கறக்கணும், பாடுற மாட்ட பாடித்தான் கறக்கணும், முருங்கைக்காய ஒடிச்சு வளக்கணும் பிள்ளைகள அடிச்சு வளக்கணும் என்பது போன்ற பழமொழிகளுக்கு வரவேற்பு அதிகம்.

 இந்த இடத்தில்தான் மேற்சொன்ன கவிதையைப் பார்க்கிறேன் நான். மின்கம்பியில் வரிசையாய் குருவிகள் என்பதனை பள்ளிக்கூடத்தில் வரிசை வரிசையாய் குழந்தைகள் எனப் பொருள் கொள்ளலாம். கவிதை வேண்டுமென்பவர்கள் ஒருமுறை கை தட்டுங்கள் என்பதற்கு மாணவர்களின் திறன் அறியவேண்டுமென்பவர்கள் ஒருமுறை மெதுவாகக் கை தட்டுங்கள் என்பதே பொருளாக இருக்கவேண்டும் என்று நான் பார்க்கிறேன். மெதுவாகக் கைதட்டுதல் என்பது ஆசிரியர்கள். மெதுவாகக் கை தட்டுதல் என்பதற்குப் பதிலாக ஓங்கி என்றிருக்கலாம். ஒரு வெடிகுண்டை வெடிக்கச் செய்யலாம். ஆனால் குழந்தைகளின் மனநிலை என்னாவது? குழந்தைகளின் மனம், மகிழ்வில் சிறகடித்துப் பறக்கும்போது எல்லாம் சிறப்பாகும், கல்வி, கலை எதுவாயினும். இதனையே நான் கவிதையில் காண்கிறேன். சீமையில் இல்லாத புத்தகம் தொகுப்பைப் பொருத்தமட்டிலும் இங்கு பறவைகளாக டார்வின், புகழ்மதி, கீர்த்தி இருக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது  வரிசையாகவோ, கலைத்துப்போட்டோ அமர்கிறார்கள்.  அவர்களுக்கென யாரும் கை தட்டவில்லை. அவர்களாக பறக்கிறார்கள். இதையெல்லாம் வேடிக்கை பார்க்கும் கலைஞனாக மட்டும் தோழர் தேனி சுந்தர் இருக்கிறார். அதை தனது நூலில் பதிவு செய்திருக்கிறார். அவ்வளவும் அவ்வளவு சுவாரசியத்தைத் தூண்டும் வண்ணம் அமைந்திருக்கிறது. 

மீண்டும் அக்கவிதையை வாசியுங்கள்.

“மின்கம்பியில் வரிசையாய் குருவிகள்

கவிதை வேண்டுமென்பவர்கள்

ஒருமுறை கை தட்டுங்கள்”

-மகேஷ் சிபி


 சீமையில் இல்லாத புத்தகம், முழுக்க குழந்தைமையைக் கொண்டாடும் புத்தகம். கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்குத் தெரியும், ‘ஊர்ல இல்லாத அருவமா பிள்ளையப் பெத்து வச்சிருக்கா, என்னமோ சீமையில இல்லாத பிள்ள மாதிரி இப்படி கொஞ்சிட்டிருக்கா, இதெல்லாம் எங்க போயி முடியப்போகுதோ”  என்றெல்லாம் ஒரு தரப்பு அங்கலாய்ப்பதையும் அதைக் கண்டுகொள்ளாமல் தாயானவள் குழந்தையைக் கொஞ்சுவதையும் பார்த்திருக்கலாம்.  தாயானவள் கொஞ்சும் சீமையிலில்லாத குழந்தை போல, நாம் கொண்டாடக் கிடைத்த சீமையில் இல்லாத புத்தகம் இது. இது குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்க்கு மட்டுமல்ல, குழந்தைகள் பெற்று பேரன், பேத்தி பார்த்தவர்களும் படிக்கலாம். பதின் பருவத்தினரும் படிக்கலாம். குழந்தையைக் கொஞ்சும் யாவரும் படிக்கலாம் என்பது இந்நூலிற்கான சிறப்பம்சம். வளரும் சமுதாயம் இது போன்ற நூல்களைப் படிக்கும்போது குழந்தைகளின்மேலான வன்முறை என்பது தவிர்க்கப்படும், தடுக்கப்படும் என்பது திண்ணம். 

 பள்ளியில் குழந்தைகளிடம் அந்தந்தப் பருவத்திருக்குரிய பாடப் புத்தகங்களைக் கொடுத்தவுடன் செய்யும் செயல் என்ன தெரியுமா? புத்தகத்தில் முதலில் அவங்கவங்க பேர எழுதுங்க என்று  ஏற்கனவே சொல்லியிருப்பார் ஆசிரியர். அந்த பணியை முடித்தவுடன் குழந்தைகள் ஒவ்வொரு பக்கமாக எடுத்து படங்களைப் பார்த்து முடித்துவிடுவார்கள். புத்தகத்தையே படித்து முடித்த அயர்ச்சி தோன்ற புத்தகத்தை மூடி வைத்துவிடுவார்கள்.  இதனைப் போன்றதொரு பதிவை கீழ்க்கண்டவாறு பதிவு செய்திருப்பார் தோழர்.

“அறுபது பக்க புத்தகத்த

அஞ்சே நிமிசத்துல 

படிக்க முடியுமா?


புகழ்மதி படிச்சுட்டாங்க


ஒவ்வொரு பக்கமா புரட்டுவாங்க

படம் இருக்கும்

பக்கத்த மட்டும் பாப்பாங்க


இது அம்மா

இது அண்ணன்


இது அக்கா

இது அப்பா


இது போனு

இது வீடு


இது டி‌வி

இது மரம்


இது போனு

இது குருவி

இது கண்ணாடி

இது காரு

இது பாட்டில் தண்ணீ


நான் படிச்சு முடிச்சிட்டேன்ப்பா

இன்னொரு தடவ படிக்கவா?

புகழ்மதியின் இந்தக் கேள்விக்கு போதும் படிச்சது என்றால் இன்னும் நாம் குழந்தைமையை ரசிக்கத் தொடங்கவில்லை என்று பொருள். தோழரின் பதில் என்ன தெரியுமா?

ம்‌ம்... சூப்பர் பாப்பா.

குழந்தைமையைக் கொண்டாடும் ஒருவரின் பதில் இப்படித்தான் இருக்கும். குழந்தைமை இன்னும் சிறக்க விரும்பும் ஒருவரின் பதிலும் இப்படித்தான் இருக்கும். இந்த பதிலுக்காக தோழருக்கு நானும் சொல்லிக்கொள்கிறேன் “சூப்பர் தோழர்....” 


 அங்கொன்றும் இங்கொன்றுமாக குறித்து வைத்துக்கொண்டு கொண்டாட இத்தொகுப்பல்ல. அங்கிங்கெனாதபடி எல்லாம் சிறப்பாக அமையப்பெற்ற ஒரு குழந்தைமையைக் கொண்டாடும் தொகுப்பாக இப்புத்தகம். குழந்தைகளின் ஏக்கம் தீர்க்கும் தகப்பன் தான் கடவுள். இயலாத ஒன்றைச் சொல்லும் குழந்தையிடம் சொல்லிப் புரியவைக்கும் தகப்பன் கடவுளுக்கும் கடவுள். ஒரு குழந்தை தன்னுடைய அப்பாவிடம் தன்னைத் தூக்கச் சொல்கிறாள். அப்பா அமர்ந்தவாறே ம் என்கிறார். குழந்தை எந்திரிச்சு நிண்டு தூக்குப்பா என்கிறாள். தூக்கியவுடன் மேலே தூக்கிப் போடுப்பா என்கிறாள். அதனையும் செய்தாயிற்று. முத்தம் கொடுப்பா என்று கேட்கிறாள். அதனையும் செய்தாயிற்று. கடைசியாக இனிமேல் நீயும் அம்மாவும் என்னய மட்டுந்தான் தூக்கணும் என்கிறாள். அதற்கும் சரி பாப்பா என்று அப்பா சொல்கிறார். இதையெல்லாம் எதற்காக குழந்தை சொல்கிறாள் என்றால் ஏதோ ஒரு சம்பவம் நடந்திருக்கு. அதனால்தான் குழந்தை இதனை ஒரு ப்ரோட்டோகால் போல செய்யச் சொல்லி கடைசியாக இனிமே நீயும் அம்மாவும் என்னைய மட்டுந்தான் தூக்கணும் என்று கட்டளையும் விதிக்கிறாள். இதைப் புரிந்த அப்பா, சம்பந்தப்பட்ட பாப்பாவுக்கு நாளைக்கு இருக்கு பதிலடி என்று முடிக்கிறார்.

“யாரோ ஒரு அப்பா

யாரோ ஒரு பாப்பா

கொஞ்சல் நடந்திருக்கணும்

இல்ல கிண்டல் நடந்திருக்கணும்

அதான் இந்த ரியாக்சன்.

எங்க அப்பாவுந்தான் என்னய தூக்குச்சு

 தூக்கிப்போட்டுப் புடிச்சுச்சு

எங்க அப்பாவுந்தான்

எனக்கு முத்தங்கொடுத்துச்சு

எங்க அப்பாவுந்தான் ஏங்கூட வெளையாடுனாரு” என்று பாப்பா மறுநாள் சம்பந்தப்பட்ட பாப்பாவிடம் சொல்வாள் என்றால், இது தோழரின் பாப்பாவிற்கு இன்னும் தேவை. குழந்தையை இன்னும் அதிகமாக தூக்கணும், தூக்கிப் போட்டுப் பிடிக்கணும், முத்தம் கொடுக்கணும் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆதலால் தோழர் இதனையும் செய்யுங்கள். குழந்தைகளோடு பயணித்து அவர்கள் மொழியில் தொகுப்புமேல் தொகுப்பை அவர்கள் மொழியிலேயே கொண்டுவந்து சிறப்பித்தாலும் குழந்தையின் ஏக்கம் இக்குறிப்பில் எப்படி இருக்கிறது பாருங்கள்.


 வீட்டில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நடக்கும் ஊடலைத் தீர்க்கும் ஒரு துருப்புச்சீட்டாக குழந்தைகள் பல வீடுகளில் இருப்பார்கள். சொல்லி அதன்மூலம் அடுத்தடுத்த வேலைகள் நடக்கும். அப்படியான ஒரு குறிப்பு. டார்வின், புகழ்மதி இருவரும் செய்யும் சேட்டைகள் பொறுக்காமல் அம்மா, இப்படியே சேட்டை பண்ணிட்டு இருந்தா உங்கள விட்டுப்புட்டு நான் அம்மாச்சி வீட்டுக்குப் போயிடுவேன், ஹாஸ்டலுக்குப் போயிடுவேன், ஆபீஸ்லயே இருந்துக்கிறேன் என்று சொல்கிறார். எல்லாவற்றுக்கும் புகழ்மதி போவக்கூடாது என்று சொல்லி தனதன்பை வெளிக்காட்டுகிறாள். இடையில் புகுந்த  அப்பா, அம்மா போகும்போது பாப்பா தான் டிப்பன எடுத்து நல்லாக் கழுவி சாப்பாடு போட்டுக் கொடுக்குமாம், அப்புறம் டிரஸ் எல்லாம் எடுத்து பையில வச்சு அம்மா கிட்ட கொடுக்குமாம் என்றவுடன், புகழ்மதி ‌ம்‌ம் சரிப்பா. எப்பம்மா போவ சொல்லும்மா எப்பம்மா போவ என சுட்டி மாற்றி கேட்கத் தொடங்கிவிடுகிறாள். இந்த கணத்தை உணராத குடும்பம் இருக்குமா என்ன... இதற்குப் பின் தலைவி பார்க்கும் பார்வையும் தலைவன் பார்க்கும் பார்வையும் முட்டிக்கொள்ளும் இடத்தில் பூக்கும் கூடலுக்கு குழந்தைகளின் நிரத்தைச் சூடி அழகு பார்க்கலாம்.  எந்த இடத்திலும் கூடுதலான வார்த்தைகளைச் சேர்க்காமல் குழந்தைகளை அவர்களின் இயல்பில் காட்சிப்ப்டுத்தியிருப்பதில் முழுதாகத் தேர்ச்சி பெற்றிருக்கிறார் தோழர்.

 அறிவியலைக் குழந்தைகள் கற்றுக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதும், பதிலைப் பெறுவதும் ஒரு கலை தான். அப்படியான குறிப்புகள் நாய்க்கும் அறிவு இருக்கு என்ற பதிலை டார்வின் கண்டுபிடிப்பது. செத்துப்போன பூச்சி எப்படிப்பா வந்து மனுசனைத் திங்கும் என்று கேள்வி கேட்பது. குழந்தைகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தப்பிக்கும் அப்பாவையும் பல பக்கங்களில் காணலாம். அதற்குக் காரணம் பதில் தெரியவில்லை என்பதால் அல்ல. குழந்தைகளுக்கு புரியும் காலம் வரவில்லை, வரட்டும் என்ற தெளிவு அப்பாவிடம் இருப்பதால் தான்.

 சிறு வயதில் தெருக்குழாயில் பெண்கள் உதிர்க்கும் வசவுச்சொற்கள் காதில் விழாதவாறு கதவு, ஜன்னல்களை அடைத்து டேப் ரெக்கார்டரில் பாடலை எனது தாயார் ஒலிக்கவிடுவார். அந்தக் காலம் மலையேறிவிட்டது. இன்று தொலைக்காட்சி, சினிமா, அலைபேசி என எல்லாம் வீட்டுக்குள் குப்பைகளைக் கொண்டுவந்து  கொட்டத் தொடங்கிவிட்டது. கதாநாயகன், கதாநாயகி நெருக்கமாக வரும் காட்சியை மாற்றத் துடிக்கும் அப்பாவிற்கு வேலை வைக்காமல் அந்த இடம் வரும்போது டார்வின் ரிமோட்டில் வேறு சேனலுக்குத் தாவுகிறான். நம்மைக் கடந்து அவர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் குறிப்பு அது.

 பதிலளிக்காமல் தப்பிப்பது தவறல்ல. அந்த இடத்தில் தப்பிக்கும் நுணுக்கம் கைவருதல் ஒரு கலைதான். ஆனால் தவறான ஒன்றைச் சொல்லி கடத்தல் என்பது சரியாக இருக்காது. அப்படித்தான் ஒரு குழந்தை பதின்ம வயதை அடைவதை ஒட்டிச் செய்யும் சடங்கு நிகழ்வுக்கு டார்வினும், புகழ்மதியும் செல்கிறார்கள். அங்கு புகழ்மதி எதற்காக மஞ்சத் தண்ணி ஊற்றுகிறார்கள் என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்புகிறாள்.  ஒருகட்டத்தில் டிரஸ்லயே ஆய் இருந்திட்டா மஞ்சத்தண்ணி ஊத்துவாங்களா? என்ற கேள்வியைக் கேட்கிறாள். யாரோ நமக்கு முன்னாடி சிக்கி, தப்பிச்சிருக்காங்க என்று அக்குறிப்பை முடிக்கிறார் தோழர். அந்த யாரோவிற்கு வன்மையான கண்டனங்கள். இதுதான் குழந்தைகளிடம் பதிலளிக்கும் முறையா அன்பரே எனக் கேட்கவேண்டும்.

 கையால் துவைப்பதே துவைப்பு மற்றெல்லாம்

 வாஷிங்மெஷின்கணக்கில் வரவு வைக்கப்படும் என்றொரு புதுக்குறள் எனக்குத் தோன்ற ஒரு குறிப்பு இருக்கிறது தொகுப்பில். ஏய் எப்புர்ரா என்று கேட்டு வைரல் ஆன தம்பி போல இங்கு டார்வின் யுட்யூப் ஆரம்பித்து கேள்விகேட்கிறான். எங்களைப்போல சட்டை இல்லாமல் பெண்கள் வெளியில் போக முடியுமா என்ற கேள்வி ஒருவனால் கேட்கப்பட்டது. இத்தொகுப்பில் இது போலவே அவர்களுக்கு வேர்க்காதா? என்ற கேள்வியை  தான் சார்ந்தோருக்கென டார்வின் கேட்கிறான்.  பாலின சுதந்திரம் என்பதை அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.  இதுபோல தொகுப்பில் விடுபட்ட அனைத்தும்  முக்கியக் குறிப்புகள் என்பதால் சீமையில் இல்லாத புத்தகம் என்பதைக் குழந்தைமையைக் கொண்டாடும் முக்கியப் புத்தகமாக எல்லோருக்கும் பரிந்துரை செய்யலாம்.  செய்கிறேன்.


வாழ்த்துகள் தேனி சுந்தர் தோழர்.


யாழ் தண்விகா