Friday 23 December 2022

புளிக்கும் வெயில் #ராம்போ_குமார்


புளிக்கும் வெயில்

ராம்போ குமார்

Rambo Kumar 

வேரல் புக்ஸ்

96 பக்கங்கள் 

100 ரூபாய்


ஒரு நாயகன் உருவாகிறான்...

(சிஸ்டம் சரியாகிவிட்டது தல)

எந்த உலகத்தில் என்றும் தொக்கி நிற்கும் கேள்விக்கு கவிதை உலகத்தில் என்று பதில் அளிக்கலாம். தோழர் ராம்போ குமார் தன்னுடைய தனித்துவமிக்க நடிப்பால், பேச்சால் மனம் கவர்ந்தவர். இப்போது கவிதையிலும். தொகுப்பின் முதல் கவிதையை அதற்கு அச்சாரமாகக் கூறலாம்.

“என்னிடம் ஒரு ஆழ்ந்த கல்லறைக்குண்டான

சிறு அமைதி இருந்தது

காற்றின் காமம் பசி தீர்க்கும்

புல்லாங்குழலின் சில துளைகள்

பருக முடியா ஆதி நிலத்தின் வழிந்த ஈரத்தின் மிச்சம் 

பழைய சொற்களின் புழுக்கம் கொஞ்சம்

குகை இருட்டின் முகம் 

ஒன்றுகூட இருந்ததாய் ஞாபகம்

அத்தனையும் நழுவிக்கொண்டிருக்கிறது

முதல் மாத சம்பளம் எண்ணிக்கொண்டிருக்கும்

எனது விரல்களின் வழியே..” எனத் தொடங்கும் கவிதையின் சொற்களில் கருவைக் காண்பதா... இவ்வளவு நாள் கண்ட கவியின் புதிய முகத்தைக் காண்பதா... சந்தோஷ மிரட்சி. 


ஒரு கவிதையில் 

“பசி ஒன்றும் பெரிய வலியில்லை

அதனூடே தோன்றும்

கவிதைதான்...” கொஞ்சம் நீள்கிறது முற்றுப்பெறாமல். கவிஞனின் பசியா? பசியை எழுதப் போகும் கவிதையின் தீவிரமா? என்ற கேள்வியின் முன்னாள் எனக்கென்னமோ பசியை எழுதும் கவிதையின் ஆத்திரம் மிகு சொற்களின் தீச்சுவாலை அதிகமாக இருக்கும்போல் உணரமுடிகிறது. இன்னொரு கவிதையில்

“முன்னிரவு காமத்தைப் 

பின்னிரவுக்கு 

ஒத்தி வைக்கிறது

ஒரு நல்ல கவிதை” என்னும்போது கவிதை என்ன செய்யும் என்ற கேள்விக்குப் பதில் கிடைத்துவிடுகிறது. மேலும் கவிதை காமத்தை ஒத்தி வைக்கிறதாகக் கூறும் தன்மையிலிருந்து கவிதை எதையும் செய்யும் என்பதையும் அழகாகக் கூறிவிடுகிறது.


“அப்பத்தாவுக்குத் தங்கமுத்து மாரியம்மன்

தாத்தாவுக்குச் சுடலைசாமி

எங்க ஆச்சிக்கு முப்பிடாதி அம்மன்...

மேலத்தெரு மாமாவுக்குக் கருப்பண்ணசாமி

அத்தைக்குக்கூடச் செல்லத்தம்மன்னு கேள்வி...

கொடைக்குக்கொடை

கூட்டத்திற்குள்ளேயே ஆடிக்கொண்டிருக்கும்

சாமி கொண்டாடிகள்,

இதுவரை 

சன்னதம் சொன்னதேயில்லை தனிமையில்”

கிராமத்துச் சாமிகளின் அருளேறி ஆடும் மனிதர்கள் கண்முன்னே வருகிறார்கள். அவர்களின் ஆங்காரக் கூச்சல் காதுகளில் ஒலிக்கத் தொடங்குகிறது. திருவிழாக்கூட்டம் கிறங்க வைக்கிறது. ஊரே அருள் வந்து நிற்க, நாக்கைக் கடித்து அரிவாள் ஏறும் ஆண்கள், இருக்கும் இடம் தெரியாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் பெண்கள் மேல் அருள் வந்து ஆடும் சாமிகள் குறித்து திருவிழா கடந்தபின் நினைக்க என்ன இருக்கும்? அதனைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார் கவிஞர். “இதுவரை சன்னதம் சொன்னதேயில்லை தனிமையில்...” சாமி கொண்டாடிகளிடம் கேட்கவேண்டும்தான்.


கொஞ்சம் கொஞ்சம் அன்பைக் கொஞ்சும் கவிதைகள் நட்சத்திரங்கள் போல ஆங்காங்கே மின்னிக்கொண்டிருக்கின்றன. யாரந்த யாழினி என்ற கேள்விக்குப் பின்னால் ஓடத் தொடங்குகிறது வாசிக்கும் பார்வை.

“உன்னை அகம் தள்ளியபின்

புறவெளியில் 

எதைத்தேடப்போகிறேன் யாழினி”

“வலது ஆரிக்களிலும்

இடது ஆரிக்களிலும்

சமமாக நின்றுதொலை 

யாழினி

அவ்வப்போது சரிந்து விடுகிறதென்

இதயம்” 

“இன்னும் வேகமாக

வீசியெறி உன் சொற்களை

நான் இன்னுமொரு 

கவிதை செய்யவேண்டும்”

கவிதை ஊரில் காதல் வழிச் சாலையிலும் சிறப்பானதொரு பயணம் மேற்கொள்ள வாழ்த்துகள்...


“ஒரு பச்சிலையின் 

கணம் தாங்கும் கிளைகளுக்கு

ஒரு சருகின் கணம் 

தாங்க முடிவதில்லை”

வாசிக்க வாசிக்க தந்த காட்சி முடியவில்லை. சருகு என்பது அத்தனை சாதாரணமானதாக இருக்க முடியாது. அதன் கணம் குறித்து எழுந்த கேள்விகளுக்குள் பச்சிலை வாழ்ந்த வாழ்க்கையை உணர்த்தும் வரிகள் அபாரமான வெளிப்பாடு.


எல்லாவற்றிலும் நேரம் காலம் பார்த்து செயல்படும் அச்சம்பத்து என்னும் ஊரைச் சேர்ந்த மாமா பற்றிய கவிதை...

...

“அச்சம்பத்து விபத்தில்

மாமா இறந்துபோன அன்று,

நாட்காட்டியில் அவரின்

விருச்சிக ராசிக்கு

நம்பிக்கை என்றுதான் இருந்தது...” காலம் என்னென்ன மாய வித்தைகள் செய்யும் என்பதை காலம் மட்டுமே அறியும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு ஈடுபாடு, ஒரு வழி. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேடமிட்டுத் திரிக்கிறோம். ஆனால் அந்திமக் காலமாகட்டும், உயிர் போகும் தருணமாகட்டும், மனிதன் மகிழ்வோடு இந்த உலகைத் துறக்கத் தயாராகிவிடுகிறானா என்றாள் இல்லை. காலம் நமது அபிலாசைகளையெல்லாம் பூர்த்தி செய்து வைக்கிறதா என்றால் இல்லை. அக்கணம், நாமெல்லாம் சாதாரண மனிதர்கள் மட்டுமே என்பதை உணர்த்தும் கவிதை.


“இரு நீலங்களுக்கு மத்தியில் 

பறந்துவந்த பறவையொன்று

என் ஜன்னலில் வந்தமர்கிறது

அதன்மேனியில்

தாய்மண் வாசத்தை

நுகரத் தெரிந்த 

அந்தப் பெயர் தெரியா பறவை 

மிச்சமிருக்கும் தன் நிலத்தை

எனக்குக் கடத்துகிறது

தன் கண்களின் வழி”

கவிஞன் என்பவனின் பார்வை உன்னதப்படும் இடம் என்பது உலகின் எல்லாவுயிர்களிடத்தில் காட்டும் இடம் மட்டுமே. அவனின் ஆக்ரோசமும் மனிதம் சார்ந்திருக்கும். மௌனமும் மனிதம் சார்ந்திருக்கும். அன்பு அவன் இயல்பாகயிருக்கும். பெயர் தெரியாத அந்தப் பறவையின் வலியைக் கண்கள் வழியாகக் காணும் ராம்போ குமார் என்னும் தோழர்-கவிஞர் இயல்பாகவே சமூகப் பார்வையுடன் பயணிப்பவர். அதனை அச்சு வடிவில், கவிதை உருவில் வெளிக்கொணர்ந்துள்ளார். சொல்ல இன்னும் பல கவிதைகளுண்டு. வாசியுங்கள். பன்முகத் திறன் கொண்ட தோழர் ராம்போ குமார் இன்னும் பல உயரங்கள் கவிதை உலகிலும் தொட வாழ்த்துகிறேன்.


யாழ் தண்விகா

 

No comments:

Post a Comment