Tuesday 29 June 2021

மெல்ல எரியும் இரவு

 மெல்ல எரியும் இரவு

--------------------------------


மெல்ல எரியும் இரவினில் யாரோ ஒருவர் உங்கள் கைபிடித்து அழைத்து செல்கிறார். நீங்களும் அவரின் பின்னால் எவ்வித பிரக்ஞையற்று உடன் செல்கிறீர். நேரம் ஆக ஆக அவரோடு உரையாடத் தொடங்குகிறீர். கட்டிப்பிடிக்கிறீர். ஒரே மேசையின் எதிரெதிரே அமர்ந்து நிதானித்து தேநீர் அருந்தத் தொடங்குகிறீர். ஒவ்வொரு மிடறு உள் செல்லும்போதும் இன்னும் நெருக்கமாகிறீர். முடிவில் முதலில் அறியவேண்டிய கேள்வியை கேட்கிறீர்... உங்கள் பெயரை அறிந்து கொள்ளலாமா...?


'''இளையபாரதி''' என்கிறார் அவர்.


இரவின் கண்களுக்குள் சிக்கியுள்ள வாதைகளை

வார்த்தைகளில் நெய்திருக்கிறார் கவிதைகளாக. இரவின் வண்ணங்களாக புது கோலமிடுகின்றன அவை. 

ஆங்காங்கே தேவதை எட்டிபார்க்கிறாள் காதல் வடிவில். அவளும் இரவின் ஏதோ ஒரு மூலையில் சிக்கிக்கொள்பவளாகவே இருக்கிறாள். இருப்பினும் இளையபாரதியின் இரவுக்குள் சூரியனின்றிப் பூத்திருக்கும் மலர்கள் ஏராளம். சூரியனாக பிரகாசிக்கின்றன மலர்கள்.


மழையை இன்னும் எத்தனை காலம் எழுதுவது என்ற எண்ணத்தை இப்படியெல்லாம் எழுதலாம் என உடைத்தெறிகிறார் இளையபாரதி...,  

""ஒவ்வொன்றாய் 

  கழன்று விழுந்தன

  துளி பூமிகள்""...

என்று மரங்களில் தூளியாடும் மழைத்துளிகளை கூறும்போது மழைக்கப்பாலான மரங்களை இனி உலுக்குதல் பாவம் என்பதுபோல் அதிரவைக்கிறார்.


ஒரு குடும்பத்தின் வாசனையை உணர்வீர்கள் 

பூனையின் பாதம் கொண்டு பக்கங்களின் வழியே  மெல்ல பயணித்து செல்லும்போது...

அந்த குழந்தை 

அந்த காதல்

அந்த ஊடல்

அந்த தந்தை 

அந்த இரவு 

அந்த தனிமை

அந்த தெருவின் அழகி 

இப்படி அனைத்தையும் உணரலாம் நம் இரவின் வழியாக உணர்பவற்றை இந்த கவிதைகள் வாயிலாகவும்...


""சிலர் தலைக்குமேல் 

  சிலர் பாதங்கள்

  நடமாடும் அடுக்குகளில்


  ஒருவீட்டின்மேல் 

  இன்னொரு வீடு


  எப்படிச் சொல்ல 

  இது எங்கள் வீடு""அபார்ட்மெண்ட் வீட்டின் அவலத்தினை உள்ளூரத் தொனிக்கும் கவிதை... அத்தோடு நடுத்தர மக்களின் வாழ்க்கையின்மீது வீசப்படும் பகடியெனவும் கொள்ளலாம் இதனை...


''எழுத்தல்ல ஆயுதம்''

தன் எழுத்தின் கூர்மை

தன் பயணம் எதை நோக்கியது 

என்றும் குறிபிட்டதொரு கவிதை...

கூர்மையை எரியும் இரவினில் மட்டுமல்லாது

இன்னும் கூடுதலான பொழுதுகள் அனைத்திலும் 

செலுத்தும் வீரியம் இருக்கிறது கவிஞரிடம்...

செலுத்துவார் என்ற நம்பிக்கையிருக்கிறது...


""தம்பி சாப்பிடலாம்..."" 

கவிஞரின் தந்தை கூறுவதுபோல 

ஒரு கவிதையில்...

கவிதை ஆர்வலர்களே...

இரவினை உணர 

""மெல்ல எரியும் இரவு""

சாப்பிட்டாகவேண்டிய உணவு...


வாழ்த்துகள் 

கவிஞர் இளையபாரதி Elayabharathi Elancheran அவர்களே...!


யாழ் தண்விகா