Monday 15 April 2024

ஆடு ஜீவிதம் - நாவல்

 


ஆடு ஜீவிதம்
பென்யாமின்
தமிழில் விலாசினி
எதிர் வெளியீடு
216 பக்கங்கள்
300 ரூபாய்

வெளிநாட்டிற்கு /கல்ஃப்/ வேலைக்குச் செல்லும் நஜீப், ஹக்கீம் இருவரின் துயரங்களும் தான் நாவல்.   வாழ்வின் பல்வேறு சிக்கல்களுக்கு நடுவில் வெளிநாடு செல்ல பணம் திரட்டி கிளம்புகிறான் நஜீப். உடன் ஹக்கீம். வெளிநாட்டில் இறங்கிய பின் அவர்களை அழைத்துச் செல்ல யாருமில்லை. நீண்ட நேர காத்திருப்பிற்குப் பின்னர் ஒருவன் வந்து பாடாவதியான ஒரு வாகனத்தில் அழைத்துச் செல்கிறான். கனவுகள் உடையும் வண்ணம் செல்லும் பாதை. பாலைவனத்தில் முதலில் ஓரிடத்தில் இறக்கி விடப்படுகிறான் ஹக்கீம். அடுத்து நஜீப். அவ்விடங்களில் ஆடு மேய்ப்பது இவர்கள் வேலை. அந்த வேலை எப்படி அவர்களின் வாழ்வை பாடாய்ப் படுத்தியது என்பதை வாசிக்கும்போது நேரடியாக அனுபவிப்பது போல உணர முடிகிறது. மூன்றாண்டுகளுக்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறி தப்பிக்க ஒரு வாய்ப்பு. அவர்கள் தப்பித்தார்களா? அதற்கான பாதை எளிதில் அமைந்ததா என்பதை நாவல் பேசுகிறது. உண்மையில் இப்படிப் பயணம் சென்ற ஒருவரின் கதை கேட்டு பென்யாமின், ஒரு சுயசரிதையைப் போல எழுதியுள்ளார். மொழிபெயர்ப்பு நாவல் என்பது ஒரு அயற்ச்சியையும் உண்டுபண்ணவில்லை. சிறப்பாகவே இருந்தது. வெளிநாட்டு வேலை என்பது இப்படியும் இருக்கும் என்ற அச்சத்தைத் தருகிற வகையில் நாவல். நஜீப் அனுபவித்த கொடுமைகள், வெளிநாட்டு வேலை என்றாலே யோசிக்க வைக்கும். இனி இதுதான் வாழ்வு. இதனை இப்படித்தான் கடந்தாக வேண்டும் என்ற சூழலில் அந்த வாழ்க்கைக்குள் தன்னை உட்படுத்திக்கொண்டு சகித்தும் கடந்தும் வாழும் நஜீப் எல்லாவற்றிற்கும் அல்லாவை துணைக்கு வைத்துக்கொள்கிறான். ஒரு கட்டத்தில் நாவல் இஸ்லாமியப் பிரச்சாரம் போலவும் எனக்குத் தோன்றிவிட்டது. ஹக்கீம் உடன் வந்த இப்ராஹிம் கதிரி பாலைவனம் கடக்க உதவிய பின்னர் மறைந்து விடுகிறான். அவனை அல்லா என்கிறான் நஜீப். அடுத்து ஒரு வாகனப் பயணம். வாகனத்தை நிறுத்தியவரை அல்லா உருவில் காண்கிறான் நஜீப். தான் படும் அவஸ்தைகள் யாவற்றிற்கும் அல்லா காரணம் என்கிறான். கிடைக்கும் ஒருசில நல்லவற்றிற்கும் அல்லா காரணம் என நம்புகிறான். இப்ராஹிம் கதிரி அல்லா என்றால் ஹக்கீம் பாவம் எனத் தோன்றவில்லையா? எனக் கேள்வி எழாமல் இல்லை. ஆட்டுக் கொட்டம், பாலைவனம், முரட்டு மனிதன், அர்பாப், காவல் நிலையம் எல்லாம் ஒரு புதிய காட்சியை அறிமுகப்படுத்துகிறது. ஒரு புதிய அனுபவத்தைத் தருகிறது. உறவுகளைத் துறந்த ஒரு வாழ்வை வாழ பணிக்கப்பட்ட மனிதனின் கதை இது. வாசிக்கலாம். 

யாழ் தண்விகா 

❣️


No comments:

Post a Comment