Saturday 23 October 2021

கடவுளைத் தோற்றுவித்தவன்

 சிறார் கதை 2


கடவுளைத் தோற்றுவித்தவன்

பெ.விஜயராஜ் காந்தி

 பள்ளிக்கூடத்திலிருந்து வந்தும் வராததுமாக பையைத் தூக்கி எறிந்துவிட்டு “அம்மா உனக்கு எதுக்கும்மா நாகம்மான்னு பேரு வச்சாங்க” என்றான் நவீன். “ஏன்டாப்பா இந்தப் பேருக்கு என்ன குறைச்சல்? நாகம்மா மகனுக்கெல்லாம் பள்ளிக்கூடத்தில் இடமில்லைன்னு உங்க பள்ளிக்கூடத்துல சொல்லிட்டாங்களா” என்றாள் நாகம்மா. 


 “கிண்டல் பண்ணாதம்மா. என்னோட வகுப்புல படிக்குற கண்ணன், உங்கம்மா பேரு நாகம்மா தான. நாகப்பாம்பு மாதிரி படமெடுத்து ஆடுமான்னு கேக்குறான். எனக்குக் கோவம் கோவமா வருது. ஒரு நா இல்லைன்னாலும் ஒருநா என்கிட்ட செமக்க அடி வாங்கப் போறையான்” நவீன் கோவமாகப் பேசினான். 


 “நாகம்மாங்குறது சாமிப் பேருன்னு அவங்கிட்ட சொல்லவேண்டியது தானடா. இல்லன்னா சாருகிட்ட சொல்லவேண்டியது தானடா. சாரு கண்டிச்சு வப்பாருல்ல. இவ்வளவு கோவம் ஆகாதுடா நவீன்” அவனைச் சாந்தப்படுத்தும் விதமாக நாகம்மா பேசினாள்.


 “சரிம்மா. நாளைக்கு நான் சார்கிட்ட சொல்றேன் அவனை. அதுக்கப்புறமும் ஏதாவது சொன்னான்னா அவனுக்கு இருக்கு” என்ற நவீனை முறைத்துப் பார்த்த நாகம்மா சட்டென யோசனை வந்தவளாக சிரித்துக்கொண்டே “ சரிடா. எம்பேருக்கே அவன் கிண்டல் பண்ணுனதுக்கு இவ்வளவு கோவப்படுறயே. ஒன் தாத்தா பாட்டி பேரு உனக்குத் தெரியும்ல. காத்தவராயன். இருளாயி. இதெல்லாம் அவனுக்குத் தெரிஞ்சா இன்னும் கிண்டல் பண்ணுவான்ல. அப்ப என்னடா பண்ணுவ” என எதிர்க் கேள்வியைக் கேட்டாள். “அது தெரிஞ்சாத்தான. அப்படியே தெரிஞ்சாலும் அதையும் சாமிப்பேருன்னு சொல்லி சமாளிச்சுடுவேன்” என்ற அவனை “என்னது சமாளிச்சிடுவியா? உண்மையிலேயே அது சாமிப் பேர் தான்டா” என்ற நாகம்மாளை நிமிர்ந்து பார்த்து “என்னம்மா சொல்ற? நெசமாவா?” என்றான் நவீன் ஆச்சரியத்துடன்.


 “ஆமா. இதெல்லாம் சாமிப் பேர் தான். உன் பாட்டி பேர் இருளாயி. அந்தக் காலத்துல ஆதி மனுசன் இருட்டைப் பார்த்து மிகவும் பயப்படுவான். நெருப்பைக் கண்டுபிடிக்குறதுக்கு முன்னரும் பின்னரும் இருட்டின் மேலிருந்த பயம் அவனுக்குப் போகவே இல்லை. இரவு நேரங்களில் எதையாவது பார்த்து பயந்து அதிர்ச்சியில் இறந்து போவது அடிக்கடி நடந்தது. அவங்களைப் பேய் அடிச்சு செத்ததாக நெனச்சாங்க. அதனால இதையெல்லாம் கோரக் கடவுள்களாக நெனச்சு அதைத் திருப்திப்படுத்த தம்மோட குழந்தைகளுக்கு கருப்பன், கருப்பாயி, இருளன், இருளாயின்னு பேர் வச்சாங்க. அப்படி வந்த பேர் தான் இருளாயி. புரியுதாடா?” என்றாள் நாகம்மா.


 “புரியுதும்மா. அப்ப தாத்தாவுக்கு எதுக்கு காத்தவராயன்னு பேரு?” என்று கேட்டான் நவீன். “ஆதி காலத்தில் இந்த மண்ணு உழுதுபோடாம அப்படியே கிடந்துச்சு. பெரும் சூறாவளிக் காத்து அப்பப்போ அடிக்கும். அந்தச் சூறாவளி மேல் மண்ணை அள்ளிப் பறக்கும்போது அதிலிருக்க பாஸ்பரஸ் காத்தோட சேர்ந்து தீப்பிடிக்கும். அதைப் பார்த்த ஆதிமனுசன் அதை கொள்ளிவாய்ப் பேய் என நெனச்சான். அந்தப் பயத்திலிருந்து விடுபட காற்றை வழிபட ஆரம்பிச்சான். அப்படி காற்றைத் திருப்திப் படுத்த உண்டான பேர் தான் உன் தாத்தா பேரு, காத்தாயி, காத்தப்பன், காத்தவீரி, காத்துக்கருப்பு இப்படிப் பேரெல்லாம்” என்ற நாகம்மாவை வச்ச கண் மாறாமப் பார்த்துக்கொண்டிருந்தான் நவீன். 


 “எவ்ளோ விசயம் தெரிஞ்சு வச்சிருக்கம்மா. சூப்பர்ம்மா. அப்படியே உன் பேருக்கும் ஒரு விளக்கத்தைச் சொல்லிடும்மா. யார் கேட்டாலும் இனி நல்லா பதில் சொல்லிக்கிறேன்” என்றான் நவீன். “பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்” என்ற பழமொழியைக் கேட்டருக்கிறயா?” என்றாள் நாகம்மா. “ம்‌ம்‌ம் கேட்ருக்கேன்” என்றான் நவீன். “ஆதி மனுசன் நல்லா பலசாலியா இருந்தான். வேட்டைக்குப் போற வழில ஏதாவது பாம்பு கடிச்சாக்கூட அதுக்குப் பசிக்கும்போல. அதான் கடிக்குதுன்னு நெனச்சிட்டே நடந்து போவான். கொஞ்ச தூரம் போன பின்னாடி விஷம் தலைக்கேறி உயிர் போயிரும் கடிச்சவனுக்கு. கூடப் போற மத்த ஆளுங்க எல்லாம் அவன் தூங்குறான்னு நெனச்சு விட்டுட்டுப் போயிடுவாங்க. கொஞ்சநா கழிச்சு அந்த உடம்பு கழுகு கொத்தி புழு ஏறி கெட்ட வாடை அடிக்கும். அந்தச் சமயத்திலதான் பொதைக்குற வழக்கமே வந்திருக்கும்னு சொல்றாங்க. சரி. விசயத்துக்கு வாரேன். பாம்புக்குப் பிடிச்ச உணவு கறையான் தான். கறையான் புத்துக்குள்ள போயி கறையானை நல்லாத் தின்னுட்டு, புத்தை விட்டு வெளில வர நினைக்குறப்ப பாம்புக்கு வயிறு முழுக்க இரை இருக்குற தன்னோட உடம்பைத் தூக்கிட்டு வர முடியாம தத்தளிக்கும். அப்போ படமெடுத்து ஆடும். அதைப் பார்த்து பயந்த ஆதி மனுசன் புத்துக்கு முன்னால இறைச்சி, பால் இதெல்லாம் வச்சு “ஏய் பாம்பு, இதெல்லாம் உனக்குத்தான். நல்லாச் சாப்பிடு. எங்க பக்கத்துக்கு வராத”ன்னு சொல்லி வேண்டிக்குவாங்க. அப்படிப் பாம்புக்குப் பயந்த மக்கள், பாம்பால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களோட குழந்தைகளுக்கு வச்ச பேரு தான் நாகம்மா, நாகப்பன், பாம்புலம்மா, பாம்புலய்யா இதெல்லாம். இனிமே கண்ணன் கிண்டலா சொன்னா என்னோட அம்மா பேருக்கு இதுதான்டா விளக்கம்னு சொல்லுடா. கேட்டுக்குவான். கிண்டலடிக்கமாட்டான்” என விளக்கம் சொன்னாள் நாகம்மா. “இனிமேல் அவன் நக்கலடிக்கட்டும். அப்புறம் பார்த்துக்கிறேன்ம்மா” எனச் சொல்லிக்கொண்டே கிளம்பினான் நவீன். கிளம்பியவனிடம் “லேய், உங்கப்பா பேருக்கு என்ன விளக்கம் தெரிஞ்சுக்க. இங்க வா” என்றாள். “எனக்குத் தெரியும்மா. எங்க சார் சொன்னார்” என்றவுடன் அவள் “என்ன சொன்னார் உங்க சார்? எங்க சொல்லு பார்ப்போம். அவர் சொன்னது சரியா இல்லையான்னு சொல்றேன்” என்றாள் நாகம்மா.

 “ஆதி காலத்தில் வாழ்ந்த மனுசங்க எல்லாம் குழுவாக வாழத் தொடங்கியபின்னர் அவர்களுக்குள் எழும் சச்சரவுகளைத் தீர்க்க, பிற குழுவுடன் உண்டாகும் சச்சரவுகளைத் தீர்க்க தங்கள் குழுவில் தலைவன் ஒருவனைத் தேர்ந்தெடுத்தனர். குழுவினர் அனைவரும் அவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டனர். சில சமயங்களில் தனது குழுவைக் காக்க, பிற குழுவோடு சண்டையிட்டு இறந்தும் போயிருக்கிறான். தம்மை வழிநடத்தியவன் என்பதாலும் தம்மை ஆண்ட, காத்த தலைவன் என்பதாலும் தான் தம்மில் வாழ்ந்த அவனுக்கு ஆண்டவன் என்று பெயர் வந்ததாம். சார் சொன்னார். நம்ம குடும்பத்தைக் காப்பவராக அப்பா இருப்பதால் அப்பாவுக்கும் ஆண்டவன் என்ற பேர் பொருத்தம் தானம்மா?” என்றான் நவீன். 

 “அப்பா மட்டும் தான் வீட்டைக் காப்பாத்துறார். நானெல்லாம் காப்பாத்தலயாடா?” என்றாள் நாகம்மா. “எனக்கு எப்பவும் அப்பா, ஆண் ஆண்டவர். அம்மா, பெண் ஆண்டவர்” என்றவனின் நெற்றியில் முத்தமிட்டு மகிழ்ந்தாள் நாகம்மா.

 விரைந்து கிளம்பியவன் சட்டென நின்று “எல்லாருக்கும் சாமிப் பேர் இருக்கு. எனக்கு ஏன்ம்மா நவீன் என்ற பெயர்?” என்றவுடன் நாகம்மா சொல்லத் தொடங்கினாள் “என்னோட அப்பா, அம்மா, அவங்களோட அப்பா, அம்மா எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை இருந்துச்சு. வச்சாங்க. நான் உனக்கு கொஞ்சம் நவீனமா பேர் வைக்கணும்னு தோணுச்சு. அதான் நவீன் என்று பேர் வச்சிட்டேன்” என்று சொல்லியதைக் கேட்டபடி விளையாடச் சென்றான். சுவற்றில் தொங்கவிடப்பட்டிருந்த நாகம்மா ஆண்டவர் திருமணத்தின்போது வழங்கப்பட்ட பெரியார் புகைப்படத்தில் ஒரு கம்பீரம் தோன்றி மறைந்தது அப்போது.



Friday 22 October 2021

வீட்டின் வேர்கள்



வீட்டின் வேர்கள்

 

   வீட்டிற்குச் செல்வதற்கான மணிச் சத்தம் “டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்ங்” என்று அடிக்கத் தொடங்கியதும் பிள்ளைகள் அனைவரும் தங்கள் பைகளைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு சந்தோசமாகக் கிளம்பத் தொடங்கினர்.  கவின் ஐந்தாம் வகுப்பும், தனு இரண்டாம் வகுப்பும் அதே பள்ளியில் தான் படிக்கின்றனர். இருவரும் வகுப்பறையிலிருந்து வெளியேறி ஒன்றாகச் சேர்ந்த பின்னர் வீடு நோக்கிக் கிளம்பினர். தெருவின் ஒரு ஓரமாக, இருவரும் பேசிக்கொண்டே வீடு வந்து  சேர்ந்தனர்.


 வீட்டிற்குச் சென்று புத்தகப் பைகளை வைக்கவேண்டிய இடத்தில் வைத்துவிட்டு கைகளைக், கால்களைக் கழுவிவிட்டு வந்தனர் கவினும் தனுவும். சற்று நேரத்தில் அவர்களுக்கு மாலை நேரச் சிற்றுண்டியாக பால் கொழுக்கட்டையைச் செய்து பாட்டி எடுத்து வந்து தந்தார். வாரத்தில் இப்படி இரண்டு மூன்று நாட்கள் அதிரசம், முறுக்கு, புட்டு, கொழுக்கட்டை இப்படி ஏதாவது ஒன்றை பாட்டி செய்து தருவார். அதை மகிழ்வோடு உண்டபின்னால் வீட்டின் முன்புறம் சென்று விளையாடத் தொடங்கினர். அப்போது தான் எதிர்வீட்டில் வசிக்கும் கண்ணன், அமுதாவின் பிள்ளைகளான வாசனும் ஜோதியும் பள்ளியிலிருந்து வந்தனர். இருவரும் கவினும் தனுவும் படிக்கும் அதே வகுப்பு தான் படிக்கின்றனர். அதே பள்ளியில் தான் படிக்கின்றனர். ஆனாலும் இவ்வளவு தாமதமாக வருவதற்குக் காரணம் என்ன?


 கண்ணனும் அமுதாவும் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்ப மாலை 7 மணி ஆகிவிடும். அது வரை வீட்டில் வாசனும் ஜோதியும் தான். அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். சில சமயம் காயம் ஆகும் அளவுக்குக் கூட சண்டை போடுவார்கள். பெரிய காயம் என்றால்  வேலை முடித்து வந்தவுடன் அம்மாவோ அப்பாவோ அவர்களை மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு ஓடுவார்கள். சண்டை போட்டுக்கொண்டாலும் அம்மா அப்பா வந்தவுடன் அவர்கள் முன்னால் எதுவுமே தெரியாதது போல இருப்பார்கள். அம்மா காலையில் சமைத்த பாத்திரங்களையும், பயன்படுத்திய பொருட்களையும் கழுவி எடுத்துவைப்பாள். இரவுச் சமையலை செய்யத் தொடங்குவாள். அப்பா கடைக்குச் சென்று வருவார். அம்மாவிற்கு சமைக்கும்போது உதவிடுவார். இருவரும்  கொஞ்ச நேரம் பிள்ளைகளிடம் பள்ளியில் என்ன நடத்தினார்கள் என்பதைக் கேட்டுவிட்டு உறங்கிவிட்டு மீண்டும் அதிகாலையில் எழுந்து சமையலை முடித்து, பிள்ளைகளைச் சாப்பிட வைத்துவிட்டுக் கிளம்புவார்கள். சில நேரங்களில் கொஞ்சம் தாமதமானால் வாசனையும் ஜோதியையும் சாப்பிட்டுப் பள்ளிக்குச் செல்லச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுவார்கள். பரபரப்பான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.  இது ஒரு தொடர்வேலை போல தினந்தோறும் நடந்துகொண்டே இருக்கும்.  இந்த வேலைகளில் எதுவாவது ஒன்று தடைபட்டாலும் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் இடையே சண்டை வந்துவிடும். 


 ஆனால் கவின், தனு வீட்டில் இது போன்ற பிரச்சனையில்லை. மாலை நேரங்களில் தன்னால் இயன்றவரை பாட்டி, வீடு வாசலைச் சுத்தம் செய்து வைப்பார். தாத்தா, தன்னுடைய பேரக் குழந்தைகளுக்கு சிலம்பாட்டம் கற்றுத் தருவார். ஒயில், தேவராட்டம் போன்ற ஆட்டங்களைக் கற்றுத் தருவார். காலாற இருவரையும் அழைத்துக்கொண்டு வயல்பக்கம் அழைத்துச் சென்று வருவார். அவர்களை வீட்டுப்பாடம் செய்யச் சொல்லி அருகில் இருந்து கவனித்துக்கொள்வார். மில்லில் இருந்து பணி முடித்து பெரும்பாலும் எட்டு மணிக்கு மேல் தான் கவின், தனுவின் பெற்றோர் வீட்டுக்கு வருவார்கள். வந்தவுடன் விரைவாக சமையலை முடிப்பாள் அம்மா. பிள்ளைகளின் படிப்பைக் கவனிப்பார் அப்பா. ஒருவேளை அவர்கள் வரத் தாமதமானாலும் பாட்டி சமையலை முடித்து வைத்துவிடுவாள். ஆனால் ஒரு சில நாட்களில் வாசன், ஜோதியின் அம்மாவும் அப்பாவும் தாமதமாக வீட்டுக்கு வரும்போது சாப்பிடாமல் கூட அவர்கள் உறங்கியிருப்பார்கள். கவினுக்கும் தனுவுக்கும் அதுபோல பட்டினியால் உறங்கும் சூழல் இதுவரை வாய்த்ததில்லை.


 கவினும் தனுவும் இரவில் சாப்பிட்டு முடித்தவுடன் பாட்டி அருகில்தான் பெரும்பாலும் படுப்பது வழக்கம். இருவரின் படிக்கும் ஆர்வத்தை மேலும் வளர்க்குமாறு தூங்கும்வரை பாட்டி அவர்களுக்குக் கதைகள் கூறுவாள். பழமொழிகள் கூறுவாள். திருவிழாக்கள், கோவில், குளம் போன்ற தகவல்களைக் கூறுவாள். மூலிகைச் செடிகள் பற்றிக் கூறுவாள்.  இதையெல்லாம் கேட்டுக்கொண்டுதான் கவினும் தனுவும் தினந்தோறும் உறங்குவார்கள்.  


 வாசன், ஜோடியின் குடும்பத்தை விட ஏழ்மைக் குடும்பம்தான் கவின், தனுவின் குடும்பம். அவர்களின் பெற்றோரை விட கவின், தனுவின் பெற்றோர்களின் படிப்பும் கம்மி தான். ஆனால் முறையான வளர்த்தலால், கண்காணிப்பால், திட்டமிடலால் கவினும், தனுவும் படிப்பில் முதலாக வந்தனர். படிப்பு என்பது வாசனுக்கும் ஜோதிக்கும் பெரிய ஒரு விசயமாகத் தெரியவில்லை. இதை மாற்றக்கூட வாசன், ஜோதியின் அம்மா, அப்பாவிற்கு நேரமில்லை. ஒருநாள் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கலந்துகொண்டு கவினும் தனுவும் முதல் இடத்தைப் பிடித்தபோது பள்ளியே அவர்களை வாழ்த்தியது. தலைமையாசிரியர், ஆசிரியர்கள் அவர்களைக் கொண்டாடினர். அதை தற்செயலாகத் தெரிந்துகொண்ட வாசனின் அப்பா, வாசனையும், ஜோதியையும் திட்டினார். “அவர்களைப் பாருங்கள். எப்படி படிக்கிறார்கள்? எவ்வளவு திறமையாக விளையாடுகிறார்கள்? அவர்களின் வகுப்பு தானே நீங்களும். உங்களால் ஏன் முடியவில்லை” எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் திட்டினார். பதில் சொல்லத் தெரியாமல் இருவரும் திருதிருவென்று அமர்ந்திருந்தனர். 


 மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. காலை உணவை முடித்துவிட்டு விளையாடிக்கொண்டு இருந்தார்கள் வாசன், ஜோதி, கவின் மற்றும் தனு. அப்போது எதிர்பாராமல் தனு கீழே விழுந்துவிட்டாள். அதனைப் பார்த்துக்கொண்டிருந்த பாட்டி சட்டென வீட்டிற்குள் சென்று மஞ்சளை எடுத்துவந்து காயம் பட்ட இடத்தைத் துடைத்துவிட்டு அவ்விடத்தில் வைத்துவிட்டாள். இரண்டு நாட்களில் காயம் ஆறிவிட்டது. வாசனுக்கும் ஜோதிக்கும் இது ஆச்சர்யமாக இருந்தது. எப்படி இதெல்லாம் பாட்டிக்குத் தெரிந்தது? பாட்டி மருத்துவரா? நமது வீட்டைப் போலவேதான்  இங்கும் இருக்கிறார்கள். ஆனால் எப்படி கவினும் தனுவும் சிறப்பாகப் படிக்கிறார்கள். புத்திக் கூர்மையுடன் இருக்கிறார்கள், எப்படி சிறப்பாக விளையாடுகிறார்கள் அவர்கள் தாத்தாவுக்கு மட்டும் எப்படி இவ்வளவு கலைகள் தெரிகிறது? என்றெல்லாம் சந்தேகம் வந்துவிட்டது. அந்தக் கேள்வியை நேரடியாக கவினிடமே கேட்டுவிட்டான் வாசன்.

 அதற்கு கவின், “என்னுடைய அம்மா, அப்பாவின் பல வேலைகளில் எங்கள் தாத்தாவும் பாட்டியும் அவர்கள் இருக்கும்போதும் இல்லாதபோதும் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு மட்டுமல்லாமல் எங்கள் பெற்றோருக்கும் வழிகாட்டுகிறார்கள். அம்மா அப்பா வேலைக்குச் செல்கிறார்கள். சம்பாதிக்கிறார்கள். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எப்போதாவது ஏதாவது சண்டை வந்தால் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துத் தீர்த்துவைக்கிறார்கள்.  எங்களுக்கு நன்னெறிக் கதைகள் சொல்கிறார்கள். படிப்பதன் அவசியம் சொல்கிறார்கள். தாத்தாவும் பாட்டியும் வாழ்வில் தாங்கள் கற்ற அனுபவங்களை எங்களுக்குச் சொல்லித் தருகிறார்கள். எங்களுக்குப் பாதுகாவலாக இருக்கிறார்கள். மொத்தத்தில் அவர்கள் எங்களுக்கு வாழ்க்கையைக் கற்றுத் தருபவர்கள். ஒரு வார்த்தையில் சொல்வதானால் எங்களுடைய தாத்தாவும் பாட்டியும் எங்களுக்கு இன்னொரு அப்பா அம்மா. அவர்கள் இல்லாமல் எங்கள் படிப்போ விளையாட்டோ இவ்வளவு சிறக்க வாய்ப்பில்லை” என்று சொல்கிறான். எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்தான் வாசன்.


 அன்று இரவு வாசனும் ஜோதியும் அவர்களின் அம்மா, அப்பாவிடம் சரியாகப் பேசவில்லை. சாப்பிடவும் இல்லை. “ஏன் இப்படி இருக்கிறீர்கள்?” எனக் கேட்டதற்கு எங்களுக்கு இன்னொரு அப்பா அம்மா வேண்டும் எனச் சொல்கிறார்கள். “என்ன இது முட்டாள் தனமான விருப்பம்?” அது எப்படி முடியும்? என வாசனின் அப்பா கோபப்படுகிறார். அப்போது “அந்த இன்னொரு அப்பா அம்மா வேறு யாருமில்லை. ஏன் எங்க தாத்தா பாட்டியாக இருக்கக்கூடாது... கவின், தனுவின் தாத்தா பாட்டியைப் போல” என ஒரே குரலில் சொல்கிறார்கள். இதைக் கேட்டவுடன் இவ்வளவு நாள் தாத்தா பாட்டியை, பேரக் குழந்தைகளோடு இருக்கவிடாமல் ஊரில் தனியாக விட்டு வந்துவிட்டோமே என்ற உண்மையைப் புரிந்துகொண்டும், குற்ற உணர்வோடும் “சரி, கவலைப் படாதீர்கள், நாளை எல்லோரும் தாத்தா பாட்டியைக் கூப்பிட ஊருக்குப் போகலாம், இப்போ சாப்பிடுங்க” என்று கூறுகிறார் வாசனின் அப்பா மகிழ்வோடு. 


Thursday 14 October 2021

அட்டு பிகருக்கு வந்த வாழ்க்கை...!

 அட்டு பிகருக்கு வந்த வாழ்க்கை


#சிறுகதை


யாழ் தண்விகா


 பெரு மழை பொழிந்து கொண்டிருந்தது. தட்டுப்படும் எல்லா வீடுகளின் கதவுகளும் அடைக்கப்பட்டிருந்தன. காற்றின்றிப் பெய்யும் மழையாதலால் ஜன்னல்கள் திறந்திருந்தன. யாரும் எட்டிப் பார்க்கவில்லை எனினும் ஜன்னல் வழியாக வீட்டில் உள்ள அனைவரையும் மழை பார்த்துக்கொண்டிருந்தது. யார் நனைந்தாலும் மழைக்குக் குளிர் அடிக்கப் போவதில்லை. குளிர் வேண்டாம் என்ற மனநிலை ஒருபுறம் இருந்தாலும் காய்ச்சல் வரும் என்ற பயமே மனிதர்களை வீட்டுக்குள் முடக்கிப் போட்டிருந்தது. நின்று ஆடிக்கொண்டிருந்த மழைக்குள் குடையோடு ஒருத்தி வந்துகொண்டிருந்தாள். மழைக்கு முன்னால் நெய்த ஒப்பனை மழையால் இன்னும் மிளிரத் தொடங்கியிருந்தது அவளில்.


 வலது கையில் அவள் பிடித்திருந்த வண்ண நிற குடையையும் அவளையும் பார்க்கும்போது பட்டாம்பூச்சி ஒன்று  பூவை வாயால் கவ்விச் செல்வது போலிருந்தது.. இடது கை விரல்களால் மடிப்பு வைத்துக் கட்டியிருந்த அப்புடவையை கரை நனைந்து விடாமல் மையமாகப் பிடித்து தூக்கிப் பிடித்தபடி வந்தாள். பூனை தன்னுடைய குட்டியைக் கவ்விக்கொண்டு செல்வது போல என்று இதைச் சொல்லிக் சொல்லலாம் இதுவரைதான் நினைவில் இருக்கும்படியான காட்சிகள்.  இதனைத் தொடர்ந்து வருவதை அவனின் கண்கள் பார்க்கப் பார்க்க மழைக்காமத்தில் பூத்த மனசு மீண்டும் மீண்டும் பிரதிகளாக எடுத்து உயிரின் சுவர்கள் அனைத்திலும் ஆணியடித்து மாட்டிக்கொண்டே இருந்தது.  


 மழைக்கு எவ்வளவு இரக்கம் இருக்கும் என்பது அவளை அவள் விருப்பம் இல்லாமல் தொடக்கூடாது என்றெண்ணும் மழையின் விருப்பத்தின் பக்கமிருந்தே அறியலாம். ஒரு தேவதைக்கான பாதை என்று அந்தத் தெருவில் இருந்திருந்தால் இதோ இவன் இப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்திருக்க முடியாது. வெறுமனே அதனை வேடிக்கை என்று எப்படிச் சொல்வது? தரிசனம் தான் அது.


 முழங்காலுக்குச் சற்றுக் கீழ்வரை மட்டுமே புடவை மறைத்திருந்தது. மீதப் பக்கங்களில் அவள் ஒளிர்ந்தாள். மென் மஞ்சள் பூசிய அக்கால்களில் மழைத்துளி ஒவ்வொன்றும் நட்சத்திரப்பூக்களாக மாறி தன்னுடைய அர்ச்சனையை தூவலாகப் பதிவுசெய்துகொண்டிருந்தது. வழுவழுவென்ற அக்கால்களில் வழிந்தோடிய நீரில் குளிக்கும் மீன்கள் பாக்கியம் பெற்றவை. மெல்லக் கூடும் நீரில் அடிக்கும் அவளின் அலை எப்படியும் இந்நீரை கடலில் சேர்த்துவிடும்.


 கால்களின் கூச்சம் சட்டெனக் கூடு பாய்ந்து மூளைக்குள் மின்னலைப் பாய்ச்சுகிறது. யாரோ தன்னைப் பார்க்கிறார்கள் என்பதை உணர்த்தும் சமிக்ஞை அது. தலை சாய்ந்து தலையில் ஈரம் பட்டுவிடாமலிருக்க வந்த குடை மெல்லத் தலை நிமிர்கிறது. கண்களை மழைக்கண்களின் ஊடே நனைந்துவிடாமல் அவளின் கால்களில் ஊடுருவவிட்ட அவனுக்கு அவளின் முகம் மெல்ல மெல்லத் தெரிகிறது. விதையிலிருந்து முட்டி மோதி வெளிவந்து தனக்கான காற்றைச் சுவாசிக்கும் தளிரின் மென்னிலைகள் இமைகளாகி காற்றைக் கண்ணடிக்கிறது. மழை தாண்டி ஓடும் கண்கள் இதோ இங்கிருந்து பார்க்கிறானே இவனின் கண்களை கண்விலங்கிட்டுக் கைப்பற்றுகிறது. குற்றம் தாளாமல் கண்களைத் தரை நோக்கித் தாழ்த்திக்கொள்வதா? இவளைக் காண எனக்காக  நேர்ந்துவிடப்பட்டிருக்கும் இந்த மழை நாளை இவள் என்ன செய்தால் என்ன என நேரடியாகப் பார்த்துக் கொள்வதா? என்றெல்லாம் குழப்பம் இல்லை. நேர் பார்வைதான். மின்னல் மோதிக் கொள்வது மழைக்குள் சாத்தியம் தானே. 


  “இப்படி மழைக்குள்ள நடக்குற பொம்பளைய உத்துப் பார்க்குறயே, அசிங்கமாத் தெரியலையா?” தேவதை உதிர்த்த முதல் வார்த்தை அதுதான். 

 “ம்ஹூம் அழகாத்தான் தெரிஞ்சது” என்ற பதில் மனசுக்குள்ளிருந்து ஓடி வந்து நாக்கின் நுனியில் சிரிப்பாய் மாறிவிட்டது.

 “ஏய், உன்னைத்தாண்டா என்னடா சிரிப்பு? பிஞ்சிடும்” என்றபோது இன்னும் கொஞ்சம் இவனை நெருங்கிவிட்டிருந்தாள். 


 யார்டா இவள்? இவ்வளவு துணிச்சல் இவளுக்கு எப்படி? எந்த வெண்ணையாக இருந்தால் என்ன? என்றபடி கொஞ்சம் நன்றாகவே அவளைப் பார்த்தான். வாயில் கைகளை வைத்துக்கொண்டான். கண்களில் ஒரு ஆச்சர்யத் தேர் ஓடத் தொடங்கியது. இவளா? சின்ன வயதில் தலை முடியை ஒழுங்காக் கட்டத் தெரியாமல் தெருவே ஓடித் திரிவாளே. மூக்கு வழியுறத சரியாத் தொடைக்காம அதுக்காகப் பார்க்கும் பலரிடமும் முகச்சுழிப்பைச் சம்பாதிப்பாளே இவளா. சரியாகக் குளிக்காமல் கரேரென கை காலில் தொன்னி தொன்னியா வந்திருக்கும். அதுக்காகவே இவளைச் சொறிச்சி என்று பட்டப்பெயர் வைத்தோமே இவளா இவ்வளவு பேசுகிறாள்?


 “அடியே நதியா! நல்லாருக்கியா?” நினைவிலிருந்து அவனாகவே வெளியில் வந்து கேள்வியையும் கேட்டுவிட்டான் அவளிடம்.

 “டேய், என்னடா பண்ற? இப்போ வரைக்கும் இந்த மாதிரி பழக்கத்தை நீ விடலையா? எப்படிப் பார்க்குற? எருமை மாடே. அதும் கல்யாணம் முடிஞ்சவளை” என்றாள் நதியா.

 “கல்யாணம் முடிஞ்சதா? எப்ப முடிஞ்சுச்சு? நான் கொஞ்சநாள் ஊரில் இல்ல. இப்போதான் கொஞ்ச நாளுக்கு முன்னால ஊருக்கு வந்தேன். உன்னை விசாரிக்குற அளவுக்கு நீ இல்ல. அட்டு பிகரு. கோவிச்சுக்காத. எதுக்கு விசாரிச்சுட்டு? அதனால விசாரிக்கல. நானும் கார் எடுத்துட்டு எவன்டா வாடகைக்குக் கூப்பிடுவான்னு பாத்துட்டே திரியுறேன். உன்னை இன்னைக்கு பார்ப்பேன்னு நெனைக்கவே இல்ல. எப்படிடி இவ்வளவு அழகா மாறுன? கொஞ்ச நேரத்துல என்னென்னமோ உள்ளுக்குள்ள ஆகிடுச்சு” பேசிக்கொண்டே போனான்.


 நதியா, வாயைப் பொத்து என்பதுபோல கையை வைத்துக் காண்பித்துவிட்டு, “இப்போ நல்லாருக்கேன்ல. போதும். அந்தாளு வந்துதான் வீட்டில் விட்டுட்டுப் போச்சு. பிசினஸ் பண்றார் சென்னைல. இன்னும் மூணு நாள் இங்கதான் இருப்பேன். நாளை பேசுறேன். சரி என்னோட நம்பரைக் குறிச்சுக்க. என் செல் வீட்டுல கிடக்கு. வாரேன்” என்றபடி கிளம்பினாள்.


 வெற்றசைவாகத் தெரியவில்லை அவளின் புறப்பாடு. ஒவ்வொன்றும் அழகு என்பதை பார்க்கும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொன்றாக வெளிப்படுத்தும் பணியைச் செய்தால் என்னதான் பண்ணுவது? பின்னழகும் ஆட்டிவைத்தது புத்தியை. நீர் தெளிக்கப்படும் ஆடாகத் தலையை ஆட்டி கண்ணை மூடிப் பெருமூச்சும் விட்டுக்கொண்டு காருக்குள் ஏறி அமர்ந்தான் ராஜா.


 மூன்று நாள் ஓடியதே தெரியவில்லை. தினமும் நதியா அழைப்பாள். பேசுவான். வாட்சப்பில் மெசேஜ் பரிமாற்றம் ஓடியது. காலை வணக்கம் தொடங்கி குட் நைட் என்பது வரை நாளெல்லாம் தமதாக்கிக் கொண்டார்கள். நினைவுகளைப் பரிமாறும் புகைப்படங்கள் பகிர்ந்துகொண்டார்கள். மெருகேறிப் போய் இதற்குமேலும் கூடுவதற்கு அழகு இல்லை என்ற பூரணத்துவத்தில் இருந்தாள் நதியா. கழுத்தில் கைகளில் விரல்களில் தங்கம் ஜொலித்தது. யாரிடமும் பகை வளர்க்காமல் புன்னகைத்து அன்பை மட்டுமே தனக்கான சொத்தாகச் சேர்த்து வைத்திருந்தான் ராஜா. அதனால் என்ன பிரயோஜனம்? ஒன்றுமில்லை என்று தெரிந்தாலும் கார் ஓட்டி தன் பிழைப்பைப் பார்த்துவந்தான் அவன்.


 நான்காம் நாள் காலை நதியா அழைத்தாள். வழக்கம் போல பேச்சில்லை ராஜாவிடம். கொஞ்சம் மந்தமாக “ம்ம் சொல்லுடி” என்றான். “கார் எடுத்திட்டு வா. திண்டுக்கல் வரை. அந்தாளு என்னை ட்ரைன்ல வரச்சொல்றான். ரயில்வே ஸ்டேஷன் போகணும்” என்றாள் நதியா. எதையும் ராஜாவால் நம்ப முடியவில்லை. உடனே கார் எடுத்துச் சென்றான் நதியாவை அழைக்க. அவள் கிளம்பி தயாராகாவே இருந்தாள். “நம்ம ராஜா தம்பியா? சரியா. வண்டிய வெரட்டாம மெதுவாப் போய் ட்ரைன் ஏத்தி விட்டுட்டு வாயா” என்றாள் நதியாவின் அம்மா. “அதெல்லாம் பொறுமையாத்தான் போவேன் அத்த. கவலைப் படாதீங்க” என்று புன்னகைத்தபடி பொருட்களை எடுத்து வைத்தான். நதியா பின் சீட்டில் அமர்ந்துகொண்டாள். கார் கிளம்பியது.


 ஓரிடத்தில் காரை நிறுத்தி தேநீர் அருந்தினார்கள். “அப்பப்போ பேசுடி. மறந்துடாத. உன்னை தொந்தரவு தார மாதிரி ஒண்ணும் பண்ணமாட்டேன். உன்னை ஏன்டா பார்த்தேன்னு இருக்கு. தப்பு தான். ஆனாலும் மனசெல்லாம் என்னமோ பண்ணுது. என்ன பண்ண. ஒண்ணும் புரியல” என்றான் ராஜா. 

 மீண்டும் பின்னால் சீட்டில் அமரப் போனவள் “வெறும் டயலாக் மட்டும்தான் போல. முன்னால வந்து உக்காருடி சொல்லணும் எரும” என்று சொல்லிக் கொண்டே முன்னால் வந்து அமர்ந்துகொண்டாள் நதியா. அவன் பேசப் பேச அவன் முகத்தையே பார்த்துக்கொண்டே வந்தாள். ட்ரைன் எப்போ எனக் கேட்க அவள் “நைட் எட்டரைக்கு” என்றாள். “அப்போ அதுவரை என்ன பண்ண?” என்றான் ராஜா. 

 “வா சொல்லித்தாரேன். ஆளைப் பாரு ஒன்னொன்னாக் கேட்டுக்கிட்டே இருக்குறத” என்றவளைப் பார்த்து “எதுக்கு இவ்வளவு சீக்கிரம் கிளம்புறன்னு வீட்டில் கேட்கலையாடி” என்றான் ராஜா. “திண்டுக்கல்லில் ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போயிட்டுப் போகணும் சொல்லிட்டேன்’ என்றாள் சிரித்தபடியும் கொஞ்சம் அர்த்தம் பொதிந்தபடியும்.


 ட்ரைனில் அனுப்பிவிட்டுத் திரும்பும்பொழுது சிலமணி நேரங்கள் அவளோடு மகிழ்ந்திருந்த விடுதி கண்ணை விட்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னே சென்று கொண்டிருந்தது. எவ்வளவு சாமர்த்தியமாகப் பேசுகிறாள். நடந்துகொள்கிறாள். சிரிக்கிறாள். ஆளே முழுவதுமாக மாறிவிட்டாள்.  அவளோடு ஒப்பிடும்போது இப்போது தான்தான் அட்டு பிகராக இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.  அவ்வளவும் அவனுக்கு இப்போதும் நம்பமுடியவில்லை. ‘”வாடகையா நெனைக்காத” எனச் சொல்லி சில பல ஆயிரங்களை அவனின் பாக்கெட்டில் வைத்து அவன் நெற்றியில், இதழில் முத்தமிட்டபின் திறந்த அறை மீண்டு அவன் கண்ணெதிரே வந்து போனது. அட்டு பிகருக்கு வந்த வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டான் தனக்கு முன்னால் இருந்த கண்ணாடியில். வருத்தமில்லை. அத்தனையும் அவள் தந்தது. அதை இப்படியும் சொல்லலாம். திருவிழா முடிந்தது. இனி மீண்டும் திருவிழா எப்போது வரும்?