Monday 13 December 2021

இரவாக நீ... நிலவாக நான்....

 #இது_என்ன_மாயம்!



#இரவாக_நீ 

#நிலவாக_நான்...என்ற பாடல்


மழை மனதிற்குள் மெல்ல மெல்ல இறங்கி உயிரின் வேர்கள் பரவும் திசை அனைத்தையும் தொட்டு தொட்டு தொட்டு மெல்ல நிலமெங்கும் படர... பரவ... உயிர்ப்பிக்கிறதா அல்லது மயக்கமடையச் செய்கிறதா என எண்ணக் கூடிய அளவிற்கு ஒரு சுகந்தம் அளிப்பதுபோல்...


எப்பொழுதெல்லாம் மழையில் நனைய வேண்டுமோ அப்பொழுதெல்லாம் நான் இரவாக நீ நிலவாக நான் என்று பாடலுக்குள் குடிபுகுந்து கொள்கிறேன். வேறு மாதிரியாக கூறுவது என்றால் இப்பொழுது எல்லாம் பெரும்பாலும் இந்தப் பாடல் தரும் மழையில் நனைந்து கொண்டு தான் இருக்கிறேன் ஒரு நூறு முறைக்கு மேல் இந்தப் பாடலை கேட்டிருப்பேன்... நனைந்திருப்பேன்...


சாரலுக்கு அடுத்த நிலை. மழைக்கு முந்தைய நிலை... அப்படிப்பட்ட ஒரு பதத்தில்தான் பாடல் தொடங்குகிறது...

உள்ளிருந்து வரும் பெண் குரலில்


"இரவாக நீ 

நிலவாக நான்..."

என ஒலிக்கத் தொடங்கும் பாடல் வரிகளை அடுத்து அப்பெண் குரலை கொஞ்சமும் இம்சை செய்யாமல் ஆண்குரல் அடுத்து தொடங்குகிறது 


"தொலையும் நொடி கிடைத்தேனடி இதுதானோ காதல் அறிந்தேனடி... 

கரை நீ பெண்ணே 

உன்னைத் தீண்டும் அலையாய் நானே ஓ... நுரையாகி நெஞ்சம் துடிக்க..."

விளிம்பில் நின்று வாழ்வைப் பார்க்கும் ஒருவனுக்கு காதல் பரிசு கிடைத்தால் எப்படியிருக்கும் என்பதை பாடல் வரிகளைப் பாடி பார்த்தால் மட்டுமே உணர முடியும்...


கொஞ்சம் இசை கசிகிறது வரிகள் ஏதுமில்லாமல். மீண்டும் பல்லவி வரிகள்.

தொடரும் இசை முதல் சரணத்தின் பாடல் வரிகளைக் கொண்டு வருகிறது....


காதலன் பாடுகிறான்...

"விழி தொட்டதா 

விரல் தொட்டதா 

எனது ஆண்மை தீண்டி 

பெண்மை பூ பூத்ததா..."

ஒரு பார்வை 

பார்த்தவுடன் காதல் 

அந்த காதலைத் தாண்டி கூடல் என்பதை மிகவும் நளினமாக இந்த மூன்று வரிகளுக்குள் அடக்கி இருக்கிற வித்தையை என்னவென்று சொல்வது...

அடடா...


காதலி பாடுகிறாள்...

"அனல் சுட்டதா 

குளிர் விட்டதா 

அடடா என் நாணம் 

இன்று விடை பெற்றதா..."

இந்த மூன்று வரிகளையும் மேற்சொன்ன மூன்று வரிகளையும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வைத்துப் பார்த்தால் இன்னும் ஒரு கவித்துவத்தை உணர முடியும்.


விழி தொட்டதா அனல் சுட்டதா 

விழி தொட்டதால் அந்தப்பார்வை அனல் போல் சுட்டதா 


விரல் தொட்டதா

குளிர் விட்டதா

விரல் தொட்டதால் உடம்பில் படர்ந்திருந்த குளிர் விட்டு விட்டதா

என்று பொருள் கொள்ளலாம்..


எனது ஆண்மை தீண்டி பெண்மை பூ பூத்ததா 

அடடா என் நாணம் இன்று விடை பெற்றதா 

ஒரு பெண்மையை பெண்மை நிலையிலிருந்து வெளிக்கொணரக்கூடிய ஒரு தருணமாக ஒரு ஆகச்சிறந்த காமம் அமையும். அந்தச் சூழலை இந்த வரிகளில் பார்க்கமுடியும் எனது ஆண்மை தீண்டி பெண்மை பூ பூத்ததா என்ற அவனின் கேள்விக்கு அடடா என் நாணம் இன்று விடை பெற்றது என்று இவள் கூறுவதாக பொருத்திப் பார்க்கலாம்...


காதலன் பாடுகிறான் 

"நீ நான் மட்டும் 

வாழ்கின்ற உலகம் போதும் 

உன் தோள் சாயும் இடம் போதுமே..."

பல பாடல்களில் நாம் கேட்டிருப்போம் ஒரு தனி உலகம் அதில் நாம் மட்டும் சுதந்திரமாக காதலை வாழ்வை அனுபவிப்போம் என்று பொருள்படக்கூடிய வரிகள் இருக்கும். ஆனால் இந்த வரிகளில் காதலன் என்ன கூறுகிறான் என்று உற்று நோக்கினால் உனக்கும் எனக்குமான ஒரு தனி உலகம் என்பது முதல்வரி 

ஆனால் அடுத்த வரியில் உன் தோள் சாயும் இடம் போதுமே...

ஒரு உலகம் முழுவதையும் வாங்கிக் கொண்டாலும் உன் தோள் சாயும் இடம் போதுமே என்று கூறும்பொழுது அந்தத் தோள் தரக்கூடிய ஒரு சுகந்தம் வேறு எங்கும் கிடையாது. அந்த உலகத்தில் எங்கும் இல்லாத ஒரு சுகம் அவளின் தோளில் இருக்கிறது. ஆக அது காமத்திற்கு அப்பாற்பட்ட ஒரு காதல். அந்தக் காதல் மட்டுமே இந்த வரிகளை தரமுடியும்.


காதலி பாடுகிறாள் 

"உன் பேர் சொல்லி 

சிலிர்க்கின்ற இன்பம் போதும்

இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன்... ஒன்றோடு ஒன்றாய் கலக்க 

என்னுயிரே காதோரம் காதல் உரைக்க..."

இந்த வரிகளை ஒரு பெண் பாடுவது போல் பாடலில் வருகிறது. ஆனால் இந்த வரியைக் கேட்கும் பொழுது ஒரு ஆணாக நானும் அந்த வரிகளை உச்சரித்து பார்க்கிறேன். உன் பேர் சொல்லி சிலிர்க்கின்ற இன்பம் போதும் என்னும் பொழுது அவரவர் மனதில் நிறைந்து இருக்கக்கூடிய அந்தக் காதலியின் பெயரை உச்சரிக்கக் கூடிய ஒரு கட்டளையை இந்த வரிகள் பிறப்பிக்கிறது என்று நான் உணர்ந்தேன். நானும் அவள் பெயரை உச்சரித்து பார்த்தேன் அவ்வளவு அற்புதமாக அந்த வரிகள் இருபாலினருக்கும் பொருந்துவதாக அமைந்திருக்கிறது. 

பெயர் உச்சரிக்கும் அந்த சுகந்தம் என்பது இறந்தாலும் மீண்டும் பிழைப்பதற்கான ஒரு அசாத்தியத்தை சாத்தியப்படுத்துவதாக ஒரு மெட்டு இந்த வரிகளில் காணக்கிடைக்கும். முக்கியமாக இந்தப் பாடலில் வரக்கூடிய என்னுயிரே என்ற ஒரு  சொல் மீண்டும் மீண்டும் மீண்டும் உயிரை ஒரு பாடு படுத்தவே செய்யும். அத்தனை அற்புதமாக அத்தனை இலாவகமாக உயிரை தாலாட்டக்கூடிய ஒரு உணர்வை தரக்கூடிய சொல்லாக அது அமைந்திருக்கிறது.


சரணம் இரண்டில் அவன் பாடுகிறான் "மழை என்பதா 

வெயில் என்பதா 

பெண்ணே உன் பேரன்பை 

நான் புயல் என்பதா..."

 ஒரு பெண்ணின் காதலை எதனுடன் ஒப்பிடுவது 

அதனை கொட்டும் மழை என்று சொல்வதா 

நனைக்கும் மழை என்று சொல்வதா

நனையத் தூண்டும் மழை என்று சொல்வதா 


சுடும் வெயில் என்று சொல்வதா 

இதமாக இருக்கும்  வெயில் என்று சொல்வதா 

ஒரு பயிருக்கு தேவையான அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான வெயில் என்று சொல்வதா 


இத்தனையையும் கேட்டு விட்டு கடைசியாக மீண்டும் ஒரு கேள்வியை முன் வைக்கிறான் 

பெண்ணே உன் பேரன்பை 

நான் புயல் என்பதா 

இந்த மழைக்கும் வெயிலுக்கும் அப்பாற்பட்ட ஒரு பார்வையாக பேரன்பை புயல் என்று நான் கூறி கொள்ளட்டுமா அப்படி புயல் என்றால் அது சாத்தியப்படுமா... 

சில புயல்கள் மண்ணிற்கு மழையைத் தருவிக்கும் 

அந்த மழை மண்ணை வாழவைக்கும்

மண்ணிற்கு தேவையான ஒரு புயலாக இருக்கும் ஆதலால் அந்தப் பேரன்பை புயலோடு ஒப்பிட்டு கேட்கிறான் என்று நாம் நினைத்துக் கொள்வோம்


அடுத்து காதலி பாடுகிறாள் 

"மெய் என்பதா 

பொய் என்பதா 

மெய்யான பொய் தான் இங்கே 

மெய் ஆனதா..."

இந்தக்காதல் என்பது சாத்தியப்படும் பொழுது எல்லாம் வசந்தம் பெறும். எல்லாம் இனிதே நிறைவேறிவிட்டது என்ற எண்ணத்தில் அந்த கனவு வாழ்க்கையை வாழ தொடங்கியதால் இதனை மெய் என்று கூறுவதா 

அல்லது ஒரு கனவு கண்ட வாழ்க்கையை நனவில் அடையத் தொடங்கி விட்டால் அந்த நனவு வாழ்க்கையின் கனவு போலத் தோன்றும் என்பதால் பொய் என்பதா என்று கேள்வியை முன்வைக்கிறான் காதலன்.  இது மெய்யும் இல்லை பொய்யும் இல்லை இரண்டுக்கும் நடுவில் ஆனது என்பதை மனதில் கொண்டு இவள் மெய்யான பொய் தான் இங்கே மெய் ஆனதா என்கிறாள். நன்றாக யோசித்து பார்த்தோமென்றால் ஒரு காதலை அனுபவிக்க மட்டுமே முடியும்.  அது நினைவெனினும் வாழ்ந்து கொண்டிருக்க முடியும்.  ஆக மெய்யான பொய் ஆம் நினைவு என்பதைப்போல இந்த காதலும் மெய்யான பொய் போல நனவு போன்ற கனவு போல கனவு போன்ற நனவு போல அத்தனை அழகானது.


காதலன் பாடுகிறான் 

"அடியே பெண்ணே 

அறியாத பிள்ளை நானே 

தாய் போல் என்னை 

நீ தாங்க வா..."  என்று.

சரணம் ஒன்றில் 

நீ நான் மட்டும் 

வாழ்கின்ற உலகம் போதும் 

உன் தோள் சாயும் இடம் போதுமே

என்றவன் தான் இங்கு 

அடியே பெண்ணே 

அறியாத பிள்ளை நானே 

தாய் போல் என்னை 

நீ தாங்க வா... 

என்கிறான்.


ஒரு தாய் தன்னுடைய தோளில் தன்னுடைய இடுப்பில் தன்னுடைய மடியில் போட்டு தன் குழந்தையைத் தாங்கிக் கொள்வதைப் போல காதலன் தன்னுடைய காதலியை, தாய் போல் என்னை நீ தாங்க வா என்று அழைக்கிறான். வரிகளோடு நாம் பயணிக்க இந்த மெட்டு இன்பத்துடன் கூடிய எளிமையைக் கொண்டுள்ளது. 


காதலன் கேட்டுவிட்டால் காதலி செய்து தராமல் போய் விடுவாளா... ஆகையால் அவனுடைய ஆசையை அவளும் நிறைவேற்றுவதற்கு தயாராகிறாள்... பின்வரும் வரிகள் வாயிலாக...

"மடி மேல் அன்பே 

பொன் ஊஞ்சல் நானும் செய்தே

தாலாட்ட உன்னை அழைப்பேன்..."

இந்த வரிகள் ஒவ்வொன்றும் கற்பனைக்கு எட்டாத ஒரு உலகத்தை கண் முன்னே நிறுத்தும். கற்பனையான வரிகள். ஆனால் அந்த கற்பனையில் வாழ்ந்து பார்க்க தூண்டும் வரிகள்.


தொடர்ந்து 

"ஒன்றோடு ஒன்றாய் கலக்க 

என் உயிரே 

காதோரம் காதல் உரைக்க...

இரவாக நீ  இரவாக நீ

நிலவாக நான் நிலவாக நான்...

உறவாடும் நேரம் சுகம் தானடா..."

என பாடல் நிறைவு பெறுகிறது.


மறைந்த நா.முத்துக்குமார் பாடல் வரிகள். இசை ஜி வி பிரகாஷ் குமார்.

இறப்பிற்கு முன்னான உன்னுடைய கடைசி ஆசை என்னவென்று கேட்டு நிறைவேற்றக்கூடிய சந்தர்ப்பம் ஒன்று அமைந்தால் 

என் முதல் ஆசையாக என்னுடைய காதலியின் மடியில் அவளைப் பார்த்துக் கொண்டே என் உயிர் பிரிய வேண்டும். அல்லது இப்படி பாடலொன்றில் அவளோடு வாழ்ந்து கொண்டு இந்த உயிர் மறைய வேண்டும் என்றுதான் வேண்டுவேன். 


நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு பாடலை நூறு முறை அளவிற்கு கேட்டு இருக்கிறேன் என்றால் அது இந்தப்பாடல் தான். வாய்ப்பு இருந்தால் கண்களை மூடிக்கொண்டு இந்தப் பாடலை ஒலிக்கவிட்டு நீங்களும் கேளுங்கள். மன்னிக்க நீங்களும் வாழுங்கள் உங்களுக்கு பிடித்தமான காதலியோடு அந்த கற்பனை உலகத்தில் நீங்கள் வாழலாம். அதி அற்புதம் காணலாம்.




யாழ் தண்விகா