மனசைக் கீறி முளைத்தாய்...
கவிஞர் முருகேஷ் மு
வெளிச்சம் வெளியீடு
ஒரு காதல் கதையும்
பல காதல் கவிதைகளும்...
காதலைச் சொல்ல ஓர் ஆகச் சிறந்த வழி கவிதை. காதல் கதை சொல்லவும் அவ்வழியே பொருத்தம் என நினைத்து நீள் கவிதை வாயிலாக நண்பரின் காதலை கூறியிருக்கிறார் கவிஞர். பார்க்காமல் உயிரெங்கும் பரவிய காதல், சொல்லாமல் கொள்ளாமல் பிரிந்து சென்றால் அதன் வலி எப்படியிருக்கும் என்பதை வலிச் சொற்களால் பதிவு செய்திருக்கிறார். தவறும் சந்திப்புகள், குறும்புகள், கனவுகள் என நடைபோடுகிறது காதல். இடையிடையே கவிதைகளும்.
மெதுவாக நட
உன் பாதங்களுக்குக் கீழ்
என் இதயம் - எனும்போது
தானாகவே நம் கண்களும்
பூமி பார்த்துச் செல்கிறது.
வேதத்தை காதலாக்கியிருக்கிறார் கவிஞர். வேதம் என்பதும் அன்பைப் போதிப்பது தானே.
காதலைச் செய்
பலனை எதிர்பாராதே.
ஒரு கன்னத்தில்
முத்தமிட்டால்
மறு கன்னத்தையும் காட்டு
உனக்கு முன்னால்
என் காதல் செல்லும்
எம்மதமும்
சம்மதம் தான்
காதலுக்கு...
என காதலைப் பொதுமைப்படுத்தியிருக்கிறார் கவிஞர்.
அரசுப் பேருந்து, தனியார்ப் பேருந்தும் கவிதைத் தேராகிவிடுகிறது காதலில்.
அரசுப் பேருந்தைப் போல்
காலியாக இருந்த
என் மனசை
ஒரு நொடிக்குள்
தனியார்ப் பேருந்தைப் போல்
நிறைத்துக்கொண்டு
சென்றவள் நீ
என்கிறார்.
காதல் ஆத்திச் சூடி
அருமையான வார்ப்பு.
அன்பே உயிர்
ஆசை விதையிடு
இதயம் கண்டுணர்
ஈரம் கசி
உள்ளம் உணர்
ஊசி நூலாகுக
எண்ணுக புதுமை
ஏறெடுத்து முகம் காண்
ஐயம் விலக்கு
ஒழிக சாதி
ஓருயிராகுக
ஒளவியம் களை.
ஒழிக சாதி என்பதில் முற்போக்கும் காதலுக்கான தடை சாதி... அது ஒழியவேண்டும் என்பதும் வெளிப்படை. நீளும் ஆத்திச் சூடி இன்னும் சிறப்பு.
வாழ்த்துகள் தோழர்.
