Saturday 24 December 2022

கீழ் வெண்மணி தியாகிகள் தினம்

 







#கீழ்வெண்மணி


கீழ் வெண்மணி

வானம் பார்த்த பூமியல்ல

வளம் பார்க்கும் பூமி


நிலம் யாவும் பண்ணையார்களிடம்...

உழைப்பு யாவும் தொழிலாளர்களிடம்...


உழைப்பை உறிஞ்சிக்குடிக்கும்

ஆதிக்கக்கூட்டம்

உழைத்தே ஒடுங்கிக்கிடக்கும்

ஏழ்மைக்கூட்டம்...


கட்டளைக்கு கீழ்ப்படிந்தால்

வாழ்வதற்கு உயிர் இருக்கும்

எதிர்த்துப் பேசினால்

கூலிக்காரனுக்கு

சாணிப்பால் சவுக்கடி கிடைக்கும்...


உலகப் பொதுப் பிரச்சனை பசி.

இங்கும் தலை விரித்தாடியது.

பசித்தவனெல்லாம் 

ஒன்று கூடுகிறான்

செங்கொடியின் கீழ்

தொழிலாளர் வர்க்கம் என்ற பெயரில்.


சும்மாயிருக்குமா முதலாளி வர்க்கம்

நெல் உற்பத்தியாளர்கள் சங்கம்

என்ற பெயரில்

ஒன்று கூடுகிறார்கள்

மஞ்சள் கொடியின் கீழ்.


அதிகமில்லை கேட்டது...

அரைப்படி நெல் தான்

கூடுதலாக கேட்டது

தொழிலாளர் வர்க்கம்.

எதிரில் நின்று

கைகட்டி நிற்பவன்

எதிர்த்துக் கேள்வி கேட்பதா

ஆடித்தான் போனது

அதிகாரக்கூட்டம்...


நீயில்லையென்றால்

அடிமைகள் கிடைக்காமல்

போய்விடுவார்களா என்ன?

கொக்கரித்துக்கொண்டே

வெளியூரில் இருந்து

ஆட்களை அழைத்து

விவசாயத்தில் ஈடுபடுத்த

முயற்சி செய்தது

மேல்மட்டம்.

போராட்டம் என்பது

புதிதா என்ன

நித்தம் நித்தம்

பசியோடு போராடுபவர்களுக்கு...

வயலில் இறங்கி

வெளியூர் ஆட்களை

மறுத்து நின்றது, விரட்டி நின்றது

தொழிலாளர் கூட்டம்...


எங்கும் எதிர்ப்பு

பண்ணையார்களுக்கு.

சமரசம் பேசினார்கள்

தொழிலாளர்களிடம்.

செங்கொடி இறக்கு

மஞ்சள்கொடி ஏற்று

அரைப்படி நெல் கூலி

அதிகம் தருகிறோம்

என்று விலைசொல்லி

வலை போட்டனர் பண்ணையார்கள்...


செங்கொடி எமது மூச்சு

செங்கொடி எமது வாழ்வு

செங்கொடி எமது உயிர்.

செங்கொடி இறங்காது.

வேண்டுமானால்

மஞ்சள் கொடியை நீயிறக்கிக்கொள்.

உழைக்கும் வர்க்கம்

உறுதியாய் நின்றது.

பண்ணையார் கூட்டம்

பதை பதைத்துப் போனது...


ஒன்றிரண்டு பண்ணையார்கள்

ஊரை ஆள

உழைக்கும் மக்களின் வீட்டை

செங்கொடி ஆண்டது...


அடங்கமறுத்த மக்களை

அழித்தொழிக்க

பண்ணையார் தரப்பு

கோபாலகிருஷ்ண நாயுடு

தலைமையின் கீழ்

வெறிகொண்ட கழுகாய்

வேட்டையாடும் நாயாய்

வீடு வீடாக அடியாட்களுடன்

விரட்டியது...


உயிரைக் கையில் பிடித்து

ஓடியது உழைக்கும் கூட்டம்.

ஒற்றை இலக்காக

கண்முன் நின்றது

ராமய்யாவின் குடிசை.

அக்குடிசை தான்

கூலிக்காரன் 

சொந்தமாக வைத்திருந்த

ஒற்றை நிலம்...


விரட்டிய ஆதிக்கம்

பெரும்பாலான பெண்கள் குழந்தைகள்

குடிசையின் உள்ளிருக்க

வெளியே தாழ் போட்டது.

வேய்ந்த குடிசை 

உயிர்கள் குடித்து கொல்ல

பெட்ரோல் ஊற்றியது

உயிர்கள் வெந்து எரிவதை

வேடிக்கைபார்த்தது...

எங்களை எதிர்த்தால் இதுதான் கதி 

என்று எச்சரித்தது...


அது மரண ஓலமல்ல

உழைக்கும் மக்களின் கலகக் குரல்...


அக்கொடூரம் நிகழ்ந்து

50வைத்து ஆண்டுகளுக்கு

மேலாகிவிட்டது


அன்று பண்ணையார்கள்

மட்டும்தான்...

இன்று ஆட்சியதிகாரமே

பண்ணையார்கள் மனநிலையில்

இருக்கிறது...


முதலாளி தொழிலாளி

வேறுபாடு கலைய

ராமய்யாவின் குடிசைபோல 

சொந்தக்குடிசை அடைய

வீட்டில் எரியும் தீ

நம் வயிற்றுப் பசியை அணைக்க...

அநீதிகளின் கும்மாளம் குடை சாய...

சாதி சமய இன்னல்கள் மறைய

பொதுவுடைமைச் சித்தாந்தம்

எங்கும் பரவ...


மார்க்சியத்தை உயர்த்திப் பிடிப்போம்

செங்கொடியை வீடுதோறும்

ஏற்றி வளர்வோம்...


யாழ் தண்விகா

No comments:

Post a Comment