Monday 2 October 2023

சரக்கொன்றை நிழற்சாலை


 சரக்கொன்றை நிழற்சாலை

ஹைக்கூ கவிதைத் தொகுப்பு

ஷாஜிலா பர்வீன் யாகூப்

Mohamad Sarjila Yakoop 

படைப்பு பதிப்பகம்

விலை ரூ: 100க்

பக்கங்கள் : 112


ஹைக்கூ ஒளியில் வாழ்வின் நிழல்...


மூன்று வரிகளில் எடுத்துக்கொண்ட கருவை கவிதையாக்கும் வித்தகம் ஹைக்கூ... மிஷ்கின் மொழிபெயர்த்த ஹைக்கூ ஒன்று. "நத்தை போன

பாதையில்

வெயிலடித்தது".

மிக இயல்பாக வாசித்துக் கடக்கும் ஒரு கவிதை. ஆனால் உள்ளே பொதிந்திருக்கும் வரலாற்றைத் தோண்டிப் பார்க்க மெனக்கெட வைக்கும் சூட்சுமம் கவிதையில் இருக்கிறது. அவ்வாறு வாசிக்க வைப்பதுதான் ஹைக்கூவின் சாமர்த்தியம் மற்றும் சாகசம். தோழர் ஷர்ஜிலா அவர்களின் ஹைக்கூக்கள் பல அவ்வாறான தேடலை உண்டுபண்ணும் கவிதைகள். வாசிக்க வாசிக்க இயற்கையின் உள்ளார்ந்த அதிசயங்களில் நம்மை மூழ்கடிக்கிறார் தோழர்.


இயற்கையை அழித்தல் என்பது வெறும் அழித்தல் என்பதோடு முடிந்து விடுகிறதா... அது சூழலை அழித்தல், உயிர்களை அழித்தல், உயிர்களுக்கிடையேயான சங்கிலியை உடைத்தல். அதனை மனிதனுக்குக் கடத்தும் வரிகள் இவை.

தன்கூட்டைப் பின்தொடரும் பறவை

ஜேசிபியில் செல்கிறது

வேருடன் மரம்.

ஏனோ நம் குழந்தையை யாரோ பறித்துப் போக நாம் பின்னால் ஓடுவது போலான வலி.


இயற்கைப் பேரழிவுகள் பெரும்பாலானவை மனிதன் தனக்குத்தானே உண்டாக்கிக் கொண்டவையோ என்றெண்ணும் வண்ணம் அவ்வப்போது வெள்ளம், புயல் உள்ளிட்ட பாதிப்புகளைக் காணும்போது ஏற்படும். சென்னையில் முழுதும் நிடம்பியபின் நள்ளிரவில் திறக்கப்பட்ட நீர்த்தேக்கம் உண்டாக்கிய பாதிப்புகள் சொல்லி மாளாது. அலையாத்திக்காடுகளை கடற்கரை ஓரங்களில் அமைக்காததால் ஊருக்குள் சுனாமி பாய்ந்து கொத்துக்கொத்தாக கடலுக்குள் இழுத்துச் சென்ற உயிர்கள் பல லட்சங்கள். இது போன்ற சம்பவங்கள் நடந்து முடிந்தபின் காணும் காட்சிகள் போர் முடிவுற்றபிறகு காணும் ஓலங்கள் போலவிருக்கும். அது போன்ற ஒரு காட்சி.

வெள்ளம் வடிந்த வீதி

வீட்டுக் கூரையின் மேல்

தரைதட்டி நிற்கும் படகு.


இனி எப்போது பெங்குவின்களைப் பார்த்தாலும் இக்கவிதையே கண்முன் விரியும். ஆச்சர்யப்பட வைத்த ஒப்பீடு.

கருப்பு மேலங்கி

கழட்டாத வழக்கறிஞர்களா

கடற்கரை பெங்குவின்கள்...!


பால்யங்களைக் கண்முன் நிறுத்தும் பல ஹைக்கூக்கள் தொகுப்பெங்கும். அதற்குள் நம்மைப் புகுத்தி விளையாட வைத்த ஒரு ஹைக்கூ...

மணல்வீடு கட்டும் அண்ணனுக்கு

காத்திருக்கும்

பாப்பாவின் சிரட்டைமண் இட்டிலி... 

சிறுவயது அன்பின் நேர்த்தி எவ்வளவு சுவாரஸ்யமானது... அருமை.


குழந்தைகள் பள்ளிக்குச் சென்றபின் வீடு அனுபவிக்கும் கொடுமை என்பது பேரவலம் தான். அப்படி வீடு என்ன கொடுமை அனுபவித்து விடப் போகிறது... தோழர் சொல்கிறார்.

பள்ளி சென்ற குழந்தைகள்

தனித்துக் கேட்கும்

நகரும் கடிகார முட்கள்.

வீடு யாருக்கு? கடிகார ஒலிகள் யாருக்கு? என்ற கேள்விகள் உதிக்கும் அதே நேரத்தில் பள்ளியிலிருந்து குழந்தைகள் திரும்பும் நேரத்தைக் கணக்கிட்டு காத்திருக்கிறதோ கடிகாரம் என ஆறுதல் கொள்கிறது மனம்.


நத்தையாகிறேன்

நிழலெல்லாம் பூக்களுடன்

சரக்கொன்றை நிழற்சாலை...

பூ வீதி எதுவென்றாலும் அது உண்டாக்கும் சலனம் மனித மனத்தை ஒரு பாடுபடுத்த் வேண்டும். உதிர்ந்த பூ என்று அவ்வளவு வேகமாக மிதித்து விடுகிறதா நமது காலடிகள்? அவற்றை மிதிப்பதால் என்ன பாதகம் இந்த மண்ணுக்கு நேர்ந்துவிடப் போகிறது... ஆயினும் நாம் யோசிப்பதால் தான் மனிதம் ஒவ்வொரு உயிருக்குள்ளும் தன் வேர்களை ஆழப் பாய்ச்சுகிறது. அதுவே இந்த பூமி இன்னும் வாழ காரணமாக இருக்கிறது. உதிர்ந்துகிடக்கும் சரக்கொன்றைப் பூக்கள்... கடக்க நத்தையாகும் மனிதம்... நிழலெல்லாம் பூக்கள்... நத்தை சுரக்கும் திரவம்... இதுபோன்ற காரணிகளுக்குள் ஒளிந்து கிடக்கும் ஏதோவொன்று உண்டாக்கும் கிளர்ச்சி கவிதையின் சிறப்பை மிளிரச் செய்கிறது. 


பதிப்பாளர் Mohamed Ali Jinna தோழரின் பதிப்புரை, Surulipatti Si Vaji அண்ணன் அவர்களின் அணிந்துரை, இந்து தமிழ் திசை மு.முருகேஷ் தோழரின் தொகுப்பு குறித்த ஹைக்கூப் பார்வை ஆரணி இரா. தயாளன் தோழர் கூறும் தறி வீட்டுப் பூனைகள், ஷர்ஜிலா தோழரின் என்னுரை இவையே ஒரு ஹைக்கூ வகுப்பைப் பார்த்த பெரும் திருப்தி அளிக்கிறது.


நிறைய கவிதைகள். நிறைவான பார்வை. 


வாசிப்போம், ஹைக்கூ மிளிர.


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️

No comments:

Post a Comment