Sunday 31 July 2022

கககபோ வட்டார வள மைய பயிற்றுநர்கள்


 

கககபோ வட்டார வள மைய பயிற்றுநர்கள்...


எண்ணும் எழுத்தும் என்ற அரசின் திட்டத்தை இதற்கு முன்னர் நடந்த பயிற்சியின்போது கலந்துகொள்ளாத ஆசிரியர்களுக்கு மற்றும் மேற்பார்வை செய்யச் செல்லும் வட்டார வள மைய பயிற்றுனர்களுக்கு பயிற்சியளிக்கும் வாய்ப்பு 27, 28, 29.07.2022 ஆகிய மூன்று நாட்கள் கிடைத்தது. இடம் உத்தமபாளையம், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், தேனி மாவட்டம். இதில் முதல் நாள் மற்றும் மூன்றாம் நாள் வட்டார வள மைய பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளிக்கும் வாய்ப்பு. பேருவகையாக அமைந்த அந்த வாய்ப்பின்போது அவர்கள் முன்னிலையில் வாசித்த என்னுள்ளக் கருத்துகளை முன்வைக்கிறேன். அவர்களிடம் சொல்லிவிட்டேன் கொஞ்சம் மொக்கையாக இருக்கும். ஆனாலும் பொறுத்துக்கொள்ளுங்கள் என்று. போலவே வாசிக்கும் தங்களிடமும்.


எண்ணும் எழுத்தும்...


@

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

ஔவையார் சொன்னது...

எஸ்எஸ்ஏ ஆபீசும் பிஇஓ ஆபீசும் உயிரெனத் தகும்

பி.வி.யார் சொல்வது... (P.VijayaRaj)


@

எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து 

அறிமுகம் செய்வது

எனக்கிடப்பட்ட பணி.

அதற்கு அதற்கு முன்னால்

என் பேச்சைக் கேட்கவிருக்கும் 

உங்களுக்கு thank பண்ணிவிட்டு

வழங்கப்போகிறேன்

சொற்கோர்வைகளால் ஆன

வாழ்த்துக்கனி...!


@

எங்கள் பணி என்ன?

மேற்பார்வை செய்பவர்களுக்கு

எண்ணும் எழுத்தும் திட்டத்தை

பள்ளிகளில் எப்படி மேற்பார்வை செய்வது

என்று பயிற்சி தரவேண்டும்...


இது கொடுப்பினையா...

கொடும் வினையா... தெரியவில்லை...


@

ஒரு கவிதையில்

“ம் என்றால் உள்ளதடி சொர்க்கம்

நீ இல்லையென்றால் இடுகாடு பக்கம்” 

என்பார் கவிப்பேரரசு வைரமுத்து.


அரசின் திட்டங்கள் எதைத்தான்

நீங்கள் முடியாதென்று சொன்னீர்கள்...

எண்ணும் எழுத்தும் மட்டுமல்ல

எப்போதும் எதற்கும் முடியும்

முடியும் முடியும் என்றே

சொல்லச் சொல்லி ஆசிரியர்களைச் 

செயலுக்குப் பழக்கப்படுத்தியவர்கள்

நீங்கள்.


ஆக மேலிடத்தின் 

கட்டளையை கச்சிதமாகக் கல்வித்துறைக்குள்புகுத்தும்

போர்க்களப் பணியாளர்கள் நீங்கள்.

ஆம்.

கககபோ வேறு யாருமில்லை 

நீங்கள் தான்.


@

கண் சிமிட்டுவதற்குக் கூட நேரமில்லை

பார்த்திருக்கிறேன் உங்கள் பணியை.

இந்தக் கல்வியாண்டின் குறுகிய காலத்திலேயே

ஒருபுறம் எஸ் எம் சி

ஒருபுறம் ஐ டி கே

ஒருபுறம் எண்ணும் எழுத்தும்

ஒருபுறம் கிட்பாக்ஸ் வழங்கல்

ஒருபுறம் ஆசிரியர் கையேடு வழங்கல்

மாணவர் பயிற்சி நூல் வழங்கல்

இப்படி எத்தனை எத்தனை…


திடீரென்று அழைப்பு வரும்

உடனே ஆன்லைன் மீட்டிங்

நிகழ்வு முடிந்த அடுத்த சில  நொடிகளில்

கையோடு அவரவர் சீட்டை எடுத்துவந்து

முன்னாடி அமருங்கள் என்று சொல்லி

சூப்பர்வைசர் நடத்தும்

அலர்ட் பண்ணுவதற்கான

ஆஃப்லைன் மீட்டிங்...


ஓடிக்கொண்டிருந்தால்தான் நதி

நின்றுவிட்டால் அது குட்டை...


பல பணிகளில்

பல பள்ளிகளில்

ஆசிரியர்களை இழுத்துச் செல்லும் நதி நீங்கள்.

பணிகளை பள்ளிகளை

தேங்கிவிடாமல் 

இழுத்துச் செல்லும் நதி நீங்கள்...


@

தேன், தேனீ, தேன்கூட்டைப் பற்றித் 

தெரியாதவர்களுக்கு

தேடித் தேடி விளக்கம் தரத் தேவையில்லை.

நீங்கள்தான் தேனீக்கள்

ஒவ்வொரு பள்ளியிலும், அதன் வளர்ச்சியிலும்

நீங்கள் காட்டும் அக்கறை, டேட்டா தான் 

தேன்.

கொண்டு வந்து ஒப்படைக்கும் 

வட்டார வள மையம் தான்

தேன்கூடு.


அவ்வளவு எளிதாகத் தேன் கிடைத்துவிடுகிறதா?

எத்தனை எத்தனை வலிகளுடன்தான் 

உங்கள் ஓட்டம்?


எவ்வளவு அடிச்சாலும் தாங்குறோம்

என ஒவ்வொரு பள்ளியும் புலம்பும்போது

பல பள்ளிகளைத் தாங்கி நிற்கும்

உங்களை எப்படிப் பாராட்டுவது?


@

பூ ஒன்று புயலாவதைக் காணத்தான்

அவ்வப்போது பயிற்சி நாட்கள்.

ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம்

என்பது போல

பெரியகுளம் ஒன்றியமே அதற்குச் சாட்சி...

ஒருவர் புத்தகத்தோடு இருப்பார்

ஒருவர் புத்தகமாகவே இருப்பார்

ஒருவர் அலட்டிக்கொள்ளவே மாட்டார்

ஆனால் மணிக்கணக்கில் அசரடிப்பார்

ஒருவர் சிரித்தபடி உரையாற்றுவார்

ஒருவர் சிந்தித்தபடி செயலாற்றுவார்

இப்படி ஆண் பயிற்றுநர்கள்


பெண் பயிற்றுநர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம்

களம் எதுவென்றாலும்

சிகர இலக்கு நோக்கிப் பயணிக்க 

சிரத்தையுடன் சிரித்த முகத்துடன்

ஆசிரியர்களை அழைத்துச் செல்லும் 

சிங்கப்பெண்கள் அவர்கள்.


@

எங்கள் பள்ளிக்குக் கிடைத்த பயிற்றுநர்களின் 

கோபம் அறிவேன்.

வலிக்காமல் அடிப்பது போன்ற 

தாய்மை நிரம்பியவர்கள்.


அடுத்த முறை நான் வரும்போது

இதைச் சரிசெய்து வைத்திருக்கவேண்டும்

இதை எழுதி வைத்திருக்கவேண்டும்

இக்குழந்தைகள் இன்னும் முன்னேற்றம் கண்டிருக்கவேண்டும்

எனச் சற்றே குரல் உயர்த்திச் சொல்லுதல்தான்

அவர்களின் அதிகபட்சக் கோபம்.

அது மட்டுமா

பார்வையாளர் பதிவேட்டில்

நிறைகள் எழுதி குறைகளை லாவகமாக 

மறைத்தெழுதும் பண்பு.

எத்தனை எத்தனை உணர்வுகள் அதில்...

வருத்தம், எதிர்பார்ப்பு, ஆதங்கம், 

தனக்கு ஒதுக்கப்பட பள்ளியின் மீதான அக்கறை...

இன்னும் இன்னும்.


@

5 நாட்கள் பயிற்சி

எண்ணும் எழுத்தும்

இதற்கு முன்னும் நடந்தது.

உங்களால்தான் சாத்தியமானது 

சத்தியமானது அன்று.


வேளாவேளைக்குச் சிற்றுண்டி

தேநீர்

நேரக் கண்காணிப்பு

வகுப்பறைக் கண்காணிப்பு

ஒழுங்குக் கண்காணிப்பு

வருகைக் கண்காணிப்பு...

ஆயிரம் செய்தும்

இன்று காடு, மலை தாண்டி

ஒன்றியம் விட்டு ஒன்றியம்

அதே பயிற்சிக்கு

பாளையத்தில் பாவமாக அமர்ந்திருக்கும்

“உங்களைப் பார்த்தா பாவமாக இருக்கு”

இருக்கட்டும் இருக்கட்டும்

முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...


@

பாலுமகேந்திராவுக்குப் 

பாலா பயிற்சியளிப்பதா...

பாரதிராஜாவுக்கு

பாக்யராஜ் சொல்லிக்கொடுப்பதா…

அமீருக்கு

சசிக்குமார் வகுப்பெடுப்பதா...

மனம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது.

சூரியன் திரும்பும் திசையெல்லாம்

சூரியகாந்தி திரும்புதல் தானே 

உலக வழக்கம்...

ஆதலினால் சூரியன்களுக்கு

நான் பயிற்சியளிக்கப்போவதில்லை...

சொல்லிக்கொடுக்கப்போவதில்லை...

வகுப்பெடுக்கப்போவதில்லை...

தெரிந்தவை பகிர்கிறேன்.


வாய்ப்பிற்கு நன்றி...


யாழ் தண்விகா

Sunday 24 July 2022

பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு

 



பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு

புலியூர் முருகேசன்
தோழர் புலியூர்

சிறுகதைத் தொகுப்பு

ஆம்பிரம் பதிப்பகம்

விலை ரூ 150/= பக்கங்கள் 206

மொத்தம் 13 சிறுகதைகள். வாழ்க்கையிலிருந்தே இந்தக் கதைகள். கதைகள் என்பதை விட வலிகளை உண்டுபண்ணும் காட்சிகள் ஒவ்வொரு கதையிலும். பல கதைகளில் என்னைப் பொருத்திக்கொண்டு வாசித்தேன். கண்ணீர் மல்கச் செய்தன, துரோகங்களைக் காட்சிப்படுத்தின, அரசியல் கதை சொல்லியது, திருநங்கை குறித்த கதை என ஒவ்வொன்றும் சிறப்பு.

சங்கர் சங்கர் சங்கர் சங்கர் சங்கர் மற்றும் இன்னுமொரு சங்கர் முதல் கதை. கடன் கேட்டுச் செல்லும் ஒருவனை இந்தச் சமூகம் எப்படி எல்லாம் வதைக்கிறது, அவனை தனக்கு எவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறது என்பதைக் கூறுகிறது. நானும் பல சங்கர் பார்த்திருக்கிறேன். சங்கர் என்ற பெயரைப் பொருத்தித் திரியும் பலர் எனக்கும் நண்பர்களாக இருக்கிறார்கள். சொல்லி வைத்தாற்போல் தற்போது என்னிடம் பணம் இல்லை என்று கூறுவார்கள். தன்மானத்தை, மானம், ரோஷத்தை அடகு வைத்து அவர்களிடம் கூனிக் குறுகி நிற்கும்போது அவர்களின் பதில் எவ்வளவுக்கெவ்வளவு விட்டேத்தியாக இருக்கும் என்பதை இவ்வளவு தெளிவாக இதற்கு முன்னர் நான் வாசித்த கதைகளில் கண்டதில்லை. கடன் கேட்பவர்களை விட கடன் கொடுப்பவர்கள், கடன் கொடுக்க இழுத்த்டிப்பவர்கள் தங்கள் முகத்தைக் காண இந்தக் கதையை அவசியம் வாசிக்கலாம். 

செவப்புக்காய் வாயூறும் கதை தனித்துவம். ஊரே பெரும் களவாணித்தனம் செய்யும் சூழலில்,  அன்றாடங்காய்ச்சிக்கு மட்டும் பசி பூக்க அவர்கள் செய்யும் சிறு தவறுக்கும் பெறும் தண்டனை அளிக்கும் இந்த சமூகத்தின் மேல் காறித் துப்புகிறது கதை. கேரளா மது அடித்துக் கொல்லப்பட்டது நினைவுக்கு வந்துபோனது.

வட்டாரத்துக் கோடி கதை கண்ணீர் வரவழைத்தது. அன்பிற்காக இந்த உலகம் இயங்குதலை அழகாக, வலியோடு காட்சிப்படுத்தியுள்ளது. நாடார், பள்ளர் இரு சமூகத்தைச் சார்ந்த நண்பர்கள், அவர்கள் நட்பாக மாறிய கதை. அய்யாவுக்கும் ஆண்டிக்கும் பூத்த நட்பு இறப்பு வரை நீடிக்கிறது. அய்யாவு வீட்டில் அய்யாவு சாப்பிட்ட கும்பாவில் ஆண்டி உண்ணுவதும் ஆண்டி வீட்டில் பன்றிக்கறியை அய்யாவு உண்ணுவதும், தனது சமூகத்தால் ஆண்டி தூண்டிவிடப்பட்டு சிலம்பாட்டத்தில் அய்யாவுவை வெறி கொண்டு தாக்கும்போது அதை நட்பிற்காக நாசூக்காகக் கையாண்டு இறுதியில் இருவரும் கட்டி அணைத்துக்கொள்வது என்று கதை நட்பு பேசுகிறது. வறுமை அவர்களின் குடும்பத்தைச் சினம் கொண்டு தாக்கியபோதும் நீளும் நட்புக் காட்சிப்படுத்தல் அருமை.

வெயிற்கால மழைப்பூச்சி, பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு ஆகிய கதைகள் சங்கர மட கொலை, புலி பிரபாகரனின் இளவல் பாலச்சந்திரன் கொலை  குறித்துப் புனைவாகப் பேசுவது போல அதன் பின்னால் உள்ள அரசியல் பேசுகிறது.

சிங்கம் புராஜெக்ட் கதை பணம் வாங்கி கல்வியை விற்கும் நிறுவனங்களைச் சாடுகிறது. பகடியாகவும் அதே சமயம் மக்களை ஏமாற்றும் மாய வித்தைக்காரன் போலவும் இந்த நிறுவனங்கள் செயல்படுகிறது என்பதை தோலுரித்துக் காட்டுகிறது.

பாதி எரியூட்டப்பட்ட பாடலை மதுக்கோப்பையில் பருகுபவன் ஸ்வர்ணலதா பாடல்களை வியக்கும் தருணங்களைக் கூறிச் செல்கிறது ஒருபக்கம். மறுபக்கம் ஒரு எல் ஐ சி பாலிசி எடுக்க ஏஜெண்ட் படும் அவஸ்தையைப் பற்றிப் பேசுகிறது. கதையில் சொல்வது போல நிறுவனத்தில் உள்ளவர்கள் தனக்குப் பிடித்தவர்களிடம் சொல்லி தெரிந்தவர்களை தொடர்புகொள்ளச் செய்வது, தனக்குப் பிடித்த உறவுக்காரர்கள், சாதிக்காரர்களுக்கு கமிஷன் கிடைக்க வழி செய்வது, அரசுப்பணி செய்யும் ஒருவர் தன்னுடைய இணையரை ஏஜெண்ட் ஆக்கி அவர்களுக்கு உழைப்பது, முழுநேரப் பணியாக குடும்பத்தில் ஒருவர் ஏஜெண்ட் ஆகப் பணி செய்யும்போது அவர்களின் வாழ்வில் மண்ணள்ளிக் கொட்ட மேற்சொன்னவர்கள் போதாதா... 

ஐ சி ஐ சி ஐ வங்கிக்கு தினமும் வந்து திரும்புபவள் கதை ஊரில் மறக்கப்பட்ட நீலவேணி அக்காக்கள் பற்றிய கதை. பைத்தியம் என்று ஏறக்கட்டும் சமூகம் அவர்களின் பின்னால் உள்ள வலியை என்றாவது தேடியிருக்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லவேண்டும். இக்கதை அதைத் தேடியிருக்கிறது. கட்டிக்கொடுத்த இடத்தில் நிகழும் பாலியல் வன்முறை, அதனால் தீக்குளிக்கும் பெண், மாமனாரின் பாலியல் வக்கிரம் எனப் பேசுகிறது. கடைசியாக, கால மாற்றத்தில் பேருந்து நிலையம் இருந்த இடம் வங்கியாக மாற்றப்படும்போது இந்தச் சமூகத்தால் பைத்தியம் என்று கூறப்படுபவள் மேலும் எப்படி வஞ்சிக்கப் படுகிறாள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. 

நான் ஏன் மிகை அலங்காரம் செய்துகொள்கிறேன் கதை திருநங்கையாக உருமாறிய ஒருத்தியின் குடும்பத்தில் தந்தையானவன் சுப்பிரமணி என்ற பெயருடைய அவளுக்குச் செய்யும் பாலியல் கொடுமை பற்றியும், மூக்குத்தி காசி கதை திருநங்கை சந்திக்கும் பாலியல் வன்கொடுமை, அவற்றிற்கான எட்டப்படாத தீர்வு, எள்ளி நகையாடும் சமூகம் பற்றிப் பேசுகிறது.

குறிச் சிலம்பாட்டம் கதை நவீன உலகின் இயந்திரத் தனமான அலுவலக வேலைகள் அதற்காக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் குறித்துப் பேசுகிறது. யாகக் குண்டத்தில் பால் ஊற்றி எரிக்கப்பட்ட நைலான் கொசுவலை கதையும், நிலத்தின் அடியிலும் வனங்கள் பரவக்கூடும் என்ற இரு கதைகளும் நட்புத் துரோகம் குறித்துப் பேசுகிறது. அதிலும் நிலத்தின் அடியிலும் வனங்கள் பரவக்கூடும் என்ற கதை துரோகத்தின் உச்சம். எப்படிப்பட்ட சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை அறிய இக்கதை உதவும்.

ஒவ்வொரு கதை குறித்த சிறு குறிப்பாக வேண்டுமானால் இவை இருக்கலாம். ஆனால் கதை வாசிக்கும்போது அந்த வலியை நாம் அனுபவிப்பதுபோல மொழி நடை அமைந்திருக்கிறது. வாழ்க்கையைப் பதிவு செய்யும் கலையை நூலாசிரியர் அறிந்திருக்கிறார் என்று கூறுவதைவிட வறுமையை, மனிதம் விரும்பாத இந்த உலகின் முகத்தை, திருநங்கைகள் சந்திக்கும் பாடுகளை, ஒவ்வொரு மனிதனின் மறுமுகத்தை அதன் அதன் வலியை அவரவர் சொற்களில் பதிவுசெய்திருக்கிறார் தோழர். 

வாசிக்கவேண்டிய தொகுப்பு.
வாழ்த்துகள் தோழர்.

யாழ் தண்விகா


Thursday 21 July 2022

ஒரு சகலகலா சவரக்காரன் பராக்... பராக்...


ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்...

ப.நடராஜன் பாரதிதாஸ்

ஆதி பதிப்பகம்

பக்கங்கள் 96

விலை: ரூ 100


பேரக் கேட்டவுடனே சும்மா அதிருதில்ல என்பது போல் தொகுப்பின் தலைப்பே ஒரு கதாநாயகத் தன்மை அளித்துவிடுகிறது. கவிஞருக்கு வாழ்த்துகள்.

கவிஞர் EMS கலைவாணன் எழுதிய ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் தொகுப்பிற்குப் பின்னர் நாவிதர்களின் வாழ்க்கைப்பாட்டைக் கூறும் மற்றுமொரு கவிதைத் தொகுப்பு. சிறப்பாக அமைந்திருக்கிறது. இப்போதெல்லாம் ஒவ்வொரு கவிஞரும், ஒவ்வொரு கவிதையிலும் பூடகமாக சில விஷயங்களை உள்ளே வைத்து இருப்பார்கள் என நினைத்து அதை வாசித்து பொருளைப் புரிந்துகொள்ளும் முன்னர் தாவு தீர்ந்துவிடும் நவீன காலச் சூழலில் இதுதான் கவிதை. இதுதான் அது வெளிப்படுத்தும் கருத்து என்பதை வெட்டு ஒன்னு துண்டு இரண்டாக தொகுப்பில் வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர்.


பொதுவாக தொகுப்பை விமர்சனம் செய்யவோ மதிப்புரை செய்யவோ தொகுப்பிலிருந்து ஓரிரு கவிதைகளை மேற்கோள் காட்டுவது வழக்கம். இத்தொகுப்பைப் பொறுத்தவரை பெரும்பான்மைக் கவிதைகள் மேற்கோளாக எடுத்துக் கூறப்பட வேண்டியதாக அமைந்திருப்பது சிறப்பு. ஊரின் வரலாற்றைக் கூறி வளர்த்த பாட்டியிடம் நாவிதர்களுக்கான வரலாறை அறிய நினைக்கும்போது செத்துப் போனதால் அந்தப் பணியை தான் மேற்கொண்டிருப்பதாகக் கூறி தன்னுடைய முதல் கவிதையைத் தொடங்குகிறார். மனிதனை மனிதன் எப்போது மதிக்கவில்லையோ அப்போதே இங்கு பிளவுகளும் உண்டாகிவிட்டது. அதற்கு இனக்குழு, சாதி, மதம், பொருளாதாரம் எனப் பல காரணங்கள் இருக்கிறது. இருக்கிற எல்லாச் சாதியிலும் ஒவ்வொரு பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நாடகத்தில் துரியோதனன் பாத்திரத்தை ஏற்று நடிப்பவர் 

“அண்டம் நடுநடுங்க ஆகாசம் கிடுகிடுங்க

கஜபலம் புஜபலம் பொருந்திய 

என்னைப் பார்க்கின்ற தருணத்திலே

என் நாமதேயம் என்னவென்று தெரியுமாடா

அடேய்! காவலா” என்கிறார். 

அதற்கு கட்டியக்காரன் வேடம் தரித்த உள்ளூர் கோபால்,

“ஏன் தெரியாது

ஊடு ஊதா போயி செரச்சி

ஊருசோறு எடுத்துத் திங்கற

எங்க ஊரு அம்பட்டன்னு 

நல்லாவே தெரியுமுங்க” என்றவுடன் 

கூட்டமே கொள்ளென்று சிரித்தது.

“அன்றிலிருந்து வேசம் கட்டுவதே இல்லை அய்யா” என்று கவிதையை முடிக்கிறார் கவிஞர். சாதியின் எகத்தாளத்தை இவ்வளவு நேர்மையாகப் பதிவு செய்வது அரிது. ஆனால் அதனைச் செய்திருக்கிறார் கவிஞர்.


சுயசாதிப் பகடி பல கவிதைகளில் நர்த்தனம் ஆடுகிறது. ஊரில் யார் வீட்டில் இழவு விழுந்தாலும் ஊர் பண்டிதர் பழனி சாங்கியம் செய்தால் செத்தவன் சொர்க்கத்துக்குப் போவான் என நினைக்கும் ஊரில் 

“அவர் செத்த அன்னிக்கு

நாலு ஊரு நாவிதனும்

கோமணம் போறது தெரியாம குடிச்சிட்டு

நாலு ஊரு சாங்கியம் சடங்குகளையும் செய்து

நாசகோசம் செய்தார்கள்.

அய்யா கடைசில

சொர்க்கம் போனாரா

நரகம் போனாரான்னு தெரியல’’ என முடிகிறது கவிதை. நாங்க ஆண்ட சாதி, அப்படி இப்படி என்று பறைசாற்றும் வேளையில் (மருத்துவர் என்றும் நாவிதர் என்றும் அழைக்கப்படும் சமூகம் அப்படிச் சொல்லுவதற்கும் உண்மைக் காரணங்களை அடுக்கும் கவிதைகளும் உண்டு) ஒரு இறப்பின் வாயிலாக இன்றைய தலைமுறை குடிக்குள் சிக்கிக் கிடப்பதைக் காட்சிப்படுத்தியுள்ளார் கவிஞர்.


காலமெல்லாம் அடிமைப்படுத்தி வைத்திருந்த ஒருவனின் தலைமுறை அவனைப்போலவே இருக்கவேண்டும் என்று சட்டமா என்ன? அப்படி அடிமைப்படுத்தி வைக்க அவன்மேல் வைக்கப்பட்ட புனித பிம்பங்கள்தான் எத்தனை எத்தனை? தொடர்ச்சியாக பல பாராட்டுகளைச் சொல்லிக்கொண்டு வரும் கவிஞர் இறுதியாக 

“அடிச்சாலும் வாங்கிக்குவான்

புடிச்சாலும் தாங்கிக்குவான்

ஆந்தாந்து பேசிக்கொண்டார்கள்


அய்யாவின் சாவிற்குப் பிறகு

இப்படிப்பட்ட நாவிதனைத்தான்

தேடிக்கொண்டிருக்கிறது

எங்க ஊர்”

எப்படிய்யா கிடப்பான் இக்காலத்தில். கிடைக்கமாட்டான். கிடைக்கவேண்டிய கட்டாயமும் இல்லை என்றுணர்த்துகிறது வரிகள்.


எல்லா ஊரிலும் சுடுகாட்டில் குழி தோண்டுவது, கொள்ளிச் சட்டி உடைச்சு விடுவது, இறந்தவனின் வாரிசுக்கு மொட்டை எடுப்பது போன்ற பலரை நடத்தும் விதமும் அவர்களுக்கு கேட்கும் பணத்தைக் கொடுக்காமல் மிகச் சொற்பமான தொகையைக் கொடுப்பதும் சுடுகாடு வரை போய்வரும் நபர்களுக்கு நன்றாகவே தெரியும். அதை 

“கட்டளைக்காசு ஏத்திக் கொடுங்கன்னா

கட்டளைக்காசுக்கு கள்ளநோட்டுதான்டா அடிக்கணும்

என்றார்கள் ஊர்க்காரர்கள்.


பதினோராம்நாள் 

கல்தொரையில்

அய்யர் கேட்கும்போதெல்லாம்

கேட்டா கேட்ட காசு

அம்பது நூறுயென அவுத்து அவுத்து கொடுத்தார்கள்.

ஊர்ல கள்ளநோட்டு

அடிக்க ஆரம்பிச்சிட்டாங்கபோல” என்கிறார். ஆள் பார்த்து பட்டுவாடா செய்யப்படும் பணத்தைப் பற்றியும் அங்கு நாவிதர்களைப் படுத்தும்பாட்டையும் உள்ளது உள்ளபடியே கூறியுள்ளார் கவிஞர்.


ஊர்க்காரங்களுக்கு முடிவெட்ட ஆள் வேணும் என்பதற்காக சொல்லும் பசப்பு வார்த்தைகளை நம்பக்கூடாது என்பதை மகனுக்குக் கூறுகிறார் ஒரு தந்தை  இப்படியாக.

“நீதான் வெட்டணும்

நீயேதான் மீசை வைக்கணும்

உங்கப்பனைவிட நீயே சூப்பர் டக்கருன்னு

பிஞ்சு மனசுல நஞ்ச விதைப்பார்கள்

நம்பிடாதே மகனே


பதினைந்து வயதில்

என்னை படிப்பை இழக்கச் செய்தது

இதே உசுப்புதான்

இதே பசப்புதான்...”


32வது கவிதையில் முதல் பத்தியில் சனாதன நபர்களைப் பற்றிக் கூறுவது போலவும் இரண்டாம் பத்தியில் கம்யூனிஸ்ட் நபர்களைப் பற்றிக் கூறுவது முரணாக இருப்பதாகப் படுகிறது. ஒரு ஆறையே ஆட்டையப் போட்ட அரசியல்வாதியைப் பற்றிய கவிதை அபாரம். இப்படிப் பல கவிதைகள். சமகால அரசியலையும் உள்வாங்கிப் பேசும் கவிதைகள். 


வாழ்த்துகள் தோழர் ப.நடராஜன் பாரதிதாஸ்.

மீண்டும் ஒரு கவிதை...

“நாங்கள் பேசாத 

அரசியல் இல்லை

எங்களைப் பேசும்

அரசியல் தானில்லை


டீக்கடை வச்சா

முதல்வராக முடியுது

பிரதமராக முடியுது

சவரக்கட வச்சவனுக்கு

சாகரவரைக்கும்

ஒரு வார்டு மெம்பருக்குக் கூட

வக்கில்லையோ”

ஜனநாயகத்தின்மேல் கல்லெறியத் தேவையற்ற ஒரு சூழலை எந்தச் சமூகமும் பெறவேண்டும். அதற்கு, எல்லாம் எல்லா மக்களுக்கும் கிடைக்கவேண்டும். அதுவரை தோன்றட்டும் இது போன்ற புரட்சிக் கவிதைகள்.


யாழ் தண்விகா


 

Wednesday 20 July 2022

மோர்க்காரம்மா...



4பேர். ஒவ்வொரு நபரும் மொத ரவுண்டு ஒரு டம்ளர் மோர் குடிச்சாச்சு. ரெண்டாவது ரவுண்டுக்கு ரெண்டு பேர் மட்டும் ஒவ்வொரு டம்ளர். ஊத்திக் கொடுத்த பொம்பள மொத்தம் 6 டம்ளர்னு சொல்றப்பதான் எதுக்குடா இந்தம்மா டம்ளர் கணக்கு சொல்லுதுன்னு பாத்தானுங்க. 60 ரூவா ஆச்சுய்யா. கொடுங்கனு மோர் ஊத்தித் தந்த பொம்பள சொல்லவும் குடிச்ச ஆளுக எதுக்கும்மா காசு தரணும்? நீதானம்மா போற ஆளுகளை நிப்பாட்டி ஊத்திக் கொடுத்தனு சொன்னானுங்க. மாரியாத்தா சன்னதில வம்பு வளக்காம காச கொடுப்பான்னு சொல்லுச்சு மோர்க்காரம்மா. காசுன்னு முன்னாடியே சொன்னா நாங்க எதுக்குமா வாங்கிக் குடிக்கப் போறோம் அதும் இந்த மழை நேரத்துலனு சொல்லிக்கிட்டே 50 ரூபா எடுத்துக் கொடுத்துட்டு பொலம்பிட்டே போனானுங்க. 


ஒரு சந்தேகம் வந்து ஓரமா நின்னு பார்த்தேன். ஏன்னா வீரபாண்டி மாரியம்மன் கோயில்ல இதே போல நானும் ஓசின்னு வாங்கி மடக் மடக்குன்னு குடிச்ச பின்னாடிதான் காசக் கேட்டானுங்க. அது நடு மத்தியானம். அதக் கூட ஏத்துக்கலாம். இது ராத்திரி ஒன்பதரை மணி. ஓசின்னாலும் ஒரு நேர காலம் வேணாமாடா...


இதேபோல போற வார ஆட்களை நிப்பாட்டி தின்னீர் போட்டுவிட்டு காசு கேட்க மஞ்சச் சேல கட்டி இன்னொரு அம்மா.


திருவிழாக் காலத்தில் பூக்கும் மோர்க்காரக் கும்பல்கிட்ட, தின்னீர் போடும் ஆளுங்க கிட்ட எச்சரிக்கையாக இருங்க பக்தர்களே.


#மாரியாத்தா_சார்பாக_உங்கள்_தோழர்...


யாழ் தண்விகா


🔥


 

Monday 18 July 2022

இரவின் நிழல்


 

இரவின் நிழல்


திரைப்படத்திற்கான ஒளியை அறிமுகப் பேச்சுகள் மூலம் அதிகப்படுத்தி திரைக்கதைக்கான ஒளியை இல்லாமல் செய்துள்ளது பெரும் வருத்தம். பார்த்திபன் தன்னுடைய இயக்கத்தில் வெளிவந்த அத்தனை படங்களிலும் உள்ள சைக்கோத்தனமான கதாநாயகத் தன்மையை வடிகட்டி நந்து என்னும் கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் என்பதை விட மீண்டும் சொல்லியுள்ளார் எனலாம். ரகுமான் இசை என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது எனத் தெரியவில்லை. World's first non linear என்று சொல்லியதால்  படத்திற்கு ரகுமான் இசை கூடுதல் ஃபோகஸ் கிடைக்க வாய்ப்பிருக்கும் என்பதால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். Making பற்றி முதலிலேயே 30 நிமிடங்களில் சொல்லிவிட்டதால் படம்  அனைத்தும் செட்டிங்ஸ்ல் நடக்கிறது என தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. ஒட்டாத கதையில் இது கூடுதலாக ஒட்டாமல் இருக்கிறது. கலை இயக்குனர், ஒளிப்பதிவு நல்லாருக்கு. Lyrics... வேண்டாத முயற்சி இயக்குனருக்கு. Non linear திரைப்பட முயற்சிக்கு பெரு வாழ்த்துகள். கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் உலகம் கொண்டாடும் திரைப்படமாகவும் மாறியிருக்கலாம்.


வாங்கிய கட்டணத்திற்காக 3 பேர் ஆனாலும் இந்த பகலிலும் இரவின் நிழலை அனுபவிக்க வாய்ப்பளித்த திரையரங்க உரிமையாளருக்கு பேரன்பு.


யாழ் தண்விகா


💝

Wednesday 13 July 2022

தீ நுண்மிகளின் காலம்...


தீ நுண்மிகளின் காலம்

இரா. பூபாலன் 

பொள்ளாச்சி இலக்கிய வட்டம்

பக்கங்கள் 64

ரூபாய் 70


உலகமே கொரோனா பெருந்தொற்றால் ஒடுங்கிக் கிடந்த கால கட்டத்தில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. திரும்பிப் பார்க்கவேண்டிய வரலாறு கவிதைகளாக இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு நாடும் அதனதன் அரசியல் சக்திக்கேற்ப ஜனநாயக ரீதியாகவோ, சர்வாதிகார ரீதியாகவோ தனது மக்களுக்கு எதனைக் கொடுக்க வேண்டுமோ அதனைப் பரிசளித்தது. இந்திய நாட்டைப் பொறுத்தவரை ஒன்றிய அரசு கொண்டைக் கடலை வழங்குவதாகச் சொன்னது. வந்ததா எனத் தெரியவில்லை. வரவில்லையா எனத் தெரியவில்லை. ஆயிரக்கணக்கான மக்களை சொந்த ஊருக்கு அகதிகளைப் போல நடக்க வைத்தது. ஆயிரம் ரூபாய் கொடுத்தது மாநில அரசு. ஒவ்வொரு நாளும் ஊடகங்கள் தரும் செய்திகள் பதட்டத்தைக் கூட்டுவதாகவே இருந்தன. நம்பிக்கையை விதைக்குமாறு இங்கு எதுவும் நடக்கவில்லை. அதைத்தான் தன்னுடைய கவிதைகளில் விதைத்துள்ளார் தோழர் இரா.பூபாலன்.


எழுதும்போது சின்னச் சத்தம் வந்தாலும் காகிதத்திற்கு வலிக்கும் என்பதுபோன்றதான மெல்லினச் சொற்களை தன்னுடைய கவிதைகளில் படர வைக்கும் தோழர், தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளில் அரசியலை அனாயசமாகப் பதியமிட்டுள்ளார். அதிகாரத்தை நோக்கிக் குரல் எழுப்பியுள்ளார். ஆதங்கம் இல்லாமல் வெறுமனே பெறுந்தொற்றுக் காலத்தைக் கடக்குமளவா இங்கு ஆட்சி நடந்தது? கடனுக்கு வட்டி இல்லை, வாங்கக் கூடாது என்று அரசு சொன்னது. ஆனால் நடந்தது என்ன என்பது சமூகம் உணரும். இப்படிச் சொல்லிக்கொண்டே போக கணக்கு வழக்கில்லாமல் இருக்கிறது. இப்படிப்பட்ட காலத்தின் மீதான அவநம்பிக்கையிலிருந்து கவிதைகள் தோன்றியுள்ளன.


பெருந்தொற்றுக் காலத்தின் காட்சிகள் கண் முன் விரிய ஒரு கவிதை இப்படி முடிகிறது

“விலங்குகளும் பறவைகளும்

புதிய பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கின்றன,

இயற்கை ஆதிக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது.

மனிதன் இயல்புக்குத் திரும்பிவிடும் 

நாளை எண்ணி 

பயந்துகொண்டிருக்கிறார் கடவுள்”

இந்த பூமி இயற்கைக்குச் சொந்தமானது. மனிதன் ஒரு விருந்தாளி. அவ்வளவுதான். ஆனால் அவன் செய்யும் இயற்கை விரோதச் செயல்கள் கணக்கில் அடங்காதவை. இந்த ஊரடங்கு இப்படியே போனால் இயற்கை மகிழும். ஆனால் மனிதன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விட்டான் எனில் மீண்டும் பூமியைக் கந்தலாக்குவான் என்று கடவுள் பயந்து கொண்டிருக்கிறார் என்று காட்சிப்படுத்துவதிலிருந்து மனிதன் எப்பேர்ப்பட்டவன் என்றுணர முடியும்.


வாகனங்கள் ஏதுமற்ற ஊரடங்குக் காலத்தில் சொந்த ஊருக்கு அகதிகளைப் போல நடந்து சென்ற காட்சிக்குள் ஆயிரமாயிரம் கிளைத் துயர்கள். சிறு குழந்தைகளை, சிறுவர்களை, சிறுமிகளை, வயதான முதியோர்களை நடக்க வைத்து இன்புற்றுக் கிடந்தது அரசுகள். தேசத்துரோகி எனக் குற்றம் சாட்டப்பட்டு கட்டி வைத்து அடித்த சம்பவங்கள் அரங்கேறின. அதனை தீ நுண்மிக் காலம்-3 என்ற கவிதையில் வெளிக்கொணரும் கவிஞர் இப்படியே நடந்து நடந்து வலிகளில் உணர்வு மரத்துப் போய் தண்டவாளத்தில் உறங்கி ரயிலுக்கு தம்மை இரையாக்கிக் கொண்டதை தனியே தண்டவாளங்களின் குருதி என்ற கவிதையில் கூறியுள்ளார். அந்தக் கவிதை இப்படியாக தொடங்குகிறது...

“தண்டவாளங்களில் 

குருதியைப் பூசிப்பார்ப்பது

புதிதில்லை நமக்கு.


ஆணவக் கொலைகளின் 

முகமூடிகளை தண்டவாளங்களுக்கு மாட்டி

அழகு பார்ப்பவர்கள் நாம்.”


அப்பேர்பட்ட தண்டவாளத்தில் சொந்த ஊருக்குச் சென்றோர் ரயிலால் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். “அதன் பெயர் பசி, அதிகாரம், அலட்சியம், சர்வாதிகாரம்” என்கிறார் கவிஞர்.


ஊரடங்குக் காலத்தில் தான் பெரும்பான்மைக் குடும்பங்கள் அவசியத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்துகொண்டு உறுப்பினர்கள் எல்லாம் ஒன்றாக பேசிக்கொண்டும் சிறு விளையாட்டுகள் ஆடிக்கொண்டும் இருந்தன. அவசியமற்று மருத்துவமனைக்குச் செல்லவில்லை. கொரோனா அறிகுறிகளைத் தவிர வேறொன்றும் பெரிதாகத் தெரியவில்லை. பிள்ளைகளுக்காக உழைப்பதற்கு ஓடிய தகப்பனின் வாழ்க்கை அவர்களின் மகிழ்வு எது என்பதைக் கண்டறிந்து ஆனந்தக் கூத்தாடியது. இதை

“ஒரு மகிழ்ச்சியின் குடும்பத்திற்குத் 

திரும்பியிருக்கிறோம்

தனிமைக் காலத்தில்

திசைகளெங்கும் திரிந்து பறந்த பறவைகள்

கூட்டுக்குத் திரும்புவதைப் போல” என்ற வரிகளில் பார்க்க முடிகிறது.


இந்தக் கால கட்டத்திலும் நீட் தேர்வு என்னும் கொடுமை அரங்கேறியது. உயிர் பயம் கவ்விக்கொண்டு இருந்தாலும் இணைய வழிக் கல்வி நடக்கத் தொடங்கியது. குடிச்சாலைகள் திறக்கப்பட்டன என்பனவற்றையும் கவிதைகளாக கவிஞர் வடித்துள்ளார். பெருந்தொற்றுக் காலக் கண்ணாடியாக விரியும் கவிதைகள் ஒவ்வொன்றும் மீண்டும் அக்காலத்திற்குள் நம்மைப் பயணிக்க வைக்கிறது. அப்படிப்பட்ட கவிதைதான் இது...

“நீண்ட நாட்களுக்குப் பின்னர்

குறுநகரப்பேருந்து ஓட்டுனர்

அதியதிகாலையிலேயே

பணிமனைக்கு வந்துவிட்டார்.

வெகுநாட்களின் பின்னர்

சந்திக்கும் காதலியைப் போல

ஆழமாகப் பார்க்கிறார்.

அந்தப் பேருந்தை

பிரகாரத்தை வலம் வருவது போல

பக்தியுடன் ஒரு சுற்று சுற்றி வருகிறார்

நீண்ட நாட்களின் பின்னர்

தனது இருக்கையில் அமர்ந்தவர் ஒருமுறை

ஸ்‌டீரியங்கைத் தொட்டுக் கும்பிட்டார்

அண்ணாந்து தலைமேல் அமர்ந்திருந்த 

இளையராஜாவுக்கு ஒரு முத்தத்தை நல்கினார்

அவர் அந்த நாளை 

இப்படித் துவங்கி வைத்தார்

“புத்தம் புது காலை”...

விடுபட்ட காலத்திலிருந்து விடுபட்டு இயல்பான வாழ்க்கைக்குள் புகுவதை இவ்வளவு எளிதாக உணர்த்தமுடியுமா என்றால் ஆமாம் உணர்த்த முடியும் என்பதை இலகுவான வரிகளாலும் காட்சியினாலும் சிறப்புறச் செய்துள்ளார் கவிஞர். பெருந்தொற்று முடிவானால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப் படவேண்டும். மருத்துவமனை செல்லும் அத்தருணத்தில் உண்டாகும் குடும்ப உறவுகளின் மீதான பிணைப்பு காண்போரைக் கண்ணீர் வரவழைக்கும். 

“வெள்ளை நிற வாகனம்

வந்து நிற்கிற சமயம்

அவன் தன் வீட்டைத்

திரும்பித் திரும்பி பார்த்தபடிக்

கிளம்புகிறானே

எப்போது அந்த வீடு குலுங்கிய குலுங்கலை

ஒருவரும் கவனித்தாரில்லை.”

வலியை உரைக்கும் கவிதை அருமை தோழர். 108 வாகனத் தொழிலாளர்கள் அவர்களின் பங்களிப்பு குறித்த கவிதைகள் இன்னும் இருந்திருக்கலாம். காலத்தின் கண்ணாடி என்று தொகுப்பை தாராளமாக நாம் கூறலாம்.


வாழ்த்துகள் தோழர் இரா.பூபாலன்


யாழ் தண்விகா



 

Tuesday 12 July 2022

காதல் கொண்டு வா...!


பிரிவு

நீங்கலாக

ஒரு காதல் 

கொண்டு வா...


அழகைப்

பிசாசு போலாக்கி

வைத்திருக்கிறாய்

ஆட்டுகிறது என்னை


பேசவேண்டும் நான்

மௌனமாக இரேன்

கொஞ்ச நேரம்


கட்டிப் பிடித்த கணம்

உன் தோளில் சாய்ந்தேன்

மனசு சுகமாக 

அழுந்திக் கிடந்தது

உன் மனதோடு


ஆட்கள் இருக்கிறார்கள்

ஒரு முத்தம் தர பெற இடம் தேடினேன்

நீ அழைத்துப் போகிறாய்

செம ஆளுடி நீ


உன் கால்களை என் மேல் வைத்து

விரலிசைச் சொடக்கு போட

அந்த நாளில் தான் வாய்த்தது


கவிதை எழுதுவது மறந்தது எப்படி

நீ கவிதையாய் வார்த்தைகளை

உதிர்த்த பின்னால்


பின்னால் வந்து கட்டிப் பிடிக்க

அனிச்சைக் கைகள் இடை கோர்த்தன

இப்படி கைகள் கோர்ப்பது தப்பு என்று

என் கைகள் மேல்

உன் கைகள் வைத்து அழுத்திக் கட்டிக் கொண்டாய்

தவறைச் சரியாக்குதல் இதுதான் போல


செய்வதையெல்லாம் செய்தபின்

என்னைக் குற்றவாளி ஆக்குவாய்

உனக்காக என் வாழ்வையே

பகடைக் காய் ஆக்குகிறேன்

மகிழ்வாக


கோபத்தின் போதுதான்

முதல் முத்தம் கொடுத்தேன்

கண்கள் மூடினாய்

சந்தோசத்தில் திளைத்த போதும்

முத்தம் தந்தேன்

கண்கள் மூடினாய்

தாமத ஞானமாகத்தான்

இதழுக்குக் கண்கள் பூத்ததை அறிந்தேன்


கொலுசை இசையாக்கி

உன்னழகை நடனமாக்கி

என்னைக் கடக்கிறாய்

உன்னடிமை நானென 

காமம் கையெழுத்துப் போட்டுத் தத்துவிட்டது.

எடுத்துக்கொள் என்னை.


யாழ் தண்விகா 


💝
 

Sunday 10 July 2022

இன்னும் வேண்டும் மழை


 

இன்னும் வேண்டும் மழை


❤️

அவரவருக்கான வைகறை 

பொலிவாக இருந்தது 


கடையாமப்பொழுதில்

நாம் உடனிருந்தோம்  


போதாதா காரணம்...


❤️

பூமி கொஞ்ச படைக்கப்பட்ட 

உன் பாதங்களில் 

என் எச்சில் படாத முத்தங்கள் அர்ச்சனையின் உச்சம்...


❤️

உள் இருள் விலக 

ஒளியாகிக் கொண்டது உடல் 


தொடக்கம் முடிவு இரண்டும் இவ்வளவுதான் என்றாலும் 

சம்மதம்...


❤️

உடல் நழுவ நழுவ 

அருகே இழுத்தன விரல்கள் 


என்ன தவம் செய்தேன் 

கடைசியில் உன்னைத் தந்துவிட்டு

வேடிக்கை பார்க்கத் தொடங்கி விட்டாய

என்னை...


❤️

உன் அரசாட்சியில் 

நான் நன்றாகவே வாழ்ந்தேன்


❤️

மயக்கத்தின் உளறல் 

காதில் கேட்டபடியிருந்தேன் 

அத்தனை சுகமும் 

விழித்தபின் கேட்க விழைந்தேன் 

கண்கள் மூடி

பார்க்க மட்டுமே முடிந்தது


❤️

அபிநயம் யாவும் கலைந்து கிடந்த நடனத்தின் மேல் 

படிந்து கிடக்கிறது 

சொர்க்கத்தின் வாசம்...


❤️

மார்பில் தலை சாய்தலும்  

பயணத்தில் தோள் சாய்தலும் 

ஒன்றல்ல 

என்றுணர்த்துகிறது 

முறையே 

கசங்கிய மல்லிகையும் 

மலர்ந்த மல்லிகையும்...


❤️

நேர்மம் எதிர்மம் 

எப்படிக் கூடினாலும் 

எப்படி மாறினாலும் 

நாமாக நாம் இல்லை 

என்பதுதான் 

அக்கணத்தில் சுவாரஸ்யம்...


❤️

யார் கவிதை 

யார் கவிஞன் 

தேர்வு நேரம் முடிந்து எழுகிறோம் உடையும் 

வியர்வைக் கூடுகளில் இருந்து 

சரிந்து விழுந்து சிரிக்கிறது 

காமம்...


யாழ் தண்விகா

Thursday 7 July 2022

ரொம்ப நாளைக்குப் பின்னால...


ரொம்ப நாளைக்குப் பின்னால...


💜

ரொம்ப நேரம் பேசியாச்சு 

ஆனாலும் ஏதோ ஒன்னு மிஸ் ஆனது மாதிரி இருக்கு 

என்னனு தெரியலையே 

எருமை எருமை 

இன்னமும் நீ முத்தமே கொடுக்கல 

கேட்காம குடுக்க மாட்டியா

குடுடா...


💜

ஹேர் கட் பண்றது இல்ல 

தாடி சேவ் பண்றது இல்ல 

எனக்கென்னன்னு  பங்கரையா திரியுறது 

வீட்டுல நான் ஒரு பேய் இருக்கிறது பத்தாதா...


💜

காலம் முழுக்க நீ என்ன பாத்துப்பன்னு நம்பிக்கை இருக்கு 

அதுக்காக இப்படியே பாத்துட்டே இருக்காத

ஒன் அளவுக்கு எனக்கு கவிதை எழுத தெரியாது 

இப்படி கண்ணிமைக்காம பார்க்கத் தெரியாது

ஆனா நிறைய லவ் பண்ண தெரியும்...


💜

எனக்கு சேலை நல்லா இருக்கா 

சுடிதார் நல்லா இருக்கா எனக் கேட்டா ரெண்டும் தான் நல்லா இருக்கு எனச் சொல்லுவ 

எதுல கூடுதல் அழகு 

அப்படின்னு கேட்டா உன் முகத்துல தான்னு சொல்லுவ

எதுக்கு வில்லங்கம் 

மாமா நல்லா இருக்கேனா இந்த டிரஸ்ல...


💜

நிறைய நிறைய ஆசை. தியேட்டருக்கு போகணும். ஹோட்டலுக்கு போகணும். பைக்ல போனா போகணும். கைகோர்த்து  நடந்திட்டே நிலாவ ரசிக்கணும். உனக்கு சமைச்சு என் கையால் ஊட்டி விடணும். உன் கையால பூ வச்சிக்கிடணும். உன் கையால தாலி கட்டிக்கிடணும். அவ்வளவுதான்.


💜

உங்களைவிட நான்தான் நிறைய லவ் பண்றேன். நான்தான் ஃபீல் பண்றேன். நான் தான் அழறேன். நீங்க எப்பவும் போல தான் இருக்கீங்க. என்ன நீங்க என்ன மாதிரி நிறைய லவ் பண்ணா நான் ஏன் ஃபீல் பண்ணப் போறேன்? நான் ஏன் அழப் போறேன்? லவ் பண்ணு மாமா இன்னும் நிறைய...


💜

வர வர போன் போட்டா எடுக்கிறது இல்ல. நான் தான் உன் பின்னால லூசு மாதிரி திரியுறேன். ஏன்டா என்னை பைத்தியமா ஆக்குன...


💜

இங்க என்னால வாழ முடியாது. மனசே சரியில்ல.  சீக்கிரம் என்னை வந்து கூட்டிட்டுப் போ. இல்லன்னா நாளைக்கு காலைல வீட்டு வாசல்ல வந்து நிப்பேன். உனக்குத்தான் அசிங்கம். உனக்காக வாழுற இந்த தேவதைய எதுக்குடா இப்படி தனியா வரவிட்ட, போய் கூட்டிட்டு வர வேண்டியது தானடான்னு ஊரே உன்னைத்தான் கெடாவும்.


💜

தோள்ல சாஞ்சுக்கிட்டு கதை கேட்டுட்டே டிராவல் பண்ணனும். அதுக்காகவாவது கதைகள் நிறையப் படி. கவிதைகள் வேணாம். என்னைப் பத்தி தான் எதையாவது சொல்லுவ. நீ சொல்லச் சொல்ல வெட்கம் வந்து உன்னை கட்டிப் பிடிச்சுக்கும். தூக்கம் போயிடும்.


💜

உங்க கூட கூரை வீட்டில் வாழ்வதும் வரம் மாமா. என்னைப் பார்க்க எப்படி வருவீங்க. என்னை எங்கெங்க கூட்டிட்டுப் போவீங்க. எனக்கு வெயில் சேராது மாமா. கார்ல போவோம் ரொம்பத் தூரம். I'm waiting மாமா...


யாழ் தண்விகா

 

Sunday 3 July 2022

என் சில்மிசமும் உன் வெட்கமும்...


❣️

உன் கோலம்

என் வாசல்


உன் பார்வை

என் வானம்


உன் காதல்

என் பூமி


உன் தரிசனம்

என் வீதி


உன் பூரணம்

என் முத்தம்


உன் குழந்தைமை

என் பேரன்பு


உன் வெட்கம்

என் சில்மிசம்


உன் தேடல்

என் கவிதை


உன் உயிர்

என் உடல்


உன் நடனம்

என் இதயம்


உயிர்ப்போடு எப்போதும்

வாழ்ந்துவிடுவோம்

நாம்...


❣️

நீ பார்

நான் உயிர் வாழ

அது கூட போதும்...


❣️

பாராத 

பேசாத நொடியெல்லாம்

வாழாத நேரமே...


❣️

நீ ஆடிய ஊஞ்சலில்

நம் நினைவை வைத்து

ஊஞ்சலாட்டுகிறேன்

நினைவிற்கு அவ்வளவு மகிழ்ச்சி...


❣️

நீ பேசும்போது உயிர்பூத்து

பேசாதபோது 

உயிரணைத்து வைத்துக்கொள்ளும்

காதல் ஜீவன் நான்...


❣️

தேனுண்ட வண்டின் மயக்கக்

கண்களில் விழுந்தேன்

எழவில்லை

எழ இயலவில்லை

எழுவதற்கான அவசியமில்லை


எப்போதும் 

மயக்கம் சூடியிருக்கும்

கண்கள் உனது.


❣️

உள்ளங்கைகளைப் பார்க்கிறேன்

எப்போதோ உன் கரம் பற்றியிருந்த நினைவு

வந்து போகிறது


கன்னங்களில் வைத்துக் கொள்கிறேன் கைகளை

உன் ஸ்பரிச வாசம்...


❣️

என்னடி சின்னச் சின்ன விசயத்துக்கெல்லாம் கோவிக்குற

வரவர என்மேல் உனக்குக் காதல் என்பதே இல்லை


யோவ்

கோவப்பட்டா சமாதானம் பண்ணமுடியாதா

முத்தம் தரக்கூடாதா

கட்டிப்பிடிக்கக் கூடாதா

காதலை பிறகெப்படி வளர்ப்பதாம்...


Mmm சரி கோவிச்சுக்கோ

படிப்படியாக ஆரம்பிக்கலாம்...


❣️

உன் நினைவுச் சுழியின்

ஆழம் சென்றுவிட்டேன்...

சுழல் நிற்கும்வரை

உன் நினைவோடு சுற்றிக்கொள்கிறேன்...


❣️

உன் I Love U ஒவ்வொன்றும்

ஒரு ஜென்மத்திற்கான

சுவாசமளிக்கும்


❣️

I Love U என்பேன்

I Love U so much என்பாய்


இருவருக்கும்

I Love U என்னும் வார்த்தை முத்தமளித்து கௌரவிக்கும்


❣️

I Love U என்பதை

முதன்முறை உன்னிடம் உதிர்த்தபோதே அறிவேன்

அது எனக்கான 

வாழ்வைக் கண்டறிந்து

என்னை ஒப்படைக்கும் வழியென்று


❣️

காதல் அளித்தாய்

மிளிர்கிறது வாழ்வு.


❣️

உன் கையில்

சிறு பொம்மையென்றாலும்

சருகென்றாலும்

நானென்றாலும்

வாழ்வேன் உயிர்ப்புடன்.


❣️

தீராத காதல் நதி

என்னுள் பாய்கிறது உன்னால்.

நீயும் நானும் பயணிக்கிறோம்

வாழ்வை நீராட்டியபடி...


❣️

என் பெருமிதம்

நீ.


❣️

உன் மேலான பசி

அடங்குவதேயில்லை

நீ அருகிலிருப்பினும்

பிரிந்திருப்பினும்...


❣️

நம் சந்திப்பின் பின்

அவரவர் இருப்பிடம் திரும்புகிறோம்

என் தோளில் உன் சாயலையும்

உன் மடியில் என் சாயலையும்

சுமந்தபடி...


❣️

தேர்ச் சக்கரங்கள்

கடவுள் சென்ற பாதையை


உன் பாதணிகள்

தேவதை சென்ற வீதியை


அடையாளம் காண...


❣️

பெரு மழையொன்று

தூவானமாகப் பெய்து

தனதிருப்பை மூர்ச்சையாக்குவதற்கு

எத்தனிக்கும்.


ஒருகாலமும்

காதல் அச்சூழலை

விரும்புவதில்லை.

காதல்

காதலாக வாழும்

வீழ்ந்த போதிலும்.


❣️


பேரருள் வழங்கும்

உன் காதலால்

என் கடவுளானாய் நீ.


போதும்.

வாழ்வு சுபிட்சம்.


யாழ் தண்விகா


 

Saturday 2 July 2022

ப்பா... என்னைப் பிடிக்கும்ல...


 ❣️

உயிரைக்

கொள்ளையிடும் அழகு நீ

❣️

உன்னோடு பயணித்த இடங்களை

தனித்து விட்டுவிட மனமில்லை

நினைவில் பயணிக்கிறோம்

மீண்டும் நாம்

❣️

கொஞ்சத் தூண்டும்

பப்ளி கன்னங்கள்

முத்தம் கன்னத்திலா

தலையணையிலா

என்ற சந்தேகம் தூண்டும்

❣️

உன் வாசத்தைச் சூடிக்கொண்ட

மரம் நான்

❣️

பேரழகி நீ

உன்மேல் 

பெரும் பித்தனாக நான்

❣️

என் சாம்ராஜ்யம் நீ தான்

அங்கு அடிமை என்பதும்

அருந்தவப் பயன்

❣️

கை வைத்துப் பார்க்கிறேன்

இரு மார்பின் மத்தியிலும்

உன் குரலில் பேசுகிறது 

என் இதயம்.

❣️

உன்னால் நாம் பார்க்கப்படுதல்

என் வரம்.

நீ பார்க்கவேண்டும் என்பது

என் தவம்.

❣️

என்னைத் திட்டணும்

என்னை இன்னும் இன்னும் கொஞ்சணும் 

என்பதற்காகவே கேட்பேன்

ப்பா...

என்னைப் பிடிக்கும்ல...


❤️


யாழ் தண்விகா


கர்த்தர் பிடிக்கும் உனக்கு...


❣️
என் வனத்துப் பச்சையம் நீ.

❣️
கர்த்தர் பிடிக்கும் உனக்கு.
ஆதலால்
உனக்குள் என்னை 
நான் அறைந்து கொண்டேன்.

❣️
நீ பேசப்பேச
இந்தவானம்
மேகமசைத்துச் சிலிர்க்கிறது.

❣️
நாளொருமேனியும்
பொழுதொரு வண்ணமுமாக
மெருகேறுகிறது உன்அழகு.
வைத்த கண் மாறாமல்
கன்னத்தில் கைவைத்து
வேடிக்கை பார்க்கிறது காதல்.

❣️
உன் காலடியில் தொடங்கி
கண்களில் முடிகிறது
என் அபிசேகம்.

❣️
மிச்சமிருக்கும் வாழ்வையும்
வாழ்ந்து தீர்க்கவே
இச்சுவாசம்.

உன்னோடு வாழ்ந்தால்
தீர்வதா இவ்வாழ்வு...!?

❣️
ஒரு வனாந்தரத்தின்
மரங்களினிடை புகுந்து வரும்
வெளிச்சம் போல
நாம் வாழ 
இப்பிரிவிருளினிடையே
ஒரு வரம் வந்து சேராதா
நம் காதல் கரங்களில்...

❣️
உன்னைக் கரம்பிடித்தேன்
வாழ்தலுக்கு உயிர் கிடைத்தது

❣️
என்னிலென்ன எறிந்தாயோ தெரியாது
சுற்றிப்படர்ந்த அலைகளில்
மின்னுகிறது
உன் முகம்

❣️
ஆண்டுகள் கடக்கக்கடக்க
வைரம் பாய்ந்த மரம் உருவாகிறது.
நாம் காதல்பாய்ந்த ஜீவன்கள்.
வாழமாட்டோமா
வாழ்வின் எல்லைவரை.

❣️
தொடுகிறேன்
கவிதையாக
சிலையாக
ஓவியமாக
சிறுகதையாக
இசையாக
நாவலாக
நடனமாக
...
ஏதேனும்
ஒன்றாகி விடுகிறாய்.

மாறாமல் நீயாயிரு
காதல் பேசவேண்டும்.

❣️
உன் திசையில்
எனக்கான வானவில்

❣️
உன்னழகு
என்னைப் பைத்தியமாக்கவும்தானா?

❣️
நீ பேசுவாய்
நான் மிதப்பேன்

❣️
என் கவிதைகளின்
பாடுபொருள் நீ

❣️
உன்னிலிருந்து 
உதிரும் அழகுகளை எழுத்தாக்கிக்
கவிதை என்கிறேன்.
கவி நீதான்.
நானில்லை...!

யாழ் தண்விகா

 

உயிரில் முத்தமிடு...



💝
இது வேறு மாதிரியான மழை
இது வேறு மாதிரியான சாரல்
இது வேறு மாதிரியான காற்று
இது வேறு மாதிரியான குளிர்
இது வேறு மாதிரியான நெருக்கம்
இது வேறு மாதிரியான அணைப்பு
இது வேறு மாதிரியான நெருப்பு
இது வேறு மாதிரியான மீள்தல்...

இன்னும் தூறல்
நிறைவுறுவதாக இல்லை...

💝
ஒரு நெருக்கத்தை
முழுதும் அறியும் முன்னரே
வந்து விழும் பிரிவு
உடைத்து விடுகிறது உயிரை...

💝
பிறவிகள் தோறும் 
உன் காதல் வேண்டாம் 
அதில் நம்பிக்கையில்லை
உன்னைக் காணும் பொழுதெல்லாம்
பிறவிகள் எடுத்துக்கொள்கிறேன்...

💝
உன் வாசனையை
என்னுள் நிரப்பு

உயிர் மணமற்றுக் கிடக்கிறது...

💝
விரிந்து கிடக்கும்
வானமாகிப் போகிறோம் நாம்
நம்முள் கிடக்கிறது
சூரியனும்
நிலவும்
நட்சத்திரங்களும்...

💝
மழை
மண்ணைக் குளிக்க வைத்தல் போல
என்னை குளிக்க வைத்தாய்
சொட்டுச் சொட்டாக...

💝
உனக்கு நினைவிருக்கிறதா
நான் உறங்கும் முன்
எனக்கு நீ முத்தமிடுவது...

இப்போது
உயிருக்கு முத்தமிடு

அது நிரந்தரமாக
கண்ணுறங்கக் காத்திருக்கிறது...

💝
சிக்கிமுக்கிக் கல் உரசல் 
நெருப்பைக் கொண்டு வரும் என்றால்

நம் இதழ் உரசலில் பூப்பது
என்னவாக இருக்கும்...

💝
அதீதங்களின்
மனித அசல்
நீ...

💝
ஒன்று நன்றாய் அறிவேன்...
உன் காதல் இல்லாவிட்டால்
நானெல்லாம் 
நடைபிணம் என்பதன்
அருஞ்சொற்பொருளாயிருப்பேன்...

💝
செத்துவிடத் தோணும்
கணங்களனைத்தும்
உன் நினைவு
கை பிடித்து இழுத்து வந்து
காதலால் அறைகிறது
உடலெங்கும்...

💝
பூக்களின் தேசத்து
தலைமை மலர் நீ...

பூக்களைத் தொடாதீர்கள்
என்ற பதாகையைத்
தாங்கியிருக்கும்
சிறு குச்சி நான்...

💝
என்றும் உன்னைத் தவிர்த்து
என்னைத் தனியாக
நினைத்துப் பார்க்கமாட்டேன்

நான் செத்தாலும்
அதுதான் நிஜம்...

நான் செத்தாலும் 
அதை நீ நம்பமாட்டாய்

அதுவும் நிஜம்...

💝
இந்த வாழ்வு தெளிந்த நீரோடை
என்று சொல்லிக்கொண்டிருந்த
காலங்கள்தான்
காதல் வந்த பிறகு
சுழற்றியடிக்கும் வெள்ளமென
இந்த வாழ்வை மாற்றியமைத்தது
அதில் எந்த இடம் எனக்கு
என எனக்கே தெரியாமல்
ஒரு சருகென 
என்னைத் தூக்கியெறியவும் செய்தது...

💝
இந்தக் கவிதை 
எழுதும்போது
நீ என் அருகில் இல்லை
நான் உன் அருகில் இல்லை
அதனால்தான்
நினைவுகளின் காயங்கள்
இதனை எழுதிக்கொண்டிருக்கிறது...

யாழ் தண்விகா

 




எல்லாம் நீதான்...


 

💜

தீராத காதலில்

தீராத போதை

நாம்...


💜

எல்லாம் பேசுகிறோம்

காதல் இன்னும்

மீதமிருக்கிறது


💜

முதல் சந்திப்பு

முதல் புன்னகை

முதலில் பார்த்த புடவை நிறம்

முதலில் பேசிய வார்த்தை

முதல் அன்பளிப்பு

முதல் ஸ்பரிசத் தீண்டல்

முதல் பிரிவு


மீண்டும் 

அடுத்த சந்திப்பு...

மீண்டும் 

அடுத்த பிரிவு...


அதே காதல்...


💜

பேசிக்கொண்டே இருப்பாய்

எது நீ

எது காதல்

எது காமம்

எது கவிதை...


என்னமோ செய்.

அனைத்தும் அழகு.


💜

முத்தம் கேட்டால்

அள்ளிக்கொள்ள

கைகள் நீட்டும்

தேவதை நீ...


💜

கடந்து செல்வாய்

என் உயிரை 

உன்னோடு

அனுப்பி விடுவேன்...


நான் வைத்து 

என்ன செய்யப் போகிறேன்...


💜

நமக்கான கதவு

நமக்கான தனிமை

நமக்கான நாம்


காதல் தேர்வின் வெற்றியைக்

காமம் கொண்டாடக் கொடுத்தல்

இதம்.


💜

என் காத்திருப்பினைத்

துவம்சம் செய்யும்

வல்லமையுடன்

தாமதமாக நீ வருவதற்கான

காதல் காரணம் 

உன்னிடம் இருக்கத்தான் செய்கிறது...


💜

கருப்பு நிறத்திலும்

பூக்கள் அழகாகத்தான் இருக்கும்

என்றுணர்த்தினாய்

கருப்பு நிறப் புடவையில்

காட்சி தந்த தினம்...


💜

காதல் மின்மினிப் பூச்சி

காம மின்னல்

இரண்டும் நீதான்.


யாழ் தண்விகா

காற்று சிலிர்க்க காதலிப்போம்...!

 


❣️

மழைக் காற்று அலாதி சுகம்

வா

நாமுள்ள இடத்தின் மழையாவோம்

காற்று சிலிர்க்கட்டும்


❣️

கண்கள் எரிச்சலாக இருக்கிறது

உறக்கமின்மையெல்லாம் இல்லை

உன்னைக் கண்கள் உண்டு

நாளாகிவிட்டது


❣️

காதலின் வேர் இப்படியா

பிரிவின் கணங்கள் எங்கும் 

நீண்டு நீண்டு

உயிரைத் துளைத்துக்கொண்டே செல்லும்?


யாழ் தண்விகா