Thursday 18 February 2021

இறுதி இரவு #சி சரவண கார்த்திகேயன்

இறுதி இரவு

Saravanakarthikeyan Chinnadurai

உயிர்மை பதிப்பகம்

நல்லிரவு 12 மணியைப் போல தற்செயலாக வாசிக்கத் தொடங்குகிறேன் இறுதி இரவு என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலினை. தலைப்புச் சிறுகதையை வாசிக்கிறேன். முதல் வரியே சுவாரசியம் பற்றிக்கொண்டது ஒவ்வொரு பத்தியும் எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டே செல்லுகிறது கன்னிப்பெண் பிணம் என்பது குறித்தும் அதனைப் புணர்வது குறித்தும் இலக்கியக் கூட்டமொன்றில் கேட்டிருக்கிறேன் தோழர் முத்து நாகு எழுதிய சுளுந்தீ நாவல் குறித்து நடைபெற்ற கூட்டம் என்று நினைக்கிறேன்
அந்த தரவுகளை கேள்விப்படும் பொழுது அவ்வளவு ஆச்சரியம் இருந்தது. கூட்டம் முடிந்து வெளியில் வரும் பொழுது ஏனோ, நானே ஒரு வெங்கம் பய என்று சொல்லி புஹா ஹா ஹா ஹா என்று சிரிக்கும் சீமான் குரல் மனதில் வந்து போனது. வெங்கம்பய என்பது ஒன்றும் அற்றவன் என்ற அர்த்தம் மட்டும்தானா? அந்த அர்த்தத்தின் பின்னுள்ள வலி எப்படியிருக்கும்?
என்பது சீமான் போன்றோருக்கு ஏன் தோன்றவில்லை. அன்று தோன்றியது. ஒரு பிணம் குளிப்பாட்டுதலும் சடங்கு சம்பிரதாயம் செய்தலும் கன்னிப்பெண் பிணம் குளிப்பாட்டி சடங்கு சம்பிரதாயம் செய்தலும் ஒன்றாக இல்லை இக்கதையில். தான் கேள்விப்பட்ட ஒன்றிலிருந்து எழுதத் தொடங்கியதாக ஆசிரியர் கூறுகிறார். அப்படித் தோன்றாத வண்ணம் சிறப்பாகப் பயணிக்கிறது கதை. கதையைப் படித்து முடிக்கும்போது அதிகாலை 1 இருக்கும். கடைசி வரி உலுக்கிப் போட்டது. கண்ணீர் விடுவதா... பயம் கொள்வதா... கன்னிப் பிணத்தின் முதல் இரவா அது... இறுதி இரவா... புணர்ந்தவன் மனநிலை, என்னவாக இருந்திருக்கும்... அவன் எடுத்த முடிவு... இடையில் வந்து செல்லும் வீடியோ கேமரா என ஒன்றொன்றின் கோர்வையில் மிளிர்கிறது கதை.

மியாவ், குஜராத் 2002 கலவரம், 96க்குப் பின்னால் வாசிக்கும் ஆசிரியரின் நூல். சுஜாதா நினைவினில் வாசித்துக்கொள்ள E=mc2, மதுமிதா - சில குறிப்புகள். மதுமிதாவில் அவளின் Facebook, twitter, mail, ஐபோன் மெசேஜ், Skype இப்படிப்பட்ட தகவல்கள் வழியே கதை சென்று post mortem ரிப்போர்ட்டில் முடிகிறது. வழக்கம்போல செமயாக கதை முடிந்திருக்கிறது.

மயிரு கதை மயிரில்லாத தலை உடையவன் வலி பற்றிப் பேசுகிறது. மயிர் வளர அவன் மெனக்கெடுதல், மயிர் இல்லாமல் தள்ளிப்போகும் திருமணம் என வளர்கிறது.  ஆசிரியருக்கு நகைச்சுவையும் அழகாகக் கைகூடி வருகிறது என்பதை இக்கதையில் உணரலாம்.

அகல்யா கதை ஹிந்தி குறும்படம் ஒன்றின் நீட்சி. அற்புதமாக நீள்கிறது. மாய உலகத்தில் பயணிக்கும் கதை. வயது முதிர்ந்த சிற்பி, இளமையான மனைவி, பிற வந்து செல்லும் பாத்திரங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றது. கதை இறுதி ஆசிரியரின் கதைகளில் வருவது போல் கடைசியில் நாம் எதிர்பாராத ஒன்றை கதையின் முடிச்சாக வைத்திருந்தாலும் ஏதோ ஒன்று குறைவது போலவே இருக்கிறது. இரண்டாம் முறை வாசித்து முடித்தபோதும் அதே உணர்வுதான். ஏன் என்று தெரியவில்லை. கதையில் இன்னும் சுவாரசியம் கூட்டியிருக்க வேண்டுமா அல்லது எனக்கு வாசிப்புத் தன்மை பத்தாதா எனத் தெரியவில்லை. 

ஒரே இரத்தம் கதை தம்பதியினர் இருவரின் வாழ்வில் பூக்கும் திடுக் சூழல். குழந்தைக்கு உண்மையான அம்மா இவள். ஆனால் அப்பா நீ இல்லை என்பதை one line ஆக வைத்துக்கொண்டு கதகளி ஆடியிருக்கிறார் கதாசிரியர். என்னாகும் ஏதாகும் என்ற எதிர்பார்ப்போடு இன்னொரு குடும்பத்தை வேடிக்கை பார்க்க வைத்துவிடுகிறார் கதாசிரியர். செம ரொமான்டிக் scenes மற்றும் வசனங்கள். பிரச்சனைகள் எல்லாம் சுபம் பெற்ற பின் நடக்கும் கூடல் வரிகள் காதலர்கள் வாழ வேண்டிய பக்கத்தை எடுத்துக் காட்டுகிறது. மாய உலகத்தில் தான் நாம் ஒவ்வொருவரும் பயணிக்கிறோம். விழித்திருக்கும் நேரத்தில் மட்டும் காண்பதை உண்மை என்று நம்புகிறோம். நாம் உறங்கும் நேரத்தில் நம் வாழ்க்கையை நாம் வாழ இயலுமா. அவரவர் வாழ்க்கை, அவரவர் பக்கங்கள். சொன்னால் தான் உண்டு. தெரிந்தால் தான் உண்டு. அதுவரை எல்லோரையும் நம்புகிறோம். நம்பவைக்கப் படுகிறோம். 

வெள்ளைப் பளிங்கால் தன் காதல் மனைவிக்கு தாஜ்மஹால் கட்டிய ஷாஜஹான் தனக்கு ஒரு கருப்பு மாளிகை கட்ட ஆசைப்படுகிறான். மகள் ஜஹனாரா உதவ நினைக்கிறாள். ஒளரங்கசீப் அதற்கு முட்டுக்கட்டையாக நிற்கிறான். தாஜ்மஹாலை அருகில் நின்று தரிசித்தபடி ஷாஜஹானுக்கு கட்டிடம் எழுப்ப எதிர்க்கரை பார்த்தபடியே ஏங்க மட்டுமே முடிகிறது நம்மால். அப்படியொரு மொழி நடை. வரலாறு குரூரங்களால் கொடூரங்களால் கட்டமைக்கப்பட்டதாக பல இடங்கள் இருக்கிறது. கருப்பு மாளிகைக் கனவும் அப்படியே ஷாஜஹானுக்கு.

வெண்குடை... அமெரிக்க மனிதன், ஜப்பானிய மனிதன் இருவருக்குமிடையே நடக்கும் உரையாடல். எது சரி எது தவறு என்பதை உணராமல் தலைமை கட்டளையிடுகிறது செய்கிறோம் என்ற மனப்பான்மை அமெரிக்கக்காரனுக்கு. ஆனால் தன்னால் போர் தொடங்கியது எனினும் ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் அழிந்தது, அங்கு எறியப்பட்ட குண்டுகளின் கதிர்வீச்சால் இன்றும் பாதிக்கப்பட்டு அதன் வேதனைகளை அனுபவிக்கும் ஜப்பானியக்காரன், அமெரிக்கக்காரனிடம் எதிர்பார்க்கும் சிறிதளவு வருத்தம். இரண்டுக்கும் இடையே நடக்கும் போராட்டம். போரில்லாத வாழ்வைப் பேச போரைப் பற்றி பேசும் கதை. 

இன்னும் சில கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு களத்தில். ஒவ்வொன்றிலும் அவ்வளவு அழுத்தம். ஏனோ தானோ கதைகளாக இல்லாமல் எல்லாவற்றோடும் நாமும் பயணிப்பது மாதிரியான கதைகள். வழக்கம்போல முடிவில் வெளிப்படும் டிவிஸ்ட்டுகள் எனக் கலக்கியிருக்கிறார் கதாசிரியர்.

வாழ்த்துகள் தோழர்.

யாழ் தண்விகா