Tuesday 14 April 2020

வயது வந்தவர்களுக்கு மட்டும் #கி.ராஜநாராயணன்

வயது வந்தவர்களுக்கு மட்டும்
(நாட்டுப்புறப் பாலியல் கதைகள்)

கி. ராஜநாராயணன்

அகரம் வெளியீடு
தஞ்சாவூர்

248 பக்கங்கள்

பாலியல் கதைகள் என்றவுடன் மேற்படி கதைகள் என்ற நினைவு வந்து போகும். காதலையும் காமத்தையும் கொண்டாடும் ஒரு சமூகம் தான் அன்பு என்ற சொல்லைக் கரம் பிடித்து அழைத்துச் செல்வதற்கு தகுதியை உடையதாயிருக்கும். பாலியல் கதைகள் என்றால் காதை மூடிக்கொண்டு கடக்கும் மனிதர்கள் தன்னைப் பற்றிய ஒரு பிம்பத்தை வலிய கொண்டு வர முயற்சி செய்கிறார்கள் என்பதைத் தவிர வேறொரு சுவாரஸ்யமும் இருக்கப் போவதில்லை. அப்பனும் ஆத்தாளும் சேராமப் போனா நீயும் தான் பொறக்க முடியுமா... என்ற வார்த்தை காதல் என்பது பொது உடைமை என்ற பாடலில் வரும். இந்த வார்த்தை வெறும் காதலால் மட்டும் நிரப்பப் பட்டிருக்குமா என்பது ஆய்ந்து உணரப்படவேண்டிய ஒன்று.

மஞ்சள் பத்திரிக்கைகள், சரோஜா தேவி கதைகள் என்று எண்ணற்றவை புழங்கிய மண் இது. அது செக்சு படங்கள் என்ற பெயரில் திரைப்படமாக வந்து மனித மனத்தை தேடலின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அதில் வெறுப்புத் தட்டிய ஒரு பொழுதில் அதே திரைப்படத்தில் பிட் சீன்ஸ் வைத்து அதனால் திருப்தி காண வைத்தது. என்னதான் ஷகிலா படம் என்றாலும் பிட் இல்லாமல் படம் முழுமையடையாது என்ற கால கட்டம் கடந்த பின்னர் அதீத தொழில் நுட்பம்! முழுக்க முழுக்க ஆபாச படங்களை குறுந்தகடு, தொடர்ந்து அலைபேசியின் மூலமாக கைக்குள் கொண்டுவந்து திணித்தது. இன்று காமம் என்பது உடலின் வேலை என்பதாக மட்டும் மாறிப் போனது எதனால்... காமம் என்பது இதுதானா...

நண்பர்கள், தோழிகள், காதலர்கள், கணவன் மனைவி, முறைமைக்காரர்கள் என பலரும் பலவிடத்தில் பகிர்ந்த ஒன்று தான் பாலியல் கதைகள், இரட்டை அர்த்த வார்த்தைகள். அது ஆழ் மனதில் எப்பொழுதும் போல் பூத்துக் கிடக்கிறது. அதை வெளிப்படுத்தும் விதத்தில் அது அர்த்தப் படுகிறது. அது எதற்காக ஒவ்வொரு மனிதனால் வெளிக்கொணரப்படுகிறது என்பதும் உணரவேண்டிய ஒன்று.

கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்பது கணவன் மனைவியாக உறவுக்குள் வந்த பின்னர் சமூகம் மாற்றம் பெற்றது. அந்த சுதந்திரம் ஆண் பெண் இரு பாலருக்கும் சமத்துவத்தைப் பெற்றுத் தந்து விட்டதா என்றால் நாம் வாழும் சமூகத்தில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆண் பாலியல் குறித்து பேசினால் அவனின் தனித்திறன் என்றும் பெண்  பேசினால் அவளை வேறொரு கோணத்தில் பார்ப்பதையும் பார்க்கிறோம். பசி உணர்வு போலவே பால் உணர்வு. அது ஆணுக்கும் பெண்ணும் பொது என்பதை உணரத்தக்க பல கதைகள். இந்த நூலானது நாட்டுப்புறப்பகுதிகளில் வழங்கி வந்த பாலியல் கதைகள்.

இதில் அரசர்கள் காலம், குருகுல காலம் முதல் தற்போது வழங்கி வரும் கதைகள் வரை சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதைக்கும் பின்னால் உள்ள அரசியலை நாம் முடிச்சிட்டு பார்ப்பதில் நமது அறிவினை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லலாம். அரச சாம்ராஜ்யம் எப்படி அழிந்தது, பாலியலில் பெண் என்பவள் எப்படி பயன்படுத்தப் படுகிறாள், ஓர் ஆண் ஒருத்தியை சேர்த்துக்கொள்ளும் கதைகளும் உண்டு. ஒரு பெண் ஓர் ஆணைச் சேர்த்துக்கொள்ளும் கதைகளும் உண்டு.  கையாலாகதவள் என்று பெண்ணைக் குற்றம் சாட்டுவது போல கையாலாகாதவன் என்று ஆணைக் குற்றம் சாட்டவும் கதைகள் உண்டு.

மாமனார் மருமகள், மாமியார் மருமகள் இவர்கள் இடையே தேவைப்படும் இடைவெளி எங்கிருந்து தொடங்கியது அதற்காக வழங்கப்பட்ட கதைகள் என்ன,
அலைகளில் ஆண் அலை, பெண் அலை என்று ஏன் வழங்கப்படுகின்றன, அந்த அலைகள் ஏன் ஒன்று சேர்வதில்லை, தந்தை மகள் உறவு என்பது என்ன, சுரைக்காய் என்பது எதன் குறியீடு இப்படி பல கதைகள். நாம் தற்போது பேசிவரும் கதைகள் அல்லாத புதிய கதைகள் பல உண்டு. நாம் பேசி வரும் கதைகளும் சில உண்டு.

கி.ரா. அவர்கள் இது போன்ற பாலியல் கதைகளை சேகரிப்பதற்கு யாரும் இல்லாததால் நான் இந்த வேலையைச் செய்கிறேன் என்கிறார். பேச்சு வழக்கில், ஒரு கதை சொல்லியின் இடத்தில் நின்று தன்னால் இயன்ற அளவுக்கு பாலியல் கதைகளை எழுத்தில் கொண்டு வந்துள்ளார். வயது வந்தவர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய கதைகள். வயது வந்தும் வயதுக்கு தேவையான முதிர்ச்சியை அடையாமல் இருப்பவர்களும் வாசிக்க வேண்டிய புத்தகம்.

யாழ் தண்விகா

No comments:

Post a Comment