Sunday 4 December 2022

ரோலக்ஸ் வாட்ச்


ரோலக்ஸ் வாட்ச்

நாவல்

சரவணன் சந்திரன்

உயிர்மை பதிப்பகம்

பக்கம் 160

விலை 150

மார்ச் 2016 பதிப்பு


நட்பு காதல் கொலை குரூரம் இயல்புத்தனம் துரோகம் என எல்லாம் உண்டு இந்நாவலில். கதாசிரியர் தான் நாயகன். வலிந்து திணிக்கப்படாத பாதை வழியே கதை நகர்கிறது. என்ன கதை என்பது சுவாரஸ்யம். ஒவ்வொரு பகுதியும் ஒரு சிறுகதைதான். எங்கிருந்தும் தொடங்கலாம். சரவணன் மற்றும் கதை கூறுபவன், அவன் தோழி, தோழியின் தோழி, ஜோதிடர் சுந்தர் எனச் சில பாத்திரங்கள் முக்கியமானவை. பிற எல்லாம் வந்து போகின்றன. எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் இருக்கிறது. சரவணன், கதை சொல்பவனுக்கு வாழ்வில் பல உதவிகள் செய்பவன். செய்தவன். ஆனால் கதை சொல்பவனுக்கு ஒரு தனி உலகம். காலமெல்லாம் சரவணனின் கையைப் பிடித்து நடக்க தன்னால் இயலாது என்னும் உறுதி கொண்டவன். அவனிடம் அதனை நேராகச் சொல்லும் தைரியம் அற்றவன். கோழை என்றில்லை. அது கதாசிரியன் சுபாவம். இவர்களுக்கு ஒரு நண்பர் குழாம். அதில் ஒருத்தி திவ்யா. அவளோடு அன்பு காதல் காமம் எல்லாம். அவள் திருமணம் முடித்தவள். அவளோடு ஒரு வாழ்க்கை. வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்கள் செல்ல சில தகிடுதத்தங்கள் செய்து கதை சொல்பவன் மேலே வருகிறான். வெளிநாடு செல்கிறான். தனியாக அறை எடுக்கிறான். அங்கு பெண்களோடு உல்லாசித்துத் திரிகிறான். பணம் சேர்க்கிறான். ஒரு மனிதனுக்கான கூறுகள் இப்படி இருப்பதில்லையே என நினைக்கும்போது மனிதன் என்பவன் இப்படியும் இருக்கிறான் எனச் சொல்ல, இப்படித்தான் இருக்கிறான் எனச் சொல்ல பல பாதைகளை கதை வழியே சொல்கிறார் நாவலாசிரியர். கதை சொல்லுதலில் இப்படியும் ஓர் உத்தி எனக் காண்பித்து உள்ளார். டயரி எழுதுவது போலுள்ளது என்று கூறி ஒதுக்கி விடாத வண்ணம் எழுத்து நடை அமைந்துள்ளது சிறப்பு. பிடித்தது எனச் சொல்ல நான் கண்ட மனிதரில் கதாசிரியன் போன்ற நபர்களைக் கண்டுள்ளதும் காரணமாக இருக்கலாம். மனிதன் செய்யும் பண அரசியல் எப்படியெல்லாம் இருக்கும் என்றெல்லாம் ஆங்காங்கே வருகிறது. கதையும் முடிச்சும் இதுதான் எனச் சொல்ல வாய்ப்பில்லை. வாசித்தால் தான் அதை உணர முடியும் எனச் சொல்லும் நாவல். வாசிக்கலாம் தாராளமாக.


யாழ் தண்விகா 


#நூல்_வாசிப்பனுபவம்_2022


❣️

 

No comments:

Post a Comment