Sunday 31 July 2022

கககபோ வட்டார வள மைய பயிற்றுநர்கள்


 

கககபோ வட்டார வள மைய பயிற்றுநர்கள்...


எண்ணும் எழுத்தும் என்ற அரசின் திட்டத்தை இதற்கு முன்னர் நடந்த பயிற்சியின்போது கலந்துகொள்ளாத ஆசிரியர்களுக்கு மற்றும் மேற்பார்வை செய்யச் செல்லும் வட்டார வள மைய பயிற்றுனர்களுக்கு பயிற்சியளிக்கும் வாய்ப்பு 27, 28, 29.07.2022 ஆகிய மூன்று நாட்கள் கிடைத்தது. இடம் உத்தமபாளையம், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், தேனி மாவட்டம். இதில் முதல் நாள் மற்றும் மூன்றாம் நாள் வட்டார வள மைய பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளிக்கும் வாய்ப்பு. பேருவகையாக அமைந்த அந்த வாய்ப்பின்போது அவர்கள் முன்னிலையில் வாசித்த என்னுள்ளக் கருத்துகளை முன்வைக்கிறேன். அவர்களிடம் சொல்லிவிட்டேன் கொஞ்சம் மொக்கையாக இருக்கும். ஆனாலும் பொறுத்துக்கொள்ளுங்கள் என்று. போலவே வாசிக்கும் தங்களிடமும்.


எண்ணும் எழுத்தும்...


@

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

ஔவையார் சொன்னது...

எஸ்எஸ்ஏ ஆபீசும் பிஇஓ ஆபீசும் உயிரெனத் தகும்

பி.வி.யார் சொல்வது... (P.VijayaRaj)


@

எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து 

அறிமுகம் செய்வது

எனக்கிடப்பட்ட பணி.

அதற்கு அதற்கு முன்னால்

என் பேச்சைக் கேட்கவிருக்கும் 

உங்களுக்கு thank பண்ணிவிட்டு

வழங்கப்போகிறேன்

சொற்கோர்வைகளால் ஆன

வாழ்த்துக்கனி...!


@

எங்கள் பணி என்ன?

மேற்பார்வை செய்பவர்களுக்கு

எண்ணும் எழுத்தும் திட்டத்தை

பள்ளிகளில் எப்படி மேற்பார்வை செய்வது

என்று பயிற்சி தரவேண்டும்...


இது கொடுப்பினையா...

கொடும் வினையா... தெரியவில்லை...


@

ஒரு கவிதையில்

“ம் என்றால் உள்ளதடி சொர்க்கம்

நீ இல்லையென்றால் இடுகாடு பக்கம்” 

என்பார் கவிப்பேரரசு வைரமுத்து.


அரசின் திட்டங்கள் எதைத்தான்

நீங்கள் முடியாதென்று சொன்னீர்கள்...

எண்ணும் எழுத்தும் மட்டுமல்ல

எப்போதும் எதற்கும் முடியும்

முடியும் முடியும் என்றே

சொல்லச் சொல்லி ஆசிரியர்களைச் 

செயலுக்குப் பழக்கப்படுத்தியவர்கள்

நீங்கள்.


ஆக மேலிடத்தின் 

கட்டளையை கச்சிதமாகக் கல்வித்துறைக்குள்புகுத்தும்

போர்க்களப் பணியாளர்கள் நீங்கள்.

ஆம்.

கககபோ வேறு யாருமில்லை 

நீங்கள் தான்.


@

கண் சிமிட்டுவதற்குக் கூட நேரமில்லை

பார்த்திருக்கிறேன் உங்கள் பணியை.

இந்தக் கல்வியாண்டின் குறுகிய காலத்திலேயே

ஒருபுறம் எஸ் எம் சி

ஒருபுறம் ஐ டி கே

ஒருபுறம் எண்ணும் எழுத்தும்

ஒருபுறம் கிட்பாக்ஸ் வழங்கல்

ஒருபுறம் ஆசிரியர் கையேடு வழங்கல்

மாணவர் பயிற்சி நூல் வழங்கல்

இப்படி எத்தனை எத்தனை…


திடீரென்று அழைப்பு வரும்

உடனே ஆன்லைன் மீட்டிங்

நிகழ்வு முடிந்த அடுத்த சில  நொடிகளில்

கையோடு அவரவர் சீட்டை எடுத்துவந்து

முன்னாடி அமருங்கள் என்று சொல்லி

சூப்பர்வைசர் நடத்தும்

அலர்ட் பண்ணுவதற்கான

ஆஃப்லைன் மீட்டிங்...


ஓடிக்கொண்டிருந்தால்தான் நதி

நின்றுவிட்டால் அது குட்டை...


பல பணிகளில்

பல பள்ளிகளில்

ஆசிரியர்களை இழுத்துச் செல்லும் நதி நீங்கள்.

பணிகளை பள்ளிகளை

தேங்கிவிடாமல் 

இழுத்துச் செல்லும் நதி நீங்கள்...


@

தேன், தேனீ, தேன்கூட்டைப் பற்றித் 

தெரியாதவர்களுக்கு

தேடித் தேடி விளக்கம் தரத் தேவையில்லை.

நீங்கள்தான் தேனீக்கள்

ஒவ்வொரு பள்ளியிலும், அதன் வளர்ச்சியிலும்

நீங்கள் காட்டும் அக்கறை, டேட்டா தான் 

தேன்.

கொண்டு வந்து ஒப்படைக்கும் 

வட்டார வள மையம் தான்

தேன்கூடு.


அவ்வளவு எளிதாகத் தேன் கிடைத்துவிடுகிறதா?

எத்தனை எத்தனை வலிகளுடன்தான் 

உங்கள் ஓட்டம்?


எவ்வளவு அடிச்சாலும் தாங்குறோம்

என ஒவ்வொரு பள்ளியும் புலம்பும்போது

பல பள்ளிகளைத் தாங்கி நிற்கும்

உங்களை எப்படிப் பாராட்டுவது?


@

பூ ஒன்று புயலாவதைக் காணத்தான்

அவ்வப்போது பயிற்சி நாட்கள்.

ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம்

என்பது போல

பெரியகுளம் ஒன்றியமே அதற்குச் சாட்சி...

ஒருவர் புத்தகத்தோடு இருப்பார்

ஒருவர் புத்தகமாகவே இருப்பார்

ஒருவர் அலட்டிக்கொள்ளவே மாட்டார்

ஆனால் மணிக்கணக்கில் அசரடிப்பார்

ஒருவர் சிரித்தபடி உரையாற்றுவார்

ஒருவர் சிந்தித்தபடி செயலாற்றுவார்

இப்படி ஆண் பயிற்றுநர்கள்


பெண் பயிற்றுநர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம்

களம் எதுவென்றாலும்

சிகர இலக்கு நோக்கிப் பயணிக்க 

சிரத்தையுடன் சிரித்த முகத்துடன்

ஆசிரியர்களை அழைத்துச் செல்லும் 

சிங்கப்பெண்கள் அவர்கள்.


@

எங்கள் பள்ளிக்குக் கிடைத்த பயிற்றுநர்களின் 

கோபம் அறிவேன்.

வலிக்காமல் அடிப்பது போன்ற 

தாய்மை நிரம்பியவர்கள்.


அடுத்த முறை நான் வரும்போது

இதைச் சரிசெய்து வைத்திருக்கவேண்டும்

இதை எழுதி வைத்திருக்கவேண்டும்

இக்குழந்தைகள் இன்னும் முன்னேற்றம் கண்டிருக்கவேண்டும்

எனச் சற்றே குரல் உயர்த்திச் சொல்லுதல்தான்

அவர்களின் அதிகபட்சக் கோபம்.

அது மட்டுமா

பார்வையாளர் பதிவேட்டில்

நிறைகள் எழுதி குறைகளை லாவகமாக 

மறைத்தெழுதும் பண்பு.

எத்தனை எத்தனை உணர்வுகள் அதில்...

வருத்தம், எதிர்பார்ப்பு, ஆதங்கம், 

தனக்கு ஒதுக்கப்பட பள்ளியின் மீதான அக்கறை...

இன்னும் இன்னும்.


@

5 நாட்கள் பயிற்சி

எண்ணும் எழுத்தும்

இதற்கு முன்னும் நடந்தது.

உங்களால்தான் சாத்தியமானது 

சத்தியமானது அன்று.


வேளாவேளைக்குச் சிற்றுண்டி

தேநீர்

நேரக் கண்காணிப்பு

வகுப்பறைக் கண்காணிப்பு

ஒழுங்குக் கண்காணிப்பு

வருகைக் கண்காணிப்பு...

ஆயிரம் செய்தும்

இன்று காடு, மலை தாண்டி

ஒன்றியம் விட்டு ஒன்றியம்

அதே பயிற்சிக்கு

பாளையத்தில் பாவமாக அமர்ந்திருக்கும்

“உங்களைப் பார்த்தா பாவமாக இருக்கு”

இருக்கட்டும் இருக்கட்டும்

முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...


@

பாலுமகேந்திராவுக்குப் 

பாலா பயிற்சியளிப்பதா...

பாரதிராஜாவுக்கு

பாக்யராஜ் சொல்லிக்கொடுப்பதா…

அமீருக்கு

சசிக்குமார் வகுப்பெடுப்பதா...

மனம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது.

சூரியன் திரும்பும் திசையெல்லாம்

சூரியகாந்தி திரும்புதல் தானே 

உலக வழக்கம்...

ஆதலினால் சூரியன்களுக்கு

நான் பயிற்சியளிக்கப்போவதில்லை...

சொல்லிக்கொடுக்கப்போவதில்லை...

வகுப்பெடுக்கப்போவதில்லை...

தெரிந்தவை பகிர்கிறேன்.


வாய்ப்பிற்கு நன்றி...


யாழ் தண்விகா

No comments:

Post a Comment