Wednesday 15 April 2020

முழு விடுதலைக்கான வழி # டாக்டர் அம்பேத்கர்

முழு விடுதலைக்கான வழி

டாக்டர் அம்பேத்கர்

தலித் முரசு  வெளியீடு
சென்னை.

மத மாற்றம் செய்வதற்கு முன்னால் ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டி அவர்களிடம் மத மாற்றத்தின் தேவை குறித்த கருத்தைக் கொண்டுசேர்க்கும் விதமாக அவர்களின் கருத்தை அறியும் முகமாக அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய மாபெரும் உரை.

தீண்டத்தகாதவன் என்பவன் மேல் பரிவு, சமத்துவம், சுதந்திரம் இப்படி எதையும் அளிக்காத இந்து மதம் அவசியமா... சாதி என்பது இல்லாத இந்து மதம் என்பது ஒரு காலமும் சாத்தியமில்லை. அப்படியிருக்க காலமெல்லாம் அடிமையாக, சாதி இந்துக்களின் ஏவலாளாக எதற்கு இருக்கவேண்டும்? இந்து மதம் பொருளாதார நன்மையை அளிக்கிறதா? சாதி இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவனுக்கும் இழைக்கப்படும் கொடுமைகள் ஒரே வகைப்பட்டதா? மானுட சிந்தனைக்கு இந்து மதம் மதிப்பளிக்கிறதா? ஹரிஜன் என்ற சொல்  இழிவைப் போக்கிவிட்டதா? இந்து மதத்தை எதிர்த்து மகாத்மா காந்தியால் சத்தியாக்கிரகம் இருக்க முடியுமா? முன்னோர்கள் பின்பற்றிய அதே இந்து மதத்தை அப்படியே காலம் காலமாக தொடரத்தான் வேண்டுமா... எந்த மதம் என்று தீர்மானிக்க மக்களுக்கே உரிமை. ஆனால் எப்பொழுது? எத்தனை பேர் மதமாற்ற மக்கள் திரளில் பங்கேற்பது...
என்பது போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை முன்வைத்து அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய உரை. இன்றைய காலகட்டம் வரை அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுக்கப்பட்ட கேள்விகள் அப்படியே தான் இருக்கின்றன. மத மாற்றம் என்றவுடன் அதைத் தடுக்கும் வண்ணம் முன் வந்து நின்று அதைத் தடுக்க நினைக்கும் இந்து மத சீர்த்திருத்தவாதிகளிடம் அம்பேத்கர் கேட்ட கேள்விகளும் அப்படியேதான் நிற்கின்றன. 85 ஆண்டுகள் கடந்துவிட்டன பதில்கள் இல்லை. மாறாக இன்னும் தீவிரத் தன்மையுடன் ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கிய இந்து மதத்தின் கொடுங்கரங்கள் நீண்டபடிதான் இருக்கின்றன.

தலித் முரசு, பதிப்புரையில் கூறிய கடைசி வார்த்தை அம்பேத்கரின் உரையை ஒற்றை வார்த்தையில் நிறைவு செய்து வைக்கிறது
"கீழ் வெண்மணிகளை விவாதிப்பதற்குப் பதில் அவற்றைத் தடுக்கும் மீனாட்சிபுரங்களை விவாதிக்கத் தொடங்குங்கள்"

முற்போக்கு சக்திகள் வாசிக்க வேண்டிய புத்தகம். பிற்போக்கு சக்திகளிடம்  கொண்டு சேர்க்கவேண்டிய புத்தகமும் கூட.

யாழ் தண்விகா

No comments:

Post a Comment