Tuesday 12 July 2022

காதல் கொண்டு வா...!


பிரிவு

நீங்கலாக

ஒரு காதல் 

கொண்டு வா...


அழகைப்

பிசாசு போலாக்கி

வைத்திருக்கிறாய்

ஆட்டுகிறது என்னை


பேசவேண்டும் நான்

மௌனமாக இரேன்

கொஞ்ச நேரம்


கட்டிப் பிடித்த கணம்

உன் தோளில் சாய்ந்தேன்

மனசு சுகமாக 

அழுந்திக் கிடந்தது

உன் மனதோடு


ஆட்கள் இருக்கிறார்கள்

ஒரு முத்தம் தர பெற இடம் தேடினேன்

நீ அழைத்துப் போகிறாய்

செம ஆளுடி நீ


உன் கால்களை என் மேல் வைத்து

விரலிசைச் சொடக்கு போட

அந்த நாளில் தான் வாய்த்தது


கவிதை எழுதுவது மறந்தது எப்படி

நீ கவிதையாய் வார்த்தைகளை

உதிர்த்த பின்னால்


பின்னால் வந்து கட்டிப் பிடிக்க

அனிச்சைக் கைகள் இடை கோர்த்தன

இப்படி கைகள் கோர்ப்பது தப்பு என்று

என் கைகள் மேல்

உன் கைகள் வைத்து அழுத்திக் கட்டிக் கொண்டாய்

தவறைச் சரியாக்குதல் இதுதான் போல


செய்வதையெல்லாம் செய்தபின்

என்னைக் குற்றவாளி ஆக்குவாய்

உனக்காக என் வாழ்வையே

பகடைக் காய் ஆக்குகிறேன்

மகிழ்வாக


கோபத்தின் போதுதான்

முதல் முத்தம் கொடுத்தேன்

கண்கள் மூடினாய்

சந்தோசத்தில் திளைத்த போதும்

முத்தம் தந்தேன்

கண்கள் மூடினாய்

தாமத ஞானமாகத்தான்

இதழுக்குக் கண்கள் பூத்ததை அறிந்தேன்


கொலுசை இசையாக்கி

உன்னழகை நடனமாக்கி

என்னைக் கடக்கிறாய்

உன்னடிமை நானென 

காமம் கையெழுத்துப் போட்டுத் தத்துவிட்டது.

எடுத்துக்கொள் என்னை.


யாழ் தண்விகா 


💝
 

No comments:

Post a Comment