Saturday 18 April 2020

செங்கிஸ்கான் #முகில்

செங்கிஸ்கான்

முகில்

கிழக்கு பதிப்பகம்

184 பக்கங்கள்

#மெர்கிட் என்ற மங்கோலிய இனத்தை சேர்ந்த சிலுடுவின் மனைவியான ஹோலுன் என்பவரை #போர்ஜிகின் இனக்குழுவைச் சேர்ந்த யெசுகெய் என்பவர் கவர்ந்து சென்று மணம் முடிக்கிறார். அவர்களுக்குப் பிறந்த குழந்தையே டெமுஜின். செங்கிஸ்கானின் நிஜப்பெயர் டெமுஜின். #டட்டார் இனக் குழுவின் தலைவன் பெயர் டெமுஜின் முந்தைய நாளில் போரிட்டு வென்ற எதிரி குழுவின் தலைவன் பெயர் அது. இப்படி மங்கோலிய இனத்திற்குள் ஏகப்பட்ட இனக்குழுக்கள் பிரிந்து பிரிந்து வாழ்ந்த காலகட்டம். அவர்களில் ஒவ்வொருவரும் தங்கள் இனக்குழுக்களை வலுப்படுத்த பிற இனக் குழுக்களுடன் போரிட்டு அவர்கள் வைத்திருக்கக்கூடிய குதிரைகளை கால்நடைகளை பெண்களை அபகரித்துக் கொண்டு வந்து தங்கள் இனக்குழுக்களை வலுப்படுத்திக் கொள்ளும் வழக்கம் அல்லது அவர்களை அடிமைப் படுத்திக் கொள்ளும் வழக்கம் அவ்வப்போது தொடர்ந்து கொண்டே வந்திருக்கிறது.

மங்கோலிய நாடோடிகளைத் தடுக்கவே சீனர்கள் தடுப்புச் சுவரைக் கட்டினார்கள். கோடை, குளிர், வசந்த காலம் என்று ஒவ்வொரு காலத்திற்கும் குடியிருக்கும் நிலத்தை மாற்றிக்கொண்டே இருப்பார்கள் மங்கோலியர். ஒன்பது வயதில் டெமுஜினுக்கு பொருத்தமான பெண்ணை நிச்சயம் செய்வதற்காக தந்தையுடன் பாதுகாவலர்கள் சிலருடன் கிளம்புகிறார். போர்ட்டெ என்ற பெண்ணை நிச்சயம் செய்கிறார்கள். டெமுஜின் மணப்பெண் சேவைக்காக அங்கேயே தங்கி தந்தை தனது இருப்பிடம் நோக்கி வரும் வழியில் பிற இனக்குழு ஒன்றில் வாங்கி உண்ட விச பாலால் கொல்லப்படுகிறார்.

குடும்பத்தின் சுமை டெமுஜின் மேல் விழுகிறது. சில காலங்களுக்கு பின்னால் அவனுக்கு அறிமுகமாகும் நட்பு ஜமுக்கா. இவன் மூலம் நட்பு வளரும் அதே சூழலில் மங்கோலிய இனம் அனைத்தையும் ஒன்று சேர்க்கவேண்டும் என்ற லட்சியமும் பூக்கிறது இருவருக்கும். ஜமுக்கா #ஜடாரன் இனக்குழுவினர்.

#டாய்சூட் இனக்குழுவிடம் ஒருமுறை சிக்கிக்கொண்ட டெமுஜின் பல போராட்டத்திற்குப் பின் அங்கிருந்து தப்பித்து வருகிறான். திருடர்களால் தனது இடத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட குதிரைகளை மீட்கச் சென்று வெற்றியோடு டெமுஜின் திரும்புகிறான். 16வயதில் போர்ட்டே உடன் திருமணம். தேனிலவின் போது எதிர்பாரா தாக்குதலால் போர்ட்டே எதிரி குழுவால் கடத்தப்படுகிறாள். அவளை மீட்க #கெரியிட் குழு தலைவன் ஆங் கானிடத்தில் உதவி கேட்டு மனைவியை மீட்க செல்கிறான். சில மாதங்கள் ஆன சூழலில் அங்கு சிறு போருக்குப் பின் போர்ட்டேவைக் காண்கிறான். ஆனால் அவள் எதிரிக் குழு நபரால் கர்ப்பம் ஆன நிலையில். ஆனாலும் அழைத்து வருகிறான். ஆண் குழந்தை பிறக்கிறது.

தொடர்ந்து சிறு சிறு படையெடுப்புகள். அனைத்திலும் வெற்றி. இனக்குழுக்கள் சமரசத்தின் மூலம், போரின் மூலம் இணைக்கப்படுதல். இடையே ஜமுக்கா தான் தான் மங்கோலியப் பேரரசின் தலைவனாக இருக்கவேண்டும் என்ற ஆசை. ஆங் கான் ஒரு புறம். இவர்களை எவ்வாறு வென்றான், மங்கோலியப் பேரரசு செங்கிஸ்கான் அமைத்த பின்னர் உலகை வெல்லும் வாய்ப்பு எப்படி எவ்வளவு தூரம் வந்தது, இந்தியாவுக்குள் ஏன் ஊடுருவ முடியவில்லை என்பதை அருமையாக எழுத்தால் காட்சிப்படுத்தியுள்ளார் முகில்.  ஐரோப்பா மற்றும் ஆசியாவில் வாழும் இருநூறில் ஒருவர் செங்கிஸ்கானின் பரம்பரை என்று மரபணு சோதனை சொல்கிறது. சேர சோழ பாண்டிய பரம்பரை என்று சொல்லிக்கொள்வது போல செங்கிஸ் பரம்பரையாகவும் நம்மில் ஒருவர் இருக்கலாம். வாசிக்க வாசிக்க கண்முன் ஒரு திரைப்படம் பார்க்கும் பிரமிப்பு.

வாழ்த்துகள் தோழர் #முகில்.

No comments:

Post a Comment