Sunday 3 July 2022

என் சில்மிசமும் உன் வெட்கமும்...


❣️

உன் கோலம்

என் வாசல்


உன் பார்வை

என் வானம்


உன் காதல்

என் பூமி


உன் தரிசனம்

என் வீதி


உன் பூரணம்

என் முத்தம்


உன் குழந்தைமை

என் பேரன்பு


உன் வெட்கம்

என் சில்மிசம்


உன் தேடல்

என் கவிதை


உன் உயிர்

என் உடல்


உன் நடனம்

என் இதயம்


உயிர்ப்போடு எப்போதும்

வாழ்ந்துவிடுவோம்

நாம்...


❣️

நீ பார்

நான் உயிர் வாழ

அது கூட போதும்...


❣️

பாராத 

பேசாத நொடியெல்லாம்

வாழாத நேரமே...


❣️

நீ ஆடிய ஊஞ்சலில்

நம் நினைவை வைத்து

ஊஞ்சலாட்டுகிறேன்

நினைவிற்கு அவ்வளவு மகிழ்ச்சி...


❣️

நீ பேசும்போது உயிர்பூத்து

பேசாதபோது 

உயிரணைத்து வைத்துக்கொள்ளும்

காதல் ஜீவன் நான்...


❣️

தேனுண்ட வண்டின் மயக்கக்

கண்களில் விழுந்தேன்

எழவில்லை

எழ இயலவில்லை

எழுவதற்கான அவசியமில்லை


எப்போதும் 

மயக்கம் சூடியிருக்கும்

கண்கள் உனது.


❣️

உள்ளங்கைகளைப் பார்க்கிறேன்

எப்போதோ உன் கரம் பற்றியிருந்த நினைவு

வந்து போகிறது


கன்னங்களில் வைத்துக் கொள்கிறேன் கைகளை

உன் ஸ்பரிச வாசம்...


❣️

என்னடி சின்னச் சின்ன விசயத்துக்கெல்லாம் கோவிக்குற

வரவர என்மேல் உனக்குக் காதல் என்பதே இல்லை


யோவ்

கோவப்பட்டா சமாதானம் பண்ணமுடியாதா

முத்தம் தரக்கூடாதா

கட்டிப்பிடிக்கக் கூடாதா

காதலை பிறகெப்படி வளர்ப்பதாம்...


Mmm சரி கோவிச்சுக்கோ

படிப்படியாக ஆரம்பிக்கலாம்...


❣️

உன் நினைவுச் சுழியின்

ஆழம் சென்றுவிட்டேன்...

சுழல் நிற்கும்வரை

உன் நினைவோடு சுற்றிக்கொள்கிறேன்...


❣️

உன் I Love U ஒவ்வொன்றும்

ஒரு ஜென்மத்திற்கான

சுவாசமளிக்கும்


❣️

I Love U என்பேன்

I Love U so much என்பாய்


இருவருக்கும்

I Love U என்னும் வார்த்தை முத்தமளித்து கௌரவிக்கும்


❣️

I Love U என்பதை

முதன்முறை உன்னிடம் உதிர்த்தபோதே அறிவேன்

அது எனக்கான 

வாழ்வைக் கண்டறிந்து

என்னை ஒப்படைக்கும் வழியென்று


❣️

காதல் அளித்தாய்

மிளிர்கிறது வாழ்வு.


❣️

உன் கையில்

சிறு பொம்மையென்றாலும்

சருகென்றாலும்

நானென்றாலும்

வாழ்வேன் உயிர்ப்புடன்.


❣️

தீராத காதல் நதி

என்னுள் பாய்கிறது உன்னால்.

நீயும் நானும் பயணிக்கிறோம்

வாழ்வை நீராட்டியபடி...


❣️

என் பெருமிதம்

நீ.


❣️

உன் மேலான பசி

அடங்குவதேயில்லை

நீ அருகிலிருப்பினும்

பிரிந்திருப்பினும்...


❣️

நம் சந்திப்பின் பின்

அவரவர் இருப்பிடம் திரும்புகிறோம்

என் தோளில் உன் சாயலையும்

உன் மடியில் என் சாயலையும்

சுமந்தபடி...


❣️

தேர்ச் சக்கரங்கள்

கடவுள் சென்ற பாதையை


உன் பாதணிகள்

தேவதை சென்ற வீதியை


அடையாளம் காண...


❣️

பெரு மழையொன்று

தூவானமாகப் பெய்து

தனதிருப்பை மூர்ச்சையாக்குவதற்கு

எத்தனிக்கும்.


ஒருகாலமும்

காதல் அச்சூழலை

விரும்புவதில்லை.

காதல்

காதலாக வாழும்

வீழ்ந்த போதிலும்.


❣️


பேரருள் வழங்கும்

உன் காதலால்

என் கடவுளானாய் நீ.


போதும்.

வாழ்வு சுபிட்சம்.


யாழ் தண்விகா


 

No comments:

Post a Comment