Saturday 23 October 2021

கடவுளைத் தோற்றுவித்தவன்

 சிறார் கதை 2


கடவுளைத் தோற்றுவித்தவன்

பெ.விஜயராஜ் காந்தி

 பள்ளிக்கூடத்திலிருந்து வந்தும் வராததுமாக பையைத் தூக்கி எறிந்துவிட்டு “அம்மா உனக்கு எதுக்கும்மா நாகம்மான்னு பேரு வச்சாங்க” என்றான் நவீன். “ஏன்டாப்பா இந்தப் பேருக்கு என்ன குறைச்சல்? நாகம்மா மகனுக்கெல்லாம் பள்ளிக்கூடத்தில் இடமில்லைன்னு உங்க பள்ளிக்கூடத்துல சொல்லிட்டாங்களா” என்றாள் நாகம்மா. 


 “கிண்டல் பண்ணாதம்மா. என்னோட வகுப்புல படிக்குற கண்ணன், உங்கம்மா பேரு நாகம்மா தான. நாகப்பாம்பு மாதிரி படமெடுத்து ஆடுமான்னு கேக்குறான். எனக்குக் கோவம் கோவமா வருது. ஒரு நா இல்லைன்னாலும் ஒருநா என்கிட்ட செமக்க அடி வாங்கப் போறையான்” நவீன் கோவமாகப் பேசினான். 


 “நாகம்மாங்குறது சாமிப் பேருன்னு அவங்கிட்ட சொல்லவேண்டியது தானடா. இல்லன்னா சாருகிட்ட சொல்லவேண்டியது தானடா. சாரு கண்டிச்சு வப்பாருல்ல. இவ்வளவு கோவம் ஆகாதுடா நவீன்” அவனைச் சாந்தப்படுத்தும் விதமாக நாகம்மா பேசினாள்.


 “சரிம்மா. நாளைக்கு நான் சார்கிட்ட சொல்றேன் அவனை. அதுக்கப்புறமும் ஏதாவது சொன்னான்னா அவனுக்கு இருக்கு” என்ற நவீனை முறைத்துப் பார்த்த நாகம்மா சட்டென யோசனை வந்தவளாக சிரித்துக்கொண்டே “ சரிடா. எம்பேருக்கே அவன் கிண்டல் பண்ணுனதுக்கு இவ்வளவு கோவப்படுறயே. ஒன் தாத்தா பாட்டி பேரு உனக்குத் தெரியும்ல. காத்தவராயன். இருளாயி. இதெல்லாம் அவனுக்குத் தெரிஞ்சா இன்னும் கிண்டல் பண்ணுவான்ல. அப்ப என்னடா பண்ணுவ” என எதிர்க் கேள்வியைக் கேட்டாள். “அது தெரிஞ்சாத்தான. அப்படியே தெரிஞ்சாலும் அதையும் சாமிப்பேருன்னு சொல்லி சமாளிச்சுடுவேன்” என்ற அவனை “என்னது சமாளிச்சிடுவியா? உண்மையிலேயே அது சாமிப் பேர் தான்டா” என்ற நாகம்மாளை நிமிர்ந்து பார்த்து “என்னம்மா சொல்ற? நெசமாவா?” என்றான் நவீன் ஆச்சரியத்துடன்.


 “ஆமா. இதெல்லாம் சாமிப் பேர் தான். உன் பாட்டி பேர் இருளாயி. அந்தக் காலத்துல ஆதி மனுசன் இருட்டைப் பார்த்து மிகவும் பயப்படுவான். நெருப்பைக் கண்டுபிடிக்குறதுக்கு முன்னரும் பின்னரும் இருட்டின் மேலிருந்த பயம் அவனுக்குப் போகவே இல்லை. இரவு நேரங்களில் எதையாவது பார்த்து பயந்து அதிர்ச்சியில் இறந்து போவது அடிக்கடி நடந்தது. அவங்களைப் பேய் அடிச்சு செத்ததாக நெனச்சாங்க. அதனால இதையெல்லாம் கோரக் கடவுள்களாக நெனச்சு அதைத் திருப்திப்படுத்த தம்மோட குழந்தைகளுக்கு கருப்பன், கருப்பாயி, இருளன், இருளாயின்னு பேர் வச்சாங்க. அப்படி வந்த பேர் தான் இருளாயி. புரியுதாடா?” என்றாள் நாகம்மா.


 “புரியுதும்மா. அப்ப தாத்தாவுக்கு எதுக்கு காத்தவராயன்னு பேரு?” என்று கேட்டான் நவீன். “ஆதி காலத்தில் இந்த மண்ணு உழுதுபோடாம அப்படியே கிடந்துச்சு. பெரும் சூறாவளிக் காத்து அப்பப்போ அடிக்கும். அந்தச் சூறாவளி மேல் மண்ணை அள்ளிப் பறக்கும்போது அதிலிருக்க பாஸ்பரஸ் காத்தோட சேர்ந்து தீப்பிடிக்கும். அதைப் பார்த்த ஆதிமனுசன் அதை கொள்ளிவாய்ப் பேய் என நெனச்சான். அந்தப் பயத்திலிருந்து விடுபட காற்றை வழிபட ஆரம்பிச்சான். அப்படி காற்றைத் திருப்திப் படுத்த உண்டான பேர் தான் உன் தாத்தா பேரு, காத்தாயி, காத்தப்பன், காத்தவீரி, காத்துக்கருப்பு இப்படிப் பேரெல்லாம்” என்ற நாகம்மாவை வச்ச கண் மாறாமப் பார்த்துக்கொண்டிருந்தான் நவீன். 


 “எவ்ளோ விசயம் தெரிஞ்சு வச்சிருக்கம்மா. சூப்பர்ம்மா. அப்படியே உன் பேருக்கும் ஒரு விளக்கத்தைச் சொல்லிடும்மா. யார் கேட்டாலும் இனி நல்லா பதில் சொல்லிக்கிறேன்” என்றான் நவீன். “பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்” என்ற பழமொழியைக் கேட்டருக்கிறயா?” என்றாள் நாகம்மா. “ம்‌ம்‌ம் கேட்ருக்கேன்” என்றான் நவீன். “ஆதி மனுசன் நல்லா பலசாலியா இருந்தான். வேட்டைக்குப் போற வழில ஏதாவது பாம்பு கடிச்சாக்கூட அதுக்குப் பசிக்கும்போல. அதான் கடிக்குதுன்னு நெனச்சிட்டே நடந்து போவான். கொஞ்ச தூரம் போன பின்னாடி விஷம் தலைக்கேறி உயிர் போயிரும் கடிச்சவனுக்கு. கூடப் போற மத்த ஆளுங்க எல்லாம் அவன் தூங்குறான்னு நெனச்சு விட்டுட்டுப் போயிடுவாங்க. கொஞ்சநா கழிச்சு அந்த உடம்பு கழுகு கொத்தி புழு ஏறி கெட்ட வாடை அடிக்கும். அந்தச் சமயத்திலதான் பொதைக்குற வழக்கமே வந்திருக்கும்னு சொல்றாங்க. சரி. விசயத்துக்கு வாரேன். பாம்புக்குப் பிடிச்ச உணவு கறையான் தான். கறையான் புத்துக்குள்ள போயி கறையானை நல்லாத் தின்னுட்டு, புத்தை விட்டு வெளில வர நினைக்குறப்ப பாம்புக்கு வயிறு முழுக்க இரை இருக்குற தன்னோட உடம்பைத் தூக்கிட்டு வர முடியாம தத்தளிக்கும். அப்போ படமெடுத்து ஆடும். அதைப் பார்த்து பயந்த ஆதி மனுசன் புத்துக்கு முன்னால இறைச்சி, பால் இதெல்லாம் வச்சு “ஏய் பாம்பு, இதெல்லாம் உனக்குத்தான். நல்லாச் சாப்பிடு. எங்க பக்கத்துக்கு வராத”ன்னு சொல்லி வேண்டிக்குவாங்க. அப்படிப் பாம்புக்குப் பயந்த மக்கள், பாம்பால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களோட குழந்தைகளுக்கு வச்ச பேரு தான் நாகம்மா, நாகப்பன், பாம்புலம்மா, பாம்புலய்யா இதெல்லாம். இனிமே கண்ணன் கிண்டலா சொன்னா என்னோட அம்மா பேருக்கு இதுதான்டா விளக்கம்னு சொல்லுடா. கேட்டுக்குவான். கிண்டலடிக்கமாட்டான்” என விளக்கம் சொன்னாள் நாகம்மா. “இனிமேல் அவன் நக்கலடிக்கட்டும். அப்புறம் பார்த்துக்கிறேன்ம்மா” எனச் சொல்லிக்கொண்டே கிளம்பினான் நவீன். கிளம்பியவனிடம் “லேய், உங்கப்பா பேருக்கு என்ன விளக்கம் தெரிஞ்சுக்க. இங்க வா” என்றாள். “எனக்குத் தெரியும்மா. எங்க சார் சொன்னார்” என்றவுடன் அவள் “என்ன சொன்னார் உங்க சார்? எங்க சொல்லு பார்ப்போம். அவர் சொன்னது சரியா இல்லையான்னு சொல்றேன்” என்றாள் நாகம்மா.

 “ஆதி காலத்தில் வாழ்ந்த மனுசங்க எல்லாம் குழுவாக வாழத் தொடங்கியபின்னர் அவர்களுக்குள் எழும் சச்சரவுகளைத் தீர்க்க, பிற குழுவுடன் உண்டாகும் சச்சரவுகளைத் தீர்க்க தங்கள் குழுவில் தலைவன் ஒருவனைத் தேர்ந்தெடுத்தனர். குழுவினர் அனைவரும் அவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டனர். சில சமயங்களில் தனது குழுவைக் காக்க, பிற குழுவோடு சண்டையிட்டு இறந்தும் போயிருக்கிறான். தம்மை வழிநடத்தியவன் என்பதாலும் தம்மை ஆண்ட, காத்த தலைவன் என்பதாலும் தான் தம்மில் வாழ்ந்த அவனுக்கு ஆண்டவன் என்று பெயர் வந்ததாம். சார் சொன்னார். நம்ம குடும்பத்தைக் காப்பவராக அப்பா இருப்பதால் அப்பாவுக்கும் ஆண்டவன் என்ற பேர் பொருத்தம் தானம்மா?” என்றான் நவீன். 

 “அப்பா மட்டும் தான் வீட்டைக் காப்பாத்துறார். நானெல்லாம் காப்பாத்தலயாடா?” என்றாள் நாகம்மா. “எனக்கு எப்பவும் அப்பா, ஆண் ஆண்டவர். அம்மா, பெண் ஆண்டவர்” என்றவனின் நெற்றியில் முத்தமிட்டு மகிழ்ந்தாள் நாகம்மா.

 விரைந்து கிளம்பியவன் சட்டென நின்று “எல்லாருக்கும் சாமிப் பேர் இருக்கு. எனக்கு ஏன்ம்மா நவீன் என்ற பெயர்?” என்றவுடன் நாகம்மா சொல்லத் தொடங்கினாள் “என்னோட அப்பா, அம்மா, அவங்களோட அப்பா, அம்மா எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை இருந்துச்சு. வச்சாங்க. நான் உனக்கு கொஞ்சம் நவீனமா பேர் வைக்கணும்னு தோணுச்சு. அதான் நவீன் என்று பேர் வச்சிட்டேன்” என்று சொல்லியதைக் கேட்டபடி விளையாடச் சென்றான். சுவற்றில் தொங்கவிடப்பட்டிருந்த நாகம்மா ஆண்டவர் திருமணத்தின்போது வழங்கப்பட்ட பெரியார் புகைப்படத்தில் ஒரு கம்பீரம் தோன்றி மறைந்தது அப்போது.



No comments:

Post a Comment