Saturday 18 April 2020

எனக்கு எதுவோ உனக்கும் அதுவே #இசைஞானி இளையராஜா

எனக்கு எதுவோ உனக்கும் அதுவே...

இசைஞானி இளையராஜா

குமுதம் பதிப்பகம்

இளையராஜா தனது ஆன்மீகக் கருத்துகளை கவிதை வடிவில் தந்திருக்கிறார். ஆன்மீகம் என்பது ஒரு சரணாகதி நிலை. மோன நிலை. பைத்திய நிலை. அந்நிலை உள்ளவர்கள் அசாதாரண நிலையை விரும்பும் சாதாரணன் போன்றிருப்பர். இளையராஜா அவ்வகைப்பட்டவர்.

ஆன்மீகத்திற்கும் எனக்கும் எப்போதும் ஆகாது என்பதற்கு ஆயிரம் காரணங்கள்.   ஆனால் நிம்மதியை, துன்பங்களை உண்டாக்குவது, நீக்குவது, இன்பம் அளிப்பது, மனம் ஒரு நிலைப்படுத்தும் சூழலை ஆன்மீகம் மட்டுமே உருவாக்குவதாக, அதை கடவுள் மட்டுமே உண்டாக்குவதாக கூறுவது ஆன்மீகத்தின் பெயரால் காலம் காலமாக கூறிவரப் படுகிறது. கடவுள் உனக்குள் தான் இருக்கிறார். அவரைத் தேடி நீ எங்கே செல்கிறாய், கடவுளை அடைய இன்பத்தை விட கண்ணீர் எளிய வழி என்று கூறுகிறார் இளையராஜா. இன்றைய உலகில் மட்டுமல்ல, ஆதி காலம் தொட்டு பசியால் அழுபவனின் கண்ணீர் கடவுளுக்கு சென்று சேர்கிறதா... தவறுகள் செய்பவன் தண்டனைக்கு எப்போதும் உள்ளாக்கப் பட்டிருக்கிறானா... கர்மம், பாவம், புண்ணியம் என்று பல கேள்விகள் ஆன்மீகம் தோற்றுவிக்கும். நம்பவியலாத பதில்களை கூறி மடை மாற்றும். இசையை உணர்ந்தவரின் வாக்கு, அவரின் இசை போல் சாந்தம் வடிய அமைந்திருக்கிறது. வாசிக்க வாசிக்க மனதினை நோக்கிய பல கேள்விகளைப் பூக்கச் செய்கிறது சொற்கள். அவரின் இயல்புத்துவம், அன்னை மூகாம்பிகை, ரமண மகரிஷி மேலான நம்பிக்கை அனைத்தும் சொற்களில் காணலாம். இசை குறித்துக் கூறும்போது
"இசை என்பது
புத்தி அல்ல
மனம் அல்ல
எண்ணம் அல்ல!
நாதம்-
நாதம் மட்டுமே!
என்கிறார்.

இளையராஜா குறித்தும் அவரின் ஆன்மீக எண்ணங்களும் பற்றி அறிந்துகொள்ள வாசிக்கலாம்.

"கர்மம் செய்கிறேன் என எண்ணாதே
உன் தேகமே அதைச் செய்கிறது
நீ அப்படியே இருக்கிறாய்!
செயலுக்கு அப்பால் நீ இருக்கிறாய்
என்ற தொடர்பினால் தான்
செயலே நடக்கிறது..."

வாழ்த்துகள் இசைஞானி இளையராஜா...

யாழ் தண்விகா

No comments:

Post a Comment