Saturday 11 April 2020

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை #அம்பை

#சிவப்புக்_கழுத்துடன்_ஒரு_பச்சைப்_பறவை

சிறுகதைத் தொகுப்பு

 #அம்பை

காலச்சுவடு பதிப்பகம்

நீண்ட நாள் வாசித்த ஒரு சிறுகதைத் தொகுப்பு. 167பக்கங்கள். 13 சிறுகதைகள்.

பெண்களை மையப்படுத்திய கதைகள் அனைத்தும். கதைகளை சுவாரஸ்யப்படுத்த எதையும் செய்யாமல் அனைத்தையும் அதனதன் போக்கில் இயங்க வைத்திருப்பது இவரின் தனித்துவம் போல. முதல் கதையான தொண்டை புடைத்த காகம் ஒன்று என்பதில் வயது முதிர்ந்த தந்தையுடனான வாழ்வை, சமையலறை வழியாகக் காணும் காகம், சாலையில் பைக்கின் சக்கரங்களின் கீழ் அடிபட்டு சாகும் காகத்தின் கண்களில் இருந்து வழியும் நீர் என்பதாக நகர்த்தியிருக்கிறார். கழுத்தேறி இதயம் இறங்குகிறது வலி.

சாம்பல் மேல் எழும் நகரம் கதையானது வீடு இடம் பெயரும் வலியை அதுவும் வயதானவர்கள் உடன் வாழும்போது அவர்களைப் பராமரித்தல், அவர்களை உடனழைத்துச் செல்லுதல் என்பது உள்ளிட்ட வலிகள் எதை நோக்கி வாழ்வை இழுத்துச் செல்லும் என்பதைப் பேசுகிறது.

வீழ்தல் கதை நோயில் வீழ்ந்த தந்தைக்கு செலவழிக்க யோசிக்கும் வெளிநாட்டு வாழ் மகனின் மன நிலையையும் அதனால் தாய் எடுக்கும் முடிவையும் வலியோடு பதிவு செய்திருக்கிறது.

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை   ஒரு நீள் கதை. வாழ்தல் பற்றிய எண்ணங்கள் காலப்போக்கில் எப்படி மாறுகிறது, அதற்கேற்றாற்போல் வாழ்பவர்கள் தங்களை என்ன மனநிலைக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை வசந்தன் மைதிலி தேன்மொழி கதாபாத்திரங்கள் மூலமாக கதாசிரியர் கூறுகிறார்.

1984 கதை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இறந்த பொழுது உண்டான கலவரங்கள் குறித்த பின்னணியில் செல்கிறது.

வில் முறியாத சுயம்வரங்கள் கதையானது பணி ஓய்வு பெறும் காலத்தில் ஒரு பெண் தேடிக் கொள்ளும் உறவு குறித்துப் பேசுகிறது.

இன்னும் சில கதைகளும்
பயணம் 21, 22, 23 குறித்த கதைகளும்....

பொய்கை கதையும்
சிங்கத்தின் வால் கதையும் புனைவின் வழி செல்கிறது.

வாசிப்பில் ஒரு புதிய அனுபவம் அம்பையின் கதைகளை வாசிக்கும்போது அடைய முடிகிறது. மனதை ஊடுருவும் வரிகள், மனதைப் படம் பிடித்திருக்கும் வரிகள் என இரு நிலைகளையும் வாசிப்பவர் அடைவர்  என்பதில் மாற்றமில்லை...

யாழ் தண்விகா

No comments:

Post a Comment