Saturday 4 April 2020

மியாவ் # சி.சரவணகார்த்திகேயன்

#மியாவ்

சிறுகதைத் தொகுப்பு

Saravanakaryhikeyan Chinnadurai.

உயிர்மை பதிப்பகம்

#அணங்கு

மியாவ் தொகுப்பில் கடைசி. நவீன தொழில் நுட்ப கண்டுபிடிப்பு சார்ந்தே இருக்கும் என்று கடைசி வரை எதிர்பார்த்தேன். ஆனால் தொடக்கம் முதல் நீட் தேர்வின் வலிகளுடன் பயணிக்கிறது. அப்பா மகள் இருவரும் தமிழகத்திலிருந்து கேரளம் பயணித்து தேர்வெழுத வேண்டும். நீதிமன்றங்களின் கைவிரிப்பு, மாணவ மாணவிகளின் மன உளைச்சலை அருமையாக கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். பயணத்தால் திடீரென்று ஆன மாதவிடாய், அதற்காக அப்பாவிடம் நாப்கின் வாங்கச் சொல்லுமிடம், அவர் இல்லையென்று திரும்புதல், அதனால் அவள் துணியைப் பயன்படுத்துதல், தேர்விடத்தில் நடக்கும் சோதனைகள் என ஒவ்வொன்றும் கண்முன் நடப்பதுபோல. வாசிக்க வாசிக்க கண்ணில் நீர் கட்டிக்கொண்டது. அங்கு நடக்கும் சோதனைகள் வலிகளின் உச்சம். இப்படி சொந்த நாட்டு மக்களை சோதனைக்கு உள்ளாக்கியவர்கள்தான் Corono கொண்டு வந்தவர்களை நாடு முழுக்க நடமாடவிட்டவர்கள் என்றெண்ணம் வந்துபோனது. வயதுக்கு வரும் முன்னரே சற்றே பெரிய மார்பகங்களைக் கொண்டிருத்தல், அதுவும் வறுமை தொற்றியிருக்கும் நிலையில் வாழும் ஒரு பெண்ணின் அசூயையான உணர்வு இதனை எவ்வித பூச்சும் இன்றி வடித்திருக்கிரார். கதையின் இறுதி நீட்டின் மேல் குருதியை உமிழ்வது போலிருந்தது. மேலும் தேர்வெழுதும் மாணவியின் பெயர் கதைக்கு அவ்வளவு பொருத்தம்...

#மோகினியாட்டம்

Facebook மூலமாக அறிமுகம் இருவர். நாளாக நாளாக காதலாகிறது. ஒருநாள் ரமணி தன் காதலை சுஜாவிடம் சொல்கிறான். சுஜா கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்கிறாள். ரமணியின் பிறந்தநாள் அன்று தான் ஒரு பெண் அல்ல ஆண் என்றும் fake id என்றும் கூறுகிறான் சுஜா. இதை யாரிடமும் கூறவேண்டாம் என்ற புரிதலின் படி பிரிக்கின்றனர். சுஜா ஒரு fb பிரபலம். மேலும் ரமணி மெசஞ்சரில் அனுப்பிய பல தகவல்கள் சுஜாவிடம் இருப்பதும் ஒரு காரணம். சுஜா ஆண் என்று சொன்னாலும் தான் ஒரு பெண் தான் எனச் சொல்லிவிட மாட்டாளா என ஏங்குகிறது ரமணியின் மனது. ஆனால் ரமணி யார்...? ஆணா பெண்ணா...? அது ரமணிக்குத்தானே தெரியும்... அந்த முடிச்சின் சுவாரஸ்யம் கதையைப் படித்தால் புரியும்...

#பெட்டை

சாதி மறுப்புத் திருமணம் செய்யத் துணிந்தவளின் காதலனை மிரட்டிப் பிரித்து விடுகின்றனர். அதன்பின் அவளை அதே சாதிக்காரன் ஒருவன் திருமணம் முடிக்கிறான். உடலெங்கும் விசம் அவனுக்கு. அவ்வப்போது வார்த்தைகளால் கொல்கிறான். ஆனாலும் வீட்டிலேயே இருக்க இயலாமல் கணவனிடம் அனுமதி பெற்று ஒரு அடகுக் கடையில் சேர்கிறாள். மேலாளராக இருப்பவனால் வரும் தொந்தரவு காரணமாக அங்கு செல்லவில்லை என்று கணவனிடம் கூறுகிறாள். அதற்கு அவன் என்ன பதில் அளித்திருப்பான்... அவள் வாழும் தெருவில் உள்ள ஒரு பெட்டை நாயைச் சுற்றி ஆண் நாய்க் கூட்டம். ஆனால் கணவனாக உள்ளவன் எந்த நாயைப் பலிகடா ஆக்குகிறான்... இந்த இரண்டையும் முடிச்சிட்டு முடிகிறது கதை. மாதவியின் முடிவும் பெட்டைத் தனமாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்வதா... அல்லது இவர்கள் முன் வாழ்வதற்கு இதுதான் இவர்களுக்கு அளிக்கும் தண்டனை என மாதவி முடிவெடுத்துவிட்டாளா என யோசிக்க வைக்கிறது கதை...

#நீதிக்கதை

தற்கொலை விளையாட்டான ப்ளூவேல் கேமை மையப்படுத்திய கதை. சாக விரும்புபவன் மற்றும் அவனுக்கான டாஸ்க் கொடுக்கும் நபர் இருவருக்கும் இடையே நடக்கும் அன்பு யுத்தம். ஆனால் கடைசியில் என்ன நடக்கிறது என்பதை பதட்டத்தோடு நகர்த்திக்கொண்டு சென்று சொல்கிறது கதை. நீலத் திமிங்கல விளையாட்டு என்பதன் சுருக்கம் நீதிக்கத்தை என்று வைத்துக்கொண்டாலும் விளையாட்டின் நீதியையும் காப்பாற்றுகிறது கதை. வேற லெவல்...

#அழியாக்கோலம்

டிவிட்டர்ல டி எம்மில் பகிர்ந்துகொண்ட டாப்லெஸ் செல்ஃபி திருமணத்திற்கு முன் ஒருத்தியின் வாழ்வை எப்படிப் பதம் பார்க்கிறது என்பது கதை. ஆனால் அது யாரால் எப்படி லீக் ஆனது என்பதுதான் திருப்பம்...

#மியாவ்...

ஆண் பெண்ணிடையே நிகழும் ரசவாதம்  தான் மையம். இளமையை எப்படிக் களிப்போடு வைப்பது என்பதை பெண்களுடனான சுவாரஸ்யத் தொடர்புகளுடன் கோர்த்து கோர்வையாக்கிக் காட்டியிருக்கிறது கதை. வசியம் என்பதை எல்லோரும் கைக்கொண்டுவிட்டால் வசியத்திற்கு மதிப்பில்லாமல் போய்விடும் போல. அத்தகைய வசியம் எழுத்தாக கதாசிரியருக்கு வாய்த்திருக்கிறது...

#நியூட்டனின்_மூன்றாம்_விதி

இயந்திரத்திற்கும் பூக்கும் காதலை கிரகம் விட்டு கிரகம் கொண்டு சென்று காட்சிப்படுத்தியிருக்கிறார்...

#காமத்தாழி...

யதேச்சையாக ஒரு ticket 100000 ரூபாயில். தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை அதனால் கலந்துகொள்ள முடியாது என 85000 ரூபாய்க்கு கொடுக்கிறான் ஒருவன் அந்த டிக்கெட்டை.... அது புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஒரு தம்பதியர் வேறொரு தம்பதியரோடு குலுக்கல் முறையில் கூடுதல்,  அறைச் செலவு, மது என திளைக்க வாய்ப்பு. பார்த்திபன், சில்வியா இருவரும் அதில் கலக்க முடிவெடுக்கிறார்கள். அதற்கான சம்மதம் கோருதல், சம்மதிக்க வைத்தல் என பார்த்திபன் வேலைகள், அதன்பின் சில்வியா ஆயத்தம் அழகு நிலையம் செல்லுதல், சுயநாவிதம் என நீள்கிறது அதற்கே சில ஆயிரங்கள் செலவு என்பதாக. கொண்டாட்டத்தில் கலக்க செல்லும் நாளில் அவளை பார்த்திபன் வெகு ரசனையுடன் உற்று நோக்கல், தகுந்தாற்போல் அவளும் வசீகரத்தை அழகில் கொண்டு வருதல்... நிகழ்வு நடைபெறும் இடத்தில் பார்த்தி வேறொருத்தியுடன், சில்வியா வேறொருவனுடன்... புத்தாண்டு புதுமையாக விடிகிறது... சில்வியா பார்த்திபனுக்கு good morning மெசேஜை அனுப்புகிறாள். அப்பொழுது அவள் காணும் ஒரு செய்தி அவளை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அது என்ன என்பதாக கதை முடிகிறது. இது போன்ற கதைகள் எல்லாம் மஞ்சள் பத்திரிக்கைகளில் வெறும் ஆபாச சொற்களால் நிரம்பியிருக்கும். ஆனால் இக்கதை எழுத்தின் உணர்ச்சிகளால் அன்பின் உரையாடல்களில் நிரம்பியிருக்கிறது. தோழர் ஒருவரிடம் இந்த கதை பற்றி பகிர்ந்தால் அவர் கார் key யை வாங்கி மொத்தமாகப் போட்டு குலுக்கி எடுத்து இணையாக வரும் நபர்களை தேர்வு செய்வார்களாம். கேள்விப்பட்டிருக்கிறேன் என்றார். ஆச்சரியமாக இருந்தது.

#நான்காவது_தோட்டா

காந்தி இறப்பின்போது அவரின் மேல் பாய்ந்த நான்காவது புல்லட் என்பது உண்மைதானா என்ற தற்போதைய தேடல், மற்றும் காந்தி இறப்பதற்கு முன் வாழ்ந்த கடைசி நாட்களில் அவர் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் அவரை நோக்கி நெருங்கி வந்த இறப்பை அவர் உணர்ந்தே இருக்கிறார் என்ற இரண்டையும் வைத்து பின்னப்பட்ட கதை. நேரு, இந்திரா, ராஜிவ், கோட்சே, வல்லபாய் பட்டேல் என பலரும் கதைக்குள் இருக்கிறார்கள். அன்பால் மட்டுமே இந்த உலகை மீட்டெடுக்க முடியும் என உணர்ந்த காந்தி இவ்வாறுதான் பேசியிருப்பார் என்பதை அவர் கூறுவதாக உள்ள உரையாடல்கள் அனைத்திலும் காணலாம்... மரணத்தின் வாசத்தை உணர்ந்து வாழ்ந்த காந்தியின்   அந்திமக் காலத்தை கண்முன்னே நிறுத்துகிறது கதை.

ஒவ்வொரு கதையும் அலுப்புத் தட்டாமல் நவீன கால பிரச்சனைகள், வாழ்க்கைச் சூழல், தொழில்நுட்பம் இவற்றோடு செல்வது மிகப் பிடித்திருக்கிறது...

தொடருங்கள் தோழர்
வாழ்த்துகளும் பேரன்பும்...

யாழ் தண்விகா

No comments:

Post a Comment