Wednesday 6 September 2023

ரவிக்கைச் சுகந்தம் - ஜான் சுந்தர்


ரவிக்கைச் சுகந்தம்

ஜான் சுந்தர்

கவிதைத் தொகுப்பு

காலச்சுவடு பதிப்பகம்

விலை ரூ 90


பாரதியைக் கொண்டாட வேண்டும் என்றால் பல அபத்தங்களை நாம் சகித்தே ஆகவேண்டும். பாரதியின் வரிகளில் தோய்ந்துபோய்க் கிடக்கும் மனம் அவரின் வாழ்வோடு அந்த வரிகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் ஏனிந்த முரண் என்று கேள்வி கேட்கவே செய்யும். குடிப்பது கூழ் கொப்பளிப்பது பன்னீர் என்ற சொலவடை உண்டு. தனக்கே வாழ, உண்ண திராணியில்லாதபோது கூட காக்கை குருவி எங்கள் சாதி என்று கூற கவிதைத் திராணி வேண்டும் தான். ஆனால் அது வாழ்விற்கான கதவுகளைத் திறந்து வைத்ததா என்றால் அவர் காலத்தில் இல்லை என்றே சொல்லலாம். இறப்பதற்கு முன்னர் கூட எட்டையபுர அரசரிடம் எட்டப்பனின் வரலாறை எழுதித் தருகிறேன் என்று இறைஞ்சி நின்ற வரலாறு பாரதிக்கு உண்டு. என்ன தான் இரக்கம் காட்டினாலும் விலங்குகளிடம் எச்சரிக்கை உணர்வோடுதான் இருக்கவேண்டும். அந்தக் கவனம் இல்லாததால் யானையிடம் தோற்றது கவி வாழ்வு. தொகுப்பில் ஒரு கவிதை சாதாபாரதியின் சகி. வாசிக்க வாசிக்க பாரதியின்மேல் உண்டான கோபம் சொல்லிலடங்காது. வாசிப்போருக்கும் அந்தக் கோபம் உண்டானால் நாம் செல்லம்மாவின் வலியை உணர்ந்த மனிதராக இருக்கிறோம் எனப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

@

சிலிண்டர்க்காரனுக்குக் கொடுக்க

உரூவா இல்லாமல்

செல்லம்மா அல்லாடிக்கொண்டிருக்க 

புலவர் பெருஞ்சபையில்

அயலகத் திரைப்படங்கள் குறித்த

விவாதத்திலிருந்தான் சாதாபாரதி.

@

அவள் மளிகைக் கடையிலிருந்து

அழைத்தபோது மாலிலும்

ரேஷன் புழுக்கத்தில் நெளிந்தபோது

ஏசி பாரிலுமிருந்து

பண்டிதருடன் சொற்சமரஞ் செய்துவந்தான்


.... இப்படியாக நீளும் கவிதைகள் எட்டாம் கவிதையில் உயிரை அரற்றிவிடுகிறது. 

@

வால்விட்ட தலைப்பாகையினை

அவன் சூடிப் பார்த்த முகூர்த்தத்தில்

கூறைப்புடவையினைக் கீறி

தூமைத் துணியாக்கிக் கொண்டாள் சகி.


கவிஞனாக இருப்பவன் குடும்பத்தில் எப்படி இருந்திருக்க வேண்டும், குடும்பத்தை எப்படிப் பார்த்திருக்கவேண்டும் என்பதை அவனின் செயல்கள் வாயிலாகவே கவிதையாக வடித்து அவனுக்குப் பாடம் எடுத்திருக்கிறது என்று இக்கவிதை வரிகளை வாசிக்கும்போது உணர முடிந்தது. 


அரண்மனைக் கிளி என்ற திரைப்படத்தில் புத்திமதி சொல்லயிலே தட்டிச்சென்ற பாவியடி, விட்டுவிட்டுப் போனபின்னே வேகுது என் ஆவியடி... என்ற வரிகளை ராஜாவின் குரலில் கேட்கும்போது உண்டாகும் தாயின் மீதான மதிப்பும் கரிசனையும் நேரம் கடக்கக் கடக்க மாறிவிடுகிறது. அதனை கவிதையாக்கி வைத்திருக்கிறார் ஜான் சுந்தர் தோழர்.

@

சைக்கிள் காணாமல் போனபின்

கவனமாய் பூட்டுகிறேன்.

அம்மா படத்துக்கு

பூ வைப்பதும் அப்படித்தான்...


அருமை தோழர்.


ஊரே ஞாயிறைக் கொண்டாடும் பணியை செவ்வனே செய்கிறது. பக்கத்து வீட்டில் கோழிக்கறி. இன்னொரு பக்கம் ஆடு. இவற்றிற்கு வாய்ப்பில்லாத எளியவன் என்ன செய்வான்...

@

எனது கிழமையின் எளிய உடலில்

மீனை வரைய ஆயத்தமானபோது

மாதக் கடைசி என்றதென் சட்டைப்பை


ஐம்பது ரூபாய்த்தாளுக்குள்

அரைக்கிலோ மீன்களையாகிலும்

வரைந்துவிட முடியாதா...


வீட்டுக்குப் போனதும் மனைவியிடம்

பழைய ஹார்லிக்ஸ் பாட்டிலொன்றை

கழுவித்தரக் கேட்டேன்.

வாழும்நாள் வரையில்

என் வீட்டின் அலங்காரமாயிருக்குமிந்த ஜோடி மீன்கள்...


வருத்தங்களையும், இயலாமையையும் தூக்கி எறிந்து அங்கே மகிழ்வை உட்காரவைக்கும்வழியாய் இந்தக் கவிதை எனக்குள் ஊடுருவியது. இது போல இன்னும் பல கவிதைகள். வாய்ப்பு உள்ளோர் வாசியுங்கள். ரவிக்கைச் சுகந்தம் உணருங்கள். 


வாழ்த்துகள் தோழர் John Sundar.


யாழ் தண்விகா



No comments:

Post a Comment