Sunday 10 July 2022

இன்னும் வேண்டும் மழை


 

இன்னும் வேண்டும் மழை


❤️

அவரவருக்கான வைகறை 

பொலிவாக இருந்தது 


கடையாமப்பொழுதில்

நாம் உடனிருந்தோம்  


போதாதா காரணம்...


❤️

பூமி கொஞ்ச படைக்கப்பட்ட 

உன் பாதங்களில் 

என் எச்சில் படாத முத்தங்கள் அர்ச்சனையின் உச்சம்...


❤️

உள் இருள் விலக 

ஒளியாகிக் கொண்டது உடல் 


தொடக்கம் முடிவு இரண்டும் இவ்வளவுதான் என்றாலும் 

சம்மதம்...


❤️

உடல் நழுவ நழுவ 

அருகே இழுத்தன விரல்கள் 


என்ன தவம் செய்தேன் 

கடைசியில் உன்னைத் தந்துவிட்டு

வேடிக்கை பார்க்கத் தொடங்கி விட்டாய

என்னை...


❤️

உன் அரசாட்சியில் 

நான் நன்றாகவே வாழ்ந்தேன்


❤️

மயக்கத்தின் உளறல் 

காதில் கேட்டபடியிருந்தேன் 

அத்தனை சுகமும் 

விழித்தபின் கேட்க விழைந்தேன் 

கண்கள் மூடி

பார்க்க மட்டுமே முடிந்தது


❤️

அபிநயம் யாவும் கலைந்து கிடந்த நடனத்தின் மேல் 

படிந்து கிடக்கிறது 

சொர்க்கத்தின் வாசம்...


❤️

மார்பில் தலை சாய்தலும்  

பயணத்தில் தோள் சாய்தலும் 

ஒன்றல்ல 

என்றுணர்த்துகிறது 

முறையே 

கசங்கிய மல்லிகையும் 

மலர்ந்த மல்லிகையும்...


❤️

நேர்மம் எதிர்மம் 

எப்படிக் கூடினாலும் 

எப்படி மாறினாலும் 

நாமாக நாம் இல்லை 

என்பதுதான் 

அக்கணத்தில் சுவாரஸ்யம்...


❤️

யார் கவிதை 

யார் கவிஞன் 

தேர்வு நேரம் முடிந்து எழுகிறோம் உடையும் 

வியர்வைக் கூடுகளில் இருந்து 

சரிந்து விழுந்து சிரிக்கிறது 

காமம்...


யாழ் தண்விகா

No comments:

Post a Comment