Sunday 27 March 2022

"விசா"வுக்காகக் காத்திருக்கிறேன் #டாக்டர் பி. ஆர்.அம்பேத்கர்

 




"விசா"வுக்காகக் காத்திருக்கிறேன்


டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்


திராவிடர் கழக வெளியீடு


விலை ரூ.20 பக்கங்கள் 32


வாழ்க்கை முழுதும் போராட்டம் என வாழ்ந்த ஒரு புரட்சியாளரின் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் நினைவலைகளாக. ஓர் இந்து, தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மனிதர்களுக்குச் செய்த அயோக்கியத்தனத்திற்கு கொஞ்சமும் குறையாது பார்சி, முகமதியர், கிறித்துவர் மதத்தவர் செய்த செயல்களும் என்பதை தன் வாழ்வில் நிகழ்ந்த செயல்கள் மூலம் கூறுகிறார் அம்பேத்கர். மருத்துவம் பார்க்க தாழ்த்தப்பட்டோர் வாழும் தெருவுக்குள் வராமல், தெருவை விட்டு வெளியே நோயாளியை அழைத்து வரச் சொல்லும் மருத்துவரின் குரூரம், படித்து வேலைக்கு வந்தபின்னும் அவன் மேல் தீண்டாமை முறையைப் பின்பற்றும் சமூகம் என தான் கண்ட நிகழ்வுகளையும் நூலில் குறிப்பிட்டுள்ளார் அம்பேத்கர்.


வாசிக்க வேண்டிய நூல். மேலும்இந்த சமூகத்தில் நிலவிய சாதியக் கொடுமைகளை அறியவும் அதன் நீட்சியாக இன்னும் நடைபெறும் சாதியக் கொடுமைகளைக் களையவும், சமூகம் நல்வழிப் பாதையில் செல்ல விரும்பும் உள்ளங்கள் எல்லோரிடமும் கொண்டு செல்ல வேண்டிய நூலும் கூட.


யாழ் தண்விகா 


❣️









Thursday 24 March 2022

தேவதை புராணம் #சி.சரவண கார்த்திகேயன்


தேவதை புராணம்

சி.சரவண கார்த்திகேயன்

Saravanakarthikeyan Chinnadurai 

எழுத்து பிரசுரம்

78 பக்கங்கள் 90 ரூபாய்


      காதல் என்பது வரம். யோசித்துப் பார்த்தால் காதல் கிடைப்பதற்காக, கிடைத்த காதலை தக்க வைப்பதற்காக, விலகிப்போன காதலை நினைப்பதற்காக நாம் செய்யும் எல்லாம் அபத்தம்தான். ஆனபோதிலும் காதல் என்பது சுனையில் ஊறும் ஊற்று. காதல் வழக்கமாகப் பொழியும் மழையின் ஊடே வந்து விழும் ஆலங்கட்டி. காதல் உயிரைப் பூக்கவைக்கும் அற்புதச் செடி என்று சொல்லிக்கொண்டே இருக்கிறோம். அது கணநேரத்தில் பிரசவிக்கப்படும் மாய தேவதையும் தான். உடனிருக்கும். கிச்சுக்கிச்சு மூட்டும். மயக்கம் உண்டாக்கும். அழவைக்கும். அச மந்தமாகத் திரியவைக்கும். எப்படி நாம் அதனோடு இதயம் கோர்த்துத் திரியவேண்டும் என்றுணர்தல் பெரும் கலை. அதைச் செய்யத் தெரிந்தால் எப்போதும் காதலோடு திரியலாம். 

 


       தேவதை புராணம் கவிதைத் தொகுப்பு என்பதை விட காதலால், காதல் சொற்களால், காதல் செயல்களால் நிரம்பிய தொகுப்பு. காதலித்துக் கைத்தலம் பற்றிய தன் மனைவிக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார் கவிஞர். காலம் முழுக்க செய்த, செய்யும், செய்யப்போகும் காதலுக்குச் செய்திருக்கும் ஆகப்பெரும் மரியாதையாகக் கொள்ளலாம் தொகுப்பை. முன்னுரையில் இத்தொகுப்பு பற்றிக் கூறும்போது சங்ககாலத் தலைவி கூற்று போல இது சம காலத் தலைவி கூற்று என்கிறார் கவிஞர். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, மற்றும் பேரிளம் பெண் ஆகிய ஏழு பருவங்களிலும் ஒரு பெண்ணில் உண்டாகும் மனத்தின் பேராசையைக் கவிதை என்ற கட்டுக்குள் நிறுத்தி வார்த்திருக்கிறார். பெண்ணின் இடத்தில் நின்று பெண்ணின் வலியைப் பேசுதல் தான் சிறப்பாக இருக்கும் என்பார்கள். இங்கு கவிஞர் ஆணாக இருப்பினும் பெண்ணின் ஆசைகளை, விருப்பை, ஏக்கத்தினைப் பதிவு செய்திருக்கிறார் அற்புதமாக. 


          பெண்ணின் பார்வை அனைத்தும் மிக நாசூக்காக இருக்கும். அவர்கள் பார்க்காத கோணங்களைக் கூட கவிஞர் என் பேதையின் விருப்பம் இப்படிப்பட்டதாக இருக்கும், இப்படியும் இருக்கும் என்கிறார்.

“தெருவோரம் நின்ற வாக்கில்

சுவற்றோவியம் வரைந்தபடி

வெளிர் மஞ்சள் நிறச் சிறுநீர்

கழிக்குமுந்தன் சௌகரியம்

பொறாமை தருகிறதெனக்கு”

இந்த வரிகள் வெறுமனே காதலை மட்டுமா சொல்கிறது? பெண்ணின் விருப்பம் என்பதற்குள் தொனிக்கும் சுதந்திரம் என்பதையும் தான் சொல்கிறது. 


“நீயும் நானும் 

சேர்ந்து நடக்கையில்

சில சமயம் விரலுரச,

பரஸ்பரம் புன்னகைப்போம்-

அதற்கு என்ன அர்த்தம்?”

வாழ்வின் பல சூழலில் இது போன்று பலருக்கு நிகழ்ந்திருக்கலாம். பருவங்களைப் பிரித்து இதனை பெதும்பை பருவத்தில் வரும் கவிதையாக கவிஞர் வைத்திருக்கிறார். 8 முதல் 11 வயதின் நினைவை மீட்டுக் கொடுக்கிறது வரிகள். புன்னகையை விட அங்கு வேறொன்றும் அடையாளம் காணப்பட்டிருக்காது எனினும் அந்த மகிழ்வு அட்டகாசமாக இருக்கிறதில்லையா...


        12 முதல் 13 வயதுப் பருவம். பருவத்திற்கான பருவம். முதல் கவிதை இப்படித் தொடங்குகிறது.

“நான் பூப்படைந்த கணத்தில்

என்ன செய்து கொண்டிருந்தாய்

நீ”

ஒரு விசாரணை போல் இருக்கும் வரிக்குள் அப்பெண் தனக்குப் பிடித்தவனிடம் கேட்பது அதற்காக அல்ல. அந்தக் கணத்தில் அவன் என்ன செய்தான் என்பதைத் தெரிந்து அடையும் சிறு பூரிப்புக்காக, சிறு மகிழ்வுக்காக. சிறு குறுகுறுப்பிற்காக. எனக்கு இப்படி ஆச்சு தெரியுமா... அப்ப நீ என்ன பண்ணிட்டிருந்த என பூப்படைந்த ஒரு பெண் தனக்குப் பிடித்தவனிடம் கேட்பதுபோல் கேட்டுப் பாருங்கள். அந்த வரிக்குள் இருக்கும் பருவத் தேடலின் ஆதி அந்தம் உணரலாம்.


“நீ அழுந்தப் பார்த்தாலே

தள்ளிப் போகிறதென்

மாத விலக்கு நாட்கள்”


“தீட்டுக் கழியும் நாட்களில்

தனியாயுன்னிடம் மாட்டி

அவஸ்தைப்படுவேன் – சுகம்” 

இப்படியான கவிதைகள் மத்தியில், நின்று நிதானித்து அந்தச் சூழலுக்குள் சென்று ஒரு பொழுதைப் பார்க்கும் வண்ணம் ஒரு கவிதை. அதனை கொண்டாடுதல் என்பதா? வலியைத் தாங்கும் இளம் குருத்துகள் மனம் அறிந்து கலங்குவதா? அல்லது பிடித்தவன் முன்னால் இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது என்பதை அறிந்து உள்மகிழ்வதா...? எனப் பல எண்ணங்கள். 

“உன்னிடம் சொல்லியதில்லை இதுவரை-

உன்னைப் பார்த்துக்கொண்டிருந்த போதே

வகுப்பிலொரு சமயத்தில் விலக்கானதை”

இப்படி மாத விலக்கு குறித்த கவிதைகள் தொடர்ந்து அந்தப் பருவத்தின் பார்வைகள் எப்படியிருக்கும் என்பதாக நீள்கிறது கவிதைகள். காதல் பெருக்கெடுத்து ஓடுவது தெரியாமலே ஓடும் தருணம். 

‘என்னிடம் எதை ரசிப்பதென

விவஸ்தையே கிடையாது-

போடா, காதல் பொறுக்கி!


           மடந்தைப் பருவத்தின் சேட்டைகள் வெட்கம், கள்ளத்தனம், முத்தம், காதல் அறிதல், பகிர்தல் எனப் புதுப் பாதையில் பயணிக்கிறது. 

“யாரோ தூரக்குரலழைக்க

நமைத் தனியே விடுத்து

உனதன்னை விலகிய 

சிறு இடைவெளியில்

எனைக் கதவடைத்துக்

கலைத்தவன்தானே நீ”

செய்வான் அவன் எனினும் எதிர்பார்த்துக் காத்திருப்பவள் அல்லது எதிர்ப்பைக் காட்டாது ஏற்றுக்கொள்பவள் என மடந்தை இருப்பாள் என்பதை வரிகள் சொல்கிறது. இல்லறத்திற்குள் கண்டாடும் சுகங்கள் கவிதைகள் என்றும் சொல்லலாம் காட்சிப் படுத்துதல் என்றும் சொல்லலாம் எனுமளவு சிறப்பு.

“உச்சம் ஒரே கணம்

உனக்கு – எனக்கோ

ஒவ்வொரு கணமும்”


“காதோரம் 

கழுத்தோரம்

உதட்டோரம்

உயிரோரம்

பரவும் தீ – நீ”


“உன் காமம் பிடிக்கும்;

அதைவிடப் பிடிக்கும்

அதற்கும் முந்தைய...”


           காதல் வாழ்வின் உச்ச காலத்தில் (வயது 31-40) இல்லறத்தின் மேல் பூக்கத் தொடங்கும் ஆசுவாசம், நம்பிக்கை, வாழ்ந்த காலத்தினால் உயிரில் உண்டாகிக் கிடக்கும் கிளர்ச்சியால் மந்தகாசம் உண்டுபண்ணும் சுகம் இத்தருணங்கள் கண்ணீரையும் வரவழைக்கும் போல. ஏற்கனவே சொல்லியிருந்தாலும் “பெண்ணின் மொழியில்” இக்கவிதைகளை வாசித்துப் பாருங்கள். எத்தனை சுகம்...

“உனக்கெந்தன் தாய்மையின்

கருவறைக் கதகதப்புத் தராத

துக்கமுண்டு என்றுமெனக்கு” 

இருக்கும் பேரன்பு எல்லாவற்றையும் உனக்குத் தந்துவிட்டேன். தராத மிச்சம் இதுதான் எனமளவு காதல் சொல்லும் வரிகள். 

“உனக்கு முன்னர் நானெனில்

எனக்கு நீ நீராட்ட வேண்டும்

எனக்கு முன்னால் நீயெனில்

உனக்கு நான் தீமூட்ட வேண்டும்”

இறப்பு நேருமிடத்திலும் காதலின் ஆசை எப்படிப்பட்டதாக இருக்கிறது...? கண்ணீரோடும் வாசிக்க கவிதைக் காதல் வழி சொல்லுகிறது.


       இன்னும் மின்னும் பல கவிதைகள் தொகுப்பெங்கும். காதலைக் காதலிக்கும் ஒவ்வொரு ஜீவனும் வாசிக்கவேண்டிய தொகுப்பு. கூடு விட்டுக் கூடு பாய்ந்து ஒரு ஆண் பெண்ணின் இடத்தில் நின்று எழுதியதன் மூலம் காதலனின் விருப்பம் இதுவெனவும் அறியலாம். ஒரு பெண் ஆணுக்கு அளிக்க வேண்டிய காதலையும் அறியலாம். சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை. சில பல இடங்களில் சொல்லித் தெரிந்துகொண்டால் / கேட்டு/ வாசித்துத் தெரிந்துகொண்டால் இன்னும் சிறக்கும் மன்மதக் காதல் கலை. முக்கியமாக கவிஞரை வாசித்தால் இன்னும் சிறக்கச் செய்யலாம்.


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா

 

Wednesday 23 March 2022

காதல் - ஒரு சொல் கவிதை #யாழ் தண்விகா


❤️
காதல்
ஒரு சொல் கவிதை...

❤️
வைரம் பாய்ந்த மரம்
உறுதியாய் இருக்கும்

காதல் பாய்ந்த மனம்
மென்மையாய் இருக்கும்.

எனக்குள் பாய்ந்த
காதல் நீ.

❤️
அவ்வப்போது கேட்பாய்
ப்பா
என்னைப் பிடிக்கும்ல எப்போதும்...

அன்பின் அழகும்
காதல் அழகும் 
உன்னில் கூடும்போது
திகட்டி விடுவாயா என்ன...

❤️
அங்கங்களை
இதழ்களால் வர்ணிக்கும்போது
போங்கப்பா எனச் சொல்லும் 
நீதான்
எழுத்தால் வர்ணிக்கும்போது
வெட்கத்தால்
சொற்களை 
மேலும் வசீகரிக்கிறாய்...

❤️
ஒரு நாளில்
ஒரு பொழுதேனும்
உன் குரல் கேட்டுவிட வேண்டும்

காதல் மயக்கம்
பொல்லாதது...

❤️
தோளில் கை போட்டு
நடந்து வருகிறேன்
உன்னோடு...

என் கையை எடுத்து
உன் இடையில் வைத்து
நடக்கிறாய்
பேச்சு பேச்சாக
இருந்தபோதும்...

இது எப்படா நடந்துச்சு...

இனி நடக்கும்ல...

இன்னும் நிறைய நாளாகுமா...

வா இப்பொழுதே நடப்போம்...

❤️
உன் சட்டையில்
நம் வாசனை
நீ மட்டும் உள்ள சட்டை
தாயேன்

புதுச் சட்டையின் காலர்ல
மஞ்சள் படுதோ இல்லையோ
உன் மஞ்சத்தின் மஞ்சள் 
பட்டு விடுகிறது.
பிறகெப்படி
நான் மட்டுமிருப்பேன்...

❤️
கைகளுக்குள் ஊர்கிறது
சிலை தடவிய நுட்பம்
உன்னோடு வாழ்ந்த பின்...

❤️
உங்களோட வாழ்ந்த சந்தோசம் 
போதும்ப்பா
இனி நான் செத்தாலும்
கவலையில்ல

உன்னோட வாழ்ந்த சந்தோசம்
பத்தாதுப்பா
இன்னமும் நான் வாழவேண்டும்
உன்னோட

❤️
கூந்தல் கலைந்து
முகம் காம நிறம் போர்த்தி
கண்கள் செருகும் மயக்கத்தில்
எதுவும் பேசாமல்
வெட்கத்தில்
தோள் இழுத்து நெருங்கிப் படுத்து
உடலை சரணாகதியாக்கித் தந்து
மெல்லக் கண்கள் மூடுகிறாய்

காதல் மகுடம் மின்னத் தொடங்குகிறது.

❤️
அந்த நேரத்துக் கவிதைகளை
இதழ்ச் சொற்களால்
மீளாய்வு செய்யத் தலைப்படுவேன்

வேண்டாம் என்று
இரு கரங்களாலும்
என்னிதழ் மூடுவாய்

மீண்டும் இதழ் திறப்பேன்

உன்னிதழால் என்னிதழ் மூடுவாய்

அந்த நேரத்துக் கவிதைகள்
மீண்டும் புதிதாய் பூக்கும்...

யாழ் தண்விகா


 

Tuesday 22 March 2022

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே... சி.சரவண கார்த்திகேயன்


கற்பதுவே கேட்பதுவே கருதுவதே...

சி.சரவண கார்த்திகேயன்

Saravanakarthikeyan Chinnadurai 

பக்கங்கள் 120 விலை 150

எழுத்து பிரசுரம்


நல்லதா நாலு விஷயம் தெரிஞ்சுக்கிட கட்டுரைகள் எப்போதும் உதவும் என்ற நம்பிக்கை உள்ளவன் நான். ஆனால் பல கட்டுரைத் தொகுப்புகள் படிக்கத் தொடங்கியவுடன் நம்மை கடித்து வைக்கத் தொடங்கிவிடும். அந்த வகைப்பட்ட எழுத்துகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு வாசிப்பவனைத் தன்வயப்படுத்தும் எழுத்து மட்டுமின்றி தான் சொல்ல வந்த கருத்தை ஆழமாகவும் எடுத்து வைப்பவர் சிஎஸ்கே என்றால் அது அதிகப்படி இல்லை. உள்ளபடிதான்.


மொத்தம் 16 கட்டுரைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளம். பாலு மகேந்திரா,  ஏ ஆர் ரஹ்மான், மிஷ்கின், இளையராஜா, 3, எந்திரன் என சினிமா தொடர்புடைய கட்டுரைகள் தவிர்த்து மேலும் 10 கட்டுரைகள். மையம் இல்லாமல் பார்த்துக்கொண்டு நிறை குறைகளை எப்போதும் கூறுவதுபோல் மேற்சொன்ன கட்டுரைகளிலும் கூறியுள்ளார். ரஹ்மான், சைக்கோ-மிஷ்கின் குறித்த கட்டுரைகளில் இதை வலுவாகவே காணலாம். இளையராஜாவை கவிராஜன் கதையை வைரமுத்து எழுதியது போல எழுத்தில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார். நன்றாக வந்திருக்கிறது. தொடர வாய்ப்பிருந்தால் தொடரலாம். 


பா.ராகவன் எழுதிய நூலுக்கு தொகுப்பாளர் தந்த முன்னுரையும் ஒரு கட்டுரையாக இருக்கிறது. அது இலக்கிய ஆர்வலர்களுக்கு புரியும் போலிருக்கிறது. ஜெகனின் ட்விட்டர் மொழி நூலுக்கு எழுதிய முன்னுரையும் இட்லி வடை வலைப்பூ பக்கம் குறித்தும் களிபத்துப்பரணி கட்டுரையில் சௌம்யா குறித்தும் இணைய தொடர்பான கட்டுரைகள் இருக்கின்றன. வலைத்தளம் இன்று வியாபித்திருக்கின்ற சூழலில் அவை தொடர்பான கட்டுரைகளை சுவாரசியத்தைத் தூண்டுவதாக எழுதியிருக்கிறார். நானே என்னுடைய ட்விட்டர் பக்கத்தை தூசி தட்டி சில ட்வீட்ஸ் போட வைத்துவிட்டது. அரட்டை கேள் சௌம்யா குறித்த கட்டுரை மிகச் சிறப்பாக இருந்தது. கூடுதலாக அவரின் 100 ட்வீட்ஸ் போனஸ் போல இருந்தது. காட்சிப்படுத்தியதற்கும் இக்கட்டுரைக்கும் தனியாக வாழ்த்துகள். 


தொலைக்காட்சியில் இன்று பொதுமக்களை வசியம் பண்ணும் பல நிகழ்ச்சிகள் வரத் தொடங்கிவிட்டன. அவ்வகையில் bigboss, மற்றும் நீயா நானா போன்ற நிகழ்ச்சிகள் குறித்த கட்டுரைகள். ஒன்று ஓவியாவைத் தொட்டு நீள்கிறது. முகம் என்ற கட்டுரை நீயா நானாவில் கலந்து கொண்டு பேசியதில் பேசாமல் விடுபட்ட விசயங்களைப் பேசுகிறது. முகம் தனித்துவமாக இருக்கிறது. புதிய ஆத்திசூடி நன் முயற்சி. இந்துக்களின் இப்தார் கட்டுரை மாநகர வாழ்க்கையும் நெரிசலும் அவசரமும் நம் கலாச்சாரங்களின் கழுத்தை நெரிப்பதை துயருடன் காட்சிப் படுத்தி உள்ளார். தொகுப்பின் முதல் கட்டுரை பெருமாள் முருகன் எழுதிய கெட்ட வார்த்தை பேசுவோம் என்ற நூலை நினைவுபடுத்தியது. கற்பதுவே கேட்பதுவே கருதுவதே கட்டுரை பத்தி வடிவிலான எழுத்தை, அவசர கதியில் இயங்கும் சமகாலப் போக்கில் அதன் அவசியத்தைக் கூறுவதாக அமைந்துள்ளது.


கட்டுரை ஒவ்வொன்றும் வாசித்தலை ரசித்துச் செய்ய வைக்கிறது. வாசித்தலில் வசிக்கவும் வைக்கிறது. 


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா

 

Sunday 20 March 2022

மீயழகி சி. சரவணகார்த்திகேயன்

 மீயழகி

சி. சரவண கார்த்திகேயன்

Saravanakarthikeyan Chinnadurai 

98 பக்கங்கள் 120 ரூபாய்

எழுத்து பிரசுரம்



 காதலைப்  பற்றி, காமத்தைப் பற்றி கவிதைகள், கதைகள், கட்டுரைகள், துணுக்குகள் பல வந்திருக்கலாம். மீயழகி பெண்கள் மேல் அதீத அன்பை, காதலை, ரசித்தலைத் தூண்டும் ஒரு தொகுப்பு. கட்டுரைத் தொகுப்பு என்றாலும் ஒவ்வொரு தலைப்பும் அலுக்கவில்லை. பொதுவாகவே பெண்களைப் பற்றி எழுதுவதென்றால் போதை மை ஊற்றி எழுதுவார் சிஎஸ்கே.  இதில் கூறப்பட்டுள்ள பெண்கள் பற்றிக் கூறவே  வேண்டாம்.  இதில் அழகில் உச்சம் பெற்றுள்ள கேரளப் பெண்கள், ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே, கொஞ்ச காலத்துக்கு முன்னர் விடாது கொஞ்சல் மழையில் திளைக்க வைக்கப்பட்டிருந்த அனு ஸிதாரா, தற்போது கொஞ்சப்படும் பிரியங்கா மோகன் இப்படி பல அழகு ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள். வெளுத்து வாங்கியிருக்கிறார் கட்டுரை ஆசிரியர்.


 எழுத்தாளனுக்கு என்று நிறைய வேலைகள், பொறுப்பு இருக்கிறது.  சரி அதையெல்லாம் செய்வதோடு நின்றுவிட்டாரா? இல்லை.  பெண்களைப் பற்றி எழுதி அதையும் ஒரு புத்தகமாகப் போட்டு வச்சு எழுத்தாளருக்கு உள்ள பெருமையை இன்னும் அதிகப்படுத்தவே செஞ்சிருக்கார். பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா என்ற பாட்டைக் கேட்கும்போது கொண்டாடுவோம். நாமும் பாடுவோம். ஆனால் எழுதினால் மட்டும் தப்பாப் போகுமாம். போகட்டுமே. இதை எழுத்தாளன் எழுதாமல் யார் எழுதுவது.... எழுதுங்க எழுத்தாளரே இன்னும் பல்லாயிரம் பக்கம்...


 பெண்ணின் வசீகரம் என்பதை உணரத் தலைப்படா சமூகம் சீரழிந்து போகும்.  அழகு என்பது எது ? புறம் அகம் என்று எதைக் கூறுகிறோம்... எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது.  ஸ்ருதி ஹாசன் குறித்த கட்டுரை அவர் செல்லவேண்டிய தூரத்தைக் கூறிக் கவலைப் படுகிறது.  நிசப்தத்தின் பேரோசை தற்கொலை செய்துகொண்ட நடிகைகளின் பட்டியலைப் பதட்டத்துடன் எடுத்துவைக்கிறது. ஆண் சமூகம் பெண்ணை அணுகும் விதம்,  பெண்ணின் உச்ச பட்ச எதிர்பார்ப்பு என்பதையும் தாண்டி அரங்கேறும் தற்கொலைகள் பெண்ணின் உச்ச பட்ச கோழைத் தனத்தைக் காட்டுவதாகவே அமைந்திருப்பதைக் கட்டுரையை வாசிக்கும்போது உணரலாம்.  இப்படி நீளும் கட்டுரைகள் மத்தியில் மின்மினிகள் என்ற தலைப்பில் உள்ள கட்டுரையும் ஒன்று. அதில் கடைசி மின்மினியாக ஜீவஜோதி. பல ஆண்டுகள் பார்த்த முகம். அண்ணாச்சியை எத்தனை பேர் நினைத்தோம்... ஆனால் ஜீவஜோதி நினைவில் நிற்கிறார்... என்ன காரணம்...? போகும் போக்கில் அல்ல. காரணத்துடன் கட்டுரைகளில் வாழ்கிறார்கள் பலர். 


 பல காலங்களில் பலர் நமக்குள் உண்டாக்கிய அழகுக் கிளர்ச்சியை நாம் வெளிக்காட்டாமல் கடந்ததைப் போல் ஒரு பாவச் செயலைச் செய்யாமல் அதை எழுத்துப் படையலாக்கி நமக்கு முன் வைத்து புண்ணியம் தேடிக்கொண்டார் தோழர் சிஎஸ்கே. தங்களால் அழகிகளை, மீயழகிகளை மீண்டும் எழுத்துகள் மூலம் பார்க்கும் வாய்ப்பு நல்கியமைக்குப் பேரழகு நன்றியும் பேரன்பும். தொடரட்டும் தங்கள் வனப்பு காட்டும் எழுத்து...!


வாழ்த்துகள் தோழர்...


யாழ் தண்விகா