Wednesday 23 November 2022

கோடிக்கால் பூதம் #அ_உமர்_பாரூக்

 


கோடிக்கால் பூதம்

நாவல்

அ. உமர் பாரூக் 
தோழர் Acu Healer Umar Farook 

பக்கம்: 128
விலை: 150

தீ நுண்மிக்காலமும் உயிர்க் கொள்ளையும்
 
 அங்கிங்கெனாதபடி உலகெங்கும் அச்சுறுத்தலுக்கு ஆளான ஒரு காலம் என்றால் சமகாலத்தில் காணும் கொரோனோ காலம் தான். இப்போது வரை உலக நாடுகள், மக்களை ஊரடங்கு, முகக் கவசம், சமூக இடைவெளி மட்டுமே காக்க முடியும் என்பதைக் கூறி வருகிறது. இதற்கிடையில் முதல் அலை, இரண்டாம் அலை கடந்துவிட்டது. மூன்றாம் அலை மற்றும் அடுத்து வரக்கூடிய கொரோனோவின் பாதிப்பு இதற்கு முன்பு வந்த அலையை விட மிகத் தீவிரமாக இருக்கும் என்ற கணிப்பையும் கூறி மக்களை அச்சத்திலேயே வைத்திருக்கிறது. கொரோனோவை விட பெரிய நோயாக அரசின் அறிவிப்பும் அச்சுறுத்தலும் இருக்கிறது. அதற்குச் சாதகமாக நோயிலிருந்து குணமாகும் அதிகமான மனிதர்களை விட நோய்க்கு ஆளாகும் குறைவான நபர்களை மட்டுமே பெரிதுபடுத்தியும், இறப்புகளைக் கூறி பதட்டத்தையும் உண்டுபண்ணும் வண்ணம் ஊடகங்களில் செய்திகளை வெளியிட வைத்து வருகிறது. எளிதில் குணமாக்கும் நோய் என்று யாராவது சொன்னால்கூட அவர்களுக்கு எதிராக அதிகார பலத்தைப் பயன்படுத்தும் வன்மமும் இந்தக் காலகட்டத்தில் நிகழ்வதைக் காண முடிகிறது. மருத்துவத்தில் சிறப்பான கட்டமைப்பை ஏற்படுத்தி அல்லது ஏற்கனவே இருக்கக்கூடிய மருத்துவ வசதியால் மிக எளிதாகக் கடக்க வேண்டிய நோயை, வெற்றிகரமாக இரண்டாம் வருடத்தில் எனக் கூறும் வண்ணம் நகர்த்தி வருகிறது அரசு வல்லாதிக்கம். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இக்கொடும் காலம் குறித்த சிறு துளி தான் கோடிக்கால் பூதம் என்னும் இந்த நாவல்.

கதைச் சுருக்கம்.

 டேவிட் சர்ச்சில் மதபோதகர். மைக்கேல் அவன் நண்பன். கொரோனோ கால கட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவில் உள்ள சர்ச்சுக்குச் செல்ல மைக்கேலின் உதவியை நாடுகிறான். தன்னுடைய இ-சேவை மையத்திலிருந்து பாஸ் தயார் செய்து கொடுக்கிறான் மைக்கேல். ஆனால் அங்கு நிலைமை சரியில்லை என்பதால் டேவிட் கேரளா செல்ல இயலாமல் போய் விடுகிறது. குமார் தற்காலிக ஊழியராக மருத்துவமனையில் பணிபுரிபவன். டேவிட் மற்றும் மைக்கேலுக்கு நண்பன். இவர்களின் ஆசிரியர் தங்கம். அவர் தன்னுடைய பணிக் காலத்தை முடித்துவிட்டு தனிமனிதனாக மேன்சன் ஒன்றில் வாடகைக்கு ஒரு அறை எடுத்து வசித்து வருகிறார். அவரிடம் அவ்வப்போது சென்று உரையாடிவிட்டு வருவது மைக்கேலின் வழக்கம். டேவிட்டிற்கு வீடு, எப்போதாவது மைக்கேலின் கடை அல்லது சர்ச். குமாருக்கு தன்னுடைய மருத்துவமனை லேப்பில் பரிசோதனை செய்யும் பணி. கொரோனோ காலத்தின் பரிசோதனை அவலங்களை, மருத்துவ அவலங்களை குமார் கண்டு வேதனைப்படுகிறான். தன்னுடைய அப்பாவின் டைப் ரைட்டிங் நிலையத்தை இ சேவை மையமாக மாற்றி அதன் மூலம் வரும் வருமானத்தில் தன்னுடைய குடும்பத்தை மிக எளிமையான முறையில் நடத்தி வருபவன் மைக்கேல். மனைவி மற்றும் ஒரு குழந்தை. இந்தச் சூழலில் மைக்கேலுக்கு காய்ச்சல் வருகிறது. குணமாக வேண்டிய காய்ச்சல். ஆனால் அவன் கேட்ட தகவல்கள், பார்த்த தகவல்களால் மிகவும் பயப்படுகிறான். அரசு மருத்துவமனை, ஆக்ஸிஜன் சிலிண்டர், தனியார் மருத்துவமனை, அவசர சிகிச்சைப் பிரிவு என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தன்னைத்தானே பலிகடா ஆக்கத் துணியும் வண்ணம் அவன் மனநிலை மாறுகிறது. கொரோனோ காலத்தை அவன் எப்படியாக எதிர்கொண்டான், அவனைச் சுற்றியிருந்த சூழல் அவன் மீண்டெழ உதவியதா என்பது தான் கதை.

கதை மாந்தர்கள்

 மிகக் குறைந்த அளவிலான பாத்திரங்களே நாவலில். மைக்கேல், அவனுடைய தந்தை ஆசீர்வாதம், மைக்கேலின் மனைவி ஜான்சி, மகன் ரியோ, சர்ச் போதகர் டேவிட், மருத்துவமனை ஆய்வுக்கூட பரிசோதகர் குமார், குட்டை வாத்தியார் என்ற தங்கம் வாத்தியார், மைக்கேலின் மாமனார் பீட்டர், டாக்டர்கள் சுந்தரம், ராஜா. இவர்கள்தான் பிரதான பாத்திரங்களாக நாவலில் வருகிறார்கள். ஒவ்வொருவர் குறித்தும் உள்ள தகவல்கள் மிகைப்படுத்தப்படாதவையாகவும் கதையோடு சேர்ந்து போவது போலவும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது நாவலை வாசிப்பதில் சுணக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

மைக்கேலின் மன மாற்றமும் பயத்தில் வீழ்ந்த தைரியமும்...
 ஆசீர்வாதம் காலம் டைப் ரைட்டர் காலம், அவரை நோக்கி வரும் வாடிக்கையாளர்கள் காலத்தை பின்னோக்கி பயணிக்க வைக்கிறது. தொடர்ந்து வரும் கால மாறுதல்கள் பிரவுசிங் சென்டர் என்ற நிலையைக் கொண்டு வருகிறது. அதுவும் காலப் போக்கில் இ சேவை மையம் என்ற நிலையை எட்டுகிறது. அந்த வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டும் எளிய மனிதன் மைக்கேல். எல்லோரிடமும் மனம் விட்டுப் பேசுபவன். அவனின் சொற்கள் யாரையும் காயம் செய்யாதவை. இணைய சேவைகளுக்காக அரசுத் துறைகள் சார்ந்த பலர் வந்து செல்லும் இடமாக அவன் மையம் திகழ்ந்தது. இந்தக் காலகட்டத்தில் தான் கொரோனோ இரண்டாம் அலை வருகிறது. இயல்பாக அரசின் அறிவுறுத்தல் காரணமாக மாஸ்க், கைகளை சானிடைசர் மூலமாக கழுவுதல், சமூக இடைவெளி இவற்றைக் கடைபிடிக்கிறான் மைக்கேல். கொரோனோ தீவிரமாகப் பரவத் தொடங்கியபின்னர் தன்னுடைய மனைவியான ஜான்சியைக் கூட கடைகளுக்கு வெளியில் அனுப்பாமல் பார்த்துக் கொள்கிறான். குமார் மூலமாக மருத்துவம் தொடர்பான தகவல்களைக் கேட்டும் வைத்திருப்பவன். சாதாரணமாக அவனுக்கு வந்த தலைவலி மனச் சஞ்சலங்களை உருவாக்கிவிடுகிறது. ஒவ்வொரு நாளும் தலைவலி, அடுத்து காய்ச்சல் எனத் தொடர்ந்தாலும் மருத்துவ நண்பர்கள் மூலமாக அதற்கு மருந்துகள் எடுத்துக்கொள்கிறான். காய்ச்சலும் சரியாகிறது. ஆனாலும் ஊடகங்கள் தரும் தகவல்களால் தனது உடல்நிலை குறித்த சந்தேகத்தால் மருத்துவமனையில் மூக்கின் வழியாக சளி எடுத்துப் பரிசோதனை செய்கிறான். நெகட்டிவ் வருகிறது. அடுத்து தொண்டையில் சளி எடுத்துப் பரிசோதனை செய்கிறான். அதுவும் நெகட்டிவ் வருகிறது. ஆனாலும் அரசின் கொரோனோ குறித்த அச்சுறுத்தல் காரணமாக அரசு மருத்துவமனையில் கொரோனோ நோயாளியாக சேர்கிறான். உறக்கத்தின்போது எந்தவித மூச்சுத் திணறல் இல்லாமல் உறங்குபவன் விழிக்கும்போது பல எண்ணங்கள் அலைபாய மூச்சுத் திணறலால் பாதிக்கப்படுவதாக உணர்கிறான். நர்சிடம் வலிய ஆக்ஸிஜன் சிலிண்டர் கேட்டு தனக்கு பயன்படுத்துகிறான். சுகர் பரிசோதனை செய்துகொள்கிறான். கை விரல்களில் ஆக்ஸி மீட்டர் மாட்டி ஆக்ஸிஜன் லெவலை அடிக்கடி பரிசோதித்துக் கொள்கிறான். அவன் வீடு வந்த பின்னரும் அவனுக்கு மனம் நிலைகொள்ளவில்லை. தனக்கு அருகில் இருந்த பெட்டில் அவன் வயதொத்த மனிதன், புகை மற்றும் சிகரெட் பழக்கம் உள்ளவன் சேர்க்கப்பட்டு இறந்து விடுகிறான். நெருங்கிய உறவுகளில், நட்பு வட்டத்தில் உள்ள யாரும் பாதிக்கப்படக்கூடாது என எண்ணினாலும் பாளையத்தைச் சேர்ந்த நண்பன் ஒருவன் இறந்து விடுகிறான். இவையெல்லாம் மனதை அலைக்கழிக்கச் செய்கிறது மைக்கேலை. கூடவே இருந்து மனைவி ஜான்சி பார்த்துக்கொண்டாலும் மைக்கேலுக்கு தனக்கு கொரோனோ இருக்கிறது என்ற எண்ணமே முழுவதுமாக இருப்பதால் மதுரைக்கு தனியார் மருத்துவமனைக்குச் சென்று பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வந்து அங்கும் செல்கிறான் மனைவியோடு. உடல்நலத்திற்கு ஒன்றுமில்லை என்ற சூழலிலும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வந்தாலும் திடீரென்று மூச்சுத் திணறல் வந்தால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் விடுதியில் மனைவியுடன் தங்குகிறான். மீண்டும் மூச்சுத் திணறல். அதே தனியார் மருத்துவமனைக்குச் சென்றாலும் அங்கு அனுமதியில்லாமல் வேறு மருத்துவமனை. அங்கு சிகிச்சை. கடைசியில் அவனை பீட்டர், மற்றும் ஜான்சி காப்பாற்றினார்களா... தங்கம் வாத்தியார் செய்த உதவி என்ன... குமார் என்ன செய்தான்... என நிறைவடைகிறது நாவல். 

 மொத்தம் 15 பாகங்களாக நாவல். 10வது பாகத்திலிருந்து நாவல் வேகமெடுக்கத் தொடங்குகிறது. கொரோனோ கால கவனம் என்பதை வீட்டில் உள்ள ஜான்சி, ரியோ எளிதாக எடுத்துக்கொள்ள, மைக்கேல் மிகக் கவனமாகவே இருக்க விழைகிறான். மரணம் பற்றிய பயம் அவனுக்குள் வெளியுலகம் பற்றிய ஊடக தகவல்களால் மெல்ல மெல்ல ஊடுருவுகிறது. கொரோனோவால் இறந்த நோயாளிகளை புதைக்கும் விதம் அச்சுறுத்தலுக்கு ஆளாக்குகிறது. “மரணம் பற்றிய அச்சுறுத்தல் ஏற்படும்போதெல்லாம் கடவுள் மீது நம்பிக்கை கூடுவதையும், இப்படியான மனிதர்களின் இறப்பைப் பார்க்கும்போது அது தானாகவே குறைந்து விடுவதாகவும் அவனுக்குத் தோன்றியது” இப்படியாக மரண பயம் மைக்கேலுக்குள் செல்லத் தொடங்குகிறது.
 கொரோனோவால் பாதிக்கப்பட்ட பின்னர் எப்போதும் தனது புகைப்படத்தை வாட்ஸ்அப் ப்ரோபைலில் வைத்திருக்கும் மைக்கேல், இயேசுவின் படத்தை மாற்றுகிறான். அதைக் கண்டு மைக்கேலின் மனைவியும் அவனைப் பற்றிய சரியான எண்ணத்தைக் கணிக்கிறாள். “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” என்ற வரிகள் ஜான்சிக்குள் வேறு மாதிரியாக ஓடியது. “பயத்தின் ஆரம்பமே கர்த்தரின் மேலான விசுவாசத்தின் ஆரம்பம்” என்று அவள் நினைப்பது சரியாக அமைகிறது.
 அளவுக்கு மீறிய அறிவு குழப்பத்தை உண்டுபண்ணுவது போல மைக்கேலின் பாத்திரப்படைப்பு அமைந்திருக்கிறது. புரிதலற்ற தீவிரம் மூட நம்பிக்கையை உண்டாக்கும் அதே கணம் பயத்துடன் கூடிய அறிவு என்பது எதையும் நம்பாமல் குழப்பத்தை உண்டுபண்ணி தனக்குத் தானே குழி வெட்டிக்கொள்வது போலவும் மைக்கேல் பாத்திரம் உள்ளது. மிகவும் பயந்த டேவிட் கூட கேரளாவிற்குச் சென்றுவிடுகிறான். பல ஆய்வுகளை கண்கூடாகக் காணும் குமார் இயல்பாக இருக்கிறான். ஆனால் பயம் ஊரு மனிதனை என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு மைக்கேல் பாத்திரம் ஒரு உதாரணம்.

சமகால அரசியலைப் பேசும் நாவல் 

 புனைவு, திருப்பம், மர்மம் என்றெல்லாம் இல்லாமல் சம காலத்தில் நாம் காணும் மனிதர்கள், கொரோனோ குறித்து உலக வல்லாதிக்கம் உண்டாக்கிய பீதி, அரசு அதற்கு செவி சாய்த்த அரசியல் என உள்ளதை உள்ளபடியே பதிவு செய்திருக்கிறது நாவல். ஒன்றிய அரசு தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு வழங்கிவிட்டு இங்குள்ள மக்களுக்கு வழங்க வழியில்லாமல் தவித்தது, ஊட்டச்சத்தை அதிகரிக்க கொண்டைக்கடலை அனைத்துத் குடும்பதாரர்களுக்கும் வழங்கப்படும் எனச் சொன்னது, கை தட்டச் சொன்னது, விளக்கேற்றச் சொன்னது, தேர்தல் பிரச்சாரம், திடீர் ஊரடங்கு அறிவித்ததால் மக்களை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடக்கவைத்தது எனப் பேசுவதென்றால் பல கருத்துக்களைப் பேச வாய்ப்புள்ள ஒரு நாவல் தான். கொத்துக் கொத்தாக மனித உயிர்களை ஒரே குழிக்குள் போடுவதும், படுக்கை வசதியில்லை என்பதால் அவசர ஊர்தியினுள் அல்லாடும் நோயாளிகளும், அடுத்தடுத்த படுக்கையில் நோயாளிகள் இறப்பும், அதைக் கண்டு உயிர்வாழப் படபடக்கும் நோயாளிகளும் என இந்த தீ நுண்மிக்காலம் அளித்த அனுபவங்கள் ஒவ்வொன்றும் பயத்தை உண்டுபண்ணச் செய்பவை. ஆனாலும் ஒரு சராசரி மனிதனின் வாழ்வைச் சூறையாடும் அச்சுறுத்தலும் அதற்கு தன்னை ஒப்புக் கொடுக்கும் சூழலையும் இயல்பாகப் பதிவு செய்துள்ளது நாவல் என்பதை மனதார ஒப்புக்கொள்ளலாம்.

பதிப்பக விபரம்:

Discovery Publications
No.9, Plot, 1080 A,
Rohini Flats,
Munusamy Salai,
K.K. Nagar West,
Chennai -600 078
Mobile: +91 99404 46650

யாழ் தண்விகா


No comments:

Post a Comment